நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் ந. அருணபாரதி அவர்கள்


முனைவர் ந. அருணபாரதி அவர்கள்

பெரும்புலமையும் ஆய்வுநுட்பங்களும் கடும் உழைப்பும் கொண்ட தமிழறிஞர்களின் எண்ணிக்கை தமிழகப் பல்கலைக்கழகங்களில் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிஞர் பெருமக்கள் ஆற்றாமைகொண்டு அடிக்கடி உரைக்கக் கேட்டுள்ளேன். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இருந்த தமிழ்த்துறைகளும் மூடுவிழா கண்டு வருகின்றன; அல்லது பெயருக்கு உயிர்ப்புடன் உள்ளன. தமிழகத்திற்கு வெளியில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறையின் பணிகளை ஓய்வில் அசைபோட்டபொழுது பனாராசு இந்துப் பல்கலைக்கழகம் என் நினைவுக்கு வந்தது.  நடுவண் அரசின் நிதிநல்கையில் செழிப்புற்று விளங்கும் இப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சற்றொப்ப 38 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர்  . அருணபாரதி அவர்களின் நினைவும் அவர்களின் பன்மொழிப் புலமையும் நெஞ்சில் நிழலாடின. பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிறகு சென்னையில் வாழ்ந்துவரும் அவருடன் அண்மையில் உரையாடும் வாய்ப்பினை உருவாக்கிக்கொண்டேன். அவருடன் உரையாடியதிலிருந்து பல்வேறு அறிவார்ந்த செய்திகளைத் தெரிந்துகொண்டேன்.

பேராசிரியரின் இளமைப் பருவம்

நாகை மாவட்டம் குமாரக்குடி (பூம்புகார் - தரங்கம்பாடி சாலையில் உள்ள ஊர்) என்னும் ஊரில் திருவாளர்கள் நல்லசேவு, ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புமகனாக ந. அருணபாரதி 15.06.1947 இல் பிறந்தவர். ஆக்கூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை பயின்றவர். பின்னர் ஓராண்டு புகுமுக வகுப்பினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தினையும் (1966-1969), முதுகலைத் தமிழ்ப் பட்டத்தினையும் (1969-1971) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய மொழியியல் துறையில் 1971 முதல் 73 வரை பயின்று மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கன்னடம், தெலுங்கு, சீனம் உள்ளிட்ட மொழிகளைப் பயின்று பட்டயச் சான்று பெற்றவர்.

1974 ஆம் ஆண்டு பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர்.  11 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், எட்டாண்டுகள் இணைப் பேராசிரியராகவும், 19 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

பனாராசு இந்துப் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றியபொழுது ஐரோப்பியர்கள், சிங்களர்கள், மலேசியர்கள், சப்பானியர்கள், அமெரிக்கர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் தமிழ் கற்றுள்ளனர்.

தமிழை எவ்வாறு எளிமையாகப் பிற மொழியினருக்குக் கற்பிப்பது? என்ற துறையில் மிகச்சிறந்த புலமையுடைவராக நம் பேராசிரியர் அருணபாரதி விளங்குபவர். இதுவரை மூன்று நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். பயன்பாட்டில் உள்ள 4000 மொழியியல் சொற்களுக்குத் தமிழ் விளக்கம் தரும் வகையில் இவர் உருவாக்கிய Glossary of linguistics English- Tamil, (Madras, Tamil Nulagam, 1976) என்னும் நூல் இவர்தம் உழைப்புக்குக் கட்டியம் கூறும் நூலாகும். மேலும் அடிப்படைத் தமிழ்க்கல்வி பயில்வதற்குரிய இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். இதில் தமிழ்ப்படிப்புக்கு உதவும் வகையில் 29 பாடங்களைக் கொண்ட தமிழ் ரீடர் என்னும் நூல் பிறமொழி மாணவர்கள் தமிழைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் எழுப்பட்ட நூலாகும்.

பேராசிரியர் ந. அருணபாரதி அவர்கள் 11 ஆண்டுகள் துறைத்தலைவராக, இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, நேபாளி உள்ளிட்ட பிறமொழியினருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் இவருக்கு அமைந்தது.

பேராசிரியர் ந. அருணபாரதி அவர்கள் தம் பணிக்காலத்தில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, மத்தியத் தேர்வாணையம், பல்கலைக்கழகங்களின் நேர்முகத்தேர்வுகளுக்கு வல்லுநராகப் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கு ஆளுநரின் முன்மொழிவாளராக இருந்து நேர்காணல்களை நேர்மையுடன் நடத்தியவர். தமிழகத்திலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் இவருக்கு வந்த அறுநூற்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிட்டுள்ளார்.


தமிழ் உரைநடையும், தெலுங்கு உரைநடையும் என்ற பொருளில் (Comparative study of development of Prose in Tamil and Telugu) . அருணபாரதி அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்து, அரிய செய்திகள் பலவற்றைத் தம் ஆய்வேட்டில் வெளிக்கொணர்ந்தார். பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய தெலுங்குப் பேராசிரியர் சூரியநாராயணா அவர்களின் மேற்பார்வையில் இவரின் முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. 

ந. அருணபாரதி அவர்களின் ஆய்வேடு அரிய செய்திகள் பலவற்றைத் தரும் தரத்தையுடையது. வீரமாமுனிவர் சரித்திரம் என்ற அரிய நூல் பற்றிய குறிப்பு இவர் ஆய்வேட்டில் உள்ளது. தமிழில் முதல் பாடப் புத்தகம் மாற்றுமொழியினருக்கு Madras Engineering college papers என்ற பெயரில் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம், ஜொக்கியம் ஆகிய மொழிகளில் அமைந்த அகராதி பயன்பாட்டில் இருந்துள்ளது என்ற குறிப்பையும் தம் ஆய்வேட்டில் பதிந்துள்ளார்.

காசி யாத்திரை சரித்திரம்என்ற தெலுங்கு நூலின் செய்தியையும் சுவைபட நம் பேராசிரியர் தம் ஆய்வேட்டில் பதிந்துள்ளார்.

ஆய்வு நெறியாளர்கள் பெரும்பான்மையர் குறிப்பிட்ட சில துறைசார்ந்த செய்திகளை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும்படி குறிப்பிடுவார்கள். நம் பேராசிரியர் ந. அருணபாரதி அவர்களோ தமிழ் - சமற்கிருதம், தமிழ் - தெலுங்கு, தமிழ் - கன்னடம், தமிழ்நேபாளி போன்ற இருமொழி ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு முதன்மை தந்து  8 ஆய்வாளர்களுக்கு நெறியாளராக விளங்கியுள்ளார்.

இந்தியக் குடியரசுத்தலைவரின் பெயரில் அமையும் நல்லாசிரியர் விருது இவருக்கு 2012 ஆம் ஆண்டு பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆய்வேடுகள், ஆங்கில ஆய்வேடுகள், ஆங்கிலத்தில் எழுப்படும் பிறமொழி ஆய்வேடுகளை மதிப்பிட்டுத் திறம் காட்டும் அரும்புலமை பெற்ற பேராசிரியர் ந. அருணபாரதி போன்ற அறிஞர்களின் வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

பேராசிரியர் ந. அருணபாரதி அவர்களுக்கு நம் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் வாழ்த்துகள் உரியவாகட்டும்.



1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஐயாவைப் பற்றி நான் இதுவரை அறிந்ததில்லை. தங்களின் மூலமாக அறிந்தேன். நன்றி.