நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியாவில் வெளியீடு - படங்கள்




குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் டத்தோசிறீ ச.சாமிவேலு அவர்கள், முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்கள். அருகில் உத்தராகண்டு மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் எம். பி, டான்சிறீ சு. குமரன், பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்( நிகழ்வு:மலேசியா)

 மலேசியத் தலைநகரான கோலாலம்பூர் தான்சிறீ சோமா அரங்கில் 28.12.2014 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை  ஆவணப்பட வெளியீட்டு விழா. டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை ஆவணப்பட ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.. மன்னர்மன்னன் வழங்கினார். மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆவணப்படத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் புரவலருமான டத்தோ சூ. பிரகதீஷ்குமார், நைனா முகமது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில்  டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி. ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். டான்ஸ்ரீ சு. குமரன்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முதலில் திரையிட்டுக் காட்டப்பட்டது. தமிழிசைச் சிறப்பைத் தனியொருவராக இருந்து பரப்பிய குடந்தை ப.சுந்தரேசனாரின் வாழ்க்கையை டத்தோசிறீ ச.சாமிவேலு உள்ளிட்டவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ஆவணப்பட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திரு. தருண்விஜய் எம்.பி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருவள்ளுவருக்குச் சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனவும் அதற்கு டத்தோசிறீ ச. சாமிவேலு போன்றவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். திருவள்ளுவர் திருப்பயணத்தைக் கன்னியாகுமரியிலிருந்து பொங்கல் திருநாளையொட்டித் தாம் மேற்கொள்ள உள்ளதையும் அவைக்கு எடுத்துரைத்தார். தாம் இன்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் வழியாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். தாம் இப்பொழுது தமிழ் கற்கத் தொடங்கியிருந்தாலும் தமக்குத் தமிழர்கள் தமிழில் பேசும்போது எந்த வகையான சிக்கலும் இல்லாமல் புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். உத்ராகண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியில் இவருக்குத் திருக்குறள் தூதர் என்ற விருது வழங்கிப் பாராட்டினர்.

 மலேசிய நாட்டின் மூத்த தலைவர் திரு. டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் திரு. தருண்விஜய் எம். பி. அவர்களுக்குத் திருக்குறள் தூதர் விருது வழங்குதல்( இடம்: மலேசியா) அருகில் பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் நிறைவில் ஏற்புரையாற்றினார்.

குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்பட வெளியீட்டு விழா மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம், மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குழு ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.

மலேயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. மன்னர் மன்னன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
 மு.இளங்கோவன், திரு. மன்னர் மன்னன், டத்தோ சிறீ ச. சாமிவேலு, டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி, டான்சிறீ சு. குமரன், திரு. நைனா முகமது


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் அயரா உழைப்பு, படமாய் வெளிவந்துள்ளது அறிந்து மகிழ்கின்றேன் ஐயா. தங்களின் ஆவணப் படத்தினைக் காண ஆவலுடன் உள்ளேன்.
கிடைக்குமிடத்தையும், ஆன்லைனில் பெற இயலுமா என்பதையும் தெரிவித்தால் மகிழ்வேன்
நன்றி ஐயா