நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 13 ஜூன், 2012

கு.சின்னப்ப பாரதியின் புதுவை வருகை…


கு.சின்னப்ப பாரதி, கி.இரா

இன்று வைகறையில் செல்பேசி மணியடித்துப் பிரஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் எழுப்பினார். இன்று நாமக்கல்லிலிருந்து எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அவர்கள் புதுவை வருவதாகவும் மாலை நான்கு மணிக்கு வரும் அவரை அழைத்துப் போற்றுவது என் பொறுப்பு என்றும் கூறினார். பேராசிரியர் நாயக்கர் அவர்கள் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்வு என்பதால் ஐயாவை வரவேற்கும் பொறுப்பு எனக்கு அமைந்தது. மாலையில் எனக்கு ஆறு முனைகளில் வேலை நடந்துகொண்டிருந்தது. அனைத்தையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்த எனக்கு ஐயாவை வரவேற்பதும் ஒருபணியாக அமைந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.

“அம்சம்” பயண ஏற்பாட்டகத்தில் ஐயா கு.சின்னப்பபாரதி அவர்கள் இருந்தார். மாலை 4 மணிக்கு அங்குச் சென்று ஐயாவை வரவேற்று அவருடன் இணைந்துகொண்டேன். அடுத்த மாதம்(சூலை) முதல் கிழமையில் பிரான்சு நாட்டில் கு.சின்னப்பபாரதியின் சங்கம் நூல் பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் அந்த விழாவில் கலந்துகொள்ளவும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்குச் செல்லவும் ஐயா அவர்கள் நுழைவுச்சீட்டு(விசா) பெறுவதற்காகப் புதுவை வந்திருந்தார்கள். பயண ஏற்பாட்டாளர்கிடம் தம் பயணத்திட்டம் குறித்து விளக்கமளித்து உரிய ஏற்பாடுகள் செய்யும்படி பயண ஏற்பாட்டகத்தில் சொல்லிப் புறப்பட்டோம்.

கு.சின்னப்பபாரதி அவர்கள் எழுத்தாளர் கி.இரா. அவர்களைக் காண வேண்டும் என்றார்கள். இருவரும் கோவை பழமுதிர்நிலையத்தில் அரத்திப் பழம், கொடிமுந்திரிப்பழம் வாங்கிக்கொண்டு கி.இரா. ஐயா இல்லம் சென்றோம் புதுவையில் அரசு குடியிருப்பின் புதிய வீட்டில் ஐயா கி.இரா. அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

ஒருவருக்கொருவர் நலம் வினவினோம். இருவரையும் பேசிக்கொண்டிருக்கும்படி கூறிவிட்டு, ஒரு மணி நேரம் என் பணிகளுக்காகப் பிரிந்தேன். மீண்டும் இருவரையும் காணத் திரும்பினேன். கி.இரா.அவர்களும் கு.சின்னப்பபாரதி அவர்களும் தங்கள் எழுத்துகளைப் பற்றியும் இன்றைய இலக்கிய உலகம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். இருவரின் பேச்சுகளையும் உற்றுநோக்கியிருந்தால் பயனுடைய பல செய்திகளைப் பெற்றிருக்கமுடியும்.

இரண்டு எழுத்தாளர்களும் தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். எனவே இருவரையும் நினைவுக்காகச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன். மீண்டும் விடைபெற்று, புதுவை- வில்லியனூரில் நடைபெற்ற திருமணத்திற்குக் கு.சின்னப்பபாரதி அவர்ளுடன் சென்றோம். இனிய பட்டறிவாக இந்தச் சந்திப்பு இருந்தது.


கு.சின்னப்ப பாரதி,


பேராசிரியர் நாயக்கர், கு.சி.பாரதி,கி.இரா


மு.இளங்கோவன், கு.சின்னப்ப பாரதி, கி.இரா

கருத்துகள் இல்லை: