நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 5 ஜூன், 2009

கோவை கற்பகம் பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்ச் செவ்விலக்கியம் சான்றிதழ்,பட்டய வகுப்புகள்



 கோவையில் 1989 இல் நிறுவப்பட்ட கற்பகம் அறக்கட்டளை 1995 இல் கற்பகம் கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்கியது.அக்கல்வி நிறுவனம் படிப்படியே வளர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

 கற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக விளங்குபவர் மாண்பமை இராச. வசந்தகுமார் அவர்கள் ஆவார்.மாந்த நேயம் மிக்க மாண்பாளரான இவர் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். உலகின் போக்கை அறிந்து கல்வியின் அனைத்து மேம்பட்ட கல்வியையும் அருள் உள்ளத்தொடு வழங்கி வருகிறார். தமிழ்ப்பற்றும் தமிழ் ஆர்வமும்கொண்ட இவர் தமிழ் மொழி,தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்பொருட்டு அனைவரும் பண்டைத்தமிழ் இலக்கியங்களை அறியும் வண்ணம் அறிஞர் தமிழண்ணல் அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பரப்பும் பணியில் மனமுவந்து ஈடுபட்டுள்ளார்.அதன் அடிப்படையில் தமிழ்ச் செவ்விலக்கியம் சான்றிதழ்,பட்டய வகுப்புகள் நடத்தும் பணிக்கு மனமுவந்து விருப்பம் தெரிவித்துப் பொருந்தும் வகையில் துணைநிற்க முன்வந்துள்ளார்.

 தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் 12.10.2004 இல் இந்திய நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு அறிஞர்கள் குழு தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல் உரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றைச் செவ்விலக்கியமாக அறிவித்தது.

 இவற்றுள் பின்னைய இரண்டும் நீங்கலாக ஏனைய இருபத்திரண்டு நூல்களையும் இருபத்திரண்டு தாள்களாகக் கருதப்பட்டுப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் நான்கு சிறு நூல்கள் பாட நூலாக அமையும்.இவை பயிற்சி நூல்களாக எளிய நடையில் இருக்கும். ஒவ்வொரு நூல்கள் பற்றிய அறிமுகமும்,உள்ளார்ந்த சிறந்த கருத்துகளும் இந்த நூலில் இருக்கும். மிகப்பெரிய ஆய்வு நிகழ்த்துவதற்குரிய அடிப்படைகளை இந்த நூலில் காணலாம்.அதே நேரத்தில் கற்பவருக்கு எந்த மயக்கமோ, தயக்கமோ இல்லாமல் அறிஞர் தமிழண்ணல் அவர்கள் இந்தப் பயிற்சி நூலை வடிவமைத்துள்ளார்.

 கற்பகம் பல்கலைக்கழகம் இதனை ஓர் உலக அளவிலான முறையில் பரப்புவது என்ற உயரிய நோக்குடன் இத்திட்டத்தைத் தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டுமன்றிப் பிற மாநிலக்கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பிற நாடுகளிலும் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டுத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் பற்றிய சிறப்பை நிலைநாட்டுவதை நோக்கமாகக்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 கற்பகம் பல்கலைக்கழகத்தில் நேர்முகப்பயிற்சிக் களங்கள் தொடர்ந்து நடைபெறும். பிற நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த தொடர்புகொள்ளலாம்.

இப்பயிற்சி அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியான பயிற்சியாகவும் அமையும்.

 22 நூல்கள் பற்றிய இப்பயிற்சி சுழற்சி முறையில் அமைந்தது.தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த யாரும் இதில் இணைந்து பயிற்சி பெறலாம். பயிற்சி வகுப்பிலுள்ள காலம்,இடம், வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்பப் பயின்று சான்றிதழ் பெறலாம்.

 இந்தப் பயிற்சி நான்கு பகுப்பாகப் பகுக்கப்பட்டுள்ளது.இவற்றுள் எவையேனும் 5 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் 10 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்குப் பட்டயமும்,15 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மேற் பட்டயமும்,22 தாள்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சிறப்புநிலைப் பட்டயமும் கற்பகம் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

 இப் பயிற்சிக் களங்களை நடத்த விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பயில விரும்பும் மாணவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகள்

முனைவர் ப.தமிழரசி
தமிழ்த்துறைத் தலைவர்,
கற்பகம் பல்கலைக்கழகம்,
ஈச்சநாரி அஞ்சல்,
கோயம்புத்தூர்-21
பேசி: 99421 70002

தமிழ்ப்பயிற்சிக்கள இயக்குநர்,
ஏரகம் 4 / 585,சதாசிவநகர் முதன்மைச்சாலை,
மதுரை-625 020
செல்பேசி : 94430 64749
தரைவழி: 0452- 2533792

பயிற்சி விவரங்கள்

கோயமுத்தூர் கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகப் பயிற்சி நடக்க உள்ளது. 2009 சூன் மாதம் 30 ஆம் நாளுக்குள் உருவா 100 அனுப்பிப் பெயரைப் பதிவு செய்துகொள்ளவும். பதிவு செய்ததும் அவர் விரும்பும் தாளுக்குரிய நான்கு சிறுநூல்கள் அனுப்பப்பெறும். அவற்றை அவர் நன்கு படித்து மனப்பாடம் செய்வதுபோலும் முறையில் கற்று வரவேண்டும். 2009 ஆகத்து மாதம் முதல் சனி, ஞாயிறு கிழமைகளில் வாய்ப்புக்கேற்பப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

முதற்கண் தொல்காப்பியம், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு- பாலை, அகநானூறு பிற திணைகள் இவை ஐந்தும் தொடர்ந்து நடத்தப்பெறும். இவை சான்றிதழ் பயிற்சி வகுப்பிற்குரியன.இவை ஐந்தினுக்கும் உரூவா ஐந்நூறு சேர்த்து மொத்தமாக அனுப்பியும் பதிந்துகொள்ளலாம்.

அஞ்சல்வழி:

அஞ்சல் வழியில் பயில விரும்புவோர் ஒரு நூலுக்கு உரூவா 200 முன்னதாக அனுப்பிப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.அவர்களுக்கு நான்கு அறிமுக நூல்கள் தவிர்த்து,வேறு சில விளக்கக் குறிப்புகள்,ஐயம் தீர்த்தல், வினாத்தாள்கள் எனத் தொடர்ந்து தொடர்புகொண்டு சான்றளிக்கப்படும். சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புக்குரிய ஐந்து தாளுக்குமாக ஆயிரம் உரூவா தொகை அனுப்பியும் பதிந்துகொள்ளலாம்.

கணினி வழி:
உலகெங்கும் உள்ளவர்களுக்காக இதில் கூடுதல் விளக்கக்குறிப்புகளும், ஆங்கில ஆக்கப்பகுதிகள், ஐயம் தீர்த்தல்,வினா-விடைகள், என எத்தகைய எளிய நிலையினருக்கும் பயன்தருமாறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். அயல்நாட்டினர் ஒரு நூலுக்கு அமெரிக்க டாலர் 100 அனுப்பிப் பதிவு செய்துகொள்ளவேண்டும். சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புக்குரிய ஐந்து நூல்களுக்கும் சேர்த்து ஐந்நூறு டாலர் அனுப்பியும் பிற நாட்டார் அதற்கு ஈடான தொகை அனுப்பியும் பதிவு செய்துகொள்ளலாம்.

தொகை அனைத்தும் KARPAGAM UNIVERSITY என்னும் பெயருக்குக் கோயம்புத்தூரில் (COIMBATORE) மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் அனுப்பிவைக்கப்பெறுதல் வேண்டும்.

தொடர்பு முகவரிகள்

KARPAGAM UNIVERSITY
POLLACHI MAIN ROAD,
EACHANARI POST,
COIMBATORE-641 021
E.Mail : info@karpagamuniversity.ac.in
www.karpagamunivrsity.ac.in

U.S.A
MANI PERIAKARUPPAN
7903 WISTERIA CT
DUBLIN,OH 43016
Ph. 614 923-3868
cell. 614- 353 - 8268
E.Mail : mperia@yahoo.com


1 கருத்து:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

இன்றைய சூழலில் தேவையை அறிந்து கற்பகம் பல்கலைக்கழகம் செயல்படத்துணிந்துள்ளது.வாழ்த்துக்கள்.இதனை ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் மேற்கொண்டால் தமிழ் ஆக்கம் பெறும்.