நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 2 ஆகஸ்ட், 2008

பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத்துறையின் தேசியப் பயிலரங்கில்...


முனைவர் இராதா செல்லப்பன் அவர்கள் வாழ்த்துரை


மு.இளங்கோவன் தமிழ் இணையம் பற்றி விளக்குதல்

பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத்துறையும் அகமதாபாத் INFLIBNET அமைப்பும் இணைந்து நடத்திய தென்னிந்தியப் பல்கலைக்கழக,கல்லூரி நூலகத்துறையினர் கலந்துகொண்ட தேசியப் பயிலரங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் நடைபெற்றது.

இன்று 02.08.2008 நடைபெற்ற இரண்டாம் நாள் அமர்வில் நான் கலந்து கொண்டு "தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த மின்னிதழ்கள்,மின்புத்தகங்கள்" என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினேன்.காட்சி விளக்கம்(பவர் பாயிண்ட்டு), இணையம் துணையுடன் என் உரை உயிர்ப்புடன் இருந்தது.

கணிப்பொறியில், இணையத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு, மின்னிதழ்கள், மின்நூலகங்கள், விருபா, தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம், புதுவை பிரஞ்சு இன்சுடியூட் நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகம்,பற்றி மிக விரிவாகப் பேசினேன்.தமிழ் வலைப்பதிவின் தேவை, தமிழ்மணம் அமைப்பினர் அமெரிக்காவிலிருந்து ஆற்றும் பணிகள் பற்றி விரிவாகப் பேசினேன்

இந்திய அளவிலும் குறிப்பாகத் தமிழக அளவில் புகழ்பெற்ற கல்லூரிகளின் நூலகர்கள் பலரும் வந்து கலந்துகொண்டு என் முயற்சியைப் பாராட்டினர். ஆய்வு மாணவர்கள் பலருக்கும் என் உரை பெரிய ஊக்கத்தைத் தந்தது. தமிழ் இணையத்தில் இவ்வளவு தகவல்கள் உள்ளமையை அரங்கினர் இதுநாள்வரை அறியவில்லை எனப் பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டனர்.

மு.இளங்கோவன் உரை

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் நூலகர்கள் பேராசிரியர் முனைவர் பி.வி.கொன்னூர், முனைவர் கே.துரைசாமி, தேசியத் தரமதிப்பீட்டுக்குழு(naac) சார்ந்த பேராசிரியர் பொன்முடி ராசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு என் உரையைக் கேட்டுப் பாராட்டினர்.

பேராசிரியர் முனைவர் கொன்னூர் அவர்கள் தனியே தொலைபேசி வழியாகவும் என்னை அழைத்துப் பாராட்டியமை மகிழ்ச்சி தருகிறது. தமிழ் இலக்கியத் துறைக்கு இணையத்தில் ஆற்றிவரும் என் பங்களிப்பு போல் அவரும் கன்னடமொழி இலக்கியத்திற்கு ஆற்றிவருவதை நினைவுகூர்ந்தார்.

என் பேராசிரியர் முனைவர் இராதா செல்லப்பன் அம்மா அவர்கள் வந்திருந்து என் உரை கேட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

பல்கலைக்கழக நூலகர் பேராசிரியர் சு.சீனிவாச ராகவன் அவர்கள் உள்ளிட்ட பல்கலைக் கழகத்தின் நூலகத் துறையினர் சிறப்பாகக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். 240 பேர் இப்பயிலரங்கில் பதிவு செய்து கலந்துகொண்டனர். நான் உட்பட 4 சிறப்பு உரையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தோம்.12 தொழில்முறை விளக்க உரைகள் இடம்பெற்றன. 40 பேராசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக அளவில் கல்வித்துறையில் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்வுக்கு என் உரை கல்வியாளர்கள் நடுவே நல்ல விதையாக ஊன்றப்பட்டுள்ளது.

நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்ற முறையிலும், அங்குப் பணி செய்தவன் என்ற முறையிலும் நண்பர்கள் பலரைக் கண்டு உரையாட இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

4 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அ.சுகுமாரன் அவர்களின் வாழ்த்து.03.08.2008

தமிழ் இலக்கியத்துறைக்கு இணையத்தில் ஆற்றிவரும் தங்கள் பணி பாராட்டத்தக்கது

Yuvaraj சொன்னது…

"தமிழ் இணையத்தில் இவ்வளவு தகவல்கள் உள்ளமையை அரங்கினர் இதுநாள்வரை அறியவில்லை"
என்கிற சேதி வியப்பாகவே உள்ளது. தகவல் நுணக்கவியலின் தாக்கம் எல்லாத்துறையிலும் நுழைக்கவேண்டும்.
அத்தகைய பணிகளில் தங்களின் ஏடுபாடு தமிழ் இணைய உலகிற்கு வரவேற்கத்தக்கது.

இணைவோம் தமிழர்களாய் ! இயற்றுவோம் தமிழால்!!

அன்புடன்.... வெ.யுவராசன்.

இரா.செந்தில் சொன்னது…

இளங்கோவன், உங்களுடைய தளத்தை கண்டதில் பெரு மகிழ்வு, நான் மென்பொருள் வல்லுனனாக பணியாற்றி வருகிறேன், மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற ஆர்வமாய் உள்ளேன். இதில் எனக்கு சில ஆலோசனைகள் தேவை. நீங்கள் உதவ முடிந்தால் மிக்க மகிழ்வு கொள்வேன்.
என் மின்னஞல் ira.senthil @ gmail . com
என் தொலைப்பேசி 9886892152
நன்றி
இரா.செந்தில்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்,

தங்களின் தமிழ்ப்பணி நீண்டு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்ப வளர்ர்சிக்கேற்ப தமிழும் மாற்றம் பெற்றால் மட்டுமே எதிரிகளின் பொய்களை உடைத்தெறிய முடியும், தொடரட்டும், சிறக்கட்டும் தங்கள் பணி.
நன்றி.