நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 செப்டம்பர், 2010

எழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு


பேராசிரியர் பெருமாள்முருகன்


நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவருமான பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள், தென்கொரியாவில் நடைபெறும் எழுத்தாளர் உறைவிட முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு அந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்.

பேராசிரியர் அவர்களின் கொரிய நாட்டுச்செலவை என் அருமை நண்பர் முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள்(பேராசிரியர்,அறிஞர் அண்ணா அரசு கல்லூரி,நாமக்கல்) முன்னமே எனக்குத் தெரிவித்தார்.உடன் கொரியாவில் உள்ள தமிழ் மரபு அறக்கட்டள்ளை, மின்தமிழ் அன்பர் முனைவர் நா.கண்ணன் அவர்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். இருவரும் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பை உருவாக்க நினைத்தேன். ஆனால் இருவரும் இருக்கும் இடங்கள் தொலைதூரம் என்று அறிகின்றேன்.இயன்றால் சந்திப்பார்கள்.

உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களில் ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், பேராசிரியர் பெருமாள் முருகன் ஆவார்.தென்கொரியாவில் உள்ள கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையம் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2006-இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

பேராசிரியர் பெருமாள்முருகன் 15 நூல்களை எழுதியுள்ளார். 125 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி, கங்கணன் ஆகிய புதினங்களையும், நீர் விளையாட்டு, திருச்செங்கோடு ஆகிய சிறுகதைகளும், நீர் மிதக்கும் கண்கள், கோமுகி நதிக்கரை கூழாங்கற்கள் ஆகிய கவிதை நூல்களையும் படைத்துள்ளார். கூளமாதாரி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான சீசன் ஆஃப் தி பாம் என்ற நூல், ஆசிய பசிபிக் கடலோர நாடுகளில் சிறந்த முதல் 5 நாவல்களில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில், பெருமாள் முருகன் கலந்து கொள்வதன் மூலம் தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமுதாய வரலாறுகள் குறித்து கொரிய இலக்கிய ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படும். அந்த நாட்டு மக்களுக்கு தமிழின் தொன்மையையும், பெருமையும் உணர்த்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும்,நண்பர்களும் பேராசிரியர் பெருமாள் முருகனைப் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

தென்கொரிய நாட்டில் தங்கியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கொரிய நாட்டு எழுத்தாளர் சந்திப்புப்பயிற்சி பற்றிய சில வினாக்களை மின்னஞ்சல் வழியாக முன்வைத்தேன்.அந்த வினாக்களும் அதற்கு அவர் வழங்கிய விடைகளும்:

1.ஒரு மாத காலத்திலும் தாங்கள் உருவாக்கும் எழுத்து சிறுகதையா /புதினமா/ கட்டுரைகளா/

சிறு நாவல் ஒன்றின் முதல் பிரதியை இந்தத் தங்கலில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். நுகர்வுக் கலாச்சாரம் நம் நடுத்தர மக்கள் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளாக அந்நாவல் வரக்கூடும்.

2தொடக்க விழா போலும் ஏதேனும் விழாக்கள் நடந்ததா?
பயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் ஏதேனும் வழங்குவார்கள்?

விழாக்கள் இல்லை. சான்றிதழ் தருவதும் இல்லை. நான் கேட்டிருப்பதால் 'வருகைச் சான்றிதழ்' எனக்குக் கிடைக்கும். அது கல்லூரித் தேவைக்காக. மற்றபடி அவர்கள் இது மாதிரியான விசயங்களில் அக்கறை காட்டுவதில்லை.

3.மற்ற எழுத்தாளர்களுடன் உரையாட வாய்ப்பு உள்ளதா?
அல்லது தனிறையில் தங்கி அவரவர் எழுதிக்கொண்டிருக்கின்றீர்களா?

மற்ற எழுத்தாளர்களோடு பேசலாம்; பகிர்ந்து கொள்ளலாம். வெளியே செல்லலாம். எல்லாச் சுதந்திரமும் உண்டு. பெரும்பாலும் கொரிய எழுத்தாளர்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கிலம் கூடத் தெரியவில்லை. ஆனால் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்.

3.கொரிய இலக்கியச் சிறப்பு தங்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா?
கொரிய எழுத்துகள் பிறமொழிகளில்(ஆங்கிலம்) கிடைக்கிறதா?

கொரிய இலக்கியம் பற்றி மிகக் குறைவாகவே அறிமுகம். 15ஆம் நூற்றாண்டில் தான் இந்த மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்கிய மன்னன் சே ஜொங் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கொரிய இலக்கிய மொழிபெயர்ப்புகள் ஓரளவு இருக்கின்றன. இந்தியாவில் இந்தியில் சில மொழிபெய்ர்ப்புகள் வந்திருப்பதாக அறிகிறேன்.

4.சிங்கப்பூர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் அந்தந்த நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களா?கவிஞர்களா?திறனாய்வாளர்களா?

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருக்கும் எழுத்தாளர்கள் ஏதோ ஒருவகையில் திறமையானவர்களாகவே இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தேர்வு செய்யும் முறையில் சில விதிகளைக் கடைபிடிப்பதால் அப்படித்தான் இருக்க வேண்டும். சிலர் ஆறுமாதம் வரை இங்கே தங்கியிருக்க நிதி உதவி கிடைக்கிறது. சிங்கப்பூர்க்காரர் ஆங்கிலத்தில் எழுதுபவர். அவர் நான்கு மாதங்கள் இங்கே தங்க உள்ளார். நான் ஒருவன் தான் குறைவான காலம்.

5.நம் நாட்டில் இருந்து உருவாக்கும் படைப்பிலிருந்து அந்த நாட்டில் தங்கி உருவாக்கும் படைப்பு வேறுபட்டு அமையுமா?
எழுத்துக்குச் சூழல் துணை செய்யுமா?
.
இந்த நாட்டில் தங்கி எழுதினாலும் நான் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றையே எழு;துகிறேன். அதனால் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. இது எழுதுவதற்குத் ; தனிமையான சூழலை உருவாக்கித் தரும் வாய்ப்புத்தான். கொடைக்கானலிலோ ஊட்டியிலோ தங்கி எழுதுவது போலத்தான் ;இருக்கிறது.

பேராசிரியர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்!
ஐயா தமிழுக்கு ஆக்கமான படைப்புகளுடன் தமிழகம் வாருங்கள்!

1 கருத்து:

முனைவர் அண்ணாகண்ணன் சொன்னது…

பணிச் சுழலிலிருந்து விடுபட்டு, புதிய நாட்டில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல், இயல்பாகச் சிந்திக்கவும் படைக்கவும் முயல்வது, நன்று. நல்ல படைப்புகளை எதிர்நோக்கலாம்.

பெருமாள் முருகனுக்கு நல்வாழ்த்துகள்.