நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!





முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலின் வெளியீட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தமிழ்ப் பெருமக்கள் செறிந்து வாழும் மலேசியத் திருநாட்டில் நடைபெற உள்ளது.

கோலாலம்பூர் - பிரிக்பீல்ட்சில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் 10.08.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் நூல் வெளியீட்டு விழா, இறையருட் கவிஞர்  சீனி நைனா முகமது அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகின்றது. ஆசான் மன்னர் மன்னன் மருதை வரவேற்புரையாற்றவும் மலேசியா, திருமுருகன் திருவாக்கு பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளுரை வழங்கவும் உள்ளனர்.

மேனாள் துணை அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ க. குமரன் தலைமையில் நடைபெறும் விழாவில், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நூலறிமுகம் செய்ய உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் இயக்குநர் க. அய்யனார், சபாய் (பகாங்) சட்டமன்ற உறுப்பினர்    தமிழச்சி காமாட்சி,  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் சார்ந்த அருள்முனைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன் வாழ்த்துக் கவிதை வழங்க உள்ளார். தமிழிசைப் பாடல்களை ந. வளர்மதி பாட உள்ளார். முனைவர் மு. இளங்கோவன் ஏற்புரையாற்றவும், ம. முனியாண்டி நன்றியுரை வழங்கவும் உள்ளனர். நிகழ்ச்சியைத் ’தங்கக் குரலோன்’ தங்கமணி தொகுத்து வழங்க உள்ளார்.

தொடர்புக்கு: 
ம. மன்னர் மன்னன் 013 341 7389 
சரசுவதி வேலு 012 318 9968 
ம. முனியாண்டி 016 444 2029                                                           


                                                                                     

கருத்துகள் இல்லை: