நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 நவம்பர், 2014

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் நிகழ்ச்சி


பண்ணுருட்டி நகராட்சியில் மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம் அவர்கள் ஆவணப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குச் சிறப்புச்செய்தல்

தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று 26.11.2014 மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி செயராம் ஓட்டலில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். முனைவர் எழில்வசந்தன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். தமிழறிஞர்கள், இசையறிஞர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. 

இந்த ஆவணப் படத்தில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுத் திரைப்பட வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளித் திரைக்களம் தயாரித்துள்ள இந்த ஆவணபடத்தைப் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.இளங்கோவன் திரைக்கதை எழுதித் இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தில் முனைவர் ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், முனைவர் அரிமளம் பத்மநாபன், சுந்தர. இலட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் சுந்தரேசனாரின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆவணப்படத்தில் கிருத்திகா இரவிச்சந்திரன், வில்லியனூர் முனுசாமி, அறின் இடைக்கழிநாடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்து, தொகுப்புப்பணியை இராஜ்குமார் இராஜமாணிக்கம் செய்துள்ளார். தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் எழுதிய கையறுநிலைப் பாடலை கலைமாமணி கா. இராஜமாணிக்கம் பாடியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் இந்த ஆவணப்படம் வெளியீடு காண உள்ளது. 
முனைவர் க. தமிழமல்லன் அவர்களின் தலைமையுரை

பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை


இசையமைப்பாளர் இராஜ்குமார் சிறப்பிக்கப்படுதல்


ஓவியர் அன்பழகன் சிறப்பிக்கப்படுதல்

கலைமாமணி இராஜமாணிக்கம் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள் - ஒருபகுதி


ஊடகத்துறையைச் சார்ந்த செய்தியாளர்கள்- ஒருபகுதியினர்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் அயரா உழைப்பிற்குத் தலை வணங்குகின்றேன் ஐயா
ஆவணப் படத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்