நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 மார்ச், 2015

உரையாசிரியர் புலவர் சே. சுந்தரராசன் அவர்கள்…


 புலவர் சே. சுந்தரராசன் அவர்கள்

காலத்தில் செய்துமுடிக்க வேண்டிய தமிழ்ப்பணிகள் எவ்வளவோ உள்ளன. ஆனால் அவற்றைச் செய்துமுடிக்க முன்வருவோர் குறைவாகவே உள்ளனர். தமிழர்கள் தங்கள் பெருமையை ஆவணப்படுத்தி வைப்பதில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் இருப்பதையும் இழக்கும் நிலையில் உள்ளோம். கடந்த கால வரலாற்றைத் தேடிச் செல்வது ஒருவகைப் பணி என்றால் நிகழ்காலத்தில் வாழ்பவர்களை நினைவுகூர்வதும், அவர்களைப் போற்றுவதும் நம் தமிழ்க்கடமையாகக் கொள்ள வேண்டும்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இழப்புகளுக்கும் இடையே செல்ல நேர்ந்தது. அந்தச் செலவில் அறிஞர் பெருமக்கள் பலரைக் கண்டு உரையாடவும் அவர்களின் தமிழ்ப்பணிகளை அறியவும் வாய்ப்பு அமைந்தது. அகவை முதிர்ந்த சான்றோர் பெருமகனார் ஒருவரை அவர்தம் மகளார் மாநாட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அப்பெருமகனாரை அண்மி, அவர்களைப் பற்றி வினவினேன். அவர்களின் தள்ளாத அகவையிலும் செய்துவரும் தமிழ்ப்பணிகள் என்னை வியப்படையச் செய்தன. ஒரு முழுப்பக்கம் எழுதுவதைக்கூட மிகப்பெரும் சுமையாக நினைத்துப் பெருமூச்சுவிடும் கல்வியாளர்கள் நடுவே எனக்கு அறிமுகமான பெருமகனாரின் பணிகள் அவர்மேல் மிகுந்த மதிப்பை அளித்தன.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓர் உரையாசிரியராக அவர் எனக்கு அறிமுகமானார். தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து, தம் திறமையால் படிப்படியாகக் கல்வியும், பணியும் பெற்று, கடமை முடித்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து தமிழ்நூல்களுக்கு உரைவரையும் அந்தச் சான்றோரின் பெயர் புலவர் சே. சுந்தரராசன் என்பதாகும்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்கள் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர்கள் தாசன், வேதமணி ஆகியோரின் அருமை மகனாக 07.05. 1930 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை ஈச்சம்பாடியிலும் நடுநிலைக் கல்வியைப் பள்ளிப்பட்டிலும் நிறைவு செய்தவர். சோளிங்கரில் (சோழலிங்கபுரம்) ஆசிரியர் பயிற்சி பெற்று 1948 இல் அதே ஊரில் குட்லக் மேனிலைப்பள்ளியில் பணியில் இணைந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்   நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றிபெற்றவர் (1949). சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வு எழுதி(1957) புலவர் பட்டம் பெற்றவர். அரக்கோணத்தில் தூய ஆண்டுரு பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்கள 26.05.1952 இல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு இரண்டு மக்கள் செல்வங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

பணியில் இருந்த காலத்தில் உரைநடை நூல்களை வரைந்த புலவர் சே. சுந்தரராசன் அவர்கள் கிறித்தவ சமய நூல்களுக்கு உரைவரையும் பெரும்பணியில் ஈடுபட்டவர். அரிய நூல்கள் பலவற்றுக்கும் உரைவரைந்து கிறித்தவ சமய நூல்கள் மக்களிடம் பரவக் காரணமாக அமைந்தவர். அந்த வகையில் இவரின் நூல்களைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

புலவர் சே. சுந்தரராசன் அவர்களின் தமிழ்க்கொடை:

  • தேம்பாவணி உரைநடை
  • இரட்சண்ய மனோகரம் தெளிவுரை
  • இரட்சண்ய யாத்திரிகம் உரைநடைச்சுருக்கம்
  • குடும்பவிளக்கு உரை
  • சிலுவைப்பாடு - உரையுடன்
  • பெத்லகேம் குறவஞ்சி - உரையுடன்
  •  திருக்காவலூர்க் கலம்பகம் - உரையுடன்
  • தேம்பாவணி (மூன்று காண்டம்- 3615 பாடல்கள்) உரையுடன்
  • இரட்சண்ய யாத்திரிகம் ( 5 பருவம்- 3766 பாடல்கள்) உரை
  • பாண்டியன் பரிசு - உரை
  • புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம்
  • பழைய ஏற்பாடு ஓர் அறிமுகம்
  • மாணவர்களுக்கு
  • குறள்நெறிக் கதைகள்


உள்ளிட்டவை இவரின் குறிப்பிடத்தகுந்த நூல்களுள் சிலவாகும்.

  பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் இந்த்தத் தமிழ்ச்செம்மல் தம் தமிழ்ப்பணியைச் சென்னையிலிருந்து தொடர்ந்து வருகின்றார். நீடு வாழ்க! புலவர் சே. சுந்தரராசனார்!


 கம்பார் கனிமொழி, புலவர் சே. சுந்தரராசன், மு.இ.
(மலேசியாவில் எடுத்த படம்)

குறிப்பு: இக்குறிப்புகளைப் பயன்படுத்துவோர் எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்!




2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உரையாசிரியரை அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. தங்களின் மூலமாக பல அறிஞர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புலவர் சே.சுந்தரராசன்அவர்கள் நீடுழி வாழட்டும்