நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 ஜூன், 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்கு ஒரு சிலைசெய்தோம்!



விபுலாநந்தரின் சிலையை உருவாக்கிய வில்லியனூர் திரு. முனுசாமி


விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படத்தொகுப்பில் இருந்தபொழுது இசையமைப்பாளர் இராஜ்குமார் இராஜமாணிக்கம் அவர்களிடம் விபுலாநந்த அடிகளாருக்கு ஒரு சிலை செய்து படத்தில் இணைக்கலாம் என்று என் விருப்பத்தைச் சொன்னேன். உடனே சுடுமண் சிற்பத்தில் தலைசிறந்த கலைஞரான வில்லியனூர் முனுசாமி அவர்களிடம் எங்களின் விருப்பத்தைச் சொன்னோம். உடன் புறப்பட்டு வரலாம். மண் குழைத்து அணியமாக உள்ளது என்றார்.

வில்லியனூரில் உள்ள முனுசாமியின் தொழிற்சாலைக்கு நாங்கள் செல்வதற்கும், தண்டச்சக்கரம் சுழல்வதற்கும் சரியாக இருந்தது. திருவாளர் முனுசாமி அவர்கள் முன்பே எங்களின் ஆவணப்படத்தில் இணைந்து பணிபுரிந்தவர். அவரின் பேராற்றலை நாங்கள் உணர்ந்தவர்கள் என்பதால் கையில் கொண்டுபோயிருந்த இரண்டு விபுலாநந்தர் படங்களை அருகில் கண்ணில் தெரியும்படி மாட்டினோம். அக்கம் பக்கம் இருந்த சில சிலைகளைத் தூக்கிவந்து அருகில் வைத்தோம்.

முனுசாமி மண்ணை எடுத்துத் தமக்குத் தருவதற்கு அவர் தொழிற்கூடத்தில் பணிபுரியும் ஒருவரை அருகில் அமர்த்தினார். முதலில் ஒரு குச்சியைத் தண்டச்சக்கரத்தின் நடுவில் நிறுத்தினார். குச்சியின் ஓரப் பக்கத்தில் மண்ணை அணைக்கத்தொடங்கினார். சில முழம் சணல் கொண்டுவரச்சொல்லி அதனையும் பொருத்தமாகப் பயன்படுத்தினார். அதற்கு முன்பாகவே ஒளிப்பதிவுக்கருவி பதிவுப்பணியைத் தொடங்கியிருந்தது. மளமளவென மண்ணைக் கொண்டு விபுலாநந்தருக்கு வடிவம் தந்தார். முக்கால் மணி நேரத்தில் நாங்கள் எதிர்பார்த்த வடிவம் கிடைத்தது. சிறிது நேரம் காய்ந்த பிறகு பணியைத் தொடரவேண்டிய நிலையில் இருந்தோம். முனுசாமி ஐயாவிடம் விடைபெற்று, உணவை முடித்துக்கொண்டு திரும்பினோம்.

மீண்டும் சிலை செய்யும் பணி தொடர்ந்தது. சற்றொப்ப இரண்டு மணி நேரத்தில் முனுசாமி ஐயாவின் கையால் விபுலாநந்தர் வில்லியனூரில் எழுந்தருளினார். எங்களின் விருப்பத்துக்குத் தக்கவாறு ஒளிப்பதிவு செய்துகொண்டு, அந்த மண்ணின் கலைஞருக்கு நெஞ்சுருகி எங்களின் நன்றி கூறி விடைபெற்றோம்!
விபுலாநந்த அடிகளார் சிலையழகை உற்றுநோக்கியபொழுது...


புலம்பெயர்ந்த தேசங்களில் உழைத்த பணத்தைத் திரைக்கூத்தர்களின் கையிலும் பையிலும் திணிக்க, படாத பாடு படும் எம் தமிழின உடன்பிறந்தோர் இந்த மண்ணின் கலைஞரை அழைத்து, இவர் விரல் அசைவில் மரபு வழியான நம் முன்னோர் அறிவு இருப்பதை உணர அன்புடன் வேண்டுகின்றேன். பயிற்சிப்பட்டறைகள் வைத்து, நம் பிள்ளைகளுக்கு இவரின் மண்கலையைப் பயிற்றுவிக்க உரிமையுடன் கேட்கின்றேன். இவருக்கு உயரிய பரிசில்களை இல்லம்தேடிச் சென்று வழங்கி ஊக்கப்படுத்தும்படி உரிமையுடன் கோரி நிற்கின்றேன். விருது, பரிசுக்கு நசையுடன் காத்திருக்கும் மூத்தோர்கள் இந்த இளைய கலைஞனுக்கு வழிவிட்டு, ஒதுங்கி நின்று ஊக்கப்படுத்தும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வில்லியனூர் முனுசாமி, மு.இளங்கோவன்

4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விபுலாநந்தர் சிற்பம் அருமை ஐயா
வில்லியனூர் முனுசாமி போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கும்பகோணத்தில் பள்ளிக்காலம் முதல் என்னுடன் படித்த நண்பர் திரு ராஜசேகரன் தற்போது சிற்பக்கலைஞராக உள்ளார். சிற்ப வேலையில் அவர் ஈடுபட்டிருக்கும்போது பல முறை சென்று நேரில் பார்த்து வந்துள்ளேன். அவ்வாறான ஒரு பழக்கம் என் ரசனையை மிகுவித்தது. விபுலாநந்த அடிகளாரின் சிலையுடன் உங்களைக் கண்டதும் அத்தகைய ஒரு ரசனையை தங்களிடம் கண்டேன். அத்துடன் உங்களுடைய ஆர்வத்தையும், ரசனையையும், ஈடுபாட்டையும், என்னால் உணர முடிந்தது. தாங்கள் தொடும் ஒவ்வொரு துறையும், முயற்சியும் பாராட்டத்தக்கது.

Unknown சொன்னது…

மண்ணை மீட்பதென்பது மண்ணின் கலைகளையும் மீட்பதுதான். நமது மண்ணின் கலைஞன் வில்லியனூர் முனிசாமியை நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்.

அறவாழி கிருபானந்தன் சொன்னது…

தமிழின் தொண்மையை மீட்பதில் அதிக முயற்சி மேற்கொண்டும், பல பயணங்கள் செய்தும், அவருடன் பணியாற்றியவர்களை தொடர்பு கொண்டும் அரும் பல செயல்களை செய்து வருகிறீர்கள். பாராட்டுகள்.சிற்பம் உயிரோட்டம் பெற்று மிக அழகிய வடிவில் வந்துள்ளது. சிற்பியாருக்கும் வாழ்த்துகள்.