நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கம்!



  தமிழறிஞர்கள் கு.சிவமணி, க.இராமசாமி, செ.வை.சண்முகம், பெஞ்சமின் இலெபோ உள்ளிட்டோர் முன்னிலையில் சோழன்குமார் அவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகத்தின் கல்வெட்டைத் திறந்துவைத்தல்.

     வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரத்தில் 2018, ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தமிழறிஞர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றம் என்பது தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலை உலக அளவில் பரப்பும் அமைப்பாகும். இந்த அமைப்பின் கிளை கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மிகச் சிறப்பாக இயங்குகின்றது.

     அரியலூர் மாவட்டம், குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெற்ற தொடக்க விழாவில்  திருவாளர்கள் சுகுமார், அருண் குழுவினரின் நாகசுர இன்னிசை  முழங்க, உலகத் தொல்காப்பிய மன்ற நிகழ்ச்சிகள் தொடங்கின. செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து உரையாற்றினர்.

     இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), அழைக்கப்பட்டு, தகுதியுரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து, உ.தொ. மன்றம் தோன்றிய வரலாற்றினை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

     மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களுக்குத் "தொல்காப்பிய ஆய்வறிஞர்" என்னும் விருதும், பேராசிரியர் க. இராமசாமி அவர்களுக்குச் "செம்மொழிச் செம்மல்" என்ற விருதும் வழங்கிப் பாராட்டப்பட்டது.
முனைவர் க.இராமசாமி அவர்களுக்குச் செம்மொழிச் செம்மல் என்னும் விருதளித்துப் பாராட்டும் சோழன் குமார் அவர்கள்

மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களுக்குத் தொல்காப்பிய ஆய்வறிஞர் என்னும் விருதளித்துப் பாராட்டும் ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள்

     பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

     உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகத்தின் கல்வெட்டினைத் தமிழ் ஆர்வலர் திரு. சோழன்குமார் திறந்துவைத்தார். பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், பேராசிரியர் ச. திருஞானசம்பந்தம், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்த இந்த நிகழ்ச்சிக்குத் தியாக. மோகன், கி. முல்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு. இளவரசன், ஸ்ரீ. ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், கருப்பையன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

     தூ. சடகோபன், பாவலர் கலியபெருமாள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, திருவாட்டி இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்
புலவர் கு.கணேசமூர்த்தி அவர்களைச் சிறப்பிக்கும் பேராசிரியர் இ. சூசை

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம் பார்க்க இங்கே செல்லவும்.


1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களின் ஒவ்வொரு முன்னெடுப்பும் அருமை. மனமார்ந்த வாழ்த்துகள்.