நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 14 பிப்ரவரி, 2024

கணினித் தொழில்நுட்ப வல்லுநர் மு.சிவலிங்கம் மறைவு!

மு.சிவலிங்கம்  

  கணினித் தொழில்நுட்ப வல்லுநரும், இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், பன்னூலாசிரியருமான அறிஞர்  மு. சிவலிங்கம் அவர்கள்(அகவை 73) நேற்று (13.02.2024) இரவு 9.30 மணியளவில், சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மு. சிவலிங்கம் ஐயாவை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் மாநாட்டில் மு. சிவலிங்கம் ஐயாவைக் கண்டு உரையாடியமையும் 2014 இல் புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் அவர்தம் அரிய உரையைச் செவிமடுத்தமையும் நினைவில் வந்துபோகின்றன. தமிழ்க் கணிமைத் துறைக்கு இவரின் மறைவு பேரிழப்பாகும். 

  மு. சிவலிங்கம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் வட்டம், கூவக்காப்பட்டி என்னும் ஊரில் 12.09.1951 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்: முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் ஆவர். பெற்றோருக்கு இவர் பன்னிரண்டாவது பிள்ளையாகப் பிறந்தவர். வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியிலும், கூவக்கப்பாட்டிப் பள்ளியிலும், வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் கணிதப்பாடத்தைப் பட்டடப் படிப்பிற்காகப் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்திற்காகக் கணிதத்தைப் பயின்றவர். கணிதம், தமிழ், கணினிப் பயன்பாடு, தொழிலாளர் சட்டம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இருந்து, கணினி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் பணியாற்றியவர். மரபு கவிதை எழுதுவதில் பேரீடுபாடு கொண்டவர். சிற்றிதழ் நடத்தியவர். கவியரங்கேறியவர்.


புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மு. சிவலிங்கம் அவர்கள் உரையாற்றும் காட்சி(2014)

  நெட்வொர்க் தொழில்நுட்பம், டிபேஸ் வழியாக சி-மொழி, வருங்கால மொழி சி#,  கம்ப்யூட்டர் இயக்க முறைகள், மின்-அஞ்சல், டாஸ் கையேடு, IQ தேர்வுகள் எழுதுவது    எப்படி?, +1 கணிப்பொறியியல்,  +2 கணிப்பொறியியல், ரெட்ஹேட் லினக்ஸ்,   ஓப்பன் ஆஃபீஸ் கையேடு, தகவல் தொழில்நுட்பம்:    ஓர் அறிமுகம், முதலிய நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார். மொழிபெயர்ப்புகள் என்ற வகையில் லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும், கம்யூனிசத்தின் கோட்பாடுகள்,  கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, கூலியுழைப்பும் மூலதனமும், கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் முதலிய நூல்களை வழங்கியுள்ளார்.

 


கருத்துகள் இல்லை: