நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 9 மார்ச், 2008

செயங்கொண்டம் பேருந்துநிலையத்தில் கண்ட அதிசயம்...

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் பேரூராட்சியாக உள்ள ஊர். பள்ளிகள், கல்லூரி, நீதிமன்றம், மருத்துவமனை, வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எனப் பல அரசு அலுவலகங்கள் உள்ள ஊர். செயங்கொண்டத்தில் நிலக்கரி நிறுவனம் ஏற்பட உள்ளது. பின்தங்கிய பகுதியான இங்கு அரசு கல்லூரிகள், தொழில்நுட்பப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் என எதுவும் இல்லை. இங்குள்ள மக்கள் 100 கல் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி, 40 கல் தொலைவில் உள்ள குடந்தை, சிதம்பரம் சென்று கல்வி கற்கும் அவலநிலை. உடையார்பாளையம் வேலாயுதம், செகதாம்பாள் வேலாயுதம், தமிழ்மறவர் பொன்னம்பலனார், சுண்ணாம்புக்குழி கோ.தியாகராசன், ஆ.கோ.இராகவன், க.சொ.கணேசன், முதலான திராவிட இயக்க முன்னோடிகள் தோன்றிய பகுதி இதுவாகும். முனைவர் பொற்கோ, முனைவர் சோ. ந. கந்தசாமி, செ. வை. சண்முகம், மருதூர் இளங்கண்ணன் போன்ற சான்றோர்கள் தோன்றிய பகுதி.

அனைத்து நிலையிலும் கண்டுகொள்ளப்படாத, புறக்கணிக்கப்பட்டுள்ள இவ்வூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாதபடி பேருந்துநிலையம் உள்ளது. கழிவறைக்குச் செல்ல விரும்புவோர் நீண்ட தூரம் நடக்கவேண்டும். இரவுநேரத்தில் பெண்கள் செல்ல அஞ்சுகின்றனர். வயதுமுதிர்ந்தவர்கள், தொலைதூரம் பயணம் செய்தவர்கள் ஓய்வெடுக்க வசதி இல்லை.

பேருந்து நிலையம் பயணிகளுக்கு என்று இல்லாமல் கடைக்காரர்கள் கடை வைக்கும் இடமாக உள்ளமை வேதனை தரும் ஒன்றாகும். அனைத்து இடங்களையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளமையால் பயணிகள் பாடு திண்டாட்டம். மழைக்காலம் என்றால் பயணிகள் நனைந்துகொண்டுதான் நிற்கவேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் பலர் இருந்தாலும் இந்த அவலநிலையை யார் மாற்றுவது?. பேருந்து நிலையங்களில் புத்தகக்கடை வைக்கப்படும் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் இப்பேருந்து நிலையத்தை மக்களுக்கு உரியதாக மாற்றுவாரா?.

கருத்துகள் இல்லை: