நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 9 அக்டோபர், 2010

கவலுகின்றேன்!

மண்தரையின் மீதமர்ந்து வீடு கட்டி,
மணல்சோறு சமைத்தபடிச் சிறுவ ரோடு
பெண்மகளிர் எனக்கூட்ட வேண்டாம் என்று
பெருங்கோபம் காட்டியவா(று) ஓடி,வந்து
கண்கலங்கி ஏமாற்றிக் களித்தேன்; இன்று
கடமைபல எனையமுக்கக் கண்ணீர் சிந்திப்
புண்கொண்ட நெஞ்சனெனப் பொறுமை இன்றிப்
புவிவாழ்வை வெறுத்தேநான் கவலுகின்றேன்!

ஊர்சுற்றித் திரிந்திருந்தேன்; உண்மை காணேன்;
உழைப்பின்றி வாழ்ந்திருந்தேன்; உற்ற நண்பர்
பேர்கெட்டுப் போமாறு பிழைகள் செய்யப்
பிடித்திழுத்தப் போதிலெல்லாம் மகிழ்ந்திருந்தேன்!
நீர்கெட்ட பின்னாலே மக்கள் யாரும்
நின்றதனைச் சுவைப்பாரோ? அதனைப் போலச்
சீர்கெட்டுச் சிறைப்பட்டு வாழுகின்றேன்!
சிந்தனையோ இல்லாது கவலுகின்றேன்!

மெய்யெழிலின் குழந்தையெனை நெருங்கி வந்து
மினுக்குகின்ற உடலழகைத் தடவிப் பார்த்துக்,
கையினிலே பொன்பொருள்கள் வலிய தந்து
காட்டாற்றின் அன்புதரும் உறவோர் தம்மைப்
பொய்பேசிப் புறம்பேசிப் புன்சொல் சொல்லும்
புலைஎண்ணம் என்றனுக்கு வந்த ஆற்றைக்
கையூன்றி மெய்சோர்ந்த இந்த நாளில்
கண்டு கண்டு யானிங்கே கவலுகின்றேன்!

எடுக்கின்ற செயலிலெலாம் வெற்றிவேண்டி
எத்தனையோ முறைநானும் முயன்றேன்; தோற்றேன்!
விடுக்கின்ற விழைவுணர்வு நொந்து, நெஞ்சம்
வெந்தவனாய் நான்வாடிச் சாகின்றேனே!
மிடுக்கெல்லாம் சிறுபோதில் கலைந்துபோக,
மேலெண்ணம் குழிவீழச், சூம்புகின்றேன்!
கடுக்கின்ற பகைவர்களே! காலம் மாறும்!
கனல்கின்ற உணர்வடக்கிக் கவலுகின்றேன்!

(அரங்கேறும் சிலம்புகள் என்ற என் பாத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாடல். இப்பாடல் 1993 இல் எழுதியதாக நினைவு.பொங்குதமிழ் என்ற தமிழகப் புலவர்குழு ஏட்டிலும் வந்தது.)

கருத்துகள் இல்லை: