நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 மார்ச், 2017

வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தனக்குவமை இல்லாத் தனிப்பெருநூல் வெளியீட்டு விழா!


வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் 151 ஆம் பிறந்தநாள் விழா

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அரும்பெரும் தமிழ்ப்பணிகளாற்றி நம் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்து எழுதியதனக்குவமை இல்லாத் தனிப்பெருநூல்” என்னும் நூலின் வெளியீட்டு விழாவும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 21.03.2017 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

மாட்சிமை தங்கிய முகவை மன்னர் திருமிகு நா. குமரன் சேதுபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் வழக்குரைஞர் ச. மாரியப்ப முரளி அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைச்  செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர் சு. விசயன் அவர்கள் வரவேற்றார்.

வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு முகவை மன்னர் நா. குமரன் சேதுபதி அவர்களும், அரசியார் ந. இலக்குமி நாச்சியார் அவர்களும் தமிழறிஞர்களும் மலர்தூவி அகவணக்கம் செலுத்தினர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பதிவாளர் முனைவர் கு. வெ. பாலசுப்பிமணியன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ’தனக்குவமை இல்லாத் தனிப்பெருநூல்’ என்னும் நூலினை வெளியிட,  செந்தமிழ்க் கல்லூரியின் செயலரும் முகவை அரண்மனையின் அரசியாருமாகிய சீர்மிகு ந. இலக்குமி நாச்சியார் அவர்கள் முதற்படியினைப் பெற்றுக்கொண்டார்.
முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்ட 
’தனக்குவலை இல்லாத் தனிப்பெரு நூலை’ 
முகவை அரண்மனையின் அரசியார் 
ந. இலக்குமி நாச்சியார் பெற்றுக்கொள்ளும் காட்சி. அருகில் அரசர் 
நா. குமரன் சேதுபதி, நூலாசிரியர் முனைவர் இரா. இளங்குமரனார், 
வழக்குரைஞர் ச. மாரியப்ப முரளி

தொல்காப்பியத்தின் பெருமையுரைக்கும் ’தனக்குவமை இல்லாத் தனிப்பெரு நூலின்’ ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் ஏற்புரையாற்றினார். முனைவர் கி. வேணுகா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

மதுரைப் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் திரளாகக்  கலந்துகொண்டனர்.

*விழாவில் அறிஞர்கள் ஆற்றிய சிறப்புரையைக் காண இங்குச் சொடுக்குக.

கருத்துகள் இல்லை: