புலவர்
அருணா
பொன்னுசாமி
[புலவர் அருணா பொன்னுசாமி மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்று, பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னூலாசிரியர். திருக்குறளுக்கு உரைவளம் வரைந்தவர். கரூரில் பல்வேறு இலக்கியப் பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் செய்துவருபவர்.]
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வுசெய்வதற்கு மாணவராக இணைந்தபொழுது (1993) முனைவர் கடவூர் மணிமாறனார் அவர்களை அவர்தம் கிருட்டினராயபுரம் இல்லம் சென்று சந்தித்து, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் குறித்து உரையாடினேன். அதுபொழுது பாவேந்தர் பாரதிதாசனார் வழியில் பாட்டெழுதும் பல கவிஞர்களைக் கடவூரார் எனக்கு அறிமுகம் செய்தார். அவ்வகையில் அன்றையப் பிற்பகலில் கரூர் சென்று கவிஞர் கன்னல், கவிஞர் அருணா பொன்னுசாமி, கவிஞர் நண்ணியூர் நாவரசன் முதலானவர்களைக் கண்டு உரையாடியமை பலவாண்டுகளுக்குப் பின்னரும் நெஞ்சில் நிழலாடும் நினைவுகளாக உள்ளன. அற்றைப்பொழுதில் அருணா பொன்னுசாமி அவர்களின் அன்பார்ந்த வரவேற்பும், அள்ளித் தந்த நூல்படிகளும், சொல்லி மகிழ்ந்த உவமைக்கவிஞர் சுரதாவின் நட்பும் இன்றும் என் மனத்துள் பதிந்துகிடக்கின்றன. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள அருணா பொன்னுசாமியாரின் தமிழ் வாழ்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.
புலவர் அருணா பொன்னுசாமியாரின் தமிழ் வாழ்க்கை
புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையில் வாழ்ந்த அ. அருணாசலம் - அங்காயி அம்மாள் ஆகியோரின் மகனாக 04. 10. 1938 இல் பிறந்தவர். பெற்றோர் 8 முழம் சரிகை வேட்டி ஆயத்தம் செய்யும் பத்துத் தறிகளின் உரிமையாளர் ஆவர்.
தாத்தையங்கார்பேட்டை என்பது திருப்பதி – திருமலை இறைவனுக்குத் தீர்த்தகுடம் எடுத்துவந்து வழங்கும் ஐயங்கார் மரபினருக்கு வல்வில் ஓரியால் இறையிலியாக வழங்கப்பட்ட ஊர் என்று அறியமுடிகின்றது. தாதா ஐயங்கார்பேட்டை என்பது தாத்தையங்கார்பேட்டை என மருவியதாகவும் தெரியவருகின்றது. இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் உள்ள முசிறியிலிருந்து 10 கல் தொலைவில் உள்ளது.
புலவர் அருணா பொன்னுசாமி தம் பிறந்த ஊரான தாத்தையங்கார்பேட்டையில் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். நான்கு முதல் 7 ஆம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். எட்டாம் வகுப்பு முதல் அவ்வூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியானதால் அங்குப் பயின்றவர். பின்னர் பள்ளியிறுதி வகுப்பில் 1956 இல் தேர்ச்சி பெற்றதும் 1957 முதல் 1961 வரை மயிலம் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர்.
துறையூரில் அமைந்துள்ள செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் 100 உருவா ஊதியத்தில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 1963 இல் குமாரபாளையத்தில் தமிழாசிரியர் பயிற்சி பெற்றவர். 1964 முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இணைந்து, தமிழ்ப்பணியாற்றியவர்.
1965 ஆம் ஆண்டு தாத்தையங்கார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றினார். மேலும் 1972 இல் குளித்தலை அருகில் உள்ள ஜி. உடையாப்பட்டிக்குப் பணிமாறுதலில் சென்று பணியாற்றியவர்.
புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் அ. முத்துலட்சுமி அவர்களை 1972 இல் திருமணம் செய்துகொண்டவர். அ. முத்துலட்சுமி அவர்கள் புனித தெரசா தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர்களின் இல்லறப் பயனாய் இரேவதி, பாலாஜி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
கரூர் என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு மேனிலைப் பள்ளி முதலிய இடங்களில் அருணா பொன்னுசாமி தமிழாசிரியராகப் பணியாற்றி 1987 இல் பணியோய்வு பெற்றவர். தமிழ்ப்பற்றும் சுற்றம் சூழ வாழும் நல்லுள்ளமும் வாய்க்கப்பெற்ற அருணா பொன்னுசாமியார் கரூரின் முதன்மையாள இலக்கிய ஆளுமையாக விளங்கிவருகின்றார்.
புலவர் அருணா பொன்னுசாமி தம் வீட்டிலேயே நூலகம் அமைத்து மாவட்ட ஆட்சியரால் பாராட்டப் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் பொறுப்பேற்றுத் தமிழாசிரியர் நலனுக்குப் பாடுபட்டவர். 1968 இல் இலங்கைப் பயணம் மேற்கொண்டு 14 நாள்கள் தங்கி, ஆசிரியர் நிலைகள், பள்ளிகள் குறித்து அறிந்துவந்தவர். 1972 இல் திரு.வி.க. மன்றத்தைத் தொடங்கிப் பலரும் நூல் எழுதும் வகையில் ஊக்கப்படுத்தி வருபவர்.
புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் திருக்குறளில்
நல்ல ஈடுபாடு உடையவர். திருக்குறளுக்கு உரைவளம் என்னும் தலைப்பில் நூல் எழுதி முப்பதாயிரம்
படிகளுக்கும் மேல் அச்சிட்டு, அனைவருக்கும் இலவயமாக வழங்கித் திருக்குறள் பரப்பும்
பணியில் தம்மை இணைத்துக்கொண்டவர். இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில்
தமிழகத் தமிழாசிரியர் மாநாட்டில் மேனாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்
இவருக்குத் “திருக்குறள் மாமணி விருது” அளித்துச் சிறப்பித்துள்ளார். இவர் இயற்றிய
மூவேந்தர் காப்பியம் என்ற வரலாற்று நூல் புகழ்பெற்றது. பாவேந்தர் கவிதைகளில் ஈடுபாடுகொண்ட
இவர் “பாட்டருவிப் பாவேந்தர்” என்னும் கவிதைப் படைப்பை இயற்றியுள்ளார்.
புலவர் அருணா பொன்னுசாமி தம் உள்ளம் கவர்ந்த கவிஞரான உவமைக்கவிஞர் சுரதாவின் பெயரில் மரபுக்கவிதை இலவசப் பயிற்சிக்கூடம் நிறுவி, மரபுக்கவிதை எழுதும் பயிற்சியை வழங்கி, கரூரில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றார்.
தாம் பயின்ற மயிலம் கல்லூரியின் மீதும் அதன் அதிபராக விளங்கிய பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானங்களில் மீதும் அளவற்ற பற்றினைக் கொண்டவர். பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானங்கள் அவர்களின் நூற்றாண்டினைத் தாம் வாழ்ந்துவரும் கரூரில் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர்.
புலவர் அருணா பொன்னுசாமியின் தமிழ்க்கொடை
1. பெண்மை வெல்க (1962)
2. பாட்டருவிப் பாவேந்தர் (1990)
3. தமிழில் பூத்த தாழம்பூ (1991)
4. முப்பால் முத்து (1992)
5. பொருண்மொழிக் காஞ்சி (1995)
6. திருக்குறள் உரைவளம் (2001)
7. தமிழர் திருமணம் (2002)
8. முத்துக்குவியல் (2004)
9. உறவுப்பூக்கள்( 2006)
10. அண்ணா ஆயிரம் (2008)
11. மணம் பரப்பும் மலர்கள்( 2011)
12. சமச்சீர் கல்வி - ஒரு பார்வை (2012)
13. ஒரு குறள் விளக்கம் (2013)
14. கனவும் கற்பனையும் – கடித இலக்கியம்
(2013)
15. வெண்பா வேள்வி ( 2017)
16. தமிழனின் அடையாளம்( 2017)
17. கொல்லிமலைச் சித்தர்கள் (2022)
18. மூவேந்தர் காப்பியம் ( 2023)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக