நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 அக்டோபர், 2025

பேராசிரியர் பழநி. அரங்கசாமி

 

முனைவர் பழநி.  அரங்கசாமி 

[பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தமிழ், ஆங்கிலம் என இருமொழிப் புலமையாளர். தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தமிழ் வித்துவான் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைழக்கழத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும். மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிப் புகழ்பெற்றவர். சங்க இலக்கியங்களையும் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளையும் ஆங்கில நூல்களின் வழியாக அறிமுகம் செய்வதை ஆர்வமாகச் செய்துவருபவர். தஞ்சையில் வாழ்ந்துவருகின்றார்.] 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி தஞ்சாவூரை அடுத்துள்ள விண்ணமங்கலம் என்னும் ஊரில் 05.06.1936 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பழநிவேலு, ரெங்கம் அம்மாள் என்பனவாகும். தாம் பிறந்த ஊரான விண்ணமங்கலத்தில் தொடக்கக் கல்வியையும் தம் ஊருக்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் அமைந்த சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் முதல் படிவம் முதல் பள்ளி இறுதி வகுப்பு வரையும் பயின்றவர்(1952). 1953 முதல் 1957 வரை நான்கு ஆண்டுகள் தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் பயின்றவர் இவர் பயின்ற முதல் மூன்று ஆண்டுகளும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர். காரைக்குடி அழகப்பா செட்டியாரும். டாக்டர் கசபதி அவர்களும் கல்லூரி ஆண்டு விழாவில் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டினர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் பி.ஓ.எல் என்னும் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1957 முதல் 1959 வரை பயின்று, பெற்றவர். 1959 முதல் 1961 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது சி. பி. இராமசாமி ஐயர் கட்டுரைப் பரிசு, சிலப்பதிகார இசைத்தமிழ்க் கட்டுரைப் பரிசு, அண்ணாமலை செட்டியார் தமிழ்ப் பரிசு, இராணி சீதை ஆச்சி தமிழ்ப் பரிசு ஆகியவற்றைப் பெற்ற பெருமைக்குரியவர். பழநி. அரங்கசாமியார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்(1985). 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் 25. 06. 1961 இல் இந்திரா அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் கோவையில் புகழுடன் விளங்கும் பூ. சா. கோ, கலை அறிவியல் கல்லூரியிலும், பழநி கலைக்கல்லூரியிலும் ஆங்கில விரிவுரையாளராக 1961 முதல் 1968 வரை பணியாற்றியவர். 1968 முதல் 1972 வரை உசிலம்பட்டி பி.எம்.டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1972 முதல் 1988 வரை பதினாறு ஆண்டுகள் ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதுபொழுது தொலைநிலைக் கல்வியின் இயக்குநராகவும் பணியாற்றியவர். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவாறே சேக்சுபியர் நாடகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெயர்களைப் பற்றிய திறனாய்வு செய்து, Critical Study of the Tamil rendition of Shakespeare என்னும் தலைப்பில் ஆய்வேட்டினை வழங்கி, முனைவர் பட்டம் பெற்றவர்.

 


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புப் பேராசிரியராக 1989 முதல் 1996 வரை – ஏழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

 பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தம் பணி ஓய்வுக்குப் பிறகு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை இயக்குநராகவும் (2009-2010), பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 2010 முதல் 2016 வரை பேராசிரியராகவும் பணியாற்றியவர். பெரியார் உயராய்வு மையத்தில் 2011 முதல் 2013 வரை இயக்குநராகப் பணியாற்றியவர். 

செர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக அயல்பணி அடிப்படையில் ஆறு மாதங்கள் பணியாற்றியவர். 

பேராசிரியர் பழநி அரங்கசாமி அவர்கள் தினமணி நாளிதழ், தினமணி ஆண்டு விழா மலர், விடுதலை, புதிய தென்றல், செந்தமிழ், Modern Rtionalist முதலிய இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார். 

முனைவர் பழநி. அரங்கசாமி அவர்கள் கேட்டார் மயங்கும் வகையில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைத் தமிழ்ச்சங்கம் முதலான கல்வி நிறுவனங்களில் பல்வேறு அறக்கட்டளைப் பொழிவுகளை வழங்கியுள்ளார். பல்வேறு பணிப்பட்டறைகளில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், மதுரைத் தமிழச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிஞர் அவை உறுப்பினராகவும் கல்விப் பணியாற்றியுள்ளார். 

குடிமைப் பணித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலும் பொது அறிவு, நடப்பு அரசியல், ஆங்கிலக் கட்டுரைத்திறன் முதலிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றி, பயிற்சியளித்துள்ளார். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் செர்மனி,  மலேசியா, மொரீசியசு, இலங்கை, நேபாளம், பிரான்சு, இத்தாலி, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்த பட்டறிவுடையவர். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 1984 முதல் 1988 வரை ஆங்கிலப் பாடங்களைக் குறித்துச் சொற்பொழிவுகளை வானொலியில் நிகழ்த்தியவர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் பெற்ற பரிசுகளும் விருதுகளும் 

1.   சங்கப் புலவர் விருது, கரந்தைத் தமிழ்ச்சங்கம்,1996

2.   பெரியார் விருது, பகுத்தறிவாளர் கழகம், 1998

3.   மொழிபெயர்ப்பு விருது, தமிழ்நாடு அரசு, 2019

4.   இலக்கியப் பேரறிஞர் விருது, செண்பகத் தமிழ்அரங்கு, 2020

5.   ஜி.யு.போப். மொழிபெயர்ப்பு விருது (SRM பல்கலைக்கழகம்),2021

6.   இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழக நூலகத்துறை வாசகர் வட்டம் 2023 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தம் பேராசிரியர் பணிக்காலத்தில் எட்டு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார். ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்கள் இருந்நூற்றுவருக்கும் மேல் இவர்தம் நெறிகாட்டலில் ஆய்வு செய்துள்ளனர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். 

தமிழ் நூல்கள் 

1.   செய்தி உலகம், 1971

2.   அன்னை தெரசா, 1976

3.   குருநானக், சாகித்ய அகாதெமி,1978

4.   கேரள வர்மா, சாகித்ய அகாதெமி,1980

5.   வேற்றுமையில் ஒற்றுமை, 1981

6.   ஆத்திசூடி(பாரதிதாசன்)- பெயர்ப்பும் விளக்கமும், 1982

7.   இந்து மதம் பற்றி காந்தியார், 1983

8.   மதுசாலா ஹர்வன்ஷராய் பச்சன், 1984

9.   இலக்கிய மலர்கள்,1985

10. தமிழ் நாடக வளர்ச்சி, 1988

11. தமிழ்ப் பேரகராதி தொகுதி 3, 1996

12. அறிவியல் நூல்கள் ஐந்து(மொழிபெயர்ப்பு) ஆக்சுபோர்டு,1997

13. மதுசாலா ஹர்வன்ஷராய் பச்சன் கவிதைப் பெயர்ப்பு,1998

14. தமிழுக்கு வந்த ஷேக்ஸ்பியர் – இலக்கியத் திறனாய்வு, 2002

15. கீத கோவிந்தம் (தமிழ்க் கவிதை), 2009

16. கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள், 2009

17. கலைஞர் தந்த செம்மொழி (கட்டுரை), 2010

18. இலக்கியமும் அரசியலும் – கட்டுரை 2013

19. வண்ணக் கலவை – கட்டுரை,2013

20. அதிகாலை அய்ந்துமணிப் புரட்சி, 2023

21. தமிழில் தனிப்பாடல்கள்

22. பள்ளுப் பாடல்கள்- திறனாய்வு

23. கீதையின் மறுபக்கம்(சுருக்கம்), 2003

24. ஜெனரல் கரியப்பா, 2025 

ஆங்கில நூல்கள்

25.  Selected Poems of Wordsworth, 1973

26. Utopia(Ed), 1974

27. Bharatidasan – A critical perspective (Ed), 1991

28. Life and works of Bharatidasan, 1995

29. Shakespeare in Tamil version -  Literary criticism, 1998

30. Cankat – Tamil (Translation), 1999

31. Bhagavat Gita – Critical Study (Translation), 2000

32. English for Seniors, 2003

33. Professional Ethics, 2004

34. Improve your English, 2005

35. Tamil Civilization, Special Supplement, 2010

36. Women’ Role in Indian Press – Ed, 2012

37. Ainguru nooru – In English, 2013

38. History of Sararsvathi Mahal, 2014

39. Ethical Treatise from Ancient Tamil, 2022

40. Naladiyar,  (English Translation),2023

41. Ahananooru in English Prose

42. Tolkappiam – Eluttu Atikaram

43. Is there a God – Periyar(Translation), 1998

44. Periyarism, 2023

45. Viyarivaiyoor – Poems (English trans)

46. Vellicha Devadai – Poems (English trans)

47. Bharatidasan His Mind and Art, 2025

48. அகநானூறு – ஆங்கில உரைநடை

49. இறையனார் களவியல் 

 

புதன், 22 அக்டோபர், 2025

முதுமுனைவர் அரு. மருததுரை மறைவு!

 

பேராசிரியர் அரு. மருததுரை

(02. 04. 1951 - 21.10.2025) 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தியவருமான முதுமுனைவர் அரு. மருததுரை அவர்கள் 21.10.2025 அன்று திருச்சிராப்பள்ளியில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். பேராசிரியரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வில் இணைவதற்குப்(1993) பெருந்துணையாக இருந்தவர் நம் பேராசிரியர் அவர்கள். ஆய்வு மாணவனாக நான் இருந்தபொழுதும், சில காலம் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களுடன்  இசைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டிருந்தபொழுதும் பெருந்துணையாக இருந்தவர். இயல்பிலேயே மாணவர்களுக்கு உதவும் பண்புகொண்டவர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றும் தமிழ் இன உணர்வும்கொண்டு விளங்கிய பேராசிரியரின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

பேராசிரியர் அரு மருததுரை அவர்கள் 02. 04. 1951 இல் முசிறிக்கு அருகில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். தமிழில் முதுகலை, முனைவர், முது முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 35 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்து, இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புல முதன்மையர், சிறப்புநிலைப் பேராசிரியர் எனப் பல நிலைகளில் பணியாற்றியவர். இவரின் மேற்பார்வையில் 15 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 

தணிகைப் புராணம் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும்(1982), மூவர் தேவாரத்தில் சிவபெருமான் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முது முனைவர் பட்டமும்(1987) பெற்றவர். 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் உமையாள்புரம் செவ்வந்திலிங்கபுரம் என்னும் ஊரில்  கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி என்னும் கல்லூரியை நிறுவி, அதன் முதல்வராகவும் இயக்குநராகவும் தமிழ்ப்பணி செய்தவர். 

பேராசிரியர் அரு. மருததுரை அவர்கள் நாட்டுப்புறவியல் ஆய்வாளராக விளங்கியதுடன் சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளில் பங்களிப்பு நல்கியவர். 

முதுமுனைவர் அரு. மருததுரை அவர்களின் தமிழ்க்கொடை 

1.   புராண இலக்கிய வரலாறு, 1998

2.   தமிழில் கொலைச்சிந்து, 1991

3.   அழகு நாச்சியம்மன் திருக்கோயில்(வரலாறும் கும்மியும்) 1992

4.   புராண இலக்கியச் சிந்தனைகள், 1992

5.   நாட்டுப்புற வழிபாட்டுக் கூத்துகள், 1993

6.   நாட்டுப்புற வாழ்வியல், 1995

7.   வளநாடு பொன்னர் சங்கர் வரலாறு, 1999

8.   மூவர் தேவாரத்தில் சிவ வடிவங்கள், 1998

9.   நாட்டுப்புற நிகழ் மரபுகள், 1998

10. பாபா சாகிப் அம்பேத்கர், சாகித்ய அகாதெமிக்காக(தமிழாக்கம்)

11. நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள், 1998

12. கலைஞர் வளர்தமிழ் 2010, பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள். 

புதினம்: 

1.   மூனுவேட்டி (2011)  

சிறுகதைகள் 

1.   மாசி மலை, 2009

2.   புருவை 2013

3.   வாகனை, 2018

4.   குருவிக் கதிர், 2019

5.   முள்ளு முருங்கை, 2021

6.   காமங்கறி, 2022 

சிறுவர் இலக்கியம் 

1.   சின்னமணிக் குயிலே,  2021

2.   நல்லதே நடக்கும், 2021

3.   தேவதை வந்தாள், 2022

4.    MOTHERLY LOVE (2023)

5.    MANCHE JARUGUTUNDHI (Telugu) (2023)

6.    BHALAA HII HOGAA (Hindi) (2023)

7.    AAGUVUDELLA OLLEYADE (Kennada) (2023)

8.   FOX FESTIVAL (English) (2023) 

திங்கள், 13 அக்டோபர், 2025

தமிழால் முடியும் : தமிழ் வளர்ச்சித்துறையின் சாதனை நிகழ்வு!

 

மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் 
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகளின் அருளாசியுரை 

தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் 07.10.2025 முதல் 09.10.2025 வரை - மூன்று நாள் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி என்னும் பொருண்மையில் தமிழால் முடியும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நான்காவது நிகழ்வு இதுவாகும். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து தெரிவுசெய்யப்பெற்ற இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

தமிழக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டித் தேர்வுகளில் தமிழ், கணினித் தமிழ், ஊடகத்தமிழ் என்னும் முப்பெரும் பிரிவுகளில் தலைசிறந்த அறிஞர்கள் இருபத்து நான்கு பேரினை உரையாற்றச் செய்து, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்துள்ள தமிழ் வளர்ச்சித்துறையும் அதன் இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் அவர்களும் பாராட்டினுக்கும் வாழ்த்தினுக்கும் உரியவர்கள் ஆவர். அவர்தம் தலைமையில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறைகளின் இணை, துணை இயக்குநர்கள், தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளின் துறைசார்ந்த ஈடுபாடும் ஒத்துழைப்பும் பாராட்டும் வண்ணம் இருந்தன.

 

தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் 
முனைவர் ஔவை. ந. அருள் அவர்களின் நோக்கவுரை

07.10.2025 காலை ஒன்பது மணியளவில் தொடங்கிய நிகழ்வில் மயிலம் சிறீமத் சிவாஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். சிவத்திரு. இராஜீவ்குமார் இராசேந்திரன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். மயிலம் பொம்மபுர ஆதீனம், இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையுரையாற்றி, இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை மக்களும் மாணவர்களும் பயன்படுத்திக்கொண்டு, உலகத்துக்கு ஈடுகொடுத்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்தி, ஆசி நல்கினார்கள்.

 

பங்கேற்ற மாணவர்களும் விருந்தினர்களும்

தமிழ் வளர்ச்சித்துறையின் மாண்புசால் இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அரியதோர் நோக்கவுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறையின் பல்வேறு பணிகளை அவைக்கு நினைவூட்டிய இயக்குர் முனைவர் ந. அருள் அவர்கள், தலைசிறந்த தமிழ் வல்லுநர்களை இந்த நிகழ்வில் உரையாற்றுவற்கு அழைத்துள்ள பாங்கினை அழகுதமிழில் எடுத்துரைத்தார். மாணவர்கள் இந்த நிகழ்வினை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுதல் வேண்டும் என்ற வாழ்த்துரையோடு தம் உரையை நிறைவுசெய்தார். 

முதல் உரையாளராகப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியைச் சார்ந்த திருவாட்டி வேதவள்ளி செகதீசன் அவர்கள் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் என்ற தலைப்பில் அரியதோர் தன்னம்பிக்கை உரையாற்றி, மாணவர்களின் உள்ளத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தினார். 

பேராசிரியர் ஞான. செல்வகணபதி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா குறித்து உரையாற்றினார். முனைவர் சே. கரும்பாயிரம் அவர்கள் போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் தமிழ் அறநூல்கள் குறித்து அரியதோர் உரையாற்றினார். தமிழும் ஊடகமும் என்ற தலைப்பில் நியூசு 7 தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் மோகன்ராசு பழனி அவர்கள் மாணவர்களின் உள்ளங்கொள்ளும் வகையில் சிறப்பாக உரை வழங்கினார். பேராசிரியர் துரை. மணிகண்டன் அவர்கள் தமிழ் எழுத்துருக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழுப்புரம் பேராசிரியர் கோ. குணசேகர் அவர்கள் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியப் பரப்பை மாணவர்களுக்கு நன்கு அறிமுகம் செய்தார். முனைவர் உ. சிவசுப்பிரமணியன் அவர்கள் ஊடகங்களில் தமிழ் என்னும் தலைப்பில் ஊடகங்களின் முக்கியத்துவத்தை அவைக்கு நினைவூட்டினார். 

முனைவர் மு.இளங்கோவன் கணினித் தமிழ் என்ற தலைப்பில் உலகில் தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படும் தமிழ் நூலகங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

பங்கேற்புச் சான்றிதழ் பெறும் முனைவர் மு.இளங்கோவன் 

08.10.2025 இல் நடைபெற்ற காலை அமர்வில் பல்துறையில் இணையத்தின் பயன்பாடு என்னும் தலைப்பில் பேராசிரியர் உரு. அசோகன் அவர்கள் உரையாற்றி, மாணவர்களுக்குப் பயனுடைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். திருவாளர் இனிய கண்ணன் அவர்கள் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் குறித்து உரையாற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி. செந்தில்வேல் அவர்கள் திரை ஊடகங்கள் குறித்து உரையாற்றினார். பேராசிரியர் சு. சதாசிவம் அவர்கள் தமிழ்ச்செயலிகள் குறித்த உரையை வழங்கினார். பேராசிரியர் ப. தாமரைக்கண்ணன் அவர்கள் சங்க இலக்கியங்கள் குறித்த அரியதோர் உரையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கினார். முனைவர் இரா. வள்ளி அவர்கள் விளம்பர ஊடகம் என்னும் தலைப்பில் உரை வழங்கினார். பேராசிரியர் ஆ. மணி அவர்கள் இணையத்தில் தமிழ் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

09.10.2025 இல் நடைபெற்ற காலை அமர்வில் திருவாளர் சு. இராமகிருட்டினன் அவர்கள் இக்கால இலக்கியங்கள் குறித்து அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மூத்த ஊடகவியலாளர் நீரை. மகேந்திரன் அவர்கள் தமிழ் மின் இதழ்கள் குறித்து உரை வழங்கினார். தமிழ் விசைப்பலகைகள், எழுத்துருக்கள் தொடர்பாக நீச்சல்காரன் அவர்கள் அரியதோர் உரை வழங்கினார். பேராசிரியர் சொ. ஏழுமலை அவர்கள் தமிழ் மொழி வரலாறு குறித்து உரை வழங்கினார். சமூக ஊடகங்கள் குறித்து கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மரபுத் தொடர்கள் – ஒற்றுப்பிழைகள் குறித்து முனைவர் கலை. செழியன் அவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். 

பேராசிரியர் அ. சதீஷ் அவர்கள் உலகத் தமிழர்களை இணைக்கும் உன்னத கருவியே கணினி என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். நாட்டுப்புறவியல் குறித்து செல்வி ஜெ. மீனாட்சி அவர்கள் உரை வழங்கினார். 

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து தேர்ந்தெடுத்து, அழைக்கப்பட்ட மாணவர்கள் இந்தப் பயிற்சியின் வழியாகத் தன்னம்பிக்கை பெற்றுத் தமிழால் முடியும் என்ற எண்ணத்துடன் விடைபெற்றனர். அரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்கள் யாவும் தாய்மொழியாம் தமிழில் வழங்கப்பட்டதால் மாணவர்கள் பல்துறை அறிவுபெற்றவர்களாக விடைபெற்றனர். தமிழால் முடியும் என்ற முழக்கத்துடன் நடைபெறும் தமிழ் வளர்ச்சித்துறையின் இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுதல் வேண்டும் என்பது எம் எதிர்பார்ப்பு.

புதன், 8 அக்டோபர், 2025

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி 2025-2026



 

  நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாகக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்ப்பணியாற்றி வருகின்றது. மாணவர்தம் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தெடுக்கும் வகையில் போட்டிகளை முறைப்படி நடத்தி, வெற்றிபெறுபவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்கின்றது. புலவர் தேர்வு எழுதுபவர்களுக்கு மாலைநேரக் கல்லூரியை நடத்தியது. திங்கள்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக் கருத்து விருந்து தருகின்றது. ஆண்டுதோறும் ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகின்றது. 

  நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் மாணவர்தம் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கில் கடந்த ஐம்பத்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப்போட்டியை நடத்தி வருகின்றது முதல் தகுதிபெறும் எழுத்தோவியத்தை உருவாக்கும் மாணவமணிக்கு எழுபதாயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கமும் அவர் பயிலும் கல்லூரிக்கு முப்பதாயிரம் மதிப்புடைய த. பி. சொ. அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் வழங்க உள்ளனர். 

இவ்வாண்டுக்குரிய ஆய்வுப்பொருள்: 

பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் எழுத்தோவியங்கள் 

1. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

2.  எழுத்தோவியம் அறுபது பக்கங்களுக்குக் குறையாமலும் எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் அமைதல் வேண்டும். ஆய்வு மேற்கோள், நூற்பட்டியல் இறுதியில் இடம்பெற வேண்டும்.

3. ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, உரை. இலக்கியம், இணையம் ஆகிய பல்வேறு துறைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களைக் குறித்து விரிவாக ஆராய்வது விரும்பத்தக்கது.

4.  ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான உறுதிமொழியினை அவர் பயிலும் கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்ப்பேராசிரியர்களின் கையொப்பத்துடன் அனுப்புதல் வேண்டும்.

5.   ஆராய்ச்சிக்கட்டுரை வந்து சேர்வதற்குரிய இறுதி நாள்: 31.12.2025 

கட்டுரையை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: 

முனைவர் பால் வளன் அரசு,

தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம்,

3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை

திருநெல்வேலி – 627 002

கைபேசி: 7598399967 

முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள்: 

1.            மாணவராற்றுப்படை (1990)

2.            பனசைக்குயில் கூவுகிறது (1991)

3.            அச்சக ஆற்றுப்படை (1992)

4.            மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994)

5.            பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு(1996)

6.            இலக்கியம் அன்றும் இன்றும் (1997)

7.            மணல்மேட்டு மழலைகள் (1997)

8.            வாய்மொழிப் பாடல்கள் (2001)

9.            பாரதிதாசன் பரம்பரை (2001)

10.          பழையன புகுதலும் (2002)

11.          அரங்கேறும் சிலம்புகள்(2002)

12.          பொன்னி பாரதிதாசன் பரம்பரை (2003)

13.          நாட்டுப்புறவியல் (2006)

14.          அயலகத் தமிழறிஞர்கள் (2009)

15.          கட்டுரைக் களஞ்சியம்(2013)

16.          செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்(2013)

17.          நாட்டுப்புறக் கலைகள் (சிங்கப்பூர், பல்கலைக்கழகப் பாடநூல்) 2018

18.          தொல்லிசையும் கல்லிசையும் (2019)

19.          இசைத்தமிழ்க் கலைஞர்கள் (2022)

20.          இணையம் கற்போம் (2023, செம்பதிப்பு)

21.          இணைய ஆற்றுப்படை (2024)

22.          தொடரும் தொல்காப்பிய மரபு(2024)

23.         தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம்

               (கோலாலம்பூர்) (2025 ) 

பதிப்பாசிரியர்

1.            விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்(1995)

2.            பொன்னி ஆசிரியவுரைகள் (2004)

3.            உலகத் தமிழ் இணைய மாநாட்டு மலர் (2014), வெளியீட்டாளர்

4.            திருக்குறள் மொழிபெயர்ப்பு (2016)

5.            தமிழச்சி காமாட்சி துரைராசு பொன்விழா மலர் (2020)

6.            மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும்கருத்தரங்க மலர்(2021) 

முனைவர் மு.இளங்கோவனின் வலைப்பதிவு:

http://muelangovan.blogspot.com/ 

முனைவர் மு.இளங்கோவனின் யுடியூப் முகவரி:

https://www.youtube.com/@Vayalvelithiraikkalam/featured 

முனைவர் மு. இளங்கோவன் மின்னஞ்சல் முகவரி: muetamil@gmail.com


திங்கள், 6 அக்டோபர், 2025

தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் மறைவு!

 

அறிஞர் நடன.காசிநாதன்
(01.11.1940 -  06.10.2025)

  தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னை இயக்குநரும் புகழ்பெற்ற கல்வெட்டியல் அறிஞரும், பன்னூலாசிரியருமாகிய நடன.காசிநாதன் அவர்கள் இன்று (06.10.2025) இல் இயற்கை எய்தினார். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள்,  நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 அறிஞர் நடன.காசிநாதன் அவர்களுடன் சற்றொப்ப முப்பது ஆண்டுகள் எனக்கு அறிமுகம் உண்டு. பலமுறை சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களின் தமிழ்ப்பணிகளைப் சற்றொப்ப பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி ஆவணப்படுத்தியுள்ளேன். அவர்தம் தமிழ்ப்பற்றும் அறிவாராய்ச்சியும் என்றும் நமக்கு அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். உலகப் புகழ்பெற்ற அறிஞருக்கு உரிய சிறப்பையும் மதிப்பையும் அவர் இறந்த பிறகாவது வழங்குவது தமிழர்களின் தலைக்கடன். தொடர்புடையவர்கள் சிந்திக்கட்டும்.


நடன.காசிநாதன் அவர்களின் புகழ்வாழ்க்கையை அறிய இங்கு அழுத்துக.