நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அமைதி அறக்கட்டளை நிறுவுநர் பால் பாஸ்கர் மறைவு!

 

                                                                   பால் பாஸ்கர்

திண்டுக்கல்லில் அமைதி அறக்கட்டளையை நிறுவி, கல்விப்பணியும், சமூகப் பணியும் ஆற்றிவந்த அண்ணன் திரு. பால் பாஸ்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று(20.08.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகின்றேன். அன்னாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.

பால்பாஸ்கர் அவர்கள் அன்பும் அமைதியும் விரும்பும் தமிழ்நேயர். மாந்தநேயம் கொண்ட கல்வி ஆர்வலர். பிறருக்கு உதவுவதில் பேரீடுபாடுகொண்டவர். அண்மையில் இவருடன் தொடர்புகொண்டு, என் ஆய்வுத் தொடர்பாக சில விவரங்களை வேண்டியிருந்தேன். பெற்றுத் தருவதாகவும், திண்டுக்கல் வந்துசெல்ல வேண்டும் எனவும் அன்புடன் வேண்டினார்.

14.12.2011 இல் அவர்தம் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தி, பலநூறு மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்த பெருமை திருவாளர் பால் பாஸ்கர் அவர்களுக்கு உண்டு. என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து, பெருமைப்படுத்தினார். நண்பர் திரு. பாரதிதாசன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, என்னை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் உணர்வாளர்களின் திண்டுக்கல் முகவரியாக விளங்கிய அண்ணன் பால்பாஸ்கரின் நினைவுகளைப் போற்றுவோம்!

கருத்துகள் இல்லை: