நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 15 டிசம்பர், 2016

'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்


பாவலர்மணி சித்தன்

புதுவையின் பழைய வரலாற்றை நெஞ்சில் சுமந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் அறிஞர்களுள் பாவலர்மணி சித்தன் குறிப்பிடத்தக்கவர். 96 அகவையைக் கடந்தபோதிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருபவர். வைணவ இலக்கியத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் உடைய பாவலர்மணி சித்தன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். இவர்தம் தமிழ்ப்பணியை அறிவதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டும் இயலாமல் இருந்தது. கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் வேங்கடேசனாருடன் இன்று சித்தன் அவர்களின் இல்லம் சென்றேன். மூன்று மணி நேரம் உரையாடி, அரிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். வழக்கம்போல் காணொளியில் இவர் பேச்சைப் பதிவுசெய்தேன்.

பாவலர்மணி சித்தன் 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆறாம் நாளில் புதுச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் முத்துசாமிப்பிள்ளை என்ற முதலியாண்டான், ஆதிலட்சுமி அம்மாள். தொடக்கக் கல்வியாக எழுத்துப் பயிற்சி முதல் எண்சுவடி வரை புதுச்சேரி காந்தி வீதியில் இருந்த பஜனை மடத்தில் பயின்றவர். கல்வே கல்லூரியில் பிரெஞ்சுப் படிப்பைப் படித்தவர். கல்வே கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராகப் பயின்றவர். தனிப் பயிற்சியாகவும் பாவேந்தரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். புதுவையில் இருந்த புதுவைக் கல்விக் கழகத்தில் தேசிகம் பிள்ளை, தில்லை கோவிந்தன் உள்ளிட்டவர்களிடம் மொழிப்பயிற்சி பெற்றவர். 19 அகவையில் தமிழாசிரியராகத் தேர்வுபெற்றாலும் மருத்துவத்துறையில் ஊதியம் அதிகம் என்பதால் ஆசிரியர் பணிக்குச்  செல்லாமல் மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பணியில் இணைந்தவர். தமிழார்வம் காரணமாகப் பண்டிதர் வீ. துரைசாமி முதலியார் அவர்களிடம் பயிற்சி பெற்று, வித்துவான் தேர்வு எழுதி, 22 ஆம் அகவையில் வித்துவான் பட்டம் பெற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்.

சித்தன் அவர்களின் குடும்பம் மரபு வழியான வைணவக் குடும்பம். எனவே இளம் அகவையில் ஆழ்வார் பாசுரங்களை நாளும் மனப்பாடம் செய்ய வேண்டிய சூழல். அதற்காகப் புதுவை வரதராசலு நாயுடு என்பவரிடம் வியாழன், ஞாயிறு கிழமைகளில் காலை எட்டுமணி முதல் 12 மணிவரை பாசுரங்களைப் படித்து நெட்டுருப்படுத்தியவர். திருவரங்கம் மீ. கோ. இராமாநுச சுவாமிகளிடம் ஆழ்வார்களின் பாசுரங்களைச் சிறப்பாகப் பயின்றவர். 18 அகவைக்குள் ஆழ்வார்களின் நாலாயிரம் பாடல்களும் சித்தனுக்கு மனப்பாடமானது. பெற்றோர் இதற்காக ஒரு விழா எடுத்துப் பாராட்டினர். இதனை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் தம்மைச் சந்திக்க சித்தனை அறிவுறுத்தினார். பாவேந்தரின் தொடர்பு அமைந்ததும் சித்தனுக்கு இலக்கிய இலக்கண ஈடுபாடு மிகுதியானது. ஆழமாகத் தமிழ் கற்கத் தொடங்கினார். வைணவ அமைப்புகள் பலவற்றில் இணைந்து இலக்கிய - சமயப் பணியாற்றவும் வாய்ப்புகள் அமைந்தன.

பாவலர்மணி சித்தன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பல் அறுவை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவையில் வாழ்ந்த அறிஞர்கள், தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் புதுவை அரசு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகளை அளித்துச் சிறப்பித்தது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் வைணவ இலக்கியங்கள் குறித்தும் கம்ப ராமாயணம் குறித்தும் அரிய சொற்பொழிவுகளாற்றியுள்ளார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைபாடியுள்ளார். இலக்கியப் பயணமாக இலங்கை, பிரான்சு, சுவிசு, உரோமாபுரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அரிய உரையாற்றி மீண்டவர்.

பிரான்சு நாட்டு அறிஞர் பிலியோசா அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தன் பிலியோசா அவர்களின் பன்மொழிப் புலமை, இலக்கிய ஈடுபாடு, தமிழாராய்ச்சித் திறத்தினை அறிந்து, அவர்மேல் உயர்ந்த மதிப்பினைக் கொண்டவர்.

புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனைச் சந்தித்து நாளும் உரையாடும் வாய்ப்பினைச் சித்தன் பெற்றிருந்தவர். காமராசர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, தமிழர் ஒருவர் முதலமைச்சாரனமையைப் பாராட்ட நினைத்துப் பாவேந்தர் விழாவெடுத்தார். அந்தநாளில் கவியரங்கம் ஒன்று நடந்தது. அப்பொழுது காமராசரின் சிறப்பினைக் கவிதையாகப் பாடிய சித்தனைப் புகழ்ந்து பாவேந்தர்,

வித்துவான் புதுவைச் சித்தர்
இராதா இந்நேர மிங்கே
நத்துவார்க் கெலாமி னிக்க
நறுங்குறிஞ் சித்தேன் பெய்தார்;
அத்தவக் கவிஞர் நன்னூல்
ஆய்ந்தவர், தமிழ்க்காப் பாளர்!
முத்தமிழ்ச் செல்வர் வாழி;
மொழிகின்றோம் அவர்க்கு நன்றி!

என்று பாடினார்.

குயில் இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பாடல்களை இராதாகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவரைச் சித்தன் எனப் பெயரிட்டுப் பாவேந்தர் எழுதவைத்தார். அன்றுமுதல் சித்தன் என்ற புனைபெயரே நிலைபெறலாயிற்று.

சித்தன் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலும், புதுவைக் கம்பன் கழகத்திலும் அறக்கட்டளையை நிறுவி வைணவ இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். பல்வேறு  வைணவ மாநாடுகளை ஏற்பாடு செய்து திறம்பட நடத்தியவர். சைவ இலக்கிய ஈடுபாடும் இவருக்கு உண்டு.

பாவலர்மணி சித்தனின் தமிழ்க்கொடை:

1.   அருட்கவி சுத்தானந்தர்
2.   புதையுண்ட நாகரிகம்
3.   தாமரைக்காடு(கவிதைகள்)
4.   பாவேந்தருடன் பயின்ற நாள்கள்
5.   புதுமை நயந்த புலவர்
6.   துரை வடிவேலனார்
7.   பங்காரு பத்தர்
8.   வேளாளர்
9.   பாரதி கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
10. கம்பன் பிள்ளைத்தமிழ்
11. கம்பனும் திருமங்கை மன்னனும்
12. மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்
13. கம்பன் கற்பகம்
14. பாட்டரங்கில் கம்பன்
15. கம்பனில் மனிதம்
16. கம்பனின் கற்பனைத் திறன்
17. கடல்கடந்த கம்பன்
18. கம்பர் வித்தகம்
19. தேவ தேவி(குறுங்காப்பியம்)
20. வைணவ மங்கையர்(கவிதை)
21. திருமால் திருநெறி
22. வஞ்சி விடுதூது
23. பாலகர்க்குப் பாட்டமுதம்
24. களம் கண்ட கவிதைகள்
25. இராமாநுசர்(புரட்சித்துறவி)


புலவர் அரசமணியின்  அன்புவிடு தூது நூலினைச் சித்தன் உரையுடன் பதிப்பித்துள்ளார்.


புதுவையில் வாழ்ந்த இலக்கியப் புலவர்கள், பாவலர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுடன் பழகியும், தமிழ்ப்பணியாற்றியும் தமிழுலகுக்குப் பன்னூல்களைத் தந்தும் பாவலர்மணி சித்தனின் தமிழ் வாழ்க்கை தொடர்கின்றது. வைணவ இலக்கியங்களைப் பயின்று கற்றுத் துறைபோகிய அறிஞராக விளங்குவதுடன் பாவலராகவும் நாவலராகவும் விளங்கும் இவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழர் கடன்!
பாவலர்மணி சித்தன்

மு.இ, பாவலர்மணி சித்தன், வில்லியனூர் வேங்கடேசனார்

குறிப்பு: கட்டுரை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

புதன், 14 டிசம்பர், 2016

பதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்


வெள்ளையாம்பட்டு சுந்தரம்

1993 ஆம் ஆண்டு முதல் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயாவை அறிவேன். எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை சார்பில் என்னுடைய அச்சக ஆற்றுப்படை என்ற நூலினை வெளியிட்ட நிகழ்வில் முதல்படியைப் பெற்றுக்கொண்டவராக வெள்ளையாம்பட்டு சுந்தரம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு என் வாழ்க்கையில் அமைந்த படிப்பு, ஆய்வு, பணிநிலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா அவர்களைக் கண்டுள்ளேன். அவர் பதிப்பித்த நூல்களை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுப் பார்த்தால் முதல் தலைமுறை எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம்கொண்டவராக விளங்கியமையை உணரலாம். பி.எல்.சாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை வெளியிட்டவர் என்ற வகையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மேல் எனக்கு எப்பொழுதும் மதிப்பு மேம்பட்டே இருந்தது. அது தவிர அவர் பற்றிய வேறு விவரங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது.

புதுச்சேரியில் இலக்கியப் புரவலராக விளங்கிய திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்களின் இல்லத்தில் இன்று நடைபெற்ற மணவினை உறுதிப்பாட்டு நிகழ்வுக்கு வந்திருந்த வெள்ளையாம்பட்டாரைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவர் என்னுடன் உரையாட விரும்பியதை அறிந்தேன். அவரின் பயணத்திட்டத்தை அறிந்துகொண்டு, இவருடன் ஒரு நேர்காணல் செய்யத் திட்டமிட்டேன். காணொளியில் இவரின் நேர்காணலை இன்று பதிவு செய்தோம்(ஓய்வில் காணொளியைத் தொகுத்து வழங்குவேன்).

ஐம்பதாண்டுகாலத் தமிழ் இலக்கிய உலகம், பதிப்புத்துறை, அரசியல் உலகம், அவர்தம் திரைப்படத்துறைப் பங்களிப்பு, சான்றோர் பெருமக்களின் வாழ்வியல் என்று சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்கள் உரையாடல் நீண்டது.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாம்பட்டு என்னும் சிற்றூரில் 04.09.1933 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சிவானந்தம், சாரதாம்பாள் ஆவர். எட்டாம் வகுப்புவரை அனந்தபுரம் பள்ளியிலும் பண்ணுருட்டி புதுப்பேட்டையிலும் கல்வி பயின்றவர். தந்தையாரை இழந்ததால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதன் காரணமாகப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தறித்தொழிலில் உழைத்தார். உறவினர் ஒருவரின் முயற்சியில் சென்னையில் ஒரு ஏற்றுமதித் துணி நிறுவனத்தில் ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினார். கைத்தறி மூட்டிகளை (லுங்கி) வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் என்பதால் கடுமையாகப் பணி செய்ய வேண்டிய நிலையில் உழன்றவர்.

விடுமுறை நாள்களின் ஓய்வு நேரங்களில் பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கிச்சென்று சென்னைப் பல்கலைக்கழகத்து வளாகத்தில் அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். தாம்  படித்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களைக் கண்டு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அக்காலத்தில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ்பெற்ற அப்துல் றகீம் அவர்களைக் கண்டு தம் உரையாடலைத் தொடங்கிய இவர் பன்மொழிப்புலவர் க. அப்பாத்துரையார், திருக்குறளார் முனுசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., வாணிதாசன், புலியூர்க் கேசிகன், உவமைக் கவிஞர் சுரதா, சுப்பு ஆறுமுகம், இராம கண்ணப்பன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்.

திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய கண்ணதாசனின் உதவியாளராக 1957 அக்டோபரில் இணைந்தவர். பல்வேறு திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்து உழைத்தவர். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, இதயவீணை, கவலையில்லாத மனிதன், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், மகளே உன் சமத்து, திருமகள், தங்கமலர் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் 1946 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு தன்மான உணர்வு தழைத்தவராகவும், பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை, உண்மை உளிட்ட இயக்க ஏடுகளையும் பெரியார் நூல்களையும், அம்பேத்கார் நூல்களையும் காந்திய நூல்களையும், நேருவின் படைப்புகளையும் கற்றுத் தெளிந்தவர்.

ஐம்பதாண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களைப் பற்றியும் பதிப்பகங்கள் பற்றியும் பல்வேறு செய்திகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் நண்பர் ஒருவரின் ஏற்பாட்டில் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, முதல் முறையாகப் பதினைந்து நூல்களை வெளியிட்டதையும் அதன் பிறகு ஆண்டுதோறும் கனிசமான நூல்களை வெளியிட்டுவருவதையும் குறிப்பிட்ட  வெள்ளையாம்பட்டு சுந்தரம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தாம் பதிப்பித்துள்ளதையும், ஒவ்வொரு நூலுக்கும் வரைந்துள்ள பதிப்புரைகள் குறிப்பிடத்தக்க சிறப்பிற்கு உரியன என்றும் குறிப்பிட்டார். இவரின் பதிப்பகம் புதினங்களை வெளியிடுவதில்லை என்ற குறிக்கோள் கொண்டது. வரலாறு, கல்வெட்டு சார்ந்த நூல்களுக்கு முதன்மையளித்து வெளியிடுவது இவர் இயல்பு. நூலகங்களில் இந்த நூல்கள் இருந்தால் இந்தத் தலைமுறையினர் கற்கவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையாவது கற்பார்கள் என்ற நம்பிக்கையில் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார்.

தெய்வசிகாமணி ஆச்சாரியார் எழுதிய மேடைத்தமிழ் என்ற நூலுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்  திரு. வி. க. அணிந்துரை 16 பக்கம் எழுதியுள்ளார் என்ற செய்தியைப் போகும் போக்கில் தெரிவித்தார். இந்த நூலில் பெரியாரின் மேடைப்பேச்சின் சிறப்பு, அண்ணாவின் மேடைப்பேச்சு முறை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார். நூல்களை வாங்குவது, கற்பது, கற்ற வழியில் நிற்பது வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயல்பாகும்.

1954-55 அளவில் தந்தை பெரியார் திருமழிசை ஊருக்கு வந்துபொழுது புதிய சுவடியில் கையெழுத்து வாங்கிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதுடன் அன்றைய நாளில் பெரியார் மூன்றுமணி நேரம் சொற்பொழிவாற்றிய அரிய செய்தியைத் தெரிவித்தார். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட உலக அறிஞர்களின் வரலாறு, பணிகளை எடுத்துக்காட்டி இவர்களின் மேம்பட்டவர் பெரியார் என்று பேருரை ஒன்றையை இந்த நேர்காணலில் நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டுப் பள்ளிகள்  கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்த அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்கள், சிற்பங்களைக் குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளார். தக்க அறிஞர்களை அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள கல்வெட்டுகள், அரிய வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டித் தமிழக வரலாறு துலங்குவதற்குரிய பதிப்புப்பணிகளைச் செய்துள்ளார். தொல்லியல் அறிஞர்கள் இரா. நாகசாமி, கோபிநாத், முனைவர் இராச. பவுன்துரை, பேராசிரியர் இரா.மதிவாணன், முனைவர் இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி, ச. கிருஷ்ணமூர்த்தி, பாகூர் குப்புசாமி, வில்லியனூர் வெங்கடேசன், வே. மகாதேவன்,  உள்ளிட்டோரின் கோயில், கல்வெட்டு சார்ந்த நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணிபுரிந்துவரும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தம் 84 ஆம் அகவையிலும் படிப்பதிலும் எழுதுவதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் வாழ்க்கை இளைஞர்களுக்கு முன்மாதிரி வாழ்க்கையாகும்.

23.02.1956 ஆம் ஆண்டில் பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் தலைமையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம், கோகிலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இப்பொழுது இருவர் மட்டும் உள்ளனர்.



                                           வெள்ளையாம்பட்டு சுந்தரம்

                           மு.இளங்கோவன், வெள்ளையாம்பட்டு சுந்தரம்

குறிப்பு: கட்டுரையைப், படங்களை எடுத்து ஆள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.