[இக்குறிப்பில் இடம்பெறும் மருத்துவர் ச. முத்துராமன் தென்காசி
ஊரினர். எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை வல்லுநர். தமிழ்ப்பற்றும், கலையுணர்வும்
நிரம்பியவர். கவிதை நூல்கள் இரண்டினை வெளியிட்டுள்ளவர். மருத்துவத்தைத் தமிழில் பயிற்றுவிக்க
இயலும் என்னும் கொள்கையர். தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்க 59- ஆவது மாநாட்டினைத்
திருக்குற்றாலத்தில் நடத்தி அனைவரின் பாராட்டினையும் பெற்றவர்].
திருவனந்தபுரத்தில் ஆய்வுக்குரிய குறிப்புகளைத் திரட்டிக்கொண்டு, பணிகள் முடிந்ததும் தென்காசி, ஆழ்வார்குறிச்சி, சிவசைலம் செல்வது நோக்கமாக இருந்தது. தென்காசிக்கு மாலைப் பொழுதில் சென்றுசேர்ந்தால் அங்கு நடைபெறும் திருவள்ளுவர் கழகத்தின் நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, இரவு அங்கு ஓய்வெடுக்கலாம் என நினந்தேன். குற்றாலத்தில் பருவகாலம் தொடங்கி, ஐந்தருவியில் நீர்வீழ்ந்து கொண்டிருப்பதால் ஒரு குளியல்போடும் ஆர்வமும் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. அதற்குரிய வகையில் திருவனந்தபுரத்துப் பேராசிரியர் சக்குடி பொ. சீனிவாசனிடம் என் பயணத்திட்டத்தைச் சொன்னேன். திருவனந்தபுரம் - தென்காசி மலைவழிப் பாதையில் பேருந்துப் பயணம் சிறப்பாக இருக்கும் என்று அவரும் குறிப்பிட்டார். அதற்குரிய வகையில் கேரளப் போக்குவரவுக் கழகத்தின் பேருந்தில் முன்பதிவு செய்தேன்.
தென்காசியில் எங்குத் தங்குவது?
முன்னமே என் பயணத்திட்டத்தை அறிந்திருந்த தஞ்சை மருத்துவர் குலாம் மொகைதீன் ஐயா, தென்காசியில் தம் தம்பியொத்த மருத்துவர் ச. முத்துராமன் உள்ளதாகவும், தங்கள் வருகையை அவரிடம் சொல்லியுள்ளேன் எனவும் கூறியதுடன் மருத்துவர் ச. முத்துராமன் ஐயாவின் தொடர்பு எண்ணையும் எனக்கு அனுப்பியிருந்தார். ச. முத்துராமன் அவர்களுக்கு என் வருகை நோக்கமும், நாளும் பொழுதும் தெரிவித்தேன். என்னைத் தென்காசிப் பேருந்து நிலையத்தில் வரவேற்க மருத்துவரும் ஆர்வமாக உள்ளதைத் தெரிந்துகொண்டேன்.
04.
06. 2026 பிற்பகல் 3.10 மணிக்குத் திருவனந்தபுரத்தில் பேருந்து புறப்பட்டது. திருவனந்தபுரம்
தென்காசிக்குரிய தொலைவு 110 அயிரமாத்திரிதான். ஆயின் மலைப்பாதை என்பதால் தென்காசிக்குச்
சென்றுசேர்வதற்கு நான்குமணி நேரம் ஆகும் எனத் தெரிந்துகொண்டேன். பேருந்துப் பயணம் மழையும்
தூறலும் சாரலுமாகத் தொடங்கியது. குளிர்ச்சியும் பசுமையும் வழியெங்கும் அமைந்து, உள்ளத்தை
உவப்பாக்கின. குறிஞ்சியும் முல்லையும் கைகோர்த்து நிற்கும் காட்சியும் அருவிகள் வீழ்வதும்
ஆறுகள் நெளிந்தோடுவதும் காண்பதற்குக் கண்கோடி வேண்டும். நான்கு மணிநேரம் ஒரு பெருங்காட்டுக்குள்
நுழைந்து வெளிவந்த மனநிறைவு இந்தப் பயணத்தால் ஏற்பட்டது. புதுச்சேரியில் வெப்பக்காற்றில்
வெந்துகொண்டிருந்தவனுக்குக் குளிர்காற்றுப் பெரும் மருந்தாக இருந்தது. நெடுமங்காடு,
நன்னியோடு, பாலோடு, கொல்லையில், மடதர, சொழியாகோடு, கண்டஞ்சிர, குழத்துப்புழா, தென்மலை,
ஆரியங்காவு, புளியறை, புதூர், செங்கோட்டை வழியில் பேருந்து சென்றது. மலையாளத்தில் ஒலிக்கப்பட்டுள்ள
ஊர்ப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்படுத்திப் பார்த்தது என் தமிழ் உள்ளம். ஓடு என்பது ஓடையாகவும்,
குழத்துப்புழா என்பது குளத்துப்புழையாகவும் தெரிகின்றன. யாவும் பொருள்பொதிந்த ஊர்ப்பெயர்களாக
உள்ளன. இருமொழி வல்லுநர்களும் மெய்ப்பொருள் கண்டு சொன்னால் உலகம் ஒப்பும். இது நிற்க.
தென்காசிப் பேருந்து நிலையத்தில் கைச்சுமையுடன் இறங்கினேன். காற்றும் மழையும் கலந்து வீசின. மழைக்குத் தப்பி, ஓரமாக நின்று நோட்டமிட்டேன். வெள்ளைநிற மகிழுந்திலிருந்து பட்டுவேட்டிச், சட்டையைப் பளபளக்க அணிந்தவர், இறங்கிய வேகத்தில் கைப்பேசியில் அழைப்பதைக் கவனித்தேன். நம் மருத்துவர்தான் என உணர்ந்துகொண்டேன். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனோம். தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்தும் திருக்குறள் விழாவுக்குச் செல்வதென முதலில் முடிவுசெய்தோம்.
ஒலிபெருக்கியில் வரும் குரலைக் கேட்டதும் சென்னை வள்ளுவர் குரல் குடும்பம் சி. இராசேந்திரன் ஐயா திருக்குறளின் சீர்மையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அரங்கு நிறைந்து அமர்ந்திருந்த அறிஞர்கள் அவர் பொழிவில் மூழ்கித் திளைத்திருந்தனர்.
முன்னமே மருத்துவர் ச. முத்துராமன் என் வருகையைத் திருவள்ளுவர் கழகத்துப் பொறுப்பாளர்களிடம் சொல்லியிருந்தார். எனவே திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் .ந. கனகசபாபதி, செயலாளர் இராம. தீர்த்தாரப்பன், துணைத்தலைவர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் உள்ளிட்ட மூத்த அறிஞர்கள் திருவள்ளுவர் கழகத்தின் அலுவலகத்தில் கூடியிருந்தனர். என் வருகை நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன்.
இலங்கை வண்ணார்பண்ணையைச் சார்ந்த தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆணையராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற பிறகு பாளையங்கோட்டைச் சைவ சபையின் தலைவராக இருந்தமை பற்றி எடுத்துரைத்தேன். தா. பொன்னம்பலம் பிள்ளை தென்காசியில் சைவ சபையின் நான்காம் மாநாட்டினை நடத்தியுள்ளமையைக் கூறி, இவர் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிவசைலத்தில் வாழ்ந்து 1935 இல் இயற்கை எய்தினார் என்ற குறிப்புகளைச் சொல்லி மேலதிக விவரம் வேண்டினேன். நான் கூறிய விவரங்கள் யாவும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரிந்தன. வழக்கறிஞர் ந. கனகசபாபதி அவர்கள் திருவள்ளுவர் கழகம் 99 ஆண்டு வரலாற்றைக் கொண்டது எனவும் திருவள்ளுவர் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்னர் திருவள்ளுவர் சபையாக இருந்ததையும் அதற்கு முன்னர் சைவ சபையாக இருந்ததையும் தெரிவித்தார். அவ்வாறு சைவ சபையாக இருந்தபொழுதுதான் தா. பொன்னம்பலம் பிள்ளை 1915 இல், தென்காசியில் நான்காவது சைவ மகாசங்க மாநாட்டினை நடத்தியிருக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். மேலதிக விவரங்கள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, சிறிது நேரம் திருவள்ளுவர் கழக விழாவில் கலந்துகொண்டு, நிகழ்வுகளைச் செவிமடுத்தேன். இது நிற்க.
திருவள்ளுவர் கழகத்துப் பொறுப்பாளர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது மருத்துவர் ச. முத்துராமன் இரண்டு நூல்களை அன்பளிப்பாக எனக்கும் மற்றவர்களுக்கும் அளித்தார். இளக்கன பிளை (கிறுக்கல் தொகுப்பு), கொசுக்கடி என்பன அந்த நூல்களின் பெயர். மருத்தவர் அவ்வப்பொழுது தோன்றும் சிந்தனைகளைக் கவிதைக் குறிப்புகளாகப் புதுப்பா அமைப்பில் எழுதியுள்ளார்கள். மாணவப் பருவத்தில் இவர்,
”மலராத
மொட்டுகள் மலரத் துடிக்க
மலர்ந்த
பூக்கள் வாழத் துடிக்க
சமுதாயச் சக்கடை சாகடிக்கத் துடிக்கிறது” என்று எழுதியவர்.
“வெட்டிச்
சாய்க்கும்முன் நீ யோசி
வெட்டப்படுவது
நான் ஆயினும்
வீழப்போவது நீதான்டா”
--------------- --------------------- --------------------
“செத்திருந்தால்
பிழைத்திருப்பேன்;
பிழைத்ததனால் செத்துக்கொண்டிருக்கிறேன்”
------------------- -------------- ------------------------
“சபையே
கலைந்தாலும்
தனியொருவனாக
நின்று தமிழில் பேசியே தீருவேன்”
-------------- ------------------------- ------------------------
“வீணடித்த
நேரத்தை
விலைகொடுத்தும் மீட்க முடியாதே”
----------------- ---------------------- -----------------------------
“வெற்றி
ஒரு முற்றுப்புள்ளி
தோல்வி ஒரு திறவுகோல்”
------------- ---------------------- --------------
“விதையில்
விசத்தையும் விதைப்பது
விஞ்ஞான உலகின் விபரீதத் தொழில்நுட்பம்”
------------------- ------------------- -------------------------
“நெருப்புக்கு ஏன் வேண்டும் நெஞ்சிலே ஈரம்”
-------------------- -------------------- -------------------------
“நிறவெறி
கொண்ட இனவெறியை
அறநெறிகொண்டு நசுக்குவோம்”
------------------- --------------------- ----------------------------
கவசம்
களைந்த கர்ணன்
மறுகணமே
மரணம் எய்தினான்;
தலைக்கவசம்
தவிர்த்த பயணம் மறுநொடியே
தலையெழுத்தை மாற்றிவிடும்”
என்னும் வரிகளை அவர் நூலில் படித்தபொழுது, மருத்துவர் ச. முத்துராமனின் கவிதை உள்ளத்தை நூலில் கண்டேன். மருத்துவருடன் உரையாடியபொழுது அவர்தம் தமிழ் உள்ளம் புலப்பட்டது. கலையுள்ளம் கண்முன் தெரிந்தது. மருத்துவர் தம் இல்லத்துள் 1330 திருக்குறளையும் மரத்தில் தச்சுக் கலைஞரைக் கொண்டு உளியால் செதுக்கச்செய்த பலகையைப் பதித்து வைத்துள்ளார். இது இவர்தம் தமிழ்ப்பற்றுக்கு ஒரு சான்று.
மருத்துவர் ச. முத்துராமன் வாழ்வும் பணியும்
மருத்துவர் ச. முத்துராமன் தென்காசியில் 10. 09. 1971 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் த. இரா. சண்முகசுந்தரம், த. ஆதிலட்சுமி ஆவர். தொடக்கக் கல்வியை ஊட்டியில் அமைந்துள்ள பிரிக்ச் கான்வெண்டில் படித்தவர். பின்னர் தென்காசி ஏ. ஜி. பதின்மப் பள்ளி, அம்பாசமுத்திரம் ஏ. வி. ஆர். எம். வி. பள்ளி, நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். நெல்லை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பை நிறைவுசெய்தவர். கேரளாவின் அஞ்சல் தூய சோசப் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறையில் மருத்துவராகப் பணியாற்றியவர். மதுரையில் அரசு இராசாசி மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் அறுவை சிகிச்சைத்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். தம் சொந்த ஊரான தென்காசியில் மருத்துவமனையைத் தொடங்கி, எலும்புமுறிவு மற்றும் முடநீக்கியல் துறையின் சிறப்பு வல்லுநராக இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவப்பணியாற்றி வருபவர்.
நெல்லை,
முடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர்.
மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் வழங்கி, அனைவரின்
பாராட்டையும் பெற்றவர். சுழற்சங்க உறுப்பினராக இருந்து சமுதாயத் தொண்டில் முன்னிற்பவர்.
தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்க 59- ஆவது மாநாட்டினைத் திருக்குற்றாலத்தில்
நடத்தி அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின்
ஆண்டுமலரின் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியவர். பல்வேறு பொதுநல அமைப்புகளில் இணைந்து
மருத்துவப் பங்களிப்பையும் தமிழ்ப் பங்களிப்பையும் நல்கிவரும் ச. முத்துராமன் அவர்களைப்
போன்ற மருத்துவ மாமணிகள் தமிழகம் எங்கும் தழைக்க வேண்டும் என்பது எம் எதிர்பார்ப்பு.




