கயிலை மாமுனிவர்
தவத்திரு.
முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்
(22.03.1931 – 19.08.2025)
[தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் 21 ஆம் பட்டத்து அதிபராக விளங்கியவர். சிதம்பரத்தை அடுத்துள்ள காரைமேடு என்னும் ஊரில் தோன்றியவர். சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் கல்வி பயின்றவர்; தருமபுர ஆதீனத்தின் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பட்டம் பெற்றவர். தருமை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாகப் பல ஊர்களில் திருமடத் தொண்டுகளில் ஈடுபட்டவர். திருபனந்தாள் காசித் திருமடத்தின் இளவரசாகவும், பின்னர் அதிபராகவும் விளங்கித் தமிழ் நூல்கள் பல வெளிவரவும், சமயப்பணிகள் பல நடைபெறவும் தொண்டாற்றியவர். அறக்கட்டளைகள் பலவற்றை நிறுவி, அருளறத் தொண்டுகள் இடையறவுபடாமல் நடைபெறக் காரணமாக விளங்கியவர். தருமபுர ஆதீனகர்த்தரால் “கயிலை மாமுனிவர்” என்னும் விருது அளிக்கப்பெற்றுப் பாராட்டப்பெற்றவர்.]
கரைபுரண்ட கண்ணீர் நினைவுகள்
19.08.2025 இரவு எட்டுமணியளவில் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் தவத்திரு “கயிலை மாமுனிவர்” முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் பரிபூரணம் அடைந்தார்கள் என்ற செய்தி கிடைத்ததும் என்னைப் பெருந்துயர் சூழ்ந்தது. சற்றொப்ப நாற்பான் ஆண்டுகள் அப்பெருந்தகையரின் தமிழ்ப்பணிகளையும், சமயப் பணிகளையும் நாளும் கண்டும், கேட்டும் பெருமிதம் கொண்டிருந்த அத்தனை நினைவுகளும் நெஞ்சில் நிழலாடின.
நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபொழுது(1987-1992) மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை. பேச்சு, மனப்பாடம் என்ற தலைப்புகளில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அவர்களின் திருக்கையால் பல பரிசுகளை வாங்கியுள்ளேன். பெரும்பான்மையான பரிசுகளை முதலாண்டில் நான் வாங்கியதால் அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் விழாக்களில் பரிசு விவரங்களை மொத்தமாக அறிவிக்கச்செய்து, அனைத்துப் பரிசுகளையும் ஒரே தவணையில் எனக்குக் கொடுத்து, மகிழ்ச்சியடைவார்கள்.
நான் எழுதிய மாணவராற்றுப்படை என்ற என் முதல் நூலினை அவர்களுக்கு அந்நாளில் படையல் செய்தேன்(1990). அவர்களின் திருக்கை வழக்கமாக ஐந்நூறு உரூபாய் பரிசாக வழங்குமாறு அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்(அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கியவர்கள்தான் இற்றைத் தருமபுர ஆதீனத்தின் இருபத்தேழாம் பட்டம், முனைவர், தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்).
என் இளங்கலை, முதுகலைப் படிப்பு அங்கு முடிந்து, ஆய்வுப்படிப்புகளில் இருந்தபொழுதும், பணிக்குச்
சென்ற பிறகும் திருப்பனந்தாள் செல்லும்பொழுது
அவர்களைக் கண்டு வணங்கி வருவதை
வழக்கமாக வைத்திருந்தேன். அவர்களின் அருளாட்சிக் காலத்தில் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் அவர்கள்
ஆற்றிய பணிகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலாது. அவற்றின்
தொகை மிகுதியாக இருக்கும்.
எங்களின் அருகமைந்த ஊர்களில் நடைபெறும் திருக்குடமுழுக்கு விழாக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைப் பெற ஊர்ப் பெரியோர்கள் நேரில் கண்டு வணங்கி, விண்ணப்பிக்கும் பொழுது, அவற்றைக் கொடையாக வழங்குவதுடன், அக் குடமுழுக்கு விழாக்களைத் தலைமையேற்று நடத்துவதில் ஆர்வம் காட்டியவர்கள். சைவ சமய நூல்களைக் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பதற்கு வழிகண்டவர்கள். சமய மாநாடுகளுக்குப் பெரும்பொருள் நல்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள். காசிக்குச் செல்லும் அன்பர்கள் காசித்திருமடத்தில் தங்கி, வழிபாடு செய்வதற்கு உதவுவார்கள். யாரும் எளிதில் இவர்களை அணுகி வணங்கி மகிழலாம்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, திருவைகுண்டம்
குமரகுருபரர் கல்லூரி முதலியவற்றின் வழியாகப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதற்குத்
துணைநின்றவர். அதுபோல் திருப்பனந்தாள், திரைலோக்கி, ஆடுதுறை முதலான ஊர்களில் திருமடத்தின்
சார்பில் இயங்கும் பள்ளிகளின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு, மாணவர்களின் கல்வியறிவுக்குப்
பெரும்பங்களிப்பு நல்கிய தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் தமிழ் வாழ்வைத் தொகுத்து
எழுதுவதை என் கடமையாகக் கருதுகின்றேன்.
தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்களின் வாழ்வும் பணிகளும்
திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இருபத்தியொன்றாம் பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்த தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்குத் தென்பாலுள்ள திருக்கழிப்பாலை என்னும் பாடல்பெற்ற ஊரினை அடுத்துள்ள காரைமேடு என்னும் ஊரில் 22.03.1931 இல் (பிரமோதூத ஆண்டு, பங்குனித் திங்கள் ஒன்பதாம் நாள், ஞாயிற்றுக் கிழமை) பிறந்தவர். இவர்தம் பெற்றோர் மாணிக்கம் பிள்ளை, குஞ்சம்மாள் என்னும் பெரியோர் ஆவர். பெற்றோர்கள் இவருக்கு இளம்பருவத்தில் வைத்த பெயர் நடனசபாபதி என்பதாகும். நடனசபாபதி அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் ஞானாம்பாள், தர்மாம்பாள், நாகவல்லி, கலியமூர்த்தி, முத்தையன் என்போர் ஆவர். நடனசபாபதி அவர்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். “பரணியில் பிறந்தவர் தரணியை ஆள்வார்” என்பது மக்கள் மொழி. அந்த வாக்கிற்கு இணங்கும் வகையில் பின்னாளில் காசித்திருமடத்தின் அதிபராக விளங்கியமை இவண் சிந்தனைக்கு உரியது.
நடனசபாபதி அவர்களின் பாட்டனார் பெயர் சபாபதி என்பதாகும். இவர் கங்கைகொண்டசோழபுரம் திருக்கோவிலில் அந்நாளில் அதிகாரியாகப் பணியாற்றியவர். பின்னாளில் கோவில் பணியை இவர் விட்டுவிட்டு, காரைமேட்டில் வணிகம் செய்தனர். பாட்டனாரின் பெயரைப் பெயரனுக்குச் சூட்டுதல் தமிழர் மரபு ஆதலின், தில்லைப் பெருமானின் நினைவோடு தம் மகனுக்கு நடனசபாபதி என்று மாணிக்கம் பிள்ளை தமக்கு மூன்றாவதாகப் பிறந்த மகனுக்குப் பெயர் சூட்டினர்.
சிதம்பரத்தில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு
ஒரு கிளை மடம் உள்ளது. அந்த மடத்தினை மேற்பார்வை செய்ய, இராசமாணிக்கம் பிள்ளை என்பவர்
பணியாற்றினார். இவர் மாணிக்கம் பிள்ளையின் மைத்துனர் ஆவார். இராசமாணிக்கம் பிள்ளை காரைமேட்டுக்கு
ஒருமுறை வந்தபொழுது, சிறுவனாக இருந்த நடனசபாபதியைத் தம்முடன் சிதம்பரம் வந்து, அங்குள்ள
காசித் திருமடத்துக் கிளையில் தங்கியிருந்தவாறு படிக்கலாம் என்று அழைத்து வந்தார்.
அவ்வகையில் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் நடனசபாபதியின் படிப்புத் தொடர்ந்தது. இராசமாணிக்கம்
பிள்ளை காசித் திருமடத்துப் பணியிலிருந்து விலக நேர்ந்தபொழுது, அங்கிருந்து, நடனசபாபதி
வெளியேறி, பெற்றோர்கள் வாழ்ந்த சிதம்பரநாதன் பேட்டையிலிருந்து படிப்பைத் தொடர்ந்தார்.
அப்பொழுது இவர் 1946 ஆம் ஆண்டு, பச்சையப்பன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிப்பைத்
தொடர்ந்தார். நடனசபாபதி தம் பதினைந்தாம் வயது முதல் கந்தர் சஷ்டி கவசம் உள்ளிட்ட அருட்பனுவல்களைப்
படிக்கத் தொடங்கினார். பள்ளியிறுதி வகுப்பு வரை சிதம்பரத்தில் பயின்ற பிறகு வேலை தேடத்
தொடங்கினார்.
நடனசபாபதியின் கணியக் குறிப்பைப் பார்த்த பெற்றோர்கள் இவர் துறவியாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அறிந்து, இவருக்கு உரிய காலத்தில் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர். அம்முயற்சி யாவும் தோல்வியுற்றன.
நடனசபாபதியின் தமக்கையின் கணவர் தருமபுர ஆதீனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் வழியாகத் தருமபுர ஆதீனத்தில் பணியில் இணைந்தார். அந்நாளில் அருளாட்சிசெய்துகொண்டிருந்த கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்கள் கடைக்கண்ணருளால் நடனசபாபதி எழுத்தராகவும். பின்னாளில் வேறு பணிகளிலும் பணியமர்த்தப்பட்டார். இவர் எழுத்தர் பணியேற்பதற்கு முன்பாக அவ்விருக்கையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அப்பணியைச் செய்துவந்தார்கள்.
நடனசபாபதி அவர்களுக்குத் துறவுநெறியில் நாட்டம் இருப்பதை உணர்ந்த தருமை ஆதீனம் இருபத்தைந்தாம் பட்டம் அவர்கள் இவர்களுக்கு 1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் முத்துக்குமாரசாமி என்னும் திருப்பெயர் சூட்டி, துறவியராகத் தம் திருமடத்தில் இருந்து சமயப்பணி செய்ய அனுமதியளித்தார்கள். 15.11.1953 இல் குருநாதர் இவருக்குச் சமயதீட்சை நல்கினார்கள். 23.11.1953 இல் சிவபூசை எடுத்தருளினார்கள். முத்துக்குமாரசாமி அவர்களின் பக்குவநிலையை உணர்ந்த குருநாதர், இவருக்குப் படிநிலைத் துறவுகளை விளக்கியருளினார்கள்.
திருக்கொருக்கை, மயிலாடுதுறை குமரக்கட்டளை, திருக்கடவூர், சீர்காழி, திருப்பனந்தாள் ஆகிய தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கோவில்களில் கட்டளை விசாரணையாக முத்துக்குமாரசாமி அவர்கள் நியமிக்கப்பெற்று, சமயப்பணியாற்றினார்கள்.
தருமபுர ஆதீனம் கல்லூரியில் நடனசபாபதி அவர்கள் இணைந்து 1955 முதல் 1959 ஆம் ஆண்டு வரை பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் பட்டம் பெற்றவர்.
திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபராக விளங்கிய அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, காசித் திருமடத்தின் இளவரசாக 1960 ஆம் ஆண்டு, முத்துக்குமாரசாமித் தம்பிரான் பட்டம் சூட்டப்பெற்றார். இளவரசு பட்டம் சூட்டப்பெற்ற முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் பல்வேறு பணிகளிலும் கவனம் செலுத்தித், திருமட வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் பெரிதும் பாடுபட்டார். அவ்வகையில் காசித்திருமடத்தின் ஆன்மீகப்பணிகள், மொழி வளர்ச்சிப் பணிகள், சாத்திர, தோத்திர வளர்ச்சிப் பணிகள், பரப்புரைப் பணிகள் என அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்துவந்தார்கள்.
திருப்பனந்தாளில் இயங்கிய செந்தமிழ்க் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்று, நூல் நிலையம், கல்விநிலைய வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டினார். திருப்பனந்தாள் குமரகுருபர சுவாமிகள் நடுநிலைப்பள்ளி, திரைலோக்கி குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, திருவைகுண்டத்தில் அமைந்துள்ள குமரகுருபரர் கல்லூரியின் வளர்ச்சிகளுக்குத் தொண்டாற்றினார். திருவைகுண்டத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த குமரகுருபரன் இதழ் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.
முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் காசித் திருமடத்தின் இளவரசாகப் பணியேற்ற பிறகு திருக்குறள் உரைக்கொத்து (அறம், பொருள், இன்பம்), பல பதிப்புகளாக வெளிவந்தது. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் முதலிய நூல்கள் மூலமாகவும் உரைநடையாகவும் வெளிவந்தன. பன்னிரு திருமுறைகளும் தொடர்ந்து வெளிவந்தன. இவற்றின் பதிப்பாசிரியராக இருந்து சுவாமிகள் செய்த தமிழ்ப்பணிகள் கணக்கற்றவையாகும். பதிப்புப் பணிகளும் அச்சுப்பணிகளும் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, திருப்பனந்தாள் காசித்திருமடத்தில் அச்சகம் நிறுவப்பெற்றது. சற்றொப்ப பதினொரு ஆண்டுகள் காசித்திருமடத்தின் இளவராசக இவர்கள் பணியாற்றியுள்ளார்கள்.
1972 ஆம் ஆண்டு, மே மாதம் 16 ஆம் நாள் இருபதாம் பட்டம் தவத்திரு அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் காசியில் பரிபூரணம் அடைந்த சூழலில் திருப்பனந்தாள் காசித்திருமடத்திற்கும், காசி குமாரசாமி மடம் உள்ளிட்ட ஆறு திருமடங்களுக்கும் அதிபராகத் தவத்திரு காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் என்னும் திருப்பெயர் தாங்கி, அதிபரானார்கள்.
கயிலை
மாமுனிவர் பட்டம்பெறுதல்
தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் 15.07.1982 அன்று கயிலை சென்று, வழிபாடு செய்தார்கள். பரணி விண்மீனில் பிறந்த இவர்கள் அதே பரணி விண்மீன் நாளில் கயிலையை வழிபடும் பேறு பெற்றார்கள். அதனால் தருமை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் அவர்கள் 16.08.1982 இல் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்குக் கயிலை மாமுனிவர் என்னும் விருது அளித்துப் பாராட்டினார்கள்.
திருவைகுண்டத்தில் குமரகுருபரர் என்னும் பெயரில் 1950 இல் தொடங்கப்பெற்ற திங்களிதழ் 1977 முடிய 27 ஆண்டுகள் வெளிவந்து, இடையில் நின்றது. இதழ்களின் வழியாகச் சமயப்பணியாற்றுதல் வேண்டும் என்ற நோக்கில் 18.10.1978 முதல் குமரகுருபரர் என்ற சமய இலக்கியத் திங்கள் இதழைத் திருப்பனந்தாள் காசித் திருமடத்திலிருந்து இவர்கள் வெளியிட்டார்கள். இந்த இதழின் 150 ஆம் இதழாகக் கயிலை மாமுனிவர் மணிவிழாச் சிறப்பு இதழ் வெளிவந்தது. ஒவ்வொரு இதழிலும் அரிய ஆன்மீகக் கருத்துகளையும், சித்தாந்த மெய்ப்பொருளையும் தொடர்ந்து எழுதிவந்தார்கள்.
கல்விப் பணிகள்
தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த பெருந்தகை ஆவார். திருப்பனந்தாளில் இயங்கிய செந்தமிழ்க் கல்லூரியை இவர்கள் காலத்தில் கலைக்கல்லூரியாக மாற்றினார்கள். மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக வளர்த்தெடுத்தார்கள். புதியதாகப் பதின்நிலைப் பள்ளியொன்றையும் (மெட்ரிகுலேஷன் பள்ளி), ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் தோற்றுவித்தார்கள். இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து, வெளிவருகின்றனர்.
குமரகுருபரர் முந்நூறாம் ஆண்டு நிறைவு விழா
திருவைகுண்டத்தில் பிறந்த தவத்திரு குமரகுருபர சுவாமிகள் 1688 இல் முக்தி பெற்றவர்கள். அதனை நினைவுகூரும் வகையில் 1988 இல் குமரகுருபரர் முந்நூறாம் ஆண்டு நிறைவு விழாவைத் திருப்பனந்தாளில் மிகச் சிறப்பாக நடத்தினார்கள். 04. 06. 1988 முதல் 1989 மே மாதம் வரை ஓராண்டுக் காலம் இந்தியா முழுவதும் 47 இடங்களில் இப்பெருவிழா கொண்டாடப்பட்டது.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் பொன்விழா
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரித் தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ்க் கல்லூரியாக 1945 முதல் செயல்பட்டு, பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் கற்று, ஆசிரியர் பெருமக்களாகவும், பேராசிரியர்களாகவும், ஆய்வறிஞர்களாகவும் தமிழ்ப்பணியாற்ற வாய்ப்பு நல்கிய கல்லூரியாகும். இக்கல்லூரியின் பொன்விழா, தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் அருளாட்சிக் காலத்தில் 1996 இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தவத்திரு
முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் மணிவிழா
தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் மணிவிழா திருப்பனந்தாளில் 18.03.1991 முதல் 20.03.1991 வரை மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கயிலை மாமுனிவர் மணிவிழாவின்பொழுது பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சைவ சித்தாந்த சாத்திர நூல்களும், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்களும், திருக்குறள் உரைக்கொத்துகள் யாவும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்குமாறு அச்சிட்டு அன்பர்களுக்கு வழங்கப்பட்டன.
அறக்கட்டளைகள்
திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர்களாக விளங்கிய சைவப் பெரியோர்கள் தமிழுக்கும், சைவத்துக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்கள் தொண்டுக்கும் பல்வேறு அறக்கட்டளைகளை நிறுவியுள்ளனர். அவ்வகையில் இருபதாம் பட்டத்தில் வீற்றிருந்த அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் நிறுவிய அறக்கட்டளைகளின் எண்ணிக்கை 533 எனவும் (இதன் மதிப்பு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1. 8 கோடி உருவா), அதன் பின்னர் 21 ஆம் பட்டத்தில் வீற்றிருந்த தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் வளர்த்தெடுத்த அறக்கட்டளைகளின் எண்ணிக்கை 810 என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. தம் காலத்திற்குப் பிறகும் நல்ல அறப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் அறக்கட்டளைகளை அமைத்த இவர்களைப் போற்றுதல் வேண்டும்.
தலயாத்திரை
பாடல்பெற்ற சிவத்தலங்கள் 274 இல் 272 தலங்களுக்குத் தலயாத்திரை செய்து வழிபட்டுள்ளார்கள். எஞ்சிய திருக்கேத்தீசுவரம், திருகோணமலை ஆகிய தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. மேலும் வைப்புத்தலங்கள், திருவாசகத் தலங்கள், திருவிசைப்பாத் தலங்கள், வைணவத் தலங்கள், முருகத் தலங்கள் பலவற்றையும் கண்டு வழிபட்ட பெருமையும் இவர்களுக்கு உண்டு.
அயல்நாட்டுப் பயணங்கள்
தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
தமிழுக்கும் சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள், தமது வயது மூப்பு காரணமாக 19. 08. 2025 இரவு எட்டு மணிக்கு முக்திப்பேறு அடைந்தார்கள்.
குறிப்பு:
தவத்திரு
கயிலை மாமுனிவர் அவர்கள் காசித் திருமடம் குறித்தும், அதன் ஆதிமுதல்வர் குமரகுருபர
சுவாமிகள் குறித்தும் எடுத்துரைக்கும் உரையைத் தாங்கள் கேட்டு
மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
செய்யுங்கள்.