நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வரலாற்றுப் பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள்


பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் அவர்கள்

தமிழக வரலாற்றினை முழுமைப்படுத்தி எழுதுவதற்குப் பல்வேறு அறிஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். இத்தகு அறிஞர்களுள் சிலர் உலகத்தின் பார்வைக்குத் தெரிகின்றனர். சிலரின் வரலாறு பார்வைக்கு உட்படாமல் போய்விடுகின்றது. தமிழகம் அறியப்படவேண்டிய ஒரு வரலாற்று அறிஞர் வா. பாலகிருஷ்ணன் அவர்களாவார். தமிழகத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டவர்களின் வரலாறுகளைத் திரட்டுவதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்து வருபவர் பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் அவர்கள். கல்லூரிப் பணியை நிறைவுசெய்து செங்கற்பட்டில் அமைதிவாழ்க்கை வாழ்ந்துவரும் பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் திருமூலஸ்தானம் என்ற ஊரில் திருவாளர் வாசுதேவ படையாட்சி, விருத்தாம்பாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தவர் (02.09.1947). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பயின்று 1972 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் துணைப்பேராசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். தமிழகத்தின் அரசு கல்லூரிகள் பலவற்றில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். திண்டிவனம் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறையின் தலைவராகவும், கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றியவர். 31.07.2004 இல் கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் “உடையார்பாளையம் ஜமீன்தார்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து1988 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். ஃபில் பட்டம் பெற்றவர்.


பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டிய சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுதிவருபவர். சேலம் சு. அர்த்தநாரீச நாயக வர்மாவின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் இதழ்கள் இவரின் சேகரிப்பில் உள்ளன.

புதுவை நா. வெங்கடாசல நாயகர், திருப்பனந்தாள் கதிர்வேலு, கும்பகோணம் குருசாமிதாசு, புதுவை செல்லான் நாயகர் குறித்து எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. கொடுக்கூர் ஆறுமுகம் வாழ்க்கை வரலாறு குறித்துத் தரவுகளைத் தொடர்ந்து தேடியவண்ணம் உள்ளார். தம் பணி ஓய்வுக்குப் பிறகும் வரலாறுகளைத் தொகுத்து எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்களை வாழ்த்துவோம்.

தொடர்புக்கு:

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் 9443289818

கருத்துகள் இல்லை: