அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள சார்ள்சுடன் நகரில் உள்ள மீன்காட்சியக அரங்கில் இன்று(01.07.2011) மாலை 7.30 மணிக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின்(பெட்னா)24 ஆம் ஆண்டு விழா தொடங்கியது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.
மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்வின் தொடக்க நிகழ்வு இன்று மாலை தொடங்கியது. நிகழ்ச்சிக்குத் திரைப்பட நடிகர்கள் நாசர், சார்லி, பேராசிரியர் மு.இளங்கோவன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மட்டைப் பந்து வருணனையாளர் சாத்தான்குளம் அப்துல் சப்பார், கோடைமழை வித்யா, பாடகர் தேவன், புதுகை பூபாளம் குழுவினர் வந்திருந்து அறிமுக உரையாற்றினர். பனைநிலத் தமிழ்ச்சங்கத்தினரும், பெட்னா அமைப்பினரும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நாளை முதல் மலர்வெளியீடு, கலைநிகழ்ச்சிகள், இலக்கிய உரைகள், தமிழ் இணையம் அறிமுகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.