நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 11 நவம்பர், 2018

ம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்!




 என் அருமை நண்பரும், புதுவையின் புகழ்பெற்ற எழுத்தாளருமாகிய பி.என்.எஸ். பாண்டியன் அவர்கள் இயக்கிய, .இலெ. தங்கப்பா வானகத்தின் வாழ்வியக்கம் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் திரையிட்டுக் கண்டுகளித்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுவருகின்றது. புதுவை நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தாலும் முழுமையாக ஆவணப்படத்தைப் பார்க்க இயலாமல், வேறு ஒரு பணியின் காரணமாக இடையில் திரும்பினேன்.

 முப்பது ஆண்டுகள் தங்கப்பா ஐயாவுடன் பழகிய நான் அந்த ஆவணப்படத்தைப் பார்க்காமல் திரும்பியமை எனக்கு வருத்தம் தந்தது. ஆவணப்படத்தின் இயக்குநர் திரு. பி.என்.எஸ். பாண்டியன் அவர்களிடம் என் விருப்பம் கூறி, ஆவணப்படத்தைப் பார்க்க விரும்பியதைச் சொன்னேன். திரு. பாண்டியன் அவர்கள் நேரம் ஒதுக்கி, நம் இல்லம் வந்து, ஒளிவட்டு வழங்கி மகிழ்வூட்டினார். ஆவணப்பட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் பி.என்.எஸ். பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த இனியபொழுது...


 பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா நெல்லை மாவட்டம் குறும்பலாப்பேரியில் பிறந்தவர். இளம் அகவையிலேயே தமிழார்வம் தழைக்க வாழ்ந்தவர். ஆங்கிலமொழியிலும் பெரும்புலமை பெற்றவர்கள். பன்னூலாசிரியர். பல்வேறு தமிழ்ப்பணிகளில் தம் வாழ்க்கையைக் கரைத்துக்கொண்டவர். பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் இணைந்து, தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். இயற்கை ஈடுபாடு கொண்டவர். அன்பே இவ்வுலக வாழ்க்கைக்கு முதன்மையானது என்று ஆழமாக நம்பியவர். இவர்தம் வாழ்க்கையை அரும்பாடுபட்டு, நம் பாண்டியனார் ஆவணப்படமாக்கியுள்ளார். (ஆவணப்படம் குறித்து விரிவாகப் பின்னர் எழுதுவேன்).

 ஆவணப்படம் எடுப்பதில் உள்ள சிக்கல்களையும், இடையூறுகளையும், தோல்விகளையும், பொருளிழப்புகளையும் நான் நன்கு அறிவேன். என் உள்ளங்கவர்ந்த பேராசிரியரின் வாழ்க்கையைக் கலைநேர்த்தியுடன் ஆவணப்படமாக்கிய தோழர் பாண்டியனார்க்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். நண்பர் தேனி ஜெயக்கொடியின் ஒளிப்பதிவு சிறப்பு. மூத்த தமிழறிஞரின் வரலாறு சொல்லும் ஆவணப்படத்தைத் தமிழகமெங்கும் திரையிட்டுப் பார்ப்பதே ஆவணப்பட இயக்குநர் பாண்டியனார்க்கு நாம் வழங்கும் பாராட்டாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: