நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 1 ஜூன், 2015

தொல்காப்பிய மன்றம் - நோக்கமும் செயல்பாடுகளும்



தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்துபார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் பேராய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை நடுவணாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

தொல்காப்பியம் குறித்த அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தரும் வகையிலும், தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கிலும் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளை உலக அளவில் நடத்தும் வகையிலும், உலகெங்கும் உள்ள தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், பற்றாளர்கள், இலக்கிய, இலக்கண ஆர்வலர்களை ஒன்றிணைக்கும்வகையிலும் தொல்காப்பிய மன்றம் என்ற உலக அளவிலான அமைப்பினைத் தொடங்க முடிவுசெய்து அதற்குரிய முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தொல்காப்பிய மன்றம்  பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொல்காப்பிய மன்றத்திற்குரிய கிளைகள் தொடங்கப்பட்டுத் தக்க ஆய்வறிஞர்களால் வழிநடத்தப்பட உள்ளன. தமிழ்கற்ற, மொழியியல் கற்ற அறிஞர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த தொல்காப்பியத்தைத் தமிழ் ஆர்வலர்கள், கணினி வல்லுநர்கள், பல்துறை அறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்களின் ஒத்துழைப்புடன் பரப்பத் திட்டமிட்டுள்ளோம். தொல்காப்பியச் செய்திகள் மக்கள் மனத்தில் இடம்பெறும்வண்ணம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பணிகளைச் செய்யத் தன்னார்வலர்களை ஒன்றுதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பியப் பரவலுக்குக் குரல்கொடுத்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் பல்வகைத் திட்டங்களைக் கொண்டு தொல்காப்பிய மன்றம் செயல்பட உள்ளது.

ஆண்டுதோறும் தொல்காப்பியம் குறித்த மாநாடுகள் நடத்தித் தொல்காப்பிய ஆய்வினை வளர்த்தெடுப்பது தொல்காப்பிய மன்றத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும் தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், தொல்காப்பியம்  குறித்த கட்டுரைகள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள் என அனைத்து விவரங்களையும் ஒன்றுதிரட்டி இணையத்தில் உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு வைப்பது என்னும் நோக்கில் செயல்பட உள்ளோம். தமிழார்வமும் இலக்கண, இலக்கிய ஈடுபாடும் உள்ள வினையாண்மை மிக்க தமிழார்வலர்களை- தொழில்நுட்ப வல்லுநர்களை- பல்துறை அறிஞர்களை  எங்களுடன் இணைந்து பணிபுரிய அன்புடன் அழைக்கின்றோம். தொல்காப்பிய மன்றம் தொடங்குவதற்குரிய தங்களின் மேலான கருத்துகளையும், வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய நூலில் புலமையும், தமிழ்மொழி வளர்ச்சியில் ஆர்வமும்கொண்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இம்மன்றத்தை நெறிப்படுத்தி வளர்க்க உள்ளனர்.

உலக நாடுகளில் உள்ள தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பியத்தைப் பரப்பவும், தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுக்கவும், தொல்காப்பியம் குறித்த செய்திகளைத் திரட்டவும் ஆர்வமுடைய பெருமக்கள் - தமிழ்த்தொண்டர்கள் எங்களைத் தொடர்புகொள்ளும்படி மெத்தப்பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.

தொடர்புக்கு:




1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொல்காப்பிய மன்றத்தின் நோக்கமும் செயல்பாடுகளும் சிறப்புற அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மன்றத்தை அறிமுகப்படுத்திய தங்களின் பணி போற்றுதற்குரியது.