நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

இந்தி எதிர்ப்புப் போரில் வீரச்சாவடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர் இராசேந்திரன் சிலை...


மொழிப்போர் மறவர்
இராசேந்திரன்.தோற்றம் 16.07.1947 மறைவு 27.01.1965
உருவச்சிலை, அண்ணாமலைப் பல்கலைக்கழக
முகப்புவாயில் எதிரில்


இராசேந்திரனின் உருவச்சிலை (வேறொரு கோணம்)


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வாளர்கள் பலரைத் தந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும்.1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு தம் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.இப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் முதலாண்டு பயின்ற சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்ற மாணவர் காவல்துறையினரின் துமுக்கிக் குண்டுக்கு மார்புகாட்டி வீரச்சாவடைந்தார். இந்நிகழ்வு மிகப்பெரிய வரலாறாகத் தமிழக மொழிவரலாற்றில் பதிவாகியது.

இவர்தம் படம் பற்றி அண்ணன் அறிவுமதி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

"நல்லவர்கள் முகங்கள் தொலைந்துபோகின்றன... இப்பொழுது தெரிகிறது. பாளையங்கோட்டைக்கும் செயின்ட்சார்ச் கோட்டைக்கும் எவ்வளவு தூரம் என்று" என அக்கவிதை வளரும்.

அன்று முதல் இராசேந்தினின் முகம் எவ்வாறு இருக்கும் எனப் பல நாள்களாக நினைத்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும் பொழுதெல்லாம் அந்த ஈகச் சிலையருகே நின்று பார்த்து அக வணக்கம் செலுத்திவருவது என் வழக்கம். இன்று அதனைப் படம்பிடித்துவந்தேன்.

இணையத்தில் இட்டால் அனைவருக்கும் பயன்படும் என நினைத்து பதிவிட்டுள்ளேன்.

இப் படத்தை எடுத்தாள விரும்புவோர் என் பக்கத்திற்கு ஓர் இணைப்பு வழங்கியும் என் பெயர் சுட்டியும் எடுத்து ஆளளாம்.

16.07.1947 இல் பிறந்தவர் இராசேந்திரன். 27.01.1965 இல் குண்டடிபட்டு இறந்தார்.
இவருக்குச் சிலை வைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இடம் அளிக்கவில்லை. அப்பொழுதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அரசுக்கு உரிய நெடுஞ்சாலைத்துறை இடத்தை வழங்கியதாக அறிய முடிகிறது. அச் சிலையைக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது 16.03.1969 இல் திறந்துவைத்தார். தமிழ்ப்பற்றாளர் எசு.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கியமை கல்வெட்டால் உறுதிப்படுகிறது.

இந்தி எதிர்ப்பு வல்லாண்மைக் குழுவில் திரு.பக்கிரிசாமி, கனிவண்ணன், மா.நடராசன் (புதியபார்வை ஆசிரியர்), புதுவை வி. முத்து (பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்), திரு.ஆறுமுகம், திரு.துரைராசு உள்ளிட்ட உணர்வாளர்கள் இருந்து செயல்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் பின்பும் இணைப்பேன்.

8 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

அந்த மறத்தமிழருக்கு எங்கள் வீர வணக்கங்களை காணிக்கையாக்குகின்றோம்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி ஐயா.
மு.இ

ஜோ/Joe சொன்னது…

வீர வணக்கம்..வீர வணக்கம் .தாய் தமிழ் காக்க தன்னுயிர் தந்த தங்க மகனுக்கு வீர வணக்கம்.

ஆயில்யன் சொன்னது…

நிறைய முறை கல்லூரியினை கடக்கும்போது சந்தித்த சிலை!


அந்த போராட்ட காலத்து அனுபவங்களை என் அம்மா சொல்லி கேட்ட நாள்கள் நினைவுக்கு வருகின்றது!


நன்றி அய்யா!

மாயவரத்தான் சொன்னது…

மேற்படி மாணவரின் உறவினர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் தகவல் தெரியுமா?

Balamurugan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
சதுக்க பூதம் சொன்னது…

//இந்தி எதிர்ப்பு வல்லாண்மைக் குழுவில் திரு.பக்கிரிசாமி,கனிவண்ணன்,மா.நடராசன்(புதியபார்வை ஆசிரியர்),புதுவை முத்து(பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்),திரு.ஆறுமுகம்,திரு.துரைராசு உள்ளிட்ட உணர்வாளர்கள் இருந்து செயல்பட்டுள்ளனர்//

You forget to add Dyanaeswaran I.A.S, who led the student movement in Annamalai University in Anti Hindi Agitation

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

அடிக்கடி பார்த்த சிலையாயினும் இந்த இடுகையின் கருத்துப் பின்னணியுடன் பார்க்கும்பொழுது புதுப்பொருள் தொனிக்கிறது. உணர்வார்ந்த இடுகைக்குப் பாராட்டுகள்!
- தேவமைந்தன்