நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 ஜூன், 2009

தமிழ் இணையப்பயிலரங்கம் நாகர்கோயிலில் இனிதே தொடங்கியது...

தமிழ் இணையப்பயிலரங்கம் இன்று 20.06.2009 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோயில் மானிங்ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,அமிர்தா ஊடக ஆய்வு மையமும்,அமுதம் தமிழ் மாத இதழும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தன.

ஏறத்தாழ அறுதுபேர் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சி பெற்றனர்.காலையில் 10 மணிக்குக் குத்துவிளக்கேற்றி மானிங் ஸ்டார் கல்லூரி தாளாளர் விக்டர் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.எழுத்தாளர் செந்தீ நடராசன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.செல்வதரன் அவர்கள் பயிலரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மிகச் சுருக்கமாகத் தொடக்கவிழா நடந்தது.

காலையில் பத்து மணியளவில் என் உரை தொடங்கியது.தமிழ்த்தட்டச்சு வகைகள்,தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு,பயன்பாடு பற்றி எடுத்துரைத்தேன்.மின்னஞ்சல் உரையாடல் வசதிகளை எடுத்துரைத்துக் காட்சிவழி விளக்கினேன்.என் உரை சிறப்பாக அமைய நண்பர் செல்வமுரளி,விசய லட்சுமணன் ஒரிசா பாலு ஆகியோர் தொழில்நுட்ப அளவிலான பணிகளைக் கவனித்தனர்.

உரையாடல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் செயமோகன் அவர்கள் எங்களுடன் இணையம் வழி பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துரைத்தார்.அதுபோல் முனைவர் நா.கண்ணன் அவர்கள்(கொரியா)எங்களுடன் உரையாடலில் பங்கேற்றார். தமிழ்க்காவல் முருகையன்,திரட்டி வெங்கடேசன் ஆகியோரும் உடனடியாக இணைப்புக்கு வந்து வாழ்த்துரைத்தனர்.அரங்கில் இருந்தவர்களுக்குத் தமிழ் வழியில் இந்த அளவு வசதி உள்ளதே என்ற வியப்பும் மலைப்பும் இருந்தது.

மின்னிதழ்கள் என்ற தலைப்பில் அடுத்த நிலையில் என் பேச்சுத் தொடர்ந்தது.தினமலர் நாளிதழ் ஒருங்குகுறியில் வருவது பற்றியும்,அதன் பல்வகை சிறப்புகள் குறித்தும் உரையாற்றினேன்.தினமணி நாளிதழ் அண்மையில் ஒருங்குகுறிக்கு மாறியுள்ளது பற்றியும் பிற ஏடுகள் ஒருங்குகுறிக்கு மாறவேண்டியதன் தேவை பற்றியும் எடுத்துரைத்தேன்.
தமிழ்மணம் தளம் அதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றியும் காட்சி வழி விளக்கினேன்.அதுபோல் மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகம்,வரலாறு உள்ளிட்ட தளங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,அருட் தந்ததையர்கள் பலர் வந்துள்ளனர்.

உணவு இடைவேளைக்கு இரண்டு மணிக்குப் பிரிந்தோம்.மீண்டும் மூன்று மணிக்கு அமர்வு தொடங்கியுள்ளது...

2 கருத்துகள்:

Venkatesh சொன்னது…

உங்களுடைய புதிய டெம்ப்லெட் மிக அருமையாக உள்ளது.

வெங்கடேஷ்
http://www.thiratti.com

Murugeswari Rajavel சொன்னது…

sir,
u have done excellent job.