நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கலைமாமணி கல்லாடன் அவர்கள்



புதுவைக்குப் புகழ்சேர்க்கும் பெருமக்களுள் கலைமாமணி கல்லாடன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் கவிஞர் வாணிதாசன் அவர்களின் உடன்பிறந்தார் ஆவார்.

கலைமாமணி கல்லாடன் அவர்கள் 30.07.1943 இல் திருபுவனையில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் அரங்க. திருக்காமு-சுப்பம்மாள் ஆவர். கலைமாமணி கல்லாடன் அவர்களின் இயற்பெயர் ஜானகிராமன் என்பதாகும்.

கல்லாடன் அவர்கள் தொடக்கக் கல்வியைச் சேலியமேடு, பாகூரில் படித்தவர். புதுவை பிரெஞ்சுக் கல்லூரியிலும், தாகூர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளில் வல்லவர்.

கடந்த நாற்பதாண்டுகளாக அரசு பணியில் இருந்து, நிறைவாக அரசு சார்புச்செயலாளர் நிலையில் பணி ஓய்வுபெற்றவர். தமிழ்ப்பற்றுடன் அரசு பணிகளில் ஈடுபட்டவர்.

கதை,கவிதை.கட்டுரை என்று பல வடிவங்களில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன. மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆற்றல் பெற்றவர்.

இவர்தம் முதல்நூல் தேன்மொழி என்பது சிறுகாப்பியங்களின் தொகுதியாகும். இவருடைய புரட்சிநிலா காப்பியம் தமிழக அரசின் பரிசைப் பெற்றது. திருக்குறளுக்கு இனிய எளிய தெளிந்த உரையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரைந்துள்ளார். உலகத் திருக்குள் மையம், தமிழய்யா கல்விக்கழகம், சிறுவர் இலக்கியச் சிறகம் போன்ற அமைப்புகள் இவரின் முயற்சியைப் பாராட்டியுள்ளன. புதுவை வரலாற்றுச்சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றுத் திறம்படச் சங்கத்தை நடத்தி வருகின்றார்.

கலைமாமணி கல்லாடன் அவர்களின் படைப்புகளைப் பல்வேறு இதழ்கள் வெளியிட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சிகளிலும் பங்கேற்றுத் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகளை ஏற்பாடு செய்து தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்.

கவிதைச் செல்வர், கவிமாமணி, பாரதிதாசன் விருது, கவித்தென்றல், பாவேந்தர் மரபுவழிப் பாவலர், முடியரசன் விருது, சுந்தரனார் விருது, கவிச்சிகரம், சான்றோர் மாமணி, குறள்நெறிச்செம்மல், குறள் உரைக்கோ, திருக்குறள் உரைச்செம்மல், புதுவை அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கலைமாமணி கல்லாடன் படைப்புகளுள் சில:

தேன்மொழி(1979)
தை மகள் வந்தள்(1984)
புரட்சிநிலா(1985)
பேசும் விழிகள்(1986)
சிந்தனை ஒன்றுடையாள்(1991)
பூவைப் பறித்த பூக்கள்(1993)
மேடைக்கனிகள்(1998)
திருக்குறள் உரைக்கனிகள்(2000)
செந்தமிழ்க் கனிகள்(2001)
புதுச்சேரி மரபும் மாண்பும்(2002)
மேடை மலர்கள்(2003)
திருக்குறள் மணிகள்(2003)
வரலாற்று வாயில்கள்(தொகுப்பு)(2003)
இலக்கிய வண்ணங்கள்(204)
கவிச்சித்தரின் படைப்புகள் ஒரு கணிப்பு(2005)
வாணிதாசனின் பாட்டுவளம்(2006)
திருக்குறள் உரைஒளி THIRUKKURAL-READINGS & REFLECTIONS (2007)
எண்ணங்களின் வண்ணங்கள்(2008)
கல்லாடன் கவிதைகள்(2009)
காலந்தோறும் கல்லாடம்(2012)

முகவரி:

கலைமாமணி கல்லாடன் அவர்கள்
திருக்குடில்
14, முதல் குறுக்குத் தெரு
நடேசன் நகர் கிழக்கு,
புதுச்சேரி-605 005

9443076278

கருத்துகள் இல்லை: