நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 13 ஜனவரி, 2008

சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்



தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்ப குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. அவ்வெண்பாக்கள் விளக்கும் செய்திகளை இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பஞ்சமரபு அறிமுகம்

பஞ்சமரபு என்னும் நூலை இயற்றியவர் சேறை அறிவனார் என்னும் புலவராவார். இவர்தம் காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. எனினும் பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன. பஞ்சமரபு நூல் வெண்பாக்களால் அமைந்த நூல். சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். 'சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை' எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். பஞ்சமரபு வெளிவருவதற்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பெருங்காரணமாக இருந்துள்ளார். புலவர் தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். இந்த நூல் குடந்தையில் அச்சாகியுள்ளது. 1991 இல் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு நூல் கழகம் வழியாக வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்த பஞ்சமரபு, நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள் குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.

சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ.வே.சா பஞ்சமரபைப் பெயரளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.

சிலம்பில் இடம்பெறும் பஞ்சமரபு வெண்பாக்கள்

சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர் பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்த நூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது.

சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்குநல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறிவதற்குப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்குநல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.

1. ஓங்கிய மூங்கில் ......(3 : 26 , 17 : .20)

2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20)

3. இருவிரல்கள் நீக்கி....(3 : 26, 17 : 20)

4. வளைவாயரு...........(3 : 26, 17 : 20)

என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம் :

1. யாழ் நான்கு வகைப்படும்.

(அ) பேரியாழ்
(ஆ) மகரயாழ்
(இ) சகோடயாழ்
(ஈ) செங்கோட்டுயாழ் என்பன.

2. நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை

பேரியாழ் 21 நரம்புகள்
மகரயாழ் 19 நரம்புகள்
சகோடயாழ் 14 நரம்புகள்
செங்கோட்டியாழ் 7 நரம்புகள்

3. வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
(அ) மூங்கில்
(ஆ) சந்தனம்
(இசெங்காலி (ஈ).கருங்காலி
(உ) உலோகம் (வெண்கலம்)

4. துளைக்கருவி(புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.

5. துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)
குழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.
குழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.
துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

6. துளைக்கருவியின் பகுப்பு
தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம்
(மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)

7. ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
(அ) இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
(ஆ) இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
(இ) இட மோதிர விரல் குரலுக்கு (ச)
(அ) வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
(ஆ) வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
(இ) வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)

8. ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.

9. இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.

10. காற்றின் வகைகள்

11. பத்து நாடிகள்

12. பூதங்களின் பரிணாமம்.

13. ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)

14. பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்

15. வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்

16. பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.

17. செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.

18. செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.

19. தொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.

20. வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.

நிறைவாக...

சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.

5 கருத்துகள்:

தமிழநம்பி சொன்னது…

ஐயா, வணக்கம்.
வெளிப்படுத்தப்படவேண்டிய தமிழரின் இசை தொடர்பான அரிய செய்திகளைத் தந்திருக்கின்றீர்கள். நன்றியும் பாராட்டுகளும்!
அன்பன், தமிழநம்பி, விழுப்புரம்.

வரலாறு.காம் சொன்னது…

பல புதிய தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.

நன்றி
கமல்
www.varalaaru.com

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
பாராட்டி ஊக்கப்படுத்தியமைக்கு
நன்றி.
மு.இளங்கோவன்

நா. கணேசன் சொன்னது…

முனைவரே, பஞ்சமரபுக்கு நல்ல அறிமுகம். நன்றி.

பஞ்சமரபு கிடைத்த ஊர் வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர் திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் மஞ்சமரபைக் காத்தளித்த இடம். ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு, ... இப்பெயர்களில் காபாலிக மதம் இருக்கிறது. கல்வெட்டறிஞர் செ. ராசு(வே. ரா. தெ. மாணவர்) ஈரோடு என்பதே ஓலை, கல்வெட்டு ஆவணங்களில் உள்ளதைச் சுட்டிக் காட்டுவார்.

பெரும்புலவர் வே. ரா. தெ. போலத் தமிழில் சுவடி தேடுவார் இன்றில்லை. உ.வே.சா அவர்கள் பெருங்கதையும், வளையாபதியும் கிடைத்தால் அனுப்பிவை என்று அவருக்கு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன. குறளின் நான்கு பழைய உரைகள், கம்பன் பதிப்புக்கு அண்ணாமலைப் பல்கலைக்கு பெ. தூரன் கொடுத்த சுவடிகள் வே.ரா.தெ. அவர்கள்
வழங்கியன. கச்சியப்பரின் ஆனைக்காப் புராணத்துக்கு முந்தைய கமலை ஞானப்பிரகாசர் (என நினைவு) பாடிய தந்திவனப்புராணம் (மறைந்த தா. வே. வீராசாமி அச்சிட்டார்), முருகின் உரைகள் என்று பல அரிய இலக்கியங்களையும், தொல். உரைகள் சிலவும் தேடிக் கண்டவர்.

வே.ரா.தெ. அவர்கள் சுவடி தக்கை ராமாயணம். கு. அருணாசலக் கவுண்டர் முதல் ஐந்து காண்டங்கள் அச்சிட்டார், யுத்தகாண்டம் உட்பட. தமிழின் ஒரே உலாகாயத நூல்: காராணை விழுப்பரையன் மடல். மிக அழகான நூலது. புராஜக்ட் மதுரைத் திட்டத்தில் (எண் 60) வே.ரா.தெ.
முதன்மை மாணவர் உயர்நீதிமன்ற நீதிபதி ரா. செங்கோட்டுவேலனிடம் பெற்று பல்லாண்டுகள் முன் வழங்கினேன்:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0060/valamatal.pdf


இன்னும் நிறையப் பேசுவோம், பலரறியாப் பழைய நூல்களைக் கணினிக்குக் கொண்டுவருவோம்.

பொங்கலோ பொங்கல்!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஐயா வணக்கம்.
பாராட்டிற்கும்,பயனுடைய தகவலுக்கும்
நன்றி.
திரு.செங்கோட்டுவேலன் அவர்களைப்பற்றி அறியுவும்,தங்களுடன்
தொடர்புகொள்ளவும் விரும்புகின்றேன்.
மு.இளங்கோவன்