நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 8 மார்ச், 2014

தட்டுப்புடைக்கண் வந்தான்…



அண்மையில் எங்கள்  கல்லூரிக்கு உரையாற்ற வந்த முதுபெரும் தமிழ்ப் பேராசிரியர் தெ. முருகசாமி ஐயா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு தொல்காப்பியம் பக்கம் திரும்பியது. அப்பொழுது சேனாவரையரின் உரைச்சிறப்பைப் பேராசிரியர் அவர்கள் நினைவுகூர்ந்தார். சேனாவரையர் குறிப்பிடும்தட்டுப்புடைக்கண் வந்தான்என்னும் தொடர் பற்றி நம் பேராசிரியர் அவர்கள் அரிய விளக்கம் சொன்னார்கள்.

தட்டுப்புடை என்றவுடன் முறத்தைப் பயன்படுத்தித் தட்டிக்கொழிக்கும் செயலே நினைவுக்கு வரும். ஆனால் நம் பேராசிரியர் தட்டுதலுக்கும் புடைத்தலுக்குமான இடம் என்று குறிப்பிட்டார். பழங்காலத்தில் போர்ப் பயிற்சி பெறும் இடம் இது என்றார். இன்று நாம் குறிப்பிடும் GYM போன்ற பயிற்சிக்களம் போன்று இது பண்டைய நாளில் இருந்திருக்கும் என்று பேராசிரியர் நம்பிக்கையுடன் பேசினார்.

தொல்காப்பிய உரையாசிரியரின் சொல்தேர்ச்சிப் புலமையை அறியச் சேனாவரையத்தில் நுழைந்து தேடிப்பார்த்தேன்.

என் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்த இடத்திற்கு என்ன விளக்கம் தருகின்றார் என்று பார்த்தபொழுது தட்டுப்புடை என்பதற்கு நெல்கொழிக்கின்ற இடம்; ஒருவகை விளையாட்டிடமுமாம் என்று எழுதியுள்ளமை தெ. முருகசாமி ஐயாவின் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது.

வினைசெய்யிடம்    -     தட்டுப்புடையுள்  வந்தான், தட்டுப்புடையுள் வலியுண்டு. என்று கல்லாடர் விருத்தியுரை குறிப்பிடும். தட்டுப்புடை என்ற சொல் தமிழகத்தின் பிற பகுதிகளில் அல்லது கேரளத்தில் என்ன பொருளில் வருகின்றது என்பதை அறிந்தோர் அறிவிக்க நன்றியுடன் ஏற்பேன்.

தொல்காப்பிய நூற்பாக்களும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களும் பழந்தமிழகத்தின் பல்வேறு உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன. தொல்காப்பியர், சொல்லதிகாரம் வேற்றுமையியலில் நூற்பா 71 இல் ஏழாம் வேற்றுமை பற்றி எடுத்துரைக்குமிடத்தில்,

ஏழாகுவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின், நிலத்தின், காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே

என்று குறிப்பிடுவார். (நூற்பாவின் பொருள்: கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபாகும். அது இடம், நிலம், காலம் ஆகிய பொருள்களை இடமாகக் குறித்து வருகின்றபொழுதே வேற்றுமையாக அமையும். “அனைவகைக் குறிப்புஎன்றமையான் கண் முதலிய உருபுகள் யாண்டு வரினும் அவ்விடமெல்லாம் ஏழாம் வேற்றுமை உருபு என்று கருத வேண்டாம்) இந்த நூற்பா விளக்கத்தில்தான் தட்டுப்புடைக்கண் என்ற தொடர் தட்டுப்படுகின்றது.


2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

//தட்டுப்புடைக்கண்//
தமிழ் வார்த்தைகளின் வலிமை வியக்க வைக்கின்றன ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்களது இப்பதிவின்மூலமாக ஒரு புதிய சொல்லையும் அதன் பொருளையும் அறிந்தேன். நன்றி.