நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 14 டிசம்பர், 2015

திருக்குறள் புலவர் நாவை. சிவம் அவர்கள்!


புலவர் நாவை. சிவம் அவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ள செட்டிக்குளம் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும்மாணவர்களும் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மொழிஞாயிறு பாவாணர் அவர்களை நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பள்ளியின் தமிழ் உணர்வு தழைத்த ஆசிரியர்கள் அழைத்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒரு மாட்டுவண்டியில் மேசையைப் பொருத்தித் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் அவர்களின் திருவுருவப் படத்தை அதில் வைத்தனர். ஊர்வலம் ஆயத்தமானது. படத்தின் அருகில் பாவாணர் அவர்களை அமரச் சொன்னார்கள். மறைமலையடிகளுக்கு இணையாக நானா? என்று பாவாணர் அவர்கள் ஒரு வினா எழுப்பிவிட்டு, வண்டியில் அமர மறுத்தார். பின்னர் வண்டியின் முன்பாகப் பாவாணர் அவர்கள் காலார நடந்து வந்தார். அனைவரும் ஊரை வலமாக வந்து, பள்ளியை அடைந்தனர். இந்த ஊரின் தமிழ் விழா நடைபெற்றபொழுது பத்தாம் வகுப்பில் மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார் நாவை. சிவம் அவர்கள். பாவாணரின் நூல்களில் அன்று முதல் நாட்டம்கொண்டு, தமிழ் உணர்வாளராக வளர்ந்தவர்.

புலவர் நாவை. சிவம் அவர்கள் மணப்பாறையில் இப்பொழுது வாழ்ந்து வருகின்றார். பாவாணர் பற்றாளராகவும், தனித்தமிழ் இயக்க உணர்வாளராகவும் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தமிழ்ப்பணியும் திருக்குறள் பணியும் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்துவைப்போம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த நாட்டார்மங்கலம் என்ற ஊரில் திரு. துரை. வைத்தியலிங்கம், திருவாட்டி அகிலாண்டம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக நாவை. சிவம் அவர்கள் 08.08.1945 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் சிவராமலிங்கம் ஆகும். செட்டிக்குளத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், முசிறியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றார். கல்லக்குறிச்சி அருகில் உள்ள நயினார் பாளையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் 1965 ஆம் ஆண்டு இணைந்தார். புலவர், முதுகலை, கல்வி இளவல், ஆகிய பட்டங்களைப் பின்னாளில் பெற்றவர்.

புதுக்கோட்டை, விராலிமலை, மணற்பாறை ஆகிய இடங்களில் தலைமையாசிரியர், தொடக்கக் கல்வி அலுவலர் என 38 ஆண்டுகள் பணிபுரிந்தவர். மாணவர்களின் கல்வி நலனுக்கும் ஆசிரியர்களின் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். ஆசிரியர் போராட்டங்களில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

சிவ ராமலிங்கம் என்ற தம் பெயரைத் தமிழ்ப்படுத்தும் வகையில் நாவை. சிவா என்று அமைத்து, பாவாணரின் ஒப்புதலுக்குக் காட்டச் சென்றார். “ஆகார இறுதிப் பெயர்ச்சொல் ஆகா” என்று பாவாணர் குறிப்பிட, சிவா சிவம் ஆனார்.

தென்மொழி, முல்லைச்சரம், தமிழ்ப்பணி முதலிய ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.
                      பொன்னாடையில் பொலிபவர் புலவர் நாவை. சிவம் அவர்கள்

நாவை. சிவம் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டித் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்ற விருதைத் தமிழக அரசு வழங்கிப் பாராட்டியுள்ளது. வாழ்வியல் சிந்தனைக் கலந்துரையாடல், திருக்குறள் தொடர்வகுப்புகள், தனித்தமிழ்ச் சொற்பயிற்சி வகுப்புகள், வீடுதோறும் குறள் நூலும் திருவள்ளுவர் படமும் வழங்கி வருதல், முச்சந்திகளில் முப்பால் முழக்கம், தெருவெல்லாம் தமிழ்முழக்கம், பள்ளிகளில் உள்ளும் புறமும் திருக்குறள் எழுதுவித்தல், தமிழ்முறைத் திருமண நிகழ்வுகள் என இவரின் பணிகள் நீளும்.

40 ஆண்டுகளாக இவர் தொடர்ந்து நடத்தும் திருவள்ளுவர் விழாவில் பள்ளி மாணவர்களுக்குக் குறள்போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றார். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களை அழைத்துப் பாராட்டு விழாக்களை நடத்தியுள்ளார். வெல்லும் திருவள்ளுவம், வெண்பா விளைச்சல், செந்தமிழ்ப் பூக்கள் என்பன இவரின் படைப்பு நூல்கள் ஆகும். மலேசியா, சிங்கப்பூர், மாலைத்தீவு, இலங்கை போன்ற அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் செய்தவர். திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு இவருக்குத் ‘தமிழ்மாமணி’ என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.


புலவர் நாவை. சிவம் அவர்கள் நிறைந்த வாழ்நாள் பெற்று, நற்றமிழுக்குத் தொண்டாற்ற நெஞ்சார வாழ்த்துவோம்!.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஐரோப்பியர்களின் அருந்தமிழ்ப் பணிகள்!

ஐரோப்பியர்கள் நாடுபிடிக்கவும், வணிகத்திற்கும், மதம் பரப்பவும் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று ஒருவரியில் அவர்களின் வருகை வரலாற்றை நிறுத்திக்கொள்வோம். அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகளையும் இன்றும் செய்துவரும் தொண்டுகளையும் நினைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடன்பட்டுள்ளோம்.

தமிழ் நூல்களை அச்சேற்றவும், தமிழுக்கு அகராதிகளை உருவாக்கவும், தமிழ் இலக்கணத்தைப் பிறமொழிகளில் எழுதவும், தமிழ்மொழி அமைப்பையும், பெருமைகளையும் ஒன்றுதிரட்டிக் காட்டவும், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தவும் அவர்கள் செய்துள்ள பணிகள் நமக்கு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகின்றன.

எத்தனையோ அகரமுதலிகளை அவர்கள் படைத்திருந்தாலும், எத்தனையோ தமிழுக்கு ஆக்கமான நூல்களை அவர்கள் படைத்திருந்தாலும் அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒருகுடைக்கீழ் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும், பயன்படுத்தவும் இன்றைக்குத் தமிழகத்தில் ஆட்கள் அருகிவிட்டனர். ஓரிருவரே இத்தகைய அமைதிப்பணிகளைச் செய்துவருகின்றனர். இது நிற்க.

அண்மையில் 1876 இல் அச்சான ஓர் அகரமுதலியைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதனை இயற்றியவர் ஓர் ஆங்கிலேயர். அவர் தமிழில் ஒரு துறைசார்ந்த சொற்களைத் திரட்டித் தம்மையொத்த ஆங்கிலேயருக்கு, ஆங்கிலத்தில் விளக்கம் எழுதி வழிகாட்டி உதவியுள்ள பாங்கு பாராட்டும் வகையில் இருந்தது.

அந்த அகரமுதலியில் இடம்பெற்றுள்ள சொற்களின் வழியாக அக்காலத்துச் சமூக அமைப்பை என்னால் ஒருவகையில் புரிந்துகொள்ள முடிந்தது. எடுத்துக்காட்டாகப் பாதையைக் குறிக்கும் வகையில் தமிழில் அமைந்துள்ள பல சொற்களை அறிமுகம் செய்துள்ளதைக் குறிப்பிடலாம். இச்சொற்களின் பட்டியல் அக்காலத்தில் கரடு முரடான நிலத்தை, அடையாளம் கண்டு, அவற்றைத் திருத்திச் சீர்மைப்படுத்திய தமிழ் மக்களின் உழைப்பின் வலியை எனக்குக் காட்டியது.

தமிழகத்திலிருந்து இலங்கை மலையகத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்களையும், அவர்களின் பரிதாப வாழ்க்கையையும் அவர்களை அழைத்துச் செல்வதற்குக் காரணமாக அமைந்த கங்காணிகளையும், அவர்களை வேலை வாங்கிய அதிகாரியையும், அவர்கள் அந்தக் காபித் தோட்டங்களில் எதிர்கொண்ட நோய்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அந்த அகரமுதலியில் பதிவுசெய்யப்பட்ட சொற்களே எனக்குச் சித்திரமாகக் காட்சிப்படுத்தின.


இதனையொத்த நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் இணையதளங்களில் பொதுப் பார்வைக்கு உள்ளன. தமிழ்த் தொடர்பான நூல்களை ஐரோப்பியர்கள் இணையத்தில் பொதுப்பார்வைக்குத் தரமுடன் வைத்துள்ளமைபோல் தமிழகத்து நூலகங்களில் தேங்கிக் கிடக்கும், புழுதி படிந்து போற்றுவார் இல்லாமல் உள்ள பல்லாயிரம் அரிய நூல்களைப் பொதுப்பார்வைக்கு வைக்க யாரேனும் முன்வருவார்களா? என்ற ஏக்கப் பெருமூச்சே எனக்கு இப்பொழுது எழுகின்றது!