நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள்



இரா.பஞ்சவர்ணம் அவர்கள் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற நூலின் வழியாகத் தமிழறிஞர்களின் கவனத்தைத் தம்பால் ஈர்த்தவர். இப்பொழுது தொல்காப்பியத் தாவரங்கள் என்ற தலைப்பில் அறிவியல் பார்வையில் தொல்காப்பியத்தை அணுகி அரிய செய்திகளுடன் தொல்காப்பியத் தாவரங்கள் நூலினை உருவாக்கியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிடும் 48 தாவரங்களின் பெயர்களும் அவை குறித்த தாவரவியல் செய்திகளும் இந்த நூலில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

அரை, ஆண்மரம், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், ஒடு, கடு, கரந்தை, காஞ்சி, காந்தள், குமிழ், குறிஞ்சி, சார், சேமரம், ஞெமை, தளா, தும்பை, நமை, நெய்தல், நெல், நொச்சி, பனை, பாசி, பாலை, பிடா, பீர், புல், புளி, பூல், போந்தை, மருதம், மா, முல்லை, யா, வஞ்சி, வள்ளி, வள்ளை, வாகை, விசை, வெட்சி, வெதிர், வேம்பு, வேல் என்னும் 48 தாவரங்களையும் படங்களுடன் எடுத்துரைத்து விளக்கும் இரா.பஞ்சவரணம் அவர்களின் ஆய்வு முயற்சி தமிழறிஞர்களின் பாராட்டைக் கட்டாயம் பெறும்.

இத்தாவரங்கள் நிலத்தினைக் குறிக்கவும், போர்முறையைக் குறிக்கவும், வழிபாட்டுக்கும், கூத்துமுறையைக் குறிக்கவும், உடலில் ஓவியம் வரைவதைக் குறிக்கவும், மருத்துவப் பண்பைக்குறிக்கவும், போரின் விளைவுகளைக் குறிக்கவும், தாவரத்தின் பண்பைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை இரா.பஞ்சவர்ணம் அவர்கள் இந்த நூலில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

அரை என்ற தாவரத்தைப் பற்றி விளக்கப்புகும் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் அரை என்பதன் தமிழ்ப்பெயர் அரசு, ஆலம் என்று குறிப்பிடுகின்றார். வகைப்பாடு என்ற வகையில் தாவரம் பற்றிய செய்திகளை உலகத் தரத்தில் குறிப்பிட்டு விளக்கியுள்ளார்.

தாவரத்தின் பண்புகள் என்ற அடிப்படையில் வளரியல்பு, இலைகள், மலர்கள், சூல்தண்டு, கனிகள், விதைகள், இளந்தளிர் பருவம், இலையுதிர்ப் பருவம், பூக்கும் பருவம், காய்க்கும் பருவம், வாழ்விடம், பரவியிருக்குமிடம், தொல்காப்பியத்தில் தாவரப்பெயர்கள் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்ட சிறு தலைப்புகளில் அரிய செய்திகள் பலவற்றைத் தந்துளார். இவ்வாறு 48 தாவரங்களுக்கும் இந்த நூலில் விளக்கம் உள்ளன.
தொல்காப்பிய நூற்பாக்கள் முழுமையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளமை போற்றத்தகுந்த முயற்சியாகும்.

தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் இடம்பெறும் தாவரங்கள் குறித்த தகவல்களையும் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் சிறப்பாகப் பட்டியலிட்டு இந்த நூலில் விளக்கியுள்ளார்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நூல் இதுவாகும்.

நூல்: தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
ஆசிரியர்: இரா.பஞ்சவர்ணம்
பக்கம்:312
விலை:360-00
தொடர்புக்கு:
இரா. பஞ்சவர்ணம் அவர்கள்,
காமராசர் தெரு, பண்ணுருட்டி - 607 106
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

செல்பேசி:  98423 34123

கருத்துகள் இல்லை: