நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 11 அக்டோபர், 2010

எங்கே செல்கின்றாய்?

வான நிலவு கீழிறங்கி
வைகை ஆற்றில் நீராடித்
தேனின் மலரைச் சூடியேதான்
தென்றல் குதிரை அமர்ந்தபடி
கானின் பாதை பலகாதம்
கடந்தே வந்து சேர்ந்ததுபோல்
மீனக் கண்ணின் அழகுமதி
மேனித் தழுவி மகிழ்ந்தனையே!

ஆலமரத்தின் இளங்கிளியோ
அங்கே இனத்தைப் பிரிந்தபடி
சோலைக் குளங்கள் பலகடந்து,
சுற்றம் புதிதாய்ச் தேடியேதான்
வாலைப் பருவ இணைதேடி
வந்தே கண்டு மகிழ்வதுபோல்,
பாலாம் ஆற்றுக் கரையினிலே
பாசக் கைகள் பிணைத்தனையே!

வயலின் ஓரம் ஏர்பிடித்தேன்!
வாய்க்கால் மீது நீநடந்து,
மயிலைப் போலத் தனிமையிலே
மாமன் மகளே வருகின்றாய்!
கயலைப் போலும் கண்களினைக்
கடலாம் நெஞ்சில் நீவீசிப்
புயலை நெஞ்சில் உண்டாக்கிப்
பூவே! எங்கே செல்கின்றாய்?

கருத்துகள் இல்லை: