நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 9 செப்டம்பர், 2024

பேராசிரியர் கா. செல்லப்பன் மறைவு

 

முனைவர் கா. செல்லப்பன் (11. 04. 1936 - 09. 09.2024) 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவரும் பல்வேறு அரிய நூல்களை மொழிபெயர்த்தவருமாகிய பேரறிஞர் கா. செல்லப்பனார் அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து பெரிதும் கவலையுற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

பேராசிரியர் கா. செல்லப்பன் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இணைவதற்குப் பேருதவிபுரிந்தவர்கள். 1993 ஆம் ஆண்டு முதல் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அவர்களின் வாழ்வியலை 2013 இல் என் வலைப்பதிவில் எழுதி மனம் நிறைவடைந்தேன். பேராசிரியரின் இழப்பு அறிவுலகிற்குப் பேரிழப்பு. சிலப்பதிகாரத்தையும் சேக்சுபியரையும் இணைத்துப் பேசவும், பாரதியாரையும்,  பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழுணர்வையும் ஆங்கிலத்தில் எடுத்தியம்பவும் செல்லப்பனார் போலும் ஓர் அறிஞர் கிடைத்தல் அரிது

முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் பெருமைமிகு வாழ்க்கை 

ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் - சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11. 04. 1936 இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயின்றவர்.  அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் அழைப்பில் அவர் மேற்பார்வையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர்(1975). 

புதுக்கோட்டை, கும்பகோணம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் அரசு கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இங்கிலாந்து நாட்டின் நிதியுதவி பெற்று அந்த நாட்டுக்குக் கல்வி கற்கும்பொருட்டுச் சென்றுவந்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மையம் திருச்சிராப்பள்ளியில் இயங்கியபொழுது 1976- இல் பணிபுரிந்து 1978 இல் பேராசிரியராகப் பணி உயர்வுபெற்றார். இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 இல் தொடங்கப்பட்டதும் ஆங்கிலத்துறையில் பெருமைமிகு பேராசிரியராகப் பணியாற்றி 1996 இல் ஓய்வுபெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், தமிழ்நாட்டு அரசின் அங்கில மொழித்துறையின் இயக்குநராகவும் இருந்து 2001 வரை பணியாற்றினார்

தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடைகளில் கேட்டார் உளங்கொள்ளும் வகையில் பேசும் ஆற்றல்பெற்ற பேராசிரியர் கா.செல்லப்பனார் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாகப் பல அரிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்

எங்கெங்கு காணினும் சக்தி (ஒப்பாய்வு), Bharathi the visionary Humanist(மொழிபெயர்ப்பு), தோய்ந்து தேர்ந்த தளங்கள் முதலியன இவரது படைப்புகள். சிலம்புச்செல்வர் .பொ.சி யின் விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இந்திய விடுதலைப் போரில் தமிழகம், மூதறிஞர் .சுப.மாணிக்கனாரின் வள்ளுவம், கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதினிலே உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்

சாகித்ய அகாதெமிக்காக விவேகானந்தர், குற்றாலக் குறிஞ்சி(கோவி மணிசேகரன்) மொழிபெயர்ப்பு, தாகூரின் கோரா(Gora) (மொழிபெயர்ப்பு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இலக்கியத்தில் பழம்புதுமை புதுப்பழைமை(மீரா பதிப்பகம்), ஒப்பியல் தமிழ்(எமரால்டு பதிப்பகம்), ஒப்பிலக்கியக் கொள்கைகளும் செயல்முறைகளும்(..நி. வெளியீடு), தமிழில் விடுதலை இலக்கியம், திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை(பாவை பதிப்பகம்), விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்(நியூ செஞ்சுரி), இலக்கியச்  சித்தர் .சீனிவாச இராகவன் எனப் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர் நம் கா.செல்லப்பனார் அவர்கள்

பேராசிரியர் கா. செல்லப்பனார் அவர்கள் 09.09.2024 இல் சென்னையில் இயற்கை எய்தினார்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை நூலுக்கான ஆற்றுப் பா...

 

தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருதாளர்

முனைவர் மோ.கோகோவைமணி

பேராசிரியர் (.நி.), ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.




 நேரிசை ஆசிரியப் பாவில் நேர்த்தியாய்

சீரிசை முத்தாய் இணைய வரலாறு

நீரிசை போலாய் நேர்த்தி செய்து,

சேரிசை எங்கும் சேர்க்கும் இந்த

இணைய ஆற்றுப் படையெனும் நூலை

இணைந்தே ஆக்கிப் பதித்த இணையர்

இன்றும் என்றும் பல்லாண்டு காலம்

வாழ்ந்து பலப்பல வாழும் இலக்கியம்

சீர்சால் நடைபோ லியல்தமிழ் போற்ற,

மேலும் படைக்க வாழ்த்து கின்றேன்.

இணைய ஆற்றுப் படையெனும் நூலில்

தமிழின் மேன்மை, தமிழர் சால்பு

இமிழும் பொழுதில் துவண்டு போனேன்.

தமிழகச் சிறப்பை உலகுய்யச் செய்த

தகைசால் வரிகள் உன்னத மாகும்.

எத்துறை யானாலும் அத்துறை தமதென

உலகில் முந்தி நிற்கும் தமிழர்

செய்த அளப்பெறும் பணிகள் எண்ணில.

எனிலும், உலகம் உய்யப் போற்றும்

கணினி வரவில் தமிழர் பங்கை

நிரல்பட ஓதி, கலப்பின மில்லாது

சிறப்புடன் எடுத்தே ஓவியம் தீட்டிய

இளங்கோ நெஞ்சை ஏற்றுப் போற்றுவேன்.

இலங்கைத் தமிழர் இன்னல் கூறி

இலக்கப் பயணம் வெற்றி கொண்ட

கலக்க மில்லா திலக மேற்றி,

நிலைக்க வைத்த பாங்குக் கண்டேன்.

புதுப்புது வரவுகள் உலகில் பலப்பல

புதுவது இயல்புதான் என்றா னாலும்

கணினி புகுந்த நன்நா ளன்று

உலகின் கன்னித் தமிழ்மகள் பிறந்தாள்.

சங்கம் தொடங்கி இன்று வரையும்

சங்கேத மெனுவென இருந்த போதும்

சத்தமே இடாமல் சட்டை செய்த

எத்துறையிலு மிக்கது இத்துறை என்ன

பல்துறையும் இணைய ஆற்றுப் படையில்

பற்றிடச் செய்து உலவ விட்டு,

புற்றி லடங்கா ஈசல் போலக்

கடித்த எறும்பும் திரும்பிப் பார்க்கும்.

ஓரிட மிருக்கும் ஓம்புமின் தமிழை

விரல்நுனி சொடுக்கில் கண்முன் காட்டும்

விந்தை சாதனை இணைய ஆற்றுப்படை.

பழங்கலை யெல்லாம் மடியும் நாளில்

துளிர்விடத் தொடங்கிய இணையப் பணியில்

எத்தனை அன்பர் எத்துணை அன்பர்

இத்துறை போற்றிப் பரப்பும் வேளையில்

இளங்கோ ஆக்கிய இணைய ஆற்றுப்படை

இனிக்க வில்லை என்றாலும், சுவைக்க

நிலைக்க திளைக்கவே செய்கிறது என்னை.

மாற்றமே நிகழா திருந்த நாளில்

மாற்றம் பலப்பல நிகழ்த்திக் காட்ட

எத்துறை யாகினும் அத்துறை நமதெனப்

பற்றுக் கொண்டு சத்தாய் உயர்ந்த

கணினியின் உன்னத வளர்ச்சி தன்னை

உயர்வாய்க் காட்டி உயர்த்திய கொடியோ

இணைய ஆற்றுப் படையென நிலத்தில்

சிந்தை சேர்த்த சீரிய முயற்சியை

பழந்தமிழ்ச் சுவடியை இணையம் ஏற்றியவன்

மின்னூல் பலப்பல இணையம் ஏற்றியவன்

வலையொளி வழியாகச் சுவடியியல் தந்தவன்

என்றிந்தத் தகுதிப் பாட்டில் வாழ்த்துகிறேன்.

நின்று நீங்கா நிலைத்திட

என்றும் வாழ்த்தும் அன்பன் இவனே.

 

 

திங்கள், 2 செப்டம்பர், 2024

மலேசியத் தமிழ் நெறியாளர் கு. மு. துரை மறைவு

 

கு. மு. துரை  (02.02.1951 - 01.09.2024) 

    மலேசியத் திருநாட்டில் பிறந்து, தமிழ் உணர்வுடன் இயங்கி, தமிழ் நெறிகளைத் தம் வாழ்வியலில் இணைத்துக்கொண்டு வாழ்ந்த, எங்கள் அன்பிற்குரிய அண்ணன் கு. மு. துரை அவர்கள் 01.09.2024 அன்று காலை 9.30 மணிக்கு மலேசியாவில்  இயற்கை எய்திய செய்தியை அறிந்துஇடியுண்ட மஞ்ஞை போல்” பெருங்கவலைகொண்டேன். அண்ணன் கு. மு. துரை அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கத் தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இரண்டு திங்களுக்கு முன்பாக எங்களின் தமிழ்வள்ளல் மாரியப்பன் ஆறுமுகனாரை இழந்த துயரத்துடன் இத்துயரமும் இணைந்து என்னை அழுத்திக் கவலையைப் பன்மடங்காக்கியுள்ளது. 

    மலேசிய நாட்டுக்கு நான் செல்லும்பொழுதெல்லாம் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்து, என்னை வரவேற்பதில் தமிழ் உணர்வாளர்கள் மாரியப்பனார், அருள்முனைவர் ஆகியோர்க்குப் பெருந்துணையாக இருந்தவர் கு. மு. துரை அவர்கள். துரை ஐயா இல்லாமல் எந்த நிகழ்வும் இல்லை என்று கூறும் அளவிற்கு, எல்லா நிகழ்விலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, உணர்வுபொங்க உரையாற்றுவார். தம்மால் இயன்ற கைப்பொருளைக் கொடையாக வழங்கி, நிகழ்வைச் சிறப்பாக்குவார். தமிழகத்திற்கும் வந்து, தமிழ் உணர்வுடன் நிகழ்வுகளில் கலந்துகொள்வார். மலேசியாவில் நடைபெறும் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்விலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு, தம்மால் ஆன பங்களிப்புகளை நல்குவார். தமிழறிஞர் அ.பு. திருமாலனார் பட்டறையில் உருவான கொள்கை மறவர்களுள் நம் கு. மு. துரை ஐயா அவர்கள் முதன்மையானவர்கள். 

    கு. மு. துரை அவர்கள் வானூர்திப் பொறியாளராகப் பலவாண்டுகள் பணியாற்றியவர் (இவரின் தமிழ்ப்பணிகளைக் கண்ணுற்ற யான் பலவாண்டுகள் இவரை ஒரு தமிழாசிரியர் என்றே கருதிக்கொண்டிருந்தேன்). மலேசியன் ஏர்லைன்சு நிறுவனத்தில் தொடக்கத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின்னர் வேறு நிறுவனங்களில் தம் பணியைத் தொடர்ந்தவர். தம் குடும்ப நிகழ்வுகளையும் தம்மைச் சார்ந்தவர்களின் குடும்ப நிகழ்வுகளையும் தமிழ் உணர்வுடன் முன்னெடுத்தவர். மலேசியாவில் பொங்கல் விழாக்களை முன்னின்று நடத்தியவர். தமிழ் வழியில் பிறப்பு, இறப்புச் சடங்குகளை நடத்தித் தாம் ஒரு தமிழர் என்று வாழ்ந்துகாட்டிய பெருமகனார் கு. மு. துரை அவர்கள். தமிழ்ப்பள்ளிகள் நலிவடைந்து, மூடப்படும் சூழல் மலேசியாவில் எங்கேனும் நிகழ்ந்தால் முதலாமவராக அங்குத் தோன்றி, அப்பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய வழிவகைகளைச் செய்தவர். 

    கு. மு. துரை அவர்கள் மலேசியாவில் 02. 02.1951 இல் பிறந்தவர். பெற்றோர் குஞ்சுப்பிள்ளை முத்தம்மாள் ஆவர். தொடக்கத்தில் தமிழ்ப்பள்ளியில் பயின்ற கு.மு. துரை அவர்கள் பின்னர் ஆங்கிலப்பள்ளியில் பயின்று தம் அறிவை வளப்படுத்திக்கொண்டவர். பின்னர் மின்னியலில் பட்டயப் படிப்பு முடித்து, கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டவர். வானூர்திப் பொறியாளராக (Aircraft Engineer) தம் அறுபதாம் அகவை வரை பணியாற்றிவிட்டு, அதன் பிறகு தமிழ்ப்பணியில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவர். 

    கு. மு. துரை அவர்கள் 1989 ஆம் ஆண்டில்  பழ. அழகம்மாள் அவர்களை மணந்துகொண்டு, இல்லறப் பயனாய் நான்கு ஆண் மக்கள் செல்வங்களைப் பெற்று நிறை வாழ்வு வாழ்ந்த பெருமகனார். தம் பிள்ளைகளுக்குத்  துரைஅரசன், இளந்துரை, இளம்பரிதி, இளங்கதிர் என அன்பொழுகத் தமிழ்ப்பெயரிட்டு, அழகுபார்த்தவர். அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விச்செல்வம் தந்து, அறிஞர்களாக உயர்த்தியவர். 

    கு. மு. துரை அவர்களின் மறைவு மலேசியத் தமிழ் உணர்வாளர்களுக்குப் பேரிழப்பாக அமைந்துவிட்டது. கு. மு. துரை அவர்களின் தமிழ்ப்பணிகளை என்றும் நினைவுகூர்வோம். அவரின் எண்ணங்களைச் செயல்படுத்தி, அவருக்கு நம் நன்றியைப் படையலிடுவோம். வாழ்க கு. மு. துரை அவர்களின் புகழ்!

கு. மு. துரை