நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 4 மே, 2011

இந்தியத் தலைநகரில் செம்மொழி விருதுபெறும் அறிஞர்கள்


புது தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் வாயிலில் பெருங்கவிக்கோ, ஆண்டவர், பேராசிரியர் அடிகளாசிரியர்,முனைவர் மு.இளங்கோவன்

தமிழ்மொழியை இந்திய அரசு செம்மொழி என்று அறிவித்துள்ளது(2004). இதன் பயனாகச் செம்மொழித் தமிழாய்வுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்த அறிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் நோக்கில் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தொல்காப்பியர் விருது பெறப் பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்கு (2005-2006, 2006-2007, 2007-2008) இளம் அறிஞர்கள் பதினைந்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் புதுதில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகின்றது. விருது பெறுவதற்குரிய தமிழறிஞர்கள் அனைவரும் சென்னையிலிருந்து இன்று புதுதில்லிக்கு வானூர்தி வழியாக அழைத்துச்செல்லப்பட்டனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி, ஆய்வறிஞர் கு.சிவமணி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழறிஞர்களை அழைத்துச் சென்றனர்.

பேராசிரியர் நன்னன், பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர்களும் உடன் சென்றுள்ளனர். இவர்களுடன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறும் அறவேந்தன், மணிகண்டன், மு.இளங்கோவன், அரங்க.பாரி, செல்வராசு, ஆண்டவர், கலைவாணி, சந்திரா, பழனிவேலு, மணவழகன் உள்ளிட்ட பேராசிரியர்களும் சென்றுள்ளனர்.





தமிழறிஞர்கள் நன்னன், கு.சிவமணி, க.இராமசாமி, பெருங்கவிக்கோ, மு.இளங்கோவன், ஆண்டவர், பழனிவேலு


விருதுபெறும் அறிஞர்கள் பேராசிரியர் க.இராமசாமி அவர்களுடன்

4 கருத்துகள்:

போளூர் தயாநிதி சொன்னது…

செம்மொழி விருது பெரும் அறிஞர் களுக்கும் தமிழறிஞர் களுக்கும் உளம் கனிந்த பாராட்டுகள் . உங்களின் பணி தமிழை தமிழனை உயத்துவதாக இருக்கட்டும் . பாட்டுகளும் வணக்கங்களும் .

ராமலக்ஷ்மி சொன்னது…

செம்மொழி விருது பெற்ற தங்களுக்கும், பிற அறிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பரிதியன்பன் சொன்னது…

செம்மொழி விருது பெற்ற தங்களுக்கு புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பிலும் என் சார்பிலும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.மேலும் பல சிறப்புகளை பெற்று உயர்வடைய வாழ்த்துகிறேன் நன்றி

மணிவானதி சொன்னது…

பரிசு பெற்ற அனைவருக்கும் என் உள்ளப்பூர்வமான பாராட்டுக்கள். மேலும் பலப் பரிசுகள் பெற வாழ்த்துக்கள். இதனை உலகம் காணும் வகையில் செய்த மு.இளங்கோவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.