நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 24 நவம்பர், 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் அழைப்பிதழ்





அன்புடையீர்,
வணக்கம்.

  தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைப்பாடல்களையும் அவற்றின் நுட்பங்களையும் தமிழ்நாடெங்கும் பாடிப் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். அவர்தம் நூற்றாண்டையொட்டி அவரின் வாழ்க்கையும் அவர் பாடிய பாடல்களும் ஆவணப்படுத்தப்பட்டுத் திரைப்படவடிவில் வெளியீடு காண உள்ளன.

  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதி, இயக்கியுள்ள இந்தப்படம் ஐம்பது நிமையம் ஓடத்தக்க வகையில் உள்ளது. இந்த ஆவணப் படத்தில் பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் பாடல்கள் ஆகியன குடந்தை . சுந்தரேசனார் பாடிய வடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அப்பாடல்களுக்குப் பொருத்தமான காட்சிகளும் நாட்டியங்களும் இடம்பெற்றுள்ளன. பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்து அறிஞர் பெருமக்கள் வழங்கியுள்ள நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.

  இந்த ஆவணப்படம் 2014 டிசம்பர் மாதம் மலேசியாவில் வெளியீடு காண உள்ளது. அதன்பிறகு உலகம் முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகளால் வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஊடகத்துறையைச் சார்ந்தவர்களின் முன்னிலையில் ஆவணப்படத்தின் முதன்மைக்காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட உள்ளன. தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 26.11.2014, அறிவன் (புதன்) கிழமை
நேரம்: மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram)

அனைவரையும் வரவேற்று மகிழும்

வயல்வெளித் திரைக்களம், புதுச்சேரி- 605 003


1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.