தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் படைப்பாளிகள் பலர் இணைந்து 'மின் இலக்கியப்பூங்கா' என்னும் அமைப்பைத் தொடங்கி, அதன் சார்பில் 'மின்னருவி' என்னும் இதழைக்கொண்டு வருகின்றனர். இந்த இதழின் வெளியீட்டுவிழா 30.01.2008 மாலை ஆறு மணிக்குச் சென்னைக் கோயம்பேடு நடுவண்பேருந்து நிலையம் எதிரில் உள்ள கோல்டுமைன்
உணவகத்தில் நடைபெறுகிறது.
பொறிஞர் பி.பாலகிருட்டிணன் தலைமையில் நடைபெறும் விழாவில் மின்வாரியத்தலைவர் திரு சு.மச்சேந்திரநாதன் இ.ஆ.ப.அவர்கள் முதல் இதழை வெளியிடுகிறார்.பாவலர் வா.மு.சேதுராமன்,கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன்,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன் ஆகியோர் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
திருவாளர்கள் இரா.கதிர்வேலு,சி.குணசேகரன்,கு.கோவிந்தராசு,ச.கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரைக்கின்றனர்.திரு.துரை சுந்தரம் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.
பாவலர் தமிழியலன்,பாவலர் அ.சிவராமன் உள்ளிட்ட தோழர்கள் முன்னின்று இதழை வெளியிடுகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பணிபுரியும் மின்வாரியத்தோழர்கள் எடுக்கும் இவ் இலக்கிய விழா சிறப்புடன் நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
மின்னருவி இதழ் வெளியீட்டு விழா-சென்னை
Posted by
முனைவர் மு.இளங்கோவன்
at
2
comments
Links to this post
புதுச்சேரியிலிருந்து ஒரு மின்னிதழ்...
புதுச்சேரியிலிருந்து மின்னிதழ்,இணையதளங்கள்,வலைப்பூக்கள் வழி இணையத்தமிழ் வளர்ச்சிக்குப்
பலர் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.அவ்வகையில் புதுச்சேரியின் செய்திகளை உடனுக்குடன்
உலகிற்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் புதுவைத்தமிழ் ஆன்லைன் என்னும் பெயரில் மின்னிதழ் தொடங்கப்பட்டுள்ளது.புதுச்சேரியின் மூத்த இதழாளர் தணிகைத்தம்பி,திரு.அ.சுகுமாரன் முயற்சியில் இதழ் வெளிவருகிறது.வாழ்த்தி வரவேற்போம்.
பார்க்க :
http://www.puduvaitamilsonline.com
Posted by
முனைவர் மு.இளங்கோவன்
at
0
comments
Links to this post
சித்திரப் பாடல்கள்
புலவர் கண்ணையன் ஐயா என் இல்லத்திற்கு வந்தபொழுது சில பாடல்களை நினைவிலிருந்து சொன்னார்கள்.அவை சித்திரப் பாடல்கள்.பாடலை விளக்கும் படங்களுடன் அவற்றை வெளியிடுகிறேன்.இவை பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் அறிவிக்க மகிழ்வேன்.
Posted by
முனைவர் மு.இளங்கோவன்
at
2
comments
Links to this post
மக்கள் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளில் இன்று மிகுதியான மக்களால் பார்க்கப்படும்,விரும்பப்படும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி மாறிவருகிறது. தமிழகம்,புதுச்சேரி சார்ந்த பல நிலைப்பட்ட மக்களிடம் பழகும்பொழுது இதனை அறிகிறேன். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் மலேசியா,எத்தியோப்பியா,துபாய்,ஆத்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல்கள், தொலை பேசி அழைப்புகளில் இது உறுதியாகியுள்ளது.
தமிழர்கள் இப்பொழுது அயல்நாடுகளில் பலர் வாழ்வதால் தங்கள் வேர்மூலத்தை விரும்பத் தொடங்கியுள்ளனர்.இவர்கள் தங்கள் குடும்பத்தை ஒத்தவர்களைப் பார்க்க விரும்புகின்றனர். தங்கள் குடும்ப நிகழ்வுகள்,வாழ்க்கை,மொழி இவற்றை நேசிக்கின்றனர்.இவர்களுக்கு மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உறவுடையது போன்ற தோற்றத்தைத் தருகின்றன.தாங்கள் இளம் அகவையில் கண்ட மக்கள்,கலைஞர்கள்,கலைகள்,மொழி சார்ந்த செய்திகள் மக்கள் தொலைக் காட்சியில் இடம்பெறுவதால் இவற்றை விரும்பிப் பார்க்கின்றனர்.சுருங்கச்சொன்னால் தங்கள் மண்ணையும் மக்களையும் அயல்மண்ணில் இருந்தாலும் நினைத்துக்கொண்டே காலம் கழிக்கும் இவர்களுக்கு மனத்தில் உள்ள ஏக்கம் என்ற உள்காயத்தை மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மருந்தாக இருந்து ஆற்றுகிறது.
தமிழகத்திலிருந்து புறப்பட்ட திரைப்படங்கள் உயர்சாதியினரின் வாழ்க்கையை வெளிப்படுத்திய காலகட்டத்தில் இயக்குநர் பாரதிராசாவின் சிற்றூரை மையமாகக் கொண்ட படங்கள் மக்களைக் கவர்ந்தன. அதுபோல, பெண்களை இழிவாகக் காட்டிக் காசு பறித்த காலகட்டத்தில் இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி,சொல்லமறந்த கதை,சேரனின் ஆட்டோகிராப்,தவமாய் தவமிருந்து முதலிய படங்கள் தமிழகத் திரைப்பட வரலாற்றை மாற்றிப்போட்டன. அவைபோல மக்கள் தொலைக்காட்சியின் வருகையும் பண்பாடு மீட்கும் - ஆவணப்படுத்தும் நிகழ்ச்சிகளும், மொழிக் காப்பும், தொலைக்காட்சிகள் பலவற்றைக் கதிகலங்கச் செய்துள்ளது.
ஏனெனில் தமிழ் மொழியை உயிருக்கு உயிராகப் போற்றும் நேசிக்கும் தமிழர்கள் உலகம் முழுவதும் தங்கி வாழ்க்கை நடத்தினாலும் தங்கள் தாய்மொழி காப்புப் பணிக்கு ஆக்கமான பல வேலைகலையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இவர்கள் செய்யும் இத்தகு தமிழ்ப்பணிகளுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருவனவாக மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன.எனவே உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் மக்கிள் தொலைக்காட்சி வளர்ந்து வருவதே பிற தொலைக்காட்சியினரின் கலக்கத்திற்குக் காரணம்.
மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெறும் சந்தனக்காடு தொடர் வீரப்பனின் வாழ்க்கையைக் காட்டும் மிகச்சிறந்த காவியமாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. சிற்றூர்ப் பெண்கள் இன்று விரும்பித் திருப்பும் தொடராகச் சந்தனக்காடு உள்ளது. இயக்குநர் வ.கொளதமன் அவர்கள் மிகத் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளை அழைத்துக் கொண்டு சுவிசு.ஆத்திரேலியா,நியூசிலாந்து பறந்து நட்சத்திர விடுதிகளில் குடித்துக் கும்மாளமிட்டு பனிச்சருக்கும் மலைகளைப் படம்பிடிக்க முனையும் கோடம்பாக்க இயக்குநர்கள் யாரை விடவும் தான் ஒரு மிகப்பெரும் கலைஞன் என்பதையும், ஆளுமைத்திறம் உடையவர் என்பதையும் வ.கொளதமன் உறுதிபட இத் தொடரில் காட்டியுள்ளார்.
வீரப்பனை மீண்டும் உயிரோடு உலவ விட்டுள்ளார்.காடு,கரம்புகளில் அலைந்து களப்பணியாற்றி, சட்டச் சிக்கலிலிருந்து விடுபட்டு, மிகப் பெரிய படப்பிடிப்புக் குழுவைக் கட்டியமைத்து இயக்கி, சந்தனக்காட்டில் ஒரு சாம்ராச்சியம் நடத்தி வந்துள்ளார்.இவ்வகையிலும் தமிழ் நிகழ்வுகள் பலவற்றாலும் புகழ்பெற்ற மக்கள் தொலைக்காட்சி 2008 பொங்கல் நிகழ்ச்சிகளை வழங்கிவரும் வகையில் மீண்டும் ஒரு புகழ் மணியைத் தம் படைப்புப் பணிக்குப் பெற்றுள்ளது.
ஆம்...
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் சில தமிழ்,தமிழர்களின் பண்பாடு தெரியாத நடிகர்,நடிகையர்களைக் கொண்டும் திரைப்படக் கலைஞர்களை நம்பியும் 'கேப்பிப் பொங்கல்'வைத்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள். திரைப்படம், திரைக்கூத்தர்களை நம்பிக் கடைவிரித்து,அருவருக்கத் தக்க உடலில்,அருவருக்கத் தக்க உடையை ஒட்டிக்கொண்டு ஆடும் ஆடவரையும் பெண்டிரையும் மனம்போன போக்கில் ஆடவிட்டு அவர்களின் பாலியல் விளையாட்டுகளைக் கலைகள் என்னும் பெயரில் காசாக்கின. இந்த நாளில், கரந்துறைப் போருக்கு ஆயத்தமான மறவனைப்போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சிதறி வாழும் நாட்டுப்புறக் கலைஞர்களை அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று சிற்றூர்ப்புறச் சூழலில் அவர்களிடம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்தம் மரபுக் கலைகளை ஒளிப்பதிவு செய்து, 'தமிழர்களே! இதுதான் உங்கள் மரபுச்செல்வங்கள்' எனக் காட்டிய மக்கள் தொலைக்காட்சிக்குத் தமிழுலகமே கடமைப்பட்டுள்ளது.
மக்கள் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள்,ஆடவர்கள்,அரசியல் தலைவர்கள்,நாட்டுப்புறவியல் கலைஞர்கள்,மக்கள் தொலைக்காட்சி பணியாளர்கள்,தமிழறிஞர்கள் என இதுவரை உயர்தட்டு ஊடகங்களால் புறக்கணித்த அனைத்து முகங்களையும் பாகுபாடின்றிக் காட்டியது. மக்கள் தொலைக்காட்சி தமிழர்களையும் தமிழையும் உண்மையாகவே காக்கும் 'மருத்துவரின்' கைமருந்து என்ற உணர்வை அனைவரின் நெஞ்சிலும் விதைத்துள்ளது.
தமிழறிஞர் நன்னன் ஐயாவின் தமிழ்ப்பணியை நன்கு மதித்துவரும் மக்கள் தொலைக்காட்சி அவர்தம் பிறந்த ஊருக்கு அவரை அழைத்துச் சென்று காவனூரையும் வெள்ளாற்றங்கரையில் வாழும் அவர்தம் தோழர்களையும் நமக்கு அறிமுகம் செய்தது.இதனைவிட அவருக்கு வேறு எந்தப் பட்டத்தைப், பதவியை வழங்கி நம்மால் பெருமை செய்யமுடியும்?.வாழும் காலத்திலே உண்மையான தமிழறிஞர்கள் உரிய வகையில் மதிக்கப்படவேண்டும் என்பதை இந்நிகழ்ச்சி சொல்லாமல் சொல்லியது.
நடையா இது நடையா? என்னும் பெயரில் வனப்பு மிகுந்த வண்டிமாடுகளை அழகிப்போட்டிக்கு(!) நிகராகவே நடத்திக்காட்டி உழவர்களையும் மாடுகளையும் மதித்த உழவர்களின் தொலைக் காட்சியாக மக்கள் தொலைக்காட்சி விளங்கியது.மாடுகள் விரும்பி உண்ணக்கூடியது,விரும்பாதது, மாட்டுவகை,உழவரின் பெயர்களை காட்டிப் புதுமையாக இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமை அனைவரின் பாராட்டுக்கும் ஆளானது.இந்நிகழ்ச்சிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உள்ளங்களில் வாழும் வகையில் இசையமைத்திருந்தார்.
மருத்துவர் இராமதாசு,தொல்.திருமாவளவன் இருவரும் வயல்காட்டுடன் உறவுடையவர்கள் என்பதைப் பெருமையாகச் சொன்னமை, வியர்வையறியாத வெள்ளுடை வேந்தர்களுக்கு நடுவே இவர்கள்தான் மக்கள் தலைவர் என்ற உணர்வை உண்டாக்கியது.தமிழகத்தின் பெரும்பான் மையான மக்கள் செய்யும் தொழில் உழவு. அவ்வுழவர்களுக்கு உரிய இடர்ப்பாடுகள் இன்னொரு உழவருக்குத்தான் தெரியும்.அவ்வுழவுத் தலைவர்களை வயல் வரப்புகளில் கண்ட மக்கள் அந்நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்தனர்.
மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்கள் தங்களை யார் என மக்கள் கண்டுபிடிக்கின்றார்களா? என்பதை அறியும் 'எங்கேயோ பார்ந்த முகம்' நிகழ்ச்சியும் அனைவரையும் ஊக்கமடையச் செய்தது.
கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற பல்சுவை நிகழ்ச்சிகளில் புட்பவனம் குப்புசாமி அவர்களின் பாடலுக்கு ஒற்றை ஆட்டம் ஆடிய பெண்ணின் உடல் இயக்கம் அவரின் மிகச்சிறந்த ஆற்றலைக் காட்டியது அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை மக்கள் தொலைக்காட்சி வழங்கலாம்.பானை சுமத்தல்,மாவு ஊதி உரொட்டிக்கடித்தல் முதலியனவும் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகும். அர்ச்சுணன் தவசு தெருக்கூத்து நம்மைச் சிற்றூருக்கு அழைத்துச்சென்றது.'நான்பேச நினைப்பதெல்லாம்' என்னும் நிகழ்ச்சியில் மாடுகள் பேசுவதுபோல் அமைத்திருந்ததை அனைவரும் விரும்பிப் பார்த்தனர்.கலைவாணன் உள்ளிட்ட கலைஞர்கள் மிகப்பெரும் கலையுள்ளம் கொண்டவர்கள் என்பதை நிகழ்ச்சி மெய்ப்பித்தது.
முக்கூடல் என்னும் பெயரில் அமைந்த நிகழ்ச்சி தமிழ் சார்ந்த நிகழ்ச்சியகும்.பெரும்பாலான மக்களுக்குத் தெரிய வேண்டிய தமிழ் எண்களை அறிமுகம் செய்ய இதுபோன்ற முயற்சி கட்டாயம் தேவை.உறுமியின் பல்வேறு அடைவுகளை விளக்கி அவற்றை இயக்கிக் காட்டியமை பாராட்டிற்கு உரியது.
தென்தமிழகத்தில் வளர்ந்துள்ள பல்வேறு கலைகளையும் தமிழகத்தின் கொங்குமண்டலத்திலும் பிற பகுதிகளிலும் வழக்கில் உள்ள கலைகள்,இசைகள்,ஆடல்கள்,பண்பாட்டுக்கூறுகள் யாவும் உரிய வகையில் இடம்பெற்றமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.
மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் நேரலை நிகழ்ச்சிகள்,தொலைபேசி வழி உரையாடல்கள் யாவும் மக்களுக்கு உரியவாக அமைந்ததால் ஆர்வமுடன் மக்கள் பங்கேற்றனர்.விடாது மழை என விளம்பரப்படுத்தப்பட்டது போலத் தமிழ் மழை மக்களின் உள்ளத்தில் படிந்திருந்த தூசுகளை நீக்கித் தமிழ் உள்ளமாக்கிய நிகழ்ச்சிகள் இவை.
கோடம்பாக்கமே தமிழகம் என்று நினைப்பவர்களுக்கு உண்மையான தமிழகத்தையும் தமிழ்மக்களையும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்தன.பொங்கல் முதல் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செல்பேசியில் பார்க்கும்படி வளர்ச்சிபெற்றுள்ளது பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.மக்கள் தொலைக்காட்சி தன் பாதையில் தொடர்ந்து சென்று தமிழ்ப்பணிபுரிய வாழ்த்துவோம்.
Posted by
முனைவர் மு.இளங்கோவன்
at
5
comments
Links to this post
ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறு
ஏறுதழுவுதல்,ஏறுகோள்,மாடுபிடித்தல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பலபெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லைநில(ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர் புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது.முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும்(330-335),பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமைவாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர்.இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்.இதனை,
'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)
என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.
ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும்.முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர்.ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இம்
முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.3)
என்று குறிப்பிடும்.
கலித்தொகை
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம்,மாடுகளின் வகை, மாடுகளின் வீரம்,அதனை அடக்கும் இளைஞர்களின் செயல்,பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள்,பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.
பிடவம்பூ,செங்காந்தள்பூ,காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர்.அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர்.அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.
ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர்.அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு.அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.
பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை,ஆண்யானை,முதலை முதலியவறை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.
ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது.அவன்குடல் சரிந்து வெளி வருகிறது.அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது.இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.
'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64)
என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.
கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும்,சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது
தொன்மையானது என்பதிலும்,மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்.
Posted by
முனைவர் மு.இளங்கோவன்
at
9
comments
Links to this post
சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்
தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. அவ்வெண்பாக்கள் விளக்கும் செய்திகளை இங்குத் தொகுத்து நோக்குவோம்.
பஞ்சமரபு அறிமுகம்
பஞ்சமரபு என்னும் நூலை இயற்றியவர் சேறை அறிவனார் என்னும் புலவராவார். இவர்தம் காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. எனினும் பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன. பஞ்சமரபு நூல்வெண்பாக்களால் அமைந்த நூல். சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். 'சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை' எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும்.. இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவரும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவா முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து
(1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன.இசை உண்மைகள் குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.
சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ.வே.சா பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம்
30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.
சிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்
சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர் பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது.
சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.
அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.
1. ஓங்கிய மூங்கில் ......(3 : 26 , 17 : .20)
2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20)
3. இருவிரல்கள் நீக்கி....(3 : 26, 17 : 20)
4. வளைவாயரு...........(3 : 26, 17 : 20)
என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.
வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம் :
1. யாழ் நான்கு வகைப்படும்.
(அ) பேரியாழ்
(ஆ) மகரயாழ்
(இ) சகோடயாழ்
(ஈ) செங்கோட்டுயாழ் என்பன.
2. நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை
பேரியாழ் 21 நரம்புகள்
மகரயாழ் 19 நரம்புகள்
சகோடயாழ் 14 நரம்புகள்
செங்கோட்டியாழ் 7 நரம்புகள்
3. வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
(அ) மூங்கில்
(ஆ) சந்தனம்
(இசெங்காலி (ஈ).கருங்காலி
(உ) உலோகம் (வெண்கலம்)
4. துளைக்கருவி(புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.
5. துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)
குழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.
குழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.
துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்
முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
6. துளைக்கருவியின் பகுப்பு
தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம்
(மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)
7. ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
(அ) இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
(ஆ) இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
(இ) இட மோதிர விரல் குரலுக்கு (ச)
(அ) வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
(ஆ) வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
(இ) வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)
8. ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.
9. இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.
10. காற்றின் வகைகள்
11. பத்து நாடிகள்
12. பூதங்களின் பரிணாமம்.
13. ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)
14. பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்
15. வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்
16. பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.
17. செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.
18. செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.
19. தொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.
20. வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.
நிறைவாக...
சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.
Posted by
முனைவர் மு.இளங்கோவன்
at
5
comments
Links to this post
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் வரலாறு
பத்துப்பாட்டு நூலுள் நிறைவாக வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெங்குன்றூர் பெருங்கொளசிகனார் ஆவார்.
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனும் அரசனாவான். இவன் கொண்கான நாட்டில் ஏழில் மலையையும், பாரம் என்ற நகரையும் ஆண்ட நன்னனின் மகன் என்பதை மலைபடுகடாம் நூலின்வழியும், நச்சர் உரை வழியும் பிற சங்கநூல் சான்றுகள் வழியும் உறுதிப்படுத்த முடிகிறது.
கொண்கான நன்னன் பெண்கொலை புரிந்ததால் புலவர்கள் அவனையும் அவன் மரபையும் பாட விரும்பவில்லை என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகின்றது. அவ்வாறு எனில் நன்னன் வழியில் வந்த நன்னன் சேயைப் பெருங்கௌசிகனார் பாடியது ஏன்? எனும் வினா எழுகிறது. கொண்கானம் என்பது இன்றைய கேரளத்தின் வடபகுதியாகவும், துளு பேசும் பகுதியாகவும் உள்ளதை அறிஞர் பி.எல். சாமி குறிப்பிட்டு எழுதியுள்ளார்(செல்வி. 79-7, ப.4).
கொண்கானத்து நன்னனைக் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் தோற்கடித்துக் கொன்றுவிட்டதைக் கல்லாடனார் அகநானூற்றில் (199-ஆம் பாடல்) பாடியுள்ளார். நன்னனைத் தோற்கடித்து அவன் காவல் மரமான வாகையை நார்முடிச்சேரல் வெட்டியதைப் பதிற்றுப்பத்திலும் புலவர் பாடியுள்ளார்(பதிற்று.40). எனவே கொண்கானத்து நன்னன் இறந்தபின் அவன்மகன் நன்னன் சேய் நன்னன் தந்தையின் தலைநகரான பாரம் (ஏழில்குன்று) எனும் நகரத்திலிருந்து (கேரளா-மாஹி) ஏறத்தாழ 500 கி.மீ.வடகிழக்கே 'செங்கண்மா' (செங்கம்) எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஆட்சி செய்த நன்னனின் தெளிவான வரலாற்றை அறியத் தகுந்த சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் அவனைப்பற்றி 'மலைபடுகடாம்' நூலில் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் குறிப்பிடும் செய்திகளின் துணையைக் கொண்டும், களப்பணி, செவிவழிச் செய்திகளின் துணைகொண்டும் நன்னனின் வரலாற்றைத் தொகுத்துரைக்க இக்கட்டுரை முயற்சி செய்கிறது.
நன்னனின் காலம்
பல்குன்றக் கோட்டத்துச் செங்கம் பகுதியை ஆண்ட நன்னனின் காலம் பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. எனினும நன்னன் சேய் நன்னனின் தந்தையான கொண்கான நன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலால் கொல்லப்பட்டதால் நன்னனின் காலம் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் காலம் எனக் கொள்வதில் தவறில்லை. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் காலம் கி.மு 250- கி.மு. 175 அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது. (வேலாயுதம், பக்.18) களங்காய்க் கண்ணியின் காலத்திலே செங்கண்மாவில் நன்னன்சேய் நன்னன் ஆட்சி செய்திருக்க வேண்டும். எனவே, களங்காய்க் கண்ணியின் காலத்தைச் சேர்ந்தவன் நன்னன் என்ற முடிவிற்கு வரலாம்.
அக்கால கட்டத்தில் தமிழகத்தின் அரசர்கள் - சிற்றரசர்கள் - குறுநில மன்னர்களின் வரலாற்றினை ஆராயும்பொழுது நன்னன் காலத்து அரசியல் சூழலை ஒருவாறு உணர முடியும். அவ்வாறு நன்னன் காலத்தில் அரசியல் சூழலை நன்கு அறிவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனினும் மலைபடுகடாம் நூலில் நன்னனின் உடல்வலிமை, போர் ஆற்றல, பகைவர்கள் இருந்துள்ளமை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
நன்னனின் நாடு இயற்கையான மலைவளம் கொண்டது. எனவே, நன்னனுக்குப் பகைவர்கள் பலர் இருந்திருக்க வேண்டும். நன்னனின் நாட்டைச் சுற்றியிருந்த வேற்று நிலத்தலைவர்கள் அல்லது அவர்களின் குடிவழியினைரை ஆராய்ந்து பார்க்கும்பொழுது சில முதன்மையான ஊர்களையும், அப்பகுதியை ஆண்ட தலைவர்களையும் அடையாளம் காண வேண்டியுள்ளது. நன்னன் காலத்திலோ, அதற்கு முன் அல்லது பின்னைய ஓரிரு நுற்றாண்டுகளிலோ தகடூர் (தருமபுரி), காஞ்சிபுரம், கிடங்கில் (திண்டிவனம்), திருக்கோவிலூர், கொல்லிமலை முதலான ஊர்கள் முதன்மை பெற்ற வரலாற்றுப் பெருமைக்குரிய ஊர்களாக விளங்கியுள்ளன. தகடூர், திருக்கோவிலூர், கொல்லிமலை, முதலியன போரில் பலமுறை தாக்கப்பட்டு அரசர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே இந்த ஊர்களுக்கு நடுவில் இருக்கும் செங்கமும், அதனை ஆண்ட நன்னனும எப்பொழுதோ நடைபெற்ற போர¤ல் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவன் நாடும் கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும். நன்னனுக்குப் பகைவர்கள் இருந்துளளமையையும், அவன் வலிமையானவன் என்பதையும் மலைபடுகடாம் எனும் நூலின் பல நுண் குறிப்புகளால் உணர வாய்ப்பு ஏற்படுகின்றது.
நன்னனின் வீரத்திற்குச் சான்று
ஓவியங்களிலே வரையப்பட்டது போன்ற முலையினையும், மூங்கிலை ஒத்த தோளினையும், பூப்போன்ற கண்ணிமையும் உடைய கற்புடைய மகளிர்க்குக் கணவனாக நன்னன் விளங்கினான். கையால் செய்யப்பெற்ற மாலையினையுடைவன். அம் மாலைகளில் பொலிவுற்ற வண்டுகள் உள்ளன (56-58). பகைப்புலத்தைப் பாழுண்டாக்கும் வண்ணம் அரிய வலிமையினை உடையவன். பரிசிலர்க்குப் புதுப் புனலாய்ப் பயன்தருபவன். ஆக்கத்தினை நினைக்கும் நினைவும், வில்தொழில் பயின்ற கையினையும் (63) உடையவன். பேரணிகலன்களை அணிந்தவன் (63) , நன்னன் சேய் நன்னன் எனும் பெயரினன் , பகைவர்கள் பலரையும் புறமுதுகிட்டு ஒடும்படிச் செய்தவன். அவர்கள் திறையாகத் தந்த பெறுதற்கரிய பேரணிகலன்களை அறிவுடையவர்களுக்கு முற்பட வழங்கியவன் (71-2) , தன்னை இகழ்பவர்களுக்கு அரசு கொடாமல் சுருக்கும் அறிவுடையவன் (73), பல