banner

நிகழ்வுகள்

// முனைவர் மு.இளங்கோவன் நூல்கள் புதுவையில் வெளியீடு, விவரம் விரைவில்...//

வியாழன், 2 செப்டம்பர், 2010

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்



அன்புடையீர்,வணக்கம்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் (05.09.1909 - 03.01.1972) நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரான மேலைப் பெருமழையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருகை தந்து புலவர் பெருமானின் புகழ்வாழ்க்கையை நினைவுகூர வேண்டுகிறோம்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அறிஞர்கள் வருகை தந்து உரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சிக்குப் பெருமழைப் பெருநிலக்கிழார் அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கவும், ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் வரவேற்புரையாற்றவும், நாகைப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ.கே.எசு.விசயன் அவர்கள் பெருமழைப்புலவரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புலவரின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் இசைந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. உலகநாதன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மா.கல்யாணசுந்தரம், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ந.உ.சிவசாமி, மேலைப்பெருமழையின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோ.இராசமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நூற்றாண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டு புலவர் பெருமானின் உரைச் சிறப்புகளை நினைவுகூர இசைந்துள்ளார்கள். முனைவர் மு.இளமுருகன், (தமிழ்ப்பேராசிரியர், த.உ.ம. கலைக் கல்லூரி,தஞ்சாவூர்,), முனைவர் அரங்க.சுப்பையா,(தமிழ்ப்பேராசிரியர் (பணிநிறைவு), தஞ்சாவூர்),புலவர் உதயை மு.வீரையன்,சென்னை, முனைவர் ஒப்பிலா.மதிவாணன் (இயக்குநர், பதிப்புத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம்)பேராசிரியர் சு.தமிழ்வேலு, (அ.வ. கல்லூரி, மன்னம்பந்தல்,மயிலாடுதுறை) முனைவர் நா.தனராசன்,(தமிழ்த்துறைத் தலைவர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி,திருவாரூர்), புலவர் நாச்சிகுளத்தார்(பெருமழைப்புலவரின் மாணவர்), திரு.நாகை எழில்கோ,(தமிழாசிரியர்,தென்னம்புலம்), முனைவர் மு.இளங்கோவன் (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,புதுச்சேரி),ஆகியோர் கலந்துகொண்டு பெருமழைப்புலவரின் நிலைத்த புகழை நினைவு கூர உள்ளனர்.

பெருமழைப்புலவரின் தலைமகனார் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

இடம்: அம்மன் திருமண அரங்கம், மேலைப்பெருமழை(திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்)
நாள்: 05.09.2010,ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 -முதல் இரவு 7.00 மணி வரை

அனைவரும் வருக!

- விழாக்குழுவினர்

மேலைப்பெருமழைக்கு வழி: திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் பாண்டி என்ற ஊர் நிறுத்தத்தில் இறங்கவும்.5 கல் தொலைவில் உள்ள ஊரைத் தானியில் அடையலாம்.


அழைப்பிதழ்


அழைப்பிதழ்

உதவிக்கு:
+ 91 94431 26615
+ 91 94438 06094
+ 91 94420 29053

நன்றி: பெருமழைப் புலவரின் வண்ணப்படம் உருவாக்கிய பேராசிரியர் பட்டாபிராமன் அவர்கள்(மனோ சமுதாயக் கல்லூரி,புளியங்குடி,நெல்லை மாவட்டம்)

8 கருத்துகள்:

ganesh gandhi சொன்னது…

"பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்" - 2010

cheena (சீனா) சொன்னது…

அன்பின் இளங்கோவன்

நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

alagan சொன்னது…

பெருமழைப் புலவரின் நூற்றாண்டு விழாவுக்கு நல் வாழ்த்துக்கள்.
விழா ஏற்பாடுகளுக்கும்,முயற்சிகளுக்கும் முனைவர் இளங்கோவன்
தலைமையிலான குழுவுக்கு பாராட்டுக்கள்.புலவரின் படைப்புக்கள் மீண்டும்
உலா வரவும்,இளைய சமுதாயம் தமிழ் உணர்வு மேலோங்கவும் இது மாதிரி
விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.விழாவினுடைய செய்திகள்,தாக்கம்
பெருவாரியான மக்களைச் சென்றடையச் செய்வது நம் அனைவரது கடமை
ஆகும்.
அழகப்பன்.

அண்ணாகண்ணன் சொன்னது…

நல்வாழ்த்துகள்

நா. கணேசன் சொன்னது…

அன்பின் மு. இளங்கோ,

அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத
பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.

புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம்
செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே
நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை வ. ஐ. சு. ஐயாவின் காலத்தின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.

முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும்.
ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ! என்ற அச்சம்.

எல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா? நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி,
பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்?!!

உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக!

மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.

வாழ்க வளமுடன்!
நா. கணேசன்

Thamizhan சொன்னது…

பேரன்பு முனைவர் இளங்கோவர்க்கு,மனமார்ந்த பாராட்டுக்கள்.தமிழ்ப் புதையல்களைத் தேடி,கண்டு பாராட்டி,விழா எடுக்கும் மாட்சி கண்டு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கும் உள்ளங்கட்கு தமிழறிஞர் வாழ்வமைப்பு ஒன்று தொடங்க வேண்டுகிறேன்.இது பெரிதாக இல்லாவிட்டாலும் ஒரு கிரியா ஊக்கியாக அரசையும் மற்றவர்களையும் ஆவண செய்ய தூண்டும் அமைப்பாகவே செயலாற்றர்ட்டும்.

tamilnathan சொன்னது…

perumazhaippulavarukku vizha kanum thamizh nenjangalukku vazhthugal.
by
m.ulaganathan
thiruneelakudi

thiru சொன்னது…

கருத்துமழை பொழிந்த பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா சிறப்புற வாழ்த்துகள்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்