நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வள்ளிநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வள்ளிநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 மார்ச், 2009

கோட்டோவியத்தில் யான்...


டேனியல் வரைந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்னர்க் கேராளாவின் கோழிக்கோட்டில் உள்ள குருவாயூரப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாட்டுப்புறவியில் சார்ந்த கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் வந்து நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் படித்தனர்.

தமிழகத்திலிருந்து சென்றவர்களுள் யானும் ஒருவன்.ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்.தமிழில் படிக்கப்பெற்ற என் கட்டுரை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவைக்கு வழங்கப்பட்டது.சப்பானிலிருந்து வந்த மிக்கி டனாக்கா உள்ளிட்ட ஆய்வாளர்கள் என் கட்டுரையைப் பாராட்டி மகிழ்ந்தனர்.(இவர் பின்னாளில் எனக்கு ஒரு மின்னஞ்சல் விடுத்து நன்றி தெரிவித்த மடலும்,படமும் என்னிடம் உண்டு).

நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை யான் பாடிக்காட்டியதால் என் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.
கேரளாவில் இருந்து வந்திருந்த பல கல்லூரி மாணவர்கள் என்னைத் தனியே பாடச் சொல்லி நாடாப்பதிவில் பதிந்துகொண்டனர்.யானும் கேரள நாட்டுப்புறப் பாடல்களைப் பதிந்து கொண்டேன்.

அவ்வகையில் அரிதாசு என்னும் மாணவர் மிகச்சிறப்பாகப் பாடினார். வட்டக்களி, சவுட்டுக்களி,மீன்பாட்டு,எனப் பல பாடல்களைப் பாடிக்காட்டினார்.யாவும் யான் பதிந்து
வைத்துள்ளேன்.களரிப் பயிற்றுப் பாடல்களைப் பதிவு செய்ய ஆர்வம் காட்டி நாடாப்பதிவுக் கருவியை அந்த விளையாட்டு நடந்த நடு இடத்தில் வைத்திருந்தேன்.மிகச்சிறந்த இசையொழுங்குடைய பாடல்கள் பாடப்பட்டன.முக்கால் மணி நேரம் ஓடக்கூடியது நாடா.
முக்கால் மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் எந்தப்பாடலும் பதிவாகவில்லை.காரணம் மின்கலத்தில் மின்சாரம் இல்லை என்பது அப்பொழுதான் தெரிந்தது.

மின்சாரம் ஏற்றும் பேட்டரியை இனி ஆய்வுக்களத்துக்கு எடுத்துச்செல்லக்கூடாது என அன்று முதல் முடிவு செய்தேன்.

இந்தக் கருத்தரங்கம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத கருத்தரங்கம். கருதரங்கிற்குத் திருச்சி வழியாகத் தொடர் வண்டியில் சென்றதாக நினைவு.தெப்பக்குளத்தில் இறங்கி அங்காடியில் ஒரு சோனி நிறுவன நாடாப்பெட்டி ஆயிரத்து இருநூறுக்கு அப்பொழுது வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.அப்பெட்டி பல வகையில் இன்றுவரை உதவுகிறது.

கருத்தரங்கிற்கு வந்த டேனியல் என்ற மாணவர் என்னை ஒரு கோட்டோவியத்தில் என் கண்முன்னே ஐந்து நிமிடத்திற்குள் வரைந்து தந்தார்.பாதுகாத்து வந்த அந்தப்படம் நினைவுக்காக என் பக்கத்தில் பதிந்து வைக்கிறேன்.

கருத்தரங்கு முடிந்து தொடர்வண்டி நிலையம் வரை அந்த மாணவரும் அவர் நண்பரும் வந்து வழியனுப்பினர்.தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் மகிழ்ச்சியுடன் வந்தேன். தொடர் வண்டி நிலையத்தில் பார்க்கும்பொழுது என் பெயர் பயணிகள் பட்டியலில் இல்லை. காரணம் வினவியபொழுது மங்களூர் விரைவு வண்டிக்குப் பதிவு செய்திருந்தேன். அந்த வண்டிப் புறப்படும் இடத்தில் இரவு பத்து மணியளவில் புறப்படுகிறது.அந்த வண்டி நான் ஏறும் கோழிக்கோடு வரும்பொழுது நடு இரவு 12.30 மணியளவில் வருகிறது.எனவே மறுநாள் கணக்கில் நான் பதிந்திருக்கவேண்டும்.(இரவு பன்னிரண்டு மணிக்குமேல் மறுநாள்தானே)எனக்கு இந்த நுட்பம் தெரியாததால் நான் செல்லவேண்டிய வண்டி நேற்றே அதாவது முதல்நாள் நடு இரவு 12.30 மணியளவில் கடந்துவிட்டது.

எனவே எனக்குப் புதிய பயணச்சீட்டு வாங்கவேண்டியதாயிற்று. நல்ல வேலை என்னிடம் பணம் இருந்தது.முன்பு பதிந்த சீட்டைக் கொடுத்தால் மறுநாள் சிறுதொகை தருவார்கள் என்றனர்.அந்த மாணவர்களிடம் அந்தச் சீட்டைக் கொடுத்து மறுநாள் கிடைக்கும்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறிப் பல தொல்லைகளுக்கு இடையே மீண்டேன். கோவை, சேலம்,வழியே காட்டுப்பாடி வந்தேன்.அங்கிருந்து நான் பணிபுரிந்த இடம் வந்து சேர்ந்தேன்.

கருத்தரங்கிற்குச் சென்று, நான் பணிபுரிந்த கல்லூரிக்கு மிகப்பெரிய புகழ் ஈட்டி வந்ததாக நினைத்தேன்.சான்றிதழ்களைக் காட்டி அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். அங்குப் பணிபுரிந்தவர்கள் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து வெளியே சிரித்துக்கொண்டார்கள். அந்த மாத இறுதியில்தான் தெரிந்தது.

கருத்தரங்கிற்குச் செல்வது அங்கு மிகப்பெரிய பாவச்செயல் என்று.இருநாள் கருத்தரங்கப் பயணத்திற்கு என்னுடைய பதினைந்து நாள் ஊதியத்தைப் பிடித்துவிட்டனர்.காரணம் பிறகுதான் புரிந்தது.

சனிக்கிழமை விளக்ககணி விழா. விளக்கணி விழாவிற்கு முதல்நாள் (வெள்ளிக்கிழமை)விடுப்பெடுத்துக்கொண்டு வியாழன் மாலை ஊருக்குப் புறப்பபட்டேன்.முடிந்ததும் மறுநாள் ஞாயிறு புறப்பட்டுத் திங்கள் கிழமை கல்லூரி வந்து விடலாம் என்பது என் திட்டம். நான் புறப்பட்ட மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை முதல் கல்லூரிக்குத் திடுமென நீண்ட விடுமுறை விடப்பட்டது.கல்லூரித் திறப்பன்று கோழிக்கோட்டில் கருத்தரங்கு.சரி.கருத்தரங்கு என்பதால் பணிமேற் சென்ற சான்று காட்டிக்கொள்ளலாம் என நினைத்தேன்.புறப்பட்டேன்.
அவர்கள் அரசாங்கத்தில் இந்த அரசாங்க விதிகள் பொருந்தாது.பாதி ஊதியத்தை இழந்து பணிபுரிய வேண்டியதாயிற்று.உழைக்கவில்லை.ஊதியம் இல்லை என மனத்தை
ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

கருத்தரங்கால் பல பட்டறிவுகளும் இந்தப் படமும்தான் எஞ்சி நின்றன.

அடுத்த படம் திருநெல்வேலியில் நடந்த தமிழ் இணையம் சார்ந்த கருத்தரங்கில்நா.கணேசன், காசி ஆறுமுகம்,சேகர் பொன்னையா,சங்கரபாண்டி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். யானும் சென்றிருந்தேன்.அங்கு வந்த ஓவியர் வள்ளிநாயகம் அவர்கள் வரைந்த கோட்டோவியம் இது.


வள்ளிநாயகம் வரைந்தது.

இரண்டு கலைஞர்களுக்கும் நன்றி.