நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 10 மார்ச், 2009

தமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்


சட்டப்பேரவைத் தலைவராகப் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்

 தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் ஆவார். வடார்க்காடு மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்) செய்யாறு பகுதியில் வாழ்ந்த திரு. காங்கன் முதலியார் சுந்தரம் அம்மாளுக்கு மகனாக வாய்த்தவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள். 15.04.1914 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைச் செய்யாறு உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.

 1932 இல் எட்டாம் வகுப்பில் பயின்ற பொழுது வீரபத்திரப்பிள்ளையிடம் படித்தவர். அவர் மாற்றலாகி வேலூருக்குச் சென்றபொழுது அந்த இடத்திற்கு ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பணிக்கு அமர்ந்தார். அவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை வகுப்பிலும் தனியாகவும் கற்றுப் புலமை பெற்றவர் நம் புலவர் அவர்கள். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். ஔவை. துரைசாமிப் பிள்ளையின் ஊக்கத்தால் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையினை நன்கு கற்றவர்.

  கா. கோவிந்தனார் 1935 இல் காவிரி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதற்கண் வெளிவரச் செய்தவர். வாலி வழக்கு என்ற நூல் எழுதிய புரிசை முருகேச முதலியார் அவர்கள் முன்னின்று நடத்திய பானுகவி மாணவர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் மாணவப் பருவத்தில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர் புலவர். படிக்கும் காலத்திலேயே கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, ஞானியார் அடிகள், மறைமலையடிகள் உள்ளிட்டவர்களுடன் பழகிய பெருமைக்கு உரியவர். செய்யாறு பகுதியில் தமிழ் உணர்வு தழைத்து வளரப் பாடுபட்டவர்களில் புலவரின் பங்களிப்பு மிகுதி. இவருக்கு அணுக்கமாக இருந்தவர் மாவண்ணா தேவரசான் அவர்கள் ஆவார். மாவண்ணா தேவராசன் பெரியார் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமைக்கு உரியவர் (என் முனைவர் பட்ட ஆய்வேடு, பொன்னி பாரதிதாசன் பரம்பரை நூலில் இவர் பற்றி விரித்து எழுதியுள்ளேன்).

 1942 இல் வேலூரில் தம் ஆசிரியர் துரைசாமியார் பணிபுரிந்த அதே பள்ளியின் பணியில் புலவர் கா. கோவிந்தனார் இணைந்து பணிபுரிந்தார். 1944 வரை பணி தொடர்ந்தது. தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம் பெற்றவர். தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லவர்.

 வேலூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபொழுது கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை அவர்கள் சென்னையில் தெ.பொ.மீ. தலைமையில் கூட்டிய நற்றிணை மாநாட்டில் உரையாற்ற அழைத்தார். அதன் பிறகு அவரின் நட்பு வளர்ந்தது. பல நூல்கள் கழகம் வழி வெளிவர அந்தச் சந்திப்பு காரணமானது.

 புலவரின் முதல் நூலான திருமாவளவன் என்னும் நூல் 1951 இல் வெளிவந்தது. அதன் பிறகு சங்க காலப் புலவர் வரிசை என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார். புலவர் வரிசையின் முதல்நூல் 1952 - லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955 - லும் வெளிவந்தன.

 மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் வழியும் புலவரின் நூல்கள் வெளிவந்தன. 1990 ஏப்ரல் 15 இல் புலவரின் ஐம்பதாவது நூலான பி.டி.சீனிவாச ஐயங்காரின் தமிழர் வரலாறு வெளிவந்தது. 1991 இல் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Orgin and Spread Tamils என்ற நூலைத் தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற பெயரில் புலவர் அவர்கள் மொழிபெயர்த்துளார். பி.டி.சீனிவாச ஐயங்காரின் Pre Aryan Tamil Culture என்பதை ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர். அவரின் மற்றொரு நூலான Stone Age In India என்பதை இந்தியாவில் கற்காலம் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்.

புலவர் அவர்களின் பணியை மூன்று வகையில் வகைப்படுத்தலாம்.

 சங்க இலக்கிய ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, அரசியல் பணி என்பதே அப்பகுப்பு. இவர் பற்றிய முனைவர் பட்ட நிலையில் ஆய்வுகள் வெளிவரும்பொழுதே இவர்தம் தமிழ்ப்பணி உலகுக்கு நிலை நிறுத்தப்படும். இவர் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். விரைவில் முழுமையாக வெளியிடுவேன்.


புலவர் கா.கோவிந்தன் அவர்கள்


புலவர் கா.கோவிந்தனார் அவர்களின் நூல்கள்

சங்க காலப்புலவர் வரிசை

01.நக்கீரர்
02.பரணர்
03.கபிலர்
04.ஔவையார்
05.பெண்பாற் புலவர்கள்
06.உவமையாற் பெயர் பெற்றோர்
07.காவல பாவலர்கள்
08.கிழார்ப்பெயர் பெற்றோர்
09.வணிகரிற் புலவர்
10.மாநகர்ப் புலவர்கள்-1
11.மாநகர்ப் புலவர்கள் -2
12.மாநகர்ப் புலவர்கள்-3
13.உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
14.அதியன் விண்ணாத்தனார் முதலிய 65 புலவர்கள்
15.குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
16.பேயனார் முதலிய 39 புலவர்கள்
17.இலக்கிய வளர்ச்சி
18.இலக்கியப் புதையல் 1.நற்றிணை விருந்து
19.இலக்கியப் புதையல்-2 குறுந்தொகைக் கோவை
20.குறிஞ்சிக்குமரி
21.முல்லைக்கொடி
22.மருதநில மங்கை
23.நெய்தற் கன்னி
24.பாலைச்செல்வி
25.கூத்தன் தமிழ்
26.சாத்தன் கதைகள்
27.திருக்குறள் சொற்பொழிவுகள்
28.மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
29.காவிரி-கட்டுரைத்தொகுதி
30.சிலம்பொலி
31.புண் உமிழ் குருதி
32.அடுநெய் ஆவுதி
33.கமழ்குரல் ஆவுதி
34.சுடர்வீ வேங்கை
35.வடு அடும் நுண் அயிர்
36.முல்லை
37.வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
38.மனையுறை புறாக்கள்
39.பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை
40.புலாஅம் பாசறை
41.கட்டுரைத்தொகுப்பு

இலக்கணம்

42.கால்டுவெல்- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்-தமிழாக்கம்
43.செந்தமிழ் எழுதப் பயில

வரலாறு

44.திருமாவளவன்

சங்க கால அரசர் வரிசை

45.சேரர்
46.சோழர்
47.பாண்டியர்
48.வள்ளல்கள்
49.அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
50.திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
51.அறம் உரைத்த அரசர்
52.கலிங்கம் கண்ட காவலர்
53.இலக்கியம் கண்ட காவலர்
54.தமிழர் தளபதிகள்
55.தமிழகத்தில் கோசர்கள்
56.கழுமலப் போர்
57.தமிழர் வாழ்வு
58.தமிழர் பண்பு
59.தமிழர் வாணிகம்
60.பண்டைத்தமிழர் போர்நெறி
61.தமிழர் வரலாறு-தொகுதி-1
62.தமிழர் வரலாறு-தொகுதி-2
63.தமிழர் தோற்றமும் பரவலும்
64.ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
65.தமிழக வரலாறு-சங்க காலம்-அரசர்கள்
66.தமிழக வரலாறு-கோசர்கள்
67.தமிழக வரலாறு -கரிகால் பெருவளத்தான்
68.இந்தியாவில் கற்காலம்
69.குடிமகனின் அடிப்படை உரிமையா? சட்டமன்ற உரிமையா?
(பட்டியலை விரைவில் முழுமைப்படுத்துவேன்)

(என் படைப்புகளின் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள் ).

3 கருத்துகள்:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் ,நல்ல பதிவு ஒவ்வொரு புது அறிஞர்களையும் அறிந்து கொள்ள வழிவகுக்கின்றீர்கள்.பயனுள்ள பதிவு.உங்களைப் போன்ற தமிழறிஞர்கள் நாட்டுக்குத் தேவை.

Arunkumar சொன்னது…

திருவண்ணாமலை மாவ”ட”ம் என்று இருப்பதைத் திருவண்ணாமலை மாவட்டம் என மாற்றவும்.

நானும் புலவர் கோவிந்தன் அவர்கள் வாழ்ந்த ஊரினன் தான். ஒரே தெருவும் கூட!!!!!

Arunkumar சொன்னது…

திருவண்ணாமலை மாவ”ட”ம் என்று இருப்பதைத் திருவண்ணாமலை மாவட்டம் என மாற்றவும்.

நானும் புலவர் கோவிந்தன் அவர்கள் வாழ்ந்த ஊரினன் தான். ஒரே தெருவும் கூட!!!!!