நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

குவைத் நகர் உலா... தொடர் 2



குவைத்தின் கோபுரம் (Kuwait Towers)


குவைத் நகரத்தின் சிறந்த உணவகத்தில் மொகல் மகால்(Mughal Mahal) முதலிரு இடங்களுக்குள் வரும். அந்த அளவு நகரின் முதன்மைப்பகுதியில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்திற்குப் பொறியாளர் கருணாகரன் அவர்கள் வருவதற்கும் நாங்கள் செல்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.

மொகல் மகாலில் இந்தியவகை உணவு சிறப்பாக வழங்கப்படுகின்றது. இப்பொழுது ஓட்டுநர் திரு.ரெட்டி அவர்களையும் வற்புறுத்தி எங்களுடன் உணவு உண்ண அழைத்துச்சென்றோம். தம்பி பிலவேந்திரன் அவர்களும் எங்களுடன் இருந்தார். நால்வருக்கும் தேவையான உணவு என்ன? என்று பேசி ஒரு முடிவுக்குள் வருவதற்குள் ஐந்து நிமிடம் ஆனது. நான் வெளிநாட்டுப் பயணங்களில் கோழி இறைச்சியைத் தேர்ந்தெடுப்பேன். தூய்மையாக இருக்கும் என்ற அடிப்படையில் இத்தேர்வு அமையும். இந்த முறையும் அப்படியே கோழிப் புலவுக்கு விருப்பம் தெரிவித்தோம்.

பொறியாளர் கருணாகரன் அவர்கள் இந்தக் கடையில் ஆட்டிறைச்சி சிறப்பு என்றார். அப்படி என்றால் ஆட்டிறைச்சிக்குச் சொல்லுங்கள் என்றேன். இரு தட்டு ஆட்டுக்கறியும் இரு தட்டு கோழிக்கறியுமாக வந்தன. அதற்கு முன் “சூப்” கொண்டுவரும்படி சொன்னார். மெதுவாக அனைத்தையும் சுவைத்து உண்டோம். கோழிக்கறியும், ஆட்டுக்கறியும் சுவையில் ஒன்றையொன்று விஞ்சி நின்றன. எந்த உணவும் வீணாகவில்லை. சிறிது மிகுதியாக இருந்த குழம்பையும், பரோட்டோவையும் கட்டித்தரும்படி சொன்னோம். அவர்களும் சிறப்பாக மீதியைக் கட்டித் தந்தனர். இதனிடையே திரு. தமிழ்நாடனும், திரு. இராமன் அவர்களும் எங்கள் செய்ல்பாடுகளை ஆர்வமுடன் செல்பேசியில் கேட்டபடி இருந்தனர்.

பகலுணவுக்குப் பிறகு குவைத்தின் நினைவுச்சின்னங்கள், வரலாற்று முதன்மை வாய்ந்த இடங்களைப் பார்க்க நினைத்தேன். அந்த வகையில் கடற்கரையை ஒட்டியிருந்த வானுயர் கூண்டு ஒன்றிற்குச் சென்றோம். அடுத்தடுத்து இருந்த இரண்டு கூண்டுகளும் மேலேறிப் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது பழுதுபார்ப்புப் பணிகள் நடப்பதால் உயரே செல்ல இசைவு இல்லை என்றனர்.  

எனவே நாங்கள் குவைத்தின் காட்சியகம் சென்றோம். திறப்பதிற்கு நான்கு மணியாகும் என்றனர். அதன் இடையே அருகிலிருந்த சாது இல்லத்தைப் பார்க்கச்(Sadu House) சென்றோம். சாது இல்லம் என்றதும் ஏதோ துறவிகள் இருக்கும் இடம் என்று போனால் அங்குக் கைத்தறித்துணிகள், நூல்கள், போர்வைகள், பாய்கள் நெய்து காட்சிக்கு இருந்தன. குவைத்தியர்கள் துணி உருவாக்கும் கலையில் வல்லுநர்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்தச் சாது இல்லம் உள்ளது. அழகாகப் பராமரிக்கின்றனர். அங்குக் கூட்டங்கள் நடத்துவதற்கும் வசதிகள் உண்டு. நாங்கள் செல்லும்பொழுது ஒரு சிறப்புக் கூட்டம் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் நடந்தன. கடற்கரையை ஒட்டி இத்தகு கூடம் இருப்பது சிறப்பாக இருந்தது.

அடுத்து நாங்கள் குவைத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் (Kuwait Archaeology) சென்றோம். அங்குக் குவைத்தியர்களின் பழம்பெருமை பேசும் கோட்டைக்கதவுகள், புதைபொருள் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் புகைப்படக் கருவியை எடுக்கவில்லை. அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அப்படி எங்களை அச்சமூட்டின. மாறுகால், மாறுகை வாங்கும் அவர்களின் தண்டனை பற்றி முன்பே நண்பர்கள் அச்சமூட்டிதான் அனுப்பியிருந்தனர். அனைத்தையும் நுட்பமாகக் கவனித்தோம். குவைத்தின் பணத்தாள்கள், காசுகள் பல இருந்தன. இந்திய ரூபாய்களும் இருந்தன.

பாலைநிலைத்தில் கிடைத்த பழம்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குவைத் நகரிலிருந்து இருபது கல் தொலைவில் உள்ள பைலகா தீவிலிருந்து(Failaka Island) எடுக்கப்பெற்ற பல தொல்லியல் பொருட்களும் அகழாய்வுப் படங்களும் காட்சிக்கு இருந்தன. குவைத்தை ஒட்டிய ஒரு சிறு தீவுதான் பைலகா தீவு. இங்குக் குவைத்தியர்களின் முன்னோர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் இன்றும் உள்ளதை அகழாய்வுச்சான்றுகள் காட்டுகின்றன. அடுத்து மரபுவழிக் காட்சியகத்தையும்(Heritage Museum) சென்று பார்த்தோம். அங்கும் அரிய செய்திகள் காட்சிக்கு இருந்தன.

பொறியாளர் இராமன் அவர்களும் பொறியாளர் தமிழ்நாடன் அவர்களும்  மாலை 6.30 மணிக்கு அபு அலிபா பகுதியில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினர். அதற்குள் நாங்கள் சில பொருள்களை நினைவுக்கு வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டும். ஒருமணி நேரத்திற்குள் குவைத்தில் கடைக்குச் சென்று கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு பெரிய கடைக்குச் சென்றோம். குவைத்து நகரத்து மக்கள் அத்தனைப்பேருக்கும் தேவையான பொருட்களை அள்ளித் தரும் பேரங்காடி அது. அதில் நாங்கள் நுழைந்து தேவையான பொருள்களை வாங்க ஆயத்தமானோம். தாகமாக இருந்ததால் ஒரு குளிர்க்குடிப்புப் புட்டியை உடைத்துக் குடித்தேன். தம்பி பிலவேந்திரன் நம் பிள்ளைகளுக்குத் தேவையான எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்களை அவர் விருப்பம்போல் வாங்கினார். இரண்டு மூன்று போர்வைகளை வாங்கலாம் என்றார். எடுத்துச்செல்வதில் சிக்கல் இருக்கும் என்று தவிர்த்தேன். பிறகு புதிய பேரீச்சம்பழங்களை நண்பர்களுக்காக வாங்கினோம். தனித்தச்சுவையுடன் தித்தித்தது. நம்மூர் தள்ளுவண்டிப் பழங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். புதுக்கோட்டைத் திருக்குறள் நண்பர் சபூதின் ஐயா பலவாண்டுகளுக்கு முன் ஒரு நோன்புநாளில் காணச் சென்றபொழுது வழங்கிய பேரிச்சையில் தெரிந்த சுவை தெரிந்தது.

பொறியாளர் கருணாகரன் ஐயா தனித்து ஏதோ கமுக்கம் சொல்வதுபோல் என்னை அழைத்துச்சென்று ஒரு நினைவுப்பரிசை எனக்கு வாங்கித் தந்தார். அவர் அன்பை நினைத்து மகிழ்ந்தேன். எங்கள் கொள்முதல் வேலைகளை முடித்துக்கொண்டு, பொறியாளர் கருணாகரன் வண்டியில் அபு அலிபா புறப்பட்டுச் சென்றோம். வழியில் பொறியாளர் கருணாகரன் அவர்களின் வீட்டுக்கு வந்து சில பொருட்களை எடுத்துகொண்டு புறப்பட்டோம். குளிர்க்குடிப்பு எனக்கு இரண்டு கொடுத்தார். அன்புடன் எடுத்துகொண்டு வண்டியில் குடிக்கலாம் என்று வந்தேன்.

முன்பே ஓட்டுநர் திரு. ரெட்டி எங்களிடமிருந்து விடைபெற்றுத் தனித்துச்சென்றார். மாலை 6.30 மணிக்கு நாங்கள் நண்பர்கள் அபு அலிபாவில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்துசேர்ந்தோம். உணவகத்திலிருந்து கொண்டு வந்த உணவுடன் பொறியாளர் இராமன் அவர்களும் பொறியாளர் சேதுமாதவனும் தயாரித்திருந்த தயிர்ச்சோறும் விருந்தில் கலந்துகொண்டன. அனைவரும் உரையாடியபடி உண்டோம்.

நாளை(18.12.2012) தமிழகத்திற்குப் புறப்படுவதால் இன்றே வழியனுப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். திரு. செந்தமிழ் அரசு அவர்களும் வந்துவிட்டார். சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களும் விருந்தில் கலந்துகொண்டார். ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடும்படி நண்பர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். பாடினேன். அனைவரும் பாராட்டுரை வழங்கி என் தமிழ்ப்பணிகளை ஊக்கப்படுத்தி உரையாற்றினர். ஒவ்வொரு நண்பர்களும் அன்பால் நெஞ்சில் நிறைந்தனர்.

தமிழகத்தின் பல ஊர்களில் பிறந்து பல ஊர்களில் படித்து, பல ஊர்களில் பணிபுரிந்து இன்று குவைத்தில் இணைந்துள்ள இவர்களின் தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் எந்தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லையே என்ற கவலையில் கண்ணீர் துளிர்த்தது. தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழர்கள் மீதும் இவர்களுக்கு உள்ள ஈடுபாடு நினைந்து, தமிழ் கடல்கடந்தும் வாழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் உரையாடலைத் தொடர்ந்தனர். சில புகைப்படங்களை நினைவுக்கு எடுத்துகொண்டோம்.

பொறியாளர் கருணாகரன் அவர்கள் புதுவை வந்தால் சந்திப்பதாகக் கூறி அன்புடன் விடைபெற்றுக்கொண்டார். அவரைப் போல் மற்ற நண்பர்களும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டனர். நண்பர் தமிழ்நாடன் அவர்கள் நாளை வானூர்தி நிலையத்தில் சந்திப்பதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றார்.

பொறியாளர் இராமன் அவர்களும், பொறியாளர் சேதுமாதவன் அவர்களும் தாம் தயாரித்த தயிர்ச்சோற்றின் செய்முறை விளக்கத்தைச் சொன்னார்கள். அதனைக் கேட்ட பிறகு ஊருக்குச் சென்றுசேரும் வரை உணவில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.



திரு.பழமலை கிருட்டினமூர்த்தி, பொறியாளர் சேது, பொறியாளர் தமிழ்நாடன்


குவைத் நகரில்மு.இளங்கோவன், பொறியாளர் கருணாகரன்



குவைத் தேசியக் காட்சியகத்தின் வாயிலில் மு.இளங்கோவன்



குவைத் தேசியக் காட்சியகம்



பொறியாளர் கருணாகரன், மு.இளங்கோவன்



குவைத்தின் அழகிய சாலைகளும் கட்டடங்களும்




குவைத் கடற்கரையில் மு.இளங்கோவன் 



குவைத் கடற்கரையில் மு.இளங்கோவன்(வேறொரு காட்சி)



குவைத் கடற்காட்சி(சரவணபவன் உணவகத்தின் அடுக்கிலிருந்து எடுத்தது)




1 கருத்து:

கவியாழி சொன்னது…

அழகிய கலைநயமிக்க ஊர் குவைத்.அங்குள்ள தமிழர்கள் எல்லோரும் தமிழை,தமிழனை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது உங்களின் கட்டுரை மூலம் தெரிகிறது.நன்றி தொடர்ந்து எழுதுங்கள்