நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள்(15.12.1936)


முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்

  இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழறிஞர்கள் பதின்மரின் பெயர்ப்பட்டியல் ஒன்றை ஆயத்தம் செய்தால் அதில் அறிஞர் சோ.ந.கந்தசாமியார் அவர்களின் பெயரும் இடம்பெறும். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளை அறிந்தும், அதில் பழுத்த புலமைபெற்றும், புலமைச் செருக்கு மிகுந்தும், தமிழ் வீறு கொண்டும் விளங்குபவர் நம் ஐயா கந்தசாமியார் அவர்கள்.

  அவர்களை இருபான் ஆண்டுகளாக யான் நன்கு அறிவேன். என் தமிழாசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்கள் அடிக்கடி ஐயா கந்தசாமியார் அவர்களின் பழுத்த தமிழறிவு பற்றி குறிப்பிட்டு அவர்போல் நீ தமிழ் படிக்கவேண்டும் என்று அடிக்கடி என்னைக் குறிப்பிடுவார். அது நாள் முதல் அறிஞர் கந்தசாமியார் அவர்களின் மேல் ஒருதலைக் காதல் எனக்கு ஏற்பட்டது.

  பத்தாண்டுகளுக்கு (28,29,30-03.1998) முன்னர் யான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "சங்கப் பாடல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள்" என்னும் பொருளில் ஒரு கட்டுரை படித்தேன். அறிஞர் சுப்பு ரெட்டியார் தலைமை. நம் ஐயா கந்தசாமியார், தி.வே.கோபாலையர், கா.சிவத்தம்பி, பெ.மாதையன் உள்ளிட்ட சங்க இலக்கிய அறிஞர்கள் அவ்வுரை கேட்டு மகிழ்ந்து பாராட்டினர். அவ்வாய்வுரையால் ஈர்க்கப்பெற்று அன்று முதல் என்பால் அன்பு பாராட்டி வருபவர் நம் கந்தசாமியார் அவர்கள்.

  ஐயா கந்தசாமியார் அவர்கள் ஒருவகையில் என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் மேல் எனக்கு என்றும் மதிப்பும் பாசமும் மிகுதி. அவர்களின் தமிழ்ப்புலமை நினைந்து அவர்களை என் ஆசிரியர்களுள் ஒருவராகவே மதித்துப் போற்றுகிறேன். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

  அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கிலம் வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் அவர்கள் 15.12.1936 இல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் வை.சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் அவர்கள் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்றவர்.

  சோ.ந.கந்தசாமியார் அவர்கள் முதுகலைத் தமிழ் இலக்கியம் தண்ணார் தமிழளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1958). எம்.லிட்(1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர்கள்.

  தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து நடத்தினார். பின்னர் மலேசியாப் பல்கலைக் கழகத்திலும் (1979-85) தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும்(1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியை அழுத்தமாகச் செய்தவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

  சோ.ந. கந்தசாமியார் அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். இவரிடம் கற்றவர்களும், இவருடன் கற்றவர்களும் இவர் கல்வி கண்டு மருள்வது உண்டு. நினைவாற்றலில் வல்லவர். எடுத்துரைப்பதில் ஆற்றலாளர். மேடையை, வகுப்பறையத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியான பேச்சாற்றல் வல்லவர். எதுகைகளும், மோனைகளும் இவர் பேச்சில் சிந்திச் சிதறும்.

  'அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம்' என்றும், 'எங்கள் மனசைக் கவர்ந்த பனசைக் கல்லூரி' என்றும் இவர் விளிக்கும் பாங்கு கற்றவர்களால் என்றும் நினைவுகூரத்தக்கன. இத்திறம் கண்ட கற்றார் களிப்புறுவர். இவர் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்த மேலோர்.நூலோர்.

  கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளனர்.

  அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை. இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன. தரத்தன. இவர் இந்து நாளிதழில் முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதும் நூல் மதிப்புரைகள் அறிஞர் உலகால் என்றும் போற்றி மதிக்கப்படுவனவாகும்.

  இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கிப் பார்க்கலாம்.

இலக்கிய நூல்கள்

1.சங்க இலக்கியத்தில் மதுரை
2.திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
3.இலக்கியமும் இலக்கிய வகையும்
4.தமிழிலக்கியச் செல்வம்(ஐந்து தொகுதிகள்)
5.திருமுறை இலக்கியம்
6.திருமுறையில் இலக்கிய வகை
7.உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
8.மணிமேகலையின் காலம்
9.பரிபாடலின் காலம்
10.இலக்கியச்சோலையிலே

திறனாய்வு

11.Bharathidasan As a Romantic Poet
12.Anthology of Book Reviews
13.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு

14.English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
15.Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
16.16.திருமந்திரம் எட்டாம் தந்திரம் English Translation of Tirumantiram(Total 527 verses)

இலக்கணம்

17.தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
18.தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
19.புறத்திணை வாழ்வியல்
20.தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
21.கலித்தொகை யாப்பியல்

மொழியியல்

22. A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
23.A Linguistis of Manimekalai

தத்துவம்

24.தமிழும் தத்துவமும்
25.தமிழிலக்கியத்தில் பௌத்தம்
26.தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
27.இந்தியத் தத்துவக் களஞ்சியம்(மூன்று தொகுதிகள்)
28.Budhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
29.Indian Epistemology as Expounded in the Tamil Classics
30.Tamil Literature and Indian Philosophy
31.The Yoga of Siddha Avvai(Published in Canada)
32.Advaitic Works and Thought in Tamil
33.The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

  அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அமையாமல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

  இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவர்தம் நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி, குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி, மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் தன் தகுதியால் பெற்றுள்ளார்.

  அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்கள் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

சோ.ந.கந்தசாமியார் அவர்களின் தொடர்பு முகவரி :
முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்
61,ஐந்தாம் தெரு,
நடராசபுரம்(தெற்கு).
தஞ்சாவூர் - 613007

3 கருத்துகள்:

Yuvaraj சொன்னது…

வாழ்ந்த பின்னே வரலாறு எழுதும் மரபிலிருந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது உலகறிய செய்யும் இம்முயற்சி தமிழ் வரலாற்றின் மிகப்பெரிய பதிவு.
தமிழ்த்திரு மு.இளங்கோவன் அவர்கள் தங்கள் பதிவுதனை வாழும் அந்த அறிஞர்களின் குறிப்பை அவர்கள் வாழும் காலத்திலேயே நூலாக வெளியிட வேண்டும்.

வாழ்த்துகளுடன்....வெ.யுவராசன்.

Unknown சொன்னது…

நல்ல முயற்சி.அறிஞர்களின் வரலாறு
நமக்கு நல்ல ஊக்கமளிக்கும்.
சோ.ந.க.அவர்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.
ஒரு திருத்தம்:
தொலைபேசி என்று வழங்குக.
தொலைப்பேசி மரபன்று.
விளக்கத்திற்கு என் ”சொல்லாக்கம்” நூல்
காண்க.
மறைமலை இலக்குவனார்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பதிவிற்கு நன்றி.
புலவர்கள் சில்லோர் தொலைப்பேசி என எழுதுவதால் குறித்தேன்.
திருத்திக்கொள்கிறேன்.
மு.இ