நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 ஜூலை, 2018

இளங்கோவன் என்னும் எம் ஏந்தல்!... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை





சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களால் சிறப்பிக்கப்படும் இனிய பொழுது... 
(படத்தில்: தாமரைக்கோ, தூ. சடகோபன், மு.இளங்கோவன், ப.அருளி ஐயா, ’தழல்’ ஆசிரியர் தேன்மொழி அக்கா, திருவாசகம், தண்ணுமை ஆசான் திருமுடி. சேது. அருண், சாமி கச்சிராயர் 
(கோப்புப் படம்) .

 மிகப் பல்லாயிரந் தமிழாசிரியப் பெருமக்கள் – பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் நல் வாய்ப்பு வாய்ந்திருக்கும் நம் புதுவையுட்பட்ட தமிழ் மாநிலத்தில் – தமிழின் அடிப்படைத் திறங்களுணர்ந்து அதனுள் தோய்ந்து தெளிந்து – அதன் வரலாற்றுச் சிறப்புக்களை ஆழமாக அறிந்து – அது பெற்றிருக்கும் பெருமைகளையும் திருமைகளையும் துலங்கத் தெரிந்து – அதனை நம் தமிழ்ப்பிள்ளைகள் நெஞ்சில் வலிவார்ந்த படிவுகளாக உருவாக்கும் உயரிய போக்கு வாய்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடத் தக்க சிற்றளவுக்கும் மிக மிகக் குறைவானவர்களே உளர்!... பல்லாயிரக் கணக்கிலாகப் பணம் திரண்டு பாயும் வாய்ப்பு, ஆசிரியர் தொழிலுக்கு இன்று வாய்த்துள்ளது!

 தமிழ்தான் தம் வாழ்க்கையினையே இப்படி வாழ வைத்திருக்கின்றது – வளங்கொழிக்க வைத்திருக்கின்றது எனும் அடிப்படை நன்றியுணர்வு வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவானதாகவே உள்ளது!

 எவர்க்கு இலாது போயினும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு இத்தகு நன்றியுணர்வு ஓரளவுக்கேனும் இருந்தாதல் வேண்டும்.

“நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே”

என்ற பாவேந்தர் வரிகள், நம் தமிழாசிரியர்கட்கே இருந்தாக வேண்டிய மனப் பண்பின் பாங்கினைப் பதிவுசெய்து வைத்துள்ளமையை ஒவ்வொரு தமிழாசிரியரும் நன்கு உள்ளத்துள் பதியமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்!

 ஐம்பது – அறுபதுகளில் (1950-59.. 1960-1969), நாங்கள் பயின்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் என்போர்க்கு இருந்த தனீஇ மதிப்பு, மிகுந்த பெருமை சான்றது! அவர்கள்பால் ஓர் இனம்புரியாத அகப் பாசவுணர்வு எங்கள் நெஞ்சங்களில் படர்ந்திருந்தமையை இன்னும், இன்றும்  எண்ணின் உவப்பால் உகளிக்குதிக்கும் எழுச்சிநிலையே நினைவில் நீடி இன்புறுத்துகின்றது! அக்காலத் தமிழாசிரியர்கள் மிகப் பெரும்பாலரும் அப்படிக்கொத்த பெருமிதவுணர்வோடேயே நன்னடையிட்டார்கள்! இன்றோ, தமிழாசிரியர்களே தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு இயங்குகின்றார்கள்! உயரிய ஊதியம் கிடைப்பதன் வழி கொஞ்சம் விரைத்தவாறு நிற்கின்றார்களே தவிர, தமிழால் தழைப்பெய்திய உள்ளங்கொண்டோராயிலர்!

 தமிழில்  கையெழுத்துப்போடும் அளவுக்குக்கூட மானமும் சூடும் வாய்ந்தோராகத் தமிழாசிரியருள் மிகப் பலர் இலர்! வாங்கும் ஊதியப் பணத்திலும் பணியிலும் இதன்வழி ஏதேனும் சிக்கல் நேரலாமோ என்றவாறு அஞ்சும் அகநடுங்கிகளாகவே பலர் இன்றும் உளர்! நாம் தமிழாசிரியர் என்று தலைநிமிர்த்தி நடக்கும் நடையராகப் பலர், இலர்!

 தம் பிள்ளைகளைத் தாம் பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் – அதேவகை அரசுத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலச்சேர்க்கும் மனபாங்கினராகவும் பலர் இலர்! பிள்ளைகளின் எதிர்காலம், - தமிழ்வழிக் கல்வியால் பாழாய்ப் போய்விடும் என அஞ்சும் அச்சங்கொள்ளிகளாய்ப் புதுவையிலும் – தமிழகத்திலும் பரவலாக மிகப் பலர், உளர்!

 தாம் பயிற்றுவிக்கவேண்டிய அரசுத் தமிழ்ப்பள்ளிப் பிள்ளைகளின் பாடங்களில் மனம் பற்றாது, உரியவாறு செயற்பற்றாது – ஆங்கிலக் கொள்ளைவிலைக் கொலைப்பள்ளிகளில் பயிலும் தத்தம் பிள்ளைகளை – உரிய நேரத்தில் அழைத்துச்சென்று உள்நுழைத்துவிடவும் – உண்ணவேண்டிய இடைநேரத்தில் தூக்குச்சட்டியொடு சென்று அவர்கட்கு ஊட்டி வரவும் – பள்ளி நிறைவுறும் நேரத்திற்கும் முன்னீடாக வண்டியொடு சென்று வாயிலருகில் காத்திருந்து பற்றி அழைத்துவரவும் வினைகள் பல மேற்கொண்டு – ஏமாறியராய் வேறு வழியின்று வந்து மாட்டிக்கொண்டு மனங்குமுறும் தலைகாய்ந்த ஏழைபாழைகளின் – கால்வழியினராய பிள்ளைகளுக்கு இரண்டகம் இழைக்கும் இரும்பாணி நெஞ்சத் தமிழாசிரியர் பலர் ஆங்காங்கும் உள்ளமையை வெளிப்படையாகவே நம் வாழ்க்கைப் போக்கிடையே நன்கு அறியலாகும்!

 தமிழகத்திலும் – புதுவையிலும் பொதுவாழ்வினராகிய நம் மக்களின் தமிழ் மானவுணர்வின்மைக்குக் காரணர்களாகவே தாங்கள் உள்ளோம் என்னும் உண்மையை, அன்னோர் ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும்!  தமிழாசிரியர் என்போர்க்கு மட்டும் – தமிழ் மானம் எனும் ஒன்று வாய்த்துவிடுமாயின் – தமிழர் வாழ்விலும் அறிவிலும் – மலர்ச்சியும் வளர்ச்சியும் எழுச்சியும் ஏற்றமும் மாற்றமும் உறுதியாய்ச் சிறந்தொளிரும்!

 இத்தகு தமிழ் மானம் வாய்ந்தவராய் – தகைசான்ற தூய நன்மனத்தராய் - இத் தமிழகத்திலும் புதுவையிலுமாக ஆங்கொருவரும் ஈங்கொருவருமாக நெறிவிலக்கர்களாக நின்றுயரும் சிறப்புக்குரியோர் சிலருள் – முனைவர் பேராசிரியர் திருமிகு மு.இளங்கோவன் அவர்களும் ஒருவராகுவர்! முப்பான் ஆண்டுகளுக்கும் முன்னீடிருந்தே – இத் தமிழ்த்தோன்றலின் இளந்தைக் காலத்தினின்று இன்றுகாறுமான படிப்படியான நிலை வளர்ச்சிகளைக் காணும்- கண்டு களிப்பெய்தும் வாய்ப்பு எனக்குத் தொடர்ந்திருந்தது! பள்ளி – உயர்நிலைப் பள்ளி – செந்தமிழ்க் கல்லூரி – பல்கலைக்கழகங்கள் எனும் உயர்ச்சிப் படிக்கட்டுகளில் உயர்ந்துயர்ந்து கற்றுச் செழித்துச் சென்ற காலத்தினிடையே – அவ்வக்காலும் தொடர்ந்து தொடர்புவைத்திருந்தவர், இவர்!

 தன்மானஞ்சான்ற தனித்தமிழ் அறிஞர்களான பாவல்லோரான பாவேந்தர் – பாவலரேறு - சுப.மாணிக்கனார் என்றவாறியங்கிய பெருந்திறச் சான்றோர்களின் எழுச்சியாக்கங்களிற் படியப் படியத் தொண்டுமனம் என்பது இயல்பாகவே இவர்க்குத் தொற்றிக் கொண்டது! அறிவார்வமும் – ஆய்வுணர்வும் - தமிழின நன்னோக்கும் – மண்ணல நோக்கும் இவர் நெஞ்சில் படர்ந்தன! இவரின் தமிழ் உள்ளத்து வயலில் – தமிழியல்சார் விளைச்சல்களும் ஆண்டாண்டுக்கும் செழிப்பெய்தின.

 தமிழ் ஆய்விலே அகம் பற்றிக்கொண்டு – அகப்பட்டுக்கொண்டு தத்தம் வாழ்வையே தொலைத்து நலிவித்துவிட்ட தமிழ் அறிஞர் பலரின் குடும்ப நிலைகள் பற்றியும் இவர் கவலைப்பட்டுக் கசிந்துருகினார்! அக்குடும்பத்தார்க்குத் துணைநிற்க வேண்டியது தன் கடமைகளுள் ஒன்றெனவும் உறுதியெடுத்தவராய் அவற்றிற்குரிய செயல்பாடுகளில் தன் நேரத்தையும்- உழைப்பையும்  - தன் சொந்தப் பொருளையும் போட்டுப் – பல்வேறு பயன்கள் அன்னின்னோர்க்கு உருவாக்கித் தந்த வள்ளல், இவர்! பெருமழைப் புலவர் குடும்பத்தார்க்கு இவ்வகையிலாக இவர் செய்த  செயல்கள் வியப்புக்கும் – மதிப்புக்கும் உரியன!

 பெரியமனம் பொதிந்த அறிவுழைப்பாளியர் – பெரும் பெருஞ்செயல்களையே செய்து நிற்பவராகுவர்! (“செயற்கரிய செய்வர் பெரியர்” – என நம் வள்ளுவப் பேராசான் வாயுரைத்த செய்தியும், இதுவே!). பெருமழைப்புலவரையும் – பண்ணாராய்ச்சிப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனாரையும் – இசையிலக்கண மேதை விபுலாநந்தரையும் – உச்சியில் தூக்கிவைத்து உலாச்செலுத்தும் இவரின் செயல்கள் யாவும் இத் தகு பெருமனத்து இயக்கங்களே!

 தமிழியல் சிறப்பு ஒழுங்கினை நுண்ணிதாகச் சிதைத்து உருக்குலைக்க ஒன்றுந் தெரியாத அற்பாவியரைப் போல நாடகமாடிய சூழ்ச்சியார்ந்த மேற்கட்டு அறிவாளியரிற் சிலர் முயன்றபோதெல்லாம் – உரிய தூய துணை நெஞ்சங்களுடன் கைகோர்த்துக்கொண்டு அவற்றைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கிய வரலாறுகளையெல்லாம் எம் போல்வார் நன்கு அறிவர்!

 இடைக்கட்டில் – எளிய பொதுக்குடும்பத்தில் முளைத்தெழுந்து துன்பத்தையும் ஏழ்மைத் துயரத்தையும் சுவைத்துப் பதம்பார்த்தவாறே வளர்ந்து படிப்படியாகத் தன்னைத் தானே தூக்கி நிறுத்திக்கொண்டு - வளர்த்தெடுத்துக்கொண்டு வானுலாக் கொள்ளும் செந்தமிழ் வானம்பாடியாய் நம் இளங்கோவன் என்னும் செம்மல் திகழ்கின்றார்!

 தமிழுலகத்தொடு நெஞ்சங்கலந்து தோய்ந்துறையும் சிறப்பு மாந்தராக இன்று தழைத்துத் தமிழ்தொண்டாற்றிவரும் பெருமதிப்புக்குரிய நம் இளங்கோவன் என்றும் எம்போல்வார் நெஞ்சகங்களில் உயரிடம் பற்றி மேலோங்கி நிற்பார்! வினைபலவாற்றி – விளைவுகள் நிறைத்து இம் மண்ணையும் - மக்களையும் – மொழியையும் சிறப்பிப்பார்!

 தூய நன்னெஞ்சமும் – துணிந்த வீறும் – தெள்ளிய அறிவும் – தோற்றப் பார்வையும் ஊற்றுக்கோளும் ஏற்று நிலைநிற்கும் நம் இளங்கோவன் ஏந்தல் – அன்பிலும் மலைநிலையர்! இவர் வாழ்க! இவர் குடும்பம் வாழ்க! இவரின் தமிழ்ச்சுற்றம் சிறக்க! இவரின் நற்பணிகள் மேலும் தொடர்க! தமிழ்மண் செழிக்க!

(11.02.2017 இல் வெளியிடப்பெற்ற என் வாழ்க்கைக் குறிப்புரைக்கும் நூலுக்குச் சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை. செழுந்தமிழ் நடை கருதியும், நாட்டு நிலை கருதியும் இவண் வெளியிடப்படுகின்றது).

கருத்துகள் இல்லை: