நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் -படங்கள்


துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை,முனைவர் ஆனந்தகிருட்டினன்(மேடையில்)

தமிழ்க்கணினி- பன்னாட்டுக் கருத்தரங்கம்-சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறப்பான திட்டமிடலுடன் நடைபெறுகிறது.தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு உழைத்த தொழில் நுட்ப வல்லுநர்களும், மொழியியல் துறை வல்லுநர்களும் தமிழறிஞர்களும் வருகை புரிந்துள்ளனர்.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் மிகச்சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளார். குறித்த நேரத்தில் பயிலரங்கு தொடங்குவதும்,நிறைவு பெறுவதும் சிறப்பு.அரங்கில் இருப்பவர்கள் கருத்தரங்கில் முழுக்கவனத்துடன் இருந்து பங்களிப்பு வழங்குகின்றனர்.இரண்டு நாள் நிகழ்வுகளும் தொய்வின்றி மிகச்சரியாக நடைபெற்றன.

இன்று(25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.வெங்கட்ரங்கன் அவர்கள் தலைமை தாங்கினார்.யுனிகோடும் தமிழும் என்ற பொதுத்தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் நடந்தன.பேராசிரியர் இராமன் அவர்கள் யுனிகோடு என்றால் என்ன என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்றும் அவைக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.இவ்வாறு முதலில் அரங்கிற்கு இதனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பேரா.ந. தெய்வசுந்தரம் கேட்டுக்கொண்டதன் பேரில் இம் முன்னுரை வழங்கப்பட்டது.அதனை அடுத்து அ.இளங்கோவன் அவர்கள் யுனிகோடைப் பயன்படுத்தி அச்சிடுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.

அவர் உரை UNICODE TAMIL FOR THE PUBLISHING INDUSTRY PROBLEMS AND SOLUTIONSஎன்ற தலைப்பில் இருந்தது.பேஜ்மேக்கர்,போட்டோ ஷாப்,இன்டிசைன்,பி.டி.எப்,எக்சல்,உள்ளிட்டவற்றில் யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.TACE16அமைப்பில் உள்ள யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்தும்பொழுது இத்தகு சிக்கல் உருவாவதில்லை என்று எடுத்துக் காட்டினார்.யுனிகோடு கன்சார்டிய விதிமுறைகளின்படி மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை எனவும்,இடம் யுனிகோடில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.ஆனால் இருப்பில் உள்ள இடைவெளியில் புதிய சில வசதிகளைப் பயன்படுத்தி யுனிகோடைப் பயன்படுத்தித் தமிழைப் பயன்படுத்தமுடியும் என்று எடுத்துக்காட்டினார்.

பொறியாளர் இராம.கி.அவர்கள் ஒருங்குறியேற்றத்தின் போதாமை ( INADQUACY OF TAMIL UNICODE)என்ற தலைப்பில் பழங்கால எழுத்து வடிவ வளர்ச்சிகளை எடுத்துக்காட்டி,யுனிகோடின் குறைகளை எடுத்து விளக்கினார்.

என்.எச்.எம்.எழுதியை உருவாக்கிய நாகராசன் அவர்கள் தமிழ் 99 விசைப்பலகை பற்றியும் யுனிகோடு பற்றியும் மிகச்சிறப்பாகத் தன் கருத்துத்துகளை எடுத்துரைத்தார்.பழைய தவறுகளை விட்டுவிட்டுப் புதியதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.TACE 16 ஐ யுனிகோடு கன்சார்டியத்தினர் ஏற்கமாட்டார்கள் என்று சொன்னார்.யுனிகோடை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.பள்ளி மாணவர்களுக்கு யுனிகோடை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.இன்டிசைன் யுனிகோடை ஏற்கவில்லை என்று ஒதுங்கமுடியாது. அடுத்த கட்டத்திற்குப் பிளக்-இன் (Plug-in) செய்ய வேண்டும் என்றார்.யுனிகோடை இனி ஒதுக்க முடியாது என்று தன் ஆழ்ந்த வாதத்தை முன்வைத்தார்.

இடையில் ஒரு கருத்தை இராமன் முன்வைத்தார்.தமிழக அரசு யுனிகோடு கன்சார்டியத்தில் உறுப்பினராக உள்ளது.ஆனால் அந்த அரசே யுனிகோடைப் பயன்படுத்துவதில்லை.ஆந்திரா அரசு கன்சார்டியத்தில் உறுப்பினர் இல்லை.ஆனால் யுனிகோடை நடைமுறைப்படுத்துகிறது என்றார்.

பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் இராமகிருட்டினன் அவர்களின் உரையை அரங்கத்தினர் ஆர்வத்துடன் கேட்டனர்.காரணம் தட்டச்சிட்டால் தமிழை ஒலித்துக்காட்டும் மென்பொருளை அவர் நேரடியாக மேடையில் அறிமுகம் செய்தார்.தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்த ஒரு செய்தியை மாதிரிக்குப் படியெடுத்து அதனைப் படிக்கும்படியாகச் செய்துகாட்டினார்.அவ்வாறு படிக்கும் பொழுது நாள்(10.02.2010),அடையாளக்குறி,பின்ன எண்கள்,எண்கள்(456), உள்ளிட்டவற்றைப் படிப்பதிலும் பிற தொடர்களைப் படிப்பதிலும் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சந்தோசுகுமார்(அமிர்தா பல்கலைக்கழகம்), உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் முருகையன்,பேராசிரியர் நடனசபாபதி,பேராசிரியர் இரவிசங்கர்(புதுவை)உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர்.

நாளை(26.02.2010)காலை பத்து மணிக்குக் கணினிவழித் தமிழ்க்கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஆ.இரா.சிவகுமாரன்,பேரா.தியாகராசன், அண்ணாகண்ணன்,மு.இளங்கோவன், மு.பழனியப்பன், துரையரசன் உள்ளிட்டவர்கள் கட்டுரை படைக்க உள்ளனர்.


பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை அவர்கள்


இராமன்,நான்,வெங்கட்ரங்கன்,இராம.கி ஐயா


வெங்கட்ரங்கன்,நான்,நாகராசன்,இராமன்


நானும், என்.எச்.எம்.எழுதி உருவாக்கிய நாகராசனும்


நானும் பேராசிரியர் இராமகிருட்டினனும்


பேராசிரியர் கணேசன்,வெங்கட்ரங்கன்,அ.இளங்கோவன்


தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் வசதியைத் தமிழுக்கு வழங்கிய பேராசிரியர் இராமகிருட்டினன்(பெங்களூரு)

2 கருத்துகள்:

Info-farmer சொன்னது…

கணினித் தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மகிழ்வைத் தருகின்றன. நிழற்படங்கள் அருமை.தமிழின் வரலாறு, தங்களைப் போன்றவர்களால் பேணப்படுவது கண்டு மிகவும் மகிழ்கிறேன்.

பனித்துளி சங்கர் சொன்னது…

ஆஹா மிகவும் அருமையான பதிவு . நண்பரே இதுபோன்ற கருத்தரங்குகளில் கலந்துகொள்ள இயலவில்லையே என்பது சிறு வருத்தம் என்றாலும் . இதுபோன்ற தமிழ் முன்னேற்ற நிகழ்ச்சிகள் பற்றி படிக்கும்பொழுது மனத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி . பகிர்வுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !