நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ்க்கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்க்கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் இனிதே நிறைவு


பதிவாளர் பெ.சரவணன்,ஆண்டோபீட்டர்,ப.அர.நக்கீரன்,ந.தெய்வசுந்தரம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையின் மொழியியல் ஆய்வுப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வு(26.02.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. கணினிவழித் தமிழ்க் கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற பொதுத்தலைப்பில் நிகழ்ந்த அரங்கில் பேராசிரியர் நடராசப் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.முனைவர் விசயராணி அவர்கள் தமிழ் மின் இதழ்கள் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ள மின்னிதழ்களை அறிமுகப்படுத்தினார்.நான் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதன் ஒரு பயன்பாட்டுக் கூறான தமிழ் விக்சனரி பற்றியும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன்.தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை இணைப்பது,தமிழ் விக்சனரியில் சொற்களை இணைப்பது பற்றிக் காட்சி விளக்கத்துடன் சொன்னதுடன் தமிழ் விக்கி வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தேன்.(என் கட்டுரையைப் பின்பு இணைப்பேன்). தமிழ் விக்கிக்குப் பணியாற்ற அனைவரையும் அழைத்தேன்.

அடுத்து முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்(சிங்கப்பூர)அவர்கள் தமிழ்க்கணினி சிங்கப்பூர் கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அடுத்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கும் திரு.அண்ணா கண்ணன் அவர்கள் தமிழக அரசின் இணையத்தளங்கள் மொத்தம் 431 எனவும் இதில் தமிழின் பயன்பாடு எந்த நிலையில் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார்.பேராசிரியர் இராமன் அவர்கள் உயர்கல்வியில் ஒருங்கு குறி குறியீட்டுமுறை செயலாக்கத்தின் அவசியம் என்ற தலைப்பில் ஒருங்குகுறியின் தேவையை எடுத்துரைத்தார்.பின்னர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் தமிழ் இணைய நூலகங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார். பேராசிரியர் தியாகராசன்(சிங்கப்பூர்) சிங்கப்பூரில் கல்வி வளர்ச்சிக்குக் கணினியின் தேவை குறித்து உரையாற்றினார்.இந்த நிகழ்வு பகல் 1.15 மணி வரை நடந்தது.

பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நிகழ்வு தொடங்கியது.மூன்று நாளாகப் பேசப்பட்ட செய்திகள் பற்றி கலந்துரையாடினோம்.கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களும் மொழியியல் வல்லுநர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த நிறைவு விழாவில் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அனைவரையும் வரவேற்க,சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பெ.சரவணன் அவர்கள் தலையுரையாற்றினார். திரு.ஆண்டோ பீட்டர்,முனைவர் ப.அர.நக்கீரன்(இயக்குநர்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம்),ஆ.க.இராமகிருட்டினன்(பெங்களூரு)சிறப்புரையாற்றினர். முனைவர் இராம.கி,மறவன்புலவு சச்சிதானந்தன் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டின் தீர்மானங்களைப் பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் முன்மொழிந்து பேசினார்.பேராசிரியர் மு.பொன்னுசாமி அவர்கள் நன்றியுரைக்கக் கருத்தரங்கம் இனிது நிறைவுற்றது.

கருத்தரங்கத் தீர்மானங்கள் சில:

1.தமிழ்க்கணினி ஆய்வுக்கு உதவும் வகையில் கணினி மொழியாய்வு மையங்களை இரண்டு இடங்களில் அரசு அமைக்க வேண்டும்.

2.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,பேராசிரியர் கணேசன் ஆகியோர் உருவாக்கியுள்ள தமிழ்ச்சொல் திருத்திகள்,இலகணத்திருத்திகள் மென்பொருள்களை அரசு ஏற்க வேண்டும்.

3.ஒருங்குகுறி(யுனிகோடு),TACE 16 ஆகியவற்றை அரசு ஏற்று இசைவளிக்க வேண்டும்.

4.தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள் உருவாக்கியப் பேராசிரியர் க.இராமகிருட்டினன் அவர்களின் ஆய்வு முயற்சிக்கு அரசு உதவ வேண்டும்.

5.நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் யாவும் ஒருங்குகுறியில் வெளியிடப்பெற வேண்டும்.

6.தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளின் சுருக்கம் ஒருங்குகுறியில் இணையத்தில் இணைக்கப்பட வேண்டும்.

7.தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பெறும் ஆய்வுகட்டுரைகள் படிமக்கோப்புகளாக(பி.டி.எப்) இணையத்தில் இணைக்கப்படவேண்டும்.

8.தமிழ்நாடு,புதுச்சேரி,இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா,மொரிசீயசு நாடுகள் இணைந்து தமிழ்மொழிக்காக ஒருங்கிணைந்த குழுக்களை உருவாக்க வேண்டும்.கூட்டுப்பேச்சுகள் வழியாகத் தமிழ்மொழி வளர்ச்சி பற்றி உரையாடவேண்டும்.

9.மாற்றுத் திறனாளர்களுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.

10.சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொல்தொகுப்பு மையத்தை உருவாக்க வேண்டும்.

11.விக்கிப்பீடியா போலப் பன்னாட்டுச் சொல்தொகுப்பு முயற்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


உரை-ஒலிமென்பொருள் உருவாக்கிய முனைவர்.ஆ.க.இராமகிருட்டினன்(பெங்களூரு), நான்


தியாகராசன்,நான்,நடராசப்பிள்ளை,ஆ.இரா.சிவகுமாரன்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் -படங்கள்


துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை,முனைவர் ஆனந்தகிருட்டினன்(மேடையில்)

தமிழ்க்கணினி- பன்னாட்டுக் கருத்தரங்கம்-சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறப்பான திட்டமிடலுடன் நடைபெறுகிறது.தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு உழைத்த தொழில் நுட்ப வல்லுநர்களும், மொழியியல் துறை வல்லுநர்களும் தமிழறிஞர்களும் வருகை புரிந்துள்ளனர்.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் மிகச்சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளார். குறித்த நேரத்தில் பயிலரங்கு தொடங்குவதும்,நிறைவு பெறுவதும் சிறப்பு.அரங்கில் இருப்பவர்கள் கருத்தரங்கில் முழுக்கவனத்துடன் இருந்து பங்களிப்பு வழங்குகின்றனர்.இரண்டு நாள் நிகழ்வுகளும் தொய்வின்றி மிகச்சரியாக நடைபெற்றன.

இன்று(25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.வெங்கட்ரங்கன் அவர்கள் தலைமை தாங்கினார்.யுனிகோடும் தமிழும் என்ற பொதுத்தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் நடந்தன.பேராசிரியர் இராமன் அவர்கள் யுனிகோடு என்றால் என்ன என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்றும் அவைக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.இவ்வாறு முதலில் அரங்கிற்கு இதனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பேரா.ந. தெய்வசுந்தரம் கேட்டுக்கொண்டதன் பேரில் இம் முன்னுரை வழங்கப்பட்டது.அதனை அடுத்து அ.இளங்கோவன் அவர்கள் யுனிகோடைப் பயன்படுத்தி அச்சிடுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.

அவர் உரை UNICODE TAMIL FOR THE PUBLISHING INDUSTRY PROBLEMS AND SOLUTIONSஎன்ற தலைப்பில் இருந்தது.பேஜ்மேக்கர்,போட்டோ ஷாப்,இன்டிசைன்,பி.டி.எப்,எக்சல்,உள்ளிட்டவற்றில் யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.TACE16அமைப்பில் உள்ள யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்தும்பொழுது இத்தகு சிக்கல் உருவாவதில்லை என்று எடுத்துக் காட்டினார்.யுனிகோடு கன்சார்டிய விதிமுறைகளின்படி மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை எனவும்,இடம் யுனிகோடில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.ஆனால் இருப்பில் உள்ள இடைவெளியில் புதிய சில வசதிகளைப் பயன்படுத்தி யுனிகோடைப் பயன்படுத்தித் தமிழைப் பயன்படுத்தமுடியும் என்று எடுத்துக்காட்டினார்.

பொறியாளர் இராம.கி.அவர்கள் ஒருங்குறியேற்றத்தின் போதாமை ( INADQUACY OF TAMIL UNICODE)என்ற தலைப்பில் பழங்கால எழுத்து வடிவ வளர்ச்சிகளை எடுத்துக்காட்டி,யுனிகோடின் குறைகளை எடுத்து விளக்கினார்.

என்.எச்.எம்.எழுதியை உருவாக்கிய நாகராசன் அவர்கள் தமிழ் 99 விசைப்பலகை பற்றியும் யுனிகோடு பற்றியும் மிகச்சிறப்பாகத் தன் கருத்துத்துகளை எடுத்துரைத்தார்.பழைய தவறுகளை விட்டுவிட்டுப் புதியதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.TACE 16 ஐ யுனிகோடு கன்சார்டியத்தினர் ஏற்கமாட்டார்கள் என்று சொன்னார்.யுனிகோடை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.பள்ளி மாணவர்களுக்கு யுனிகோடை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.இன்டிசைன் யுனிகோடை ஏற்கவில்லை என்று ஒதுங்கமுடியாது. அடுத்த கட்டத்திற்குப் பிளக்-இன் (Plug-in) செய்ய வேண்டும் என்றார்.யுனிகோடை இனி ஒதுக்க முடியாது என்று தன் ஆழ்ந்த வாதத்தை முன்வைத்தார்.

இடையில் ஒரு கருத்தை இராமன் முன்வைத்தார்.தமிழக அரசு யுனிகோடு கன்சார்டியத்தில் உறுப்பினராக உள்ளது.ஆனால் அந்த அரசே யுனிகோடைப் பயன்படுத்துவதில்லை.ஆந்திரா அரசு கன்சார்டியத்தில் உறுப்பினர் இல்லை.ஆனால் யுனிகோடை நடைமுறைப்படுத்துகிறது என்றார்.

பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் இராமகிருட்டினன் அவர்களின் உரையை அரங்கத்தினர் ஆர்வத்துடன் கேட்டனர்.காரணம் தட்டச்சிட்டால் தமிழை ஒலித்துக்காட்டும் மென்பொருளை அவர் நேரடியாக மேடையில் அறிமுகம் செய்தார்.தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்த ஒரு செய்தியை மாதிரிக்குப் படியெடுத்து அதனைப் படிக்கும்படியாகச் செய்துகாட்டினார்.அவ்வாறு படிக்கும் பொழுது நாள்(10.02.2010),அடையாளக்குறி,பின்ன எண்கள்,எண்கள்(456), உள்ளிட்டவற்றைப் படிப்பதிலும் பிற தொடர்களைப் படிப்பதிலும் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சந்தோசுகுமார்(அமிர்தா பல்கலைக்கழகம்), உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் முருகையன்,பேராசிரியர் நடனசபாபதி,பேராசிரியர் இரவிசங்கர்(புதுவை)உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர்.

நாளை(26.02.2010)காலை பத்து மணிக்குக் கணினிவழித் தமிழ்க்கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஆ.இரா.சிவகுமாரன்,பேரா.தியாகராசன், அண்ணாகண்ணன்,மு.இளங்கோவன், மு.பழனியப்பன், துரையரசன் உள்ளிட்டவர்கள் கட்டுரை படைக்க உள்ளனர்.


பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை அவர்கள்


இராமன்,நான்,வெங்கட்ரங்கன்,இராம.கி ஐயா


வெங்கட்ரங்கன்,நான்,நாகராசன்,இராமன்


நானும், என்.எச்.எம்.எழுதி உருவாக்கிய நாகராசனும்


நானும் பேராசிரியர் இராமகிருட்டினனும்


பேராசிரியர் கணேசன்,வெங்கட்ரங்கன்,அ.இளங்கோவன்


தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் வசதியைத் தமிழுக்கு வழங்கிய பேராசிரியர் இராமகிருட்டினன்(பெங்களூரு)

புதன், 24 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக்கருத்தரங்கு முதல் அமர்வு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கின் முதல் அமர்வு இன்று(24.02.2010) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடந்தது. எழுத்தாளர் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த அரங்கில் பயனுடைய வகையில் அமர்வு நடைபெற்றது.வழக்கமான கட்டுரை படிக்கும் முறையில் இல்லாமல் மொழியியல் அறிஞர்கள் கணினி மொழியியல் பற்றி உரையாடினர். முனைவர் நீலாதிரி சேகர்தாசு, பேராசிரியர் ந.கணேசன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,பேராசிரியர் அருள்மொழி,பேராசிரியர் உமாராசு, பேராசிரியர் டேவிட் பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திருவாளர்கள் இரா.ம.கி.ஐயா, பேராசிரியர் செ.வை.சண்முகம்,பத்ரி,காந்தளகம் சச்சிதானந்தம், முனைவர் இரவிசங்கர்(புதுவை) உள்ளிட்டவர்கள் உரையாடலில் கலந்துகொண்டனர்.
மாலன் அவர்கள் "இன்று மொழி சுருங்கிவிட்டது; ஆனால் மொழிப் பயன்பாடு அதிகரித்துள்ளது அதாவது மொழி ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளில் பயணிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.புணர்ச்சியில் ஒற்றுகள் இல்லாமலும் வேற்றுமை உருபுகள் இல்லாமலும் ஊடகங்களில் எழுதப்படுகின்றன என்றார்.கணினி வந்த பிறகு ஆங்கிலத்துடன் தமிழ் ஒப்புமைப்படுத்தப்படுகிறது என்றார்.வேறு தளங்களுக்குத் தமிழ்ப் பயன்பாடு செல்ல வேண்டும்.அதாவது பேச்சு-உரை எனவும்,உரை-பேச்சு எனவும், தானியங்கி மொழிபெயர்ப்பு எனவும் தமிழ்க் கணினி வளர வேண்டியுள்ளது என்றார்.மொழிக்குரிய தரவுத்தளங்கள் தேவை என்றும்,ஆர்வமுடைய அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் கருத்துரை வழங்கினார்.தமிழ் ஆட்சி மொழியானால்தான் தமிழ்க்கணினி முயற்சிகள் முழுமையடையும் என்றார்.

மொழித்தொழில் நுட்பமும் தமிழும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களும் பேரா.ந.கணேசனும் செய்துள்ள,உருவாக்கியுள்ள மென்பொருள்கள் தமிழுக்கு ஆக்கமானவையாகத் தெரிந்த்து.தமிழ் இலக்கணத்திருத்தி,சொல் திருத்தி, சொற்களஞ்சிய முயற்சிகள் தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கத்தைத் தந்த்து. இவர்களின் மென்பொருள்கள் தமிழில் பிழையாக எழுதுவனவற்றைத் திருத்திக்காட்டுவதாகவும்,இலக்கண ஆய்வுகளுக்கு வழி வகுப்பதாகவும் இருந்தது.


பெருஞ் செலவிட்டுச் செய்துள்ள இந்த மென்பொருள்களைத் தக்க விலைக்கு வழங்க ஆர்வமாக இருப்பதைப் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் சொன்னவுடன் காந்தளகம் சச்சிதானந்தம் அவர்கள் இவை மக்களுக்கு இலவசமாக்க் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கூறினார்.அப்பொழுது இ.கலப்பை முயற்சிக்கு அனைவரும் பங்களித்ததை இராமன் அவர்கள் நினைவூட்டினார்.அரசு அல்லது தனிநபர்கள் உதவி செய்து இந்த மென்பொருள்களை வாங்கி ஆதரிதால் இந்த ஆய்வுகளும் மென்பொருள்களும் தமிழுக்கு ஆக்கமாக இருக்கும் என அனைவரும் கருத்துரைத்தனர்.
பேராசிரியர் கணேசன் அவர்களின் மென்பொருள்கள் கணியன்(தமிழாய்வுக் கருவிகள்)என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன.இவரின் மென்பொருளில் சொலாய்வி, சொற்றொடராய்வி, தொகுப்பாய்வி,பிழை திருத்தி,சொல்லாக்கி,வேர்ச்சொல்லாய்வி,சொல்லடைவி என்னும் பயன்பாட்டு மென்பொருள்கள் உள்ளன.இத்தனை வசதிகளையும் உடைய மென்பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழாய்வுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும்.மேலும் சொற்கள், சொற்றொடர்கள்,பேச்சுச்சொற்கள் பற்றிய ஆய்வுகளைப் பற்றி விவாதித்தனர். தமிழ்ச் சொற்களைக் கணினியில் இட்டு ஆராயும்பொழுது தமிழிலக்கணம் தெளிவாக உள்ளது என்றார்.

இன்றைய தமிழ் வழக்கில் 40,000 சொற்களை நாம் அடிக்கடி பயன்பாட்டில் வைத்துள்ளோம் என்று ஊடகங்களில் வந்த சொற்களைப் பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் தெய்வசுந்தரம். தெய்வசுந்தரம் அவர்களின் ஒற்றுப்பிழை திருத்தி மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழைப் பிழையின்றி எழுதமுடியும்.நிதியுதவி கிடைத்தால் சொல் திருத்தி,பிழை திருத்தி வெளிவரும் என்றார்.சொற்களஞ்சியத்தின் தேவை இன்றைய அமர்வில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

நாளைய அமர்வு காலை பத்து மணிக்குத் தொடங்கும்.தி.ந.ச.வெங்கடரங்கன் தலைமையில் நடைபெறும் அரங்கில் பேராசிரியர் வி.கிருட்டினமூர்த்தி, திரு.இளங்கோவன், இரா.ம.கி,பத்ரி, ஆண்டோபீட்டர்,பி.செல்லப்பன்,ஆனந்தன் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். யுனிகோடும் தமிழும் என்ற தலைப்பில் அமர்வு நடைபெறும்.