நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

புதுச்சேரியில் பாவாணர் விழா


முனைவர் பொற்கோ அவர்களைச் சிறப்பிக்கும் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, க.தமிழமல்லன், பொறிஞர் பாலு உள்ளிட்டோர்

புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் பாவாணர் விழா 25.02.2012 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் தலைமை தாங்கினார். பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் பாவாணரின் மொழிமீட்சி, மொழிக்காப்பு, மொழி ஆய்வுப்பணிகளை நினைவுகூர்ந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் கலந்துகொண்டு பாவாணரின் வாழ்நாள் பணிகளை நினைவுகூர்ந்தார். பாவாணருக்கும் தமக்குமான தொடர்புகளை எடுத்துரைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாவாணர் பணியாற்றியமை, பாவாணருக்குப் பொற்கிழி சேலத்தில் வழங்கிய நிகழ்வு, பாவாணரின் எம்.ஓ.எல். பட்ட ஆய்வுரை மறுக்கப்பட்டதன் பின்னணி என்று அரிய செய்திகள் பலவற்றை அவைக்கு வழங்கினார்.

மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் பாவாணரின் இறுதிப்பேருரை நடைபெற்றதன் பின்னனி, உடல் அடக்க நிகழ்வு நிகழ்ச்சி பற்றிப் பலரும் அறியாத செய்திகளை எடுத்துரைத்தார். பாவாணரின் பன்மொழிப்புலமை, கொள்கை உறுதி யாவற்றையும் முனைவர் பொற்கோ நினைவுகூர்ந்தார். தமிழின் இன்றைய நிலையை எடுத்துரைத்துத் தமிழ் மேம்பாட்டுக்கு ஓர் அமைப்பு இன்று இல்லாமல் உள்ளது. அதனை நிறுவித் தமிழ்க்காப்புக்குப் பாடுபட வேண்டும் என்றார். தமிழ் சிலருக்குக் குடையாக உள்ளது. சிலருக்குச் செருப்பாக உள்ளது. நமக்கு மூச்சாக உள்ளது என்று தம் தமிழ்ப்பற்றை நிலைப்படுத்தினார்.

புதுவை வாழ் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


முனைவர் பொற்கோ உரை


தமிழ்ச்சங்க விழாவில் முனைவர் பொற்கோ, முத்து,தமிழமல்லன், பொறிஞர் பாலு

கருத்துகள் இல்லை: