நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 ஜூன், 2025

நெல்லையில் நடந்த தொல்காப்பியர் விழா!


30.10.1960 ஞாயிறு இரவு, நெல்லைச் சந்திப்பு இசைமன்றத்தில்(சங்கீத சபாவில்) தமிழ்நாட்டு நல்வழி நிலையம் சார்பில் பொதிகைத் தமிழ் மாணவர் மன்றம் மூன்றாம் ஆண்டு விழாவும், தொல்காப்பியர் விழாவும் நடைபெற்றுள்ளது

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் நெல்லை, வண்ணார்பேட்டை இராசானந்தம் என்ற அன்பர் முன்னின்று உழைத்துள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. நெல்லை இராசானந்தம் தமிழ்நாட்டு நல்வழி நிலையம், பொதிகைத் தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்புகளின் தலைவராக விளங்கியவர். இவர் தொல்காப்பியர் விழாவினை நெல்லைப் பகுதியில் நடத்துவதற்கு ஆர்வமுடன் உழைத்தவர். பல மாதங்களாக விழா நடத்துவதற்கு முனைந்தும் யாது காரணமாகவோ குறிப்பிட்ட நாள்களில் விழா நடத்தமுடியாமல் 30.10.1960 இல் விழா நடத்தப்பட்டுள்ளதை இரா. சண்முகம் அவர்களின் தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி நூலின் முன்னுரையால் அறியமுடிகின்றது

ஆயின், நெல்லை.இரா. சண்முகம் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் வாழ்ந்தபொழுது 1950 – களில் கோலாலம்பூரில் தொல்காப்பியர் விழா நடத்துவது குறித்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கோலாலம்பூரில் வாழ்ந்த தமிழார்வலர்கள், தமிழறிஞர்களிடம் ஆதரவு திரட்டியுள்ளார். ஆனாலும் அவர்தம் கனவு அந்த நாளில் நிறைவேறவில்லை. 30.10.1960 இல் நெல்லையில் நடைபெற்ற தொல்காப்பியர் விழாவில் நெல்லை இரா. சண்முகம் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்து உரையாற்றியுள்ளார். தம் உரையை நூலாகவும் பின்னாளில்  வெளியிட்டுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் நெல்லை இந்துக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் எஸ். கணபதி முதலியார் எம்..எல்.டி. அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றியுள்ளார் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது. இவரைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் வீரசிவம் அவர்களும் திருச்சி வீ. வீரம்மாள் அவர்களும் உரையாற்றிய குறிப்புகள் உள்ளன

இன்று நடைபெறும் தொல்காப்பியப் பரவல் முயற்சிகளுக்கு முன்னோடியாக நெல்லை, வண்ணார்பேட்டை இராசானந்தம் விளங்கியுள்ளார் என்பது தெரியவருகின்றது. கல்விப்புலங்களிலிருந்து தொல்காப்பியத்தை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு இப்பெரியார் உழைத்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது. நெல்லை வண்ணார்பேட்டை இராசானந்தம் ஐயாவைப் பற்றிய கூடுதல் விவரம் அறிந்தோர் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு: muetamil@gmail.com / +91 9442029053

வெள்ளி, 27 ஜூன், 2025

பேராசிரியர் ச. கணபதி முதலியார்

 

பேராசிரியர் . கணபதி முதலியார் 

[ச.கணபதி முதலியார் திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் வல்லவர். தொல்காப்பியத்தில் நல்ல புலமையுடையவர். The Story of the Eye – Devotee, இலக்கியச் சிந்தனை முதலிய நூல்களின் ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.] 

பேராசிரியர்  . கணபதி முதலியார் திருநெல்வேலியில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் சங்கரலிங்கம் என்பதாகும். திருநெல்வேலி சாஃப்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இளங்கலை (B.A.) வரலாற்றுப் பாடம் பயின்றவர். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி (L.T.) முடித்தவர். தனித்தேர்வராக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். 

ச. கணபதி முதலியார் சேலம் நகராட்சிப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். விழுப்புரம் அரசுப் பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு,  திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறையில் துணை விரிவுரையாளராகப் பணியை ஏற்றார். கல்லூரியில் விரிவுரையாளராகவே பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

ச. கணபதி முதலியார் அவர்களின் துணைவியார் பெயர் சீதாலெட்சுமி என்பதாகும். இவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

1. குக நமசிவாயம் 2.சங்கர நமசிவாயம், 3. மெய்கண்ட சிவம்,  4.நமசிவாய பெருமாள் 5. மீனாட்சி, 6. அகிலாண்டம்.

 இவரது மகன் திரு. குக நமசிவாயம் பாளையங்கோட்டையில் உள்ளார். இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் நூலகராகப் பணியில் சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்து ஓய்வுபெற்றவர். 

ச. கணபதி முதலியார் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவ்வகையில்,

1. நான் கலந்து பாடுங்கால்

2. சிறுகதை விளக்கம்

3. கையறுநிலைச் செய்யுள்

4. மணிமேகலை

5. இலக்கியச் சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு) 

6. The Story of the Eye - Devotee

7. அருட்பா

8. பழமொழி

முதலிய நூல்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

பேராசிரியர் ச. கணபதி முதலியார் அவர்கள் செந்தமிழ்ச் செல்வி இதழில் 17 கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை: 

1. வள்ளுவர் குறள் நடை, இதழ் 3, - 1957

2. கம்பர் காப்பிய நடை, இதழ் 5,6,7, - 1957

3. சேக்கிழார் புராண நடை, இதழ்  10,11,12,1,2,3 - 1957,1958

4. சங்ககாலச் செய்யுள் நடை, இதழ் 2, 3, 4, 5, 6, 8. - 1962 

நெல்லை வண்ணார்பேட்டையில் வாழ்ந்த இராசானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்து, 30.10.1960 ஞாயிற்றுக்கிழமை, நெல்லை, சந்திப்பு இசை மன்றத்தில் நடைபெற்ற தொல்காப்பியர் விழாவில் இந்துக் கல்லூரியின் பேராசிரியர் எஸ். கணபதி முதலியார் எம்.ஏ., எல்.டி. அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றியுள்ளார் என்ற செய்தியைத் நெல்லை இரா. சண்முகம் தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  தொல்காப்பியத்தின் சாரமான செய்திகளை இவர் எடுத்துரைத்துப் பேசியுள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது. 

கணபதி முதலியார் அவர்களின் நூல்கள் செம்பதிப்புகளாக வெளிவருதல் வேண்டும். இதுவரை நூலுருவம் பெறாத கட்டுரைகள் நூல்வடிவம் பெறவேண்டும் என்பது தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பாகும். 

பேராசிரியர் ச. கணபதி முதலியார் தம் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முதல் மாதம் ஓய்வு ஊதியம் 25 உருவா பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தார். ஆயின் முதல் மாதம் ஓய்வு ஊதியம் பெறுவதற்குக் கையொப்பம் இடுவதற்குக் கை ஒத்துழைக்காமல் கடைசி வரை ஓய்வூதியம் பெறாமல் மருத்துவமனையில் 1971, சனவரி மாதத்தில் இயற்கை எய்தினார். மிகப்பெரும் தமிழ் அறிஞரான ச. கணபதி முதலியாரின் பணிகள் முழுமையாகத் தெரியவரும்பொழுது இவர்தம் இலக்கிய ஆளுமை உலகுக்குப் புலப்படும்.

 



நன்றி:

பேராசிரியர் கட்டளை கைலாசம், திருநெல்வேலி.


****** இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

சனி, 21 ஜூன், 2025

ஓலைச் சுவடி ஆய்வாளர் பேராசிரியர் வே. கட்டளை கைலாசம்

 

பேராசிரியர்  வே. கட்டளை கைலாசம் 

[பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் நெல்லை ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பதிப்பித்தவர். கழி(ளி)யலாட்டம் குறித்து முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டவர். நெல்லை மாவட்ட இலக்கிய அறிஞர்கள் குறித்து ஆராய்ந்து வருபவர். சைவ இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்.] 

பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் சிற்றூரில் சு. கட்டளை வேலாயுதம் பிள்ளை, மகாமாயியம்மாள் ஆகியோரின் நான்காவது மகனாக 12.04.1956 இல் பிறந்தவர். இவரது முன்னோர்கள் சிங்கிகுளம் கைலாசநாதர் கோவிலுக்கு அறக்கட்டளை நிறுவி, நாள் பூசையையும், சிறப்பு நாட்களுக்கான விழாக்களையும் நடத்தி வந்தனர். எனவே, இக்குடும்பத்தாருக்குக்கட்டளைஎன்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. 

கட்டளை கைலாசம் தனது தொடக்கப் பள்ளிப் படிப்பைச் சிங்கிகுளம்கைலாசபதி நடுநிலைப் பள்ளியில் தொடங்கியவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியைப் பத்தமடை இராம சேசு ஐயர் பள்ளியிலும், பதினொன்றாம் வகுப்புப் படிப்பைக் (SSLC) கரிசல் சி.எம்.எஸ். பள்ளியிலும் பயின்றவர். 1972 இல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூாயில் புகுமுக வகுப்பில் சேர்ந்தவர். அங்கு இளநிலை வேதியியல் (B.Sc. Chemistry) முடித்து, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார் (M.A.,). பின்னர் தூய சவேரியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியப் பயிற்சி (B.Ed.,) பெற்றார். 

1983 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல் வழி) முதுகலைப் பொருளாதாரப் பட்டம் (M.A., (Eco.) பெற்றவர். .தி.தா இந்துக் கல்லூரியில் பகுதி நேர இளம் ஆய்வாளர் பட்டப்படிப்பில் (M.Phil.,) சேர்ந்து 1986-இல் நிறைவு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேரா. முனைவர். நெல்லை.                               . சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டலில்  1993 இல் முனைவர் பட்டம் பெற்றார்.  2010 இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொலைநிலை தொடர் கல்வி வாயிலாக முதுநிலை யோகா (M.Sc., (YHE) பட்டமும் பெற்றவர். ‘சைவ சித்தாந்த இரத்தினம்பயிற்சியைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றுள்ளார். 

ஆசிரியப் பணி்: 

1979 இல் புதுச்சேரி (புதுவை) பெத்தி செமினெரி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தவர். அங்கு ஓராண்டுக் காலம் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்ட முதுநிலைக் கல்விப் பட்டத்தில் (M.Ed.,) சேர்ந்து பட்டம் பெற்றார். 1980 இல் தூத்துக்குடி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1981 முதல் 1985 வரை திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும், 1985 முதல் 1996 வரை முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியிலும், மேனிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 

            03.04.1996 இல் திருநெல்வேலி, மதுரைத் திரவியம் தாயுமானவர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். சூன் 2009 முதல் மே 2013 வரை .தி.தா. இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, பணிநிறைவுப் பெற்றார். 33 ஆண்டுகளாகத் தமிழாசிரியப் பணியை மேற்கொண்டவர். இவர் 40 ஆண்டுகளாக ஓலைச் சுவடி ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டவர். 

இல்வாழ்க்கை: 

முனைவர் கட்டளை கைலாசம் 26.10.1983 இல் மல்லிகாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மருத்துவர் வசந்த் என்னும் மகன் உள்ளார். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். 

சைவ சபையின் தலைவர்

1886 - ஆம் ஆண்டு தமிழ் மொழி ஓம்பல், திராவிட மதமாகிய சைவசமய உணர்வை நிலைபெறச் செய்தல் போன்ற நோக்கங்களோடு தோன்றிய பாளையங்கோட்டை சைவ சபையில் 2018 முதல் 2022 வரை சைவ சபையின் துணைத் தலைவராகவும் 2022 முதல் 2023 வரை சைவ சபையின் தலைவராகவும் பணியாற்றியவர்.

ஆய்வுப் பணி் :

1. இளம் நிலை ஆய்வு (M.Phil.) - ‘இசக்கியம்மன் வழிபாடு (சிங்கிகுளம் வட்டாரம்)” (1986)

2. முனைவர் பட்ட ஆய்வு (Ph.d) - கழி(ளி)யலாட்டம் ஓர் ஆய்வு” (1993) 

ஆய்வுத் திட்டங்கள் 

1. ‘அரவான் வழிபாடு” (1994)

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஃப் கில்டபைட்டலுடன் ((Prof. Alf Hiltebeital) இணைந்து ஆய்வு மேற்கொண்டு கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.

2. ‘தமிழகத் தென்மாவட்ட நாட்டார் (கருநாடகம்) நாடகம்” 2006 முதல் 2008 வரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC) நிதி உதவியுடன் சிற்றாய்வுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

3. தேசிய சுவடி இயக்கம் (NMM) மற்றும் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் இணைந்து நடத்திய சுவடிக் கணக்கெடுப்பின் 2006 ஆம் ஆண்டு தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு ஓலைச்சுவடிகள் வைத்திருப்போரின் முகவரிகள் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

4. ‘சித்தர் தத்துவமும் வேதாந்திரியமும்என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ஆய்வு நெறியாளர் 

முனைவர் கட்டளை கைலாசம் அவர்களின் மேற்பார்வையில் இளம் ஆய்வாளர் (M.Phil.) - 60 பேர் பட்டம்பெற்றுள்ளனர். மேலும் இவரின் மேற்பார்வையில்  முனைவர் பட்டம் பெற்றோர் - 12 பேர் ஆவர். 

வெளியிட்ட நூல்கள்: 

1. இந்திய மொழிகளும் இலக்கியங்களும் (2002)

2. இய()க்கியம்மன் (2006)

3. கழியல் ஆட்டம் நிகழ்த்துக்கலை (2009)

4. சித்தர் தத்துவமும் வேதாந்திரியமும் (2016)

5. சுவடிகளின் சுவடுகள் (2017)

6. ஏடும் எழுத்தும் (2018)

7. தாமிரவருணித் தமிழ் வனம் (2021)

8. தமிழ் மரபில் கிஸ்தவம் (2023)

9. .வே.சா. நெல்லையில் கண்டதும் காணாததும் (2024) 

அரிய ஓலைச்சுவடிகள் பதிப்பு

1. அவேசு நாடகம்

2. அர்சிய சிஷ்ட ஞானப்பிரகாசியார்

3. கனிகூர்ந்தம்மாள் நாடகம்

4. முருகர் ஒயில்க்கும்மி

5. செட்டியாபத்து அஞ்சுவீட்டுசாமி கும்மிப்பாடல்

6. செட்டியாபத்து அஞ்சுவீட்டுசாமி திருமணிக்கும்மி

7. வள்ளியம்மை கலியாண வாழ்த்து

8. நாடார் இனத் திருமண வாழ்த்து

9. விடுகதை பாட்டும் உரையும்

10. வினோத கதை 

இவர் எழுபதிற்கும் (70) மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். 

பதிப்புப் பணி் 

1. ‘ஆய்வுச் சிந்தனை”- ஆய்வாளர்களின் கட்டுரைகள் அடங்கிய (2006, 2007, 2008, 2009, 2010)

2. புதுமைப்பித்தன் நூற்றாண்டு மலர் (2006)

3. வெள்ளக்கால் . சுப்பிரமணிய முதலியார் 150வது ஆண்டு மலர் (2008)

4. கோம்பி விருத்தம் (மறுபதிப்பு) (2008)

5. அண்ணா நூற்றாண்டு ஆய்வு மலர் (2010)

6. மடல்அவிழ் சைவம் (2018)

7. மனுநெறித் திருநூல் ரூ ஆங்கிலியர் அந்தாதி (2018)

8. .வே.சு.வின் படைப்புலகம் தொகுதி - 2 (2012) 

சிறப்பு விருதுகள் 

1. பைந்தமிழ்த் தொண்டர் - சைவ சமய மாநாடு 2018

பாளையங்கோட்டை சைவ சபை

2. தருமை ஆதீனப்புலவர், (ஓலைச்சுவடித் துறை)

மற்றும் பொற்பதக்கம் - தருமை ஆதீனம் 14.11.2024

3. செந்தமிழ் வளர் செம்மல் - பாரதியார் உலகப் பொதுச்சேவை

நிதியம், திருநெல்வேலி 20.02.2025 

40 ஆண்டுகளாக ஓலைச்சுவடிகளைத் தேடுதல், அதனைப் பாதுகாத்து அச்சேற்றுதல், கணினியில் பதிவு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு இயங்கி வருகிறார். இவர் போலும் அறிஞர்களைப் போற்றுவது தமிழர் கடமையாகும்.