நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 30 டிசம்பர், 2015

தமிழண்ணலுக்குக் கையறுநிலைப்பா!


 தமிழண்ணல்
தமிழைத் தேக்கிய நெஞ்சமுடன்
தரணி எங்கும் சுழன்றபடி
கமழக் கமழ உரையாற்றி,
கன்னித் தமிழைப் போற்றியவன்!
கமழக் கமழ உரையாற்றி,
கன்னித் தமிழைப் போற்றியவன்
இமைகள் மூடிய கொடுஞ்செய்தி
என்றன் நெஞ்சைத் தாக்கியதே!

நிமையப் பொழுதும் தவறாது
நிலைத்த பணிகள் செய்தவனாம்!
தமிழின் அண்ணல் எனும்பெயரோ
தமக்குப் பொருந்த வாழ்ந்தவனாம்!
தமிழின் அண்ணல் எனும்பெயரோ
தமக்குப் பொருந்த வாழ்ந்தமகன்,
குமைந்து மக்கள் அரற்றும்படி,
கூடல் நகரில் மாய்ந்தனனே!

ஆய்வில் நுழைந்து தமிழுக்கு,
அணிஅணி யாக நூல்தந்து,
ஓய்வோ இன்றி உழைத்த மகன்
உலகம் போற்றத் துயில்கொண்டான்!
ஓய்வோ இன்றி உழைத்தமகன்
உடலம் சுருங்கித், தளர்வுற்றுச்,
சாய்ந்த செய்தி தமிழர்களைச்,
சாய்த்த தென்றே நானுரைப்பேன்!

பள்ளிக் கல்வி தமிழாக,
பாடு கிடந்த புலவோர்க்கு,
உள்ளம் இசைந்து தலைமையேற்ற
ஒப்புயர் வில்லா மறவன்இவன்!
உள்ளம் இசைந்து தலைமையேற்ற
ஒப்புயர் வில்லா மறவன்இன்று
வள்ளல் போல உயிர்துறந்து
வையம் நீங்கிச் சென்றனனே!

கோவில் தோறும் குடமுழுக்குக்
குமரித் தமிழில் நடத்திடவே,
ஆவல் கொண்ட பெரும்படைக்கே,
அரசன் போல ஆணையிட்டான்!
ஆவல் கொண்ட பெரும்படையின்
அணியின் செயலை நேர்கண்ட,
காவல் வீரன் நிகர்த்தமகன்
கண்கள் துயின்றான்! கவலுகின்றோம்!

புதுமை, பழைமை எனும்பெயரில்
புரட்சி நடந்த ஆய்வுலகில்,
மதிமை சான்ற தமிழண்ணல்
மலர்ந்த கண்ணாய் இரண்டனையும்
பொதிய மலையின் அகத்தியனாய்ப்
போற்றித் தழுவிப் புகழ்புரிந்தான்.
அதனால் இரண்டு குழுவுக்கும்
அவனே இணைப்புப் பாலம்அம்மா!

கற்றோர் அவையை அணிசெய்த
கழகப் புலவன் ஒத்தமகன்!
வற்றிய உடலம் கொண்டாலும்
வரிப்புலி போன்றே தமிழ்காத்தான்!
வற்றிய உடலின் வரிப்புலியோ
வாழ்ந்து முடிந்து சென்றாலும்
பற்றிய தீயாய் அவன்உணர்வு
படர்ந்து தமிழகம் நிலவும்அம்மா!

சிற்றூர் தன்னில் பிறந்தாலும்
செயலால் உலகோர் உறவானான்!
கற்ற மக்கள் உள்ளமெலாம்
கல்லின் எழுத்தாய் நிலைபெற்றான்!
கற்ற மக்கள் உள்ளமெலாம்
கல்லின் எழுத்தாய் நிலைத்தவனின்
பற்றில் திளைத்தோம்; பதறுகின்றோம்!
போய்வா அண்ணலே, காத்திருப்போம்!


கருத்துகள் இல்லை: