நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள்

 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன்

[பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் மொழியியல் அறிஞர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் 23 நூல்களை எழுதியுள்ளார். அசாம், நாகாலாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மொழி குறித்த அகராதியை உருவாக்கியவர்]

 பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த சந்தனசாமி – செயமேரி ஆகியோரின் மகனாக  13.07.1948 இல் பிறந்தவர். புதுச்சேரியில் உள்ள பாத்திமா பள்ளியில் தொடக்க, உயர்நிலைக் கல்வி பயின்ற பின், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றவர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆசியவியல் மொழியியலும், மொழியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

புதுவை அரசிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் கல்வித்துறைப் பணிகளில் ஈடுபட்டு, பணியாற்றியவர். மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) ஆய்வு உதவியாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்(1972-1977). நாகாலாந்து, அசாம் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் பேசும் தங்கூல் (Tangkhul) மொழியை ஆராய்ந்து, அம்மக்களின் மொழிக்கு இலக்கணமும், அகராதியும் எழுதியவர். பண்பாட்டுத் தளத்திலும் பல ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும், தேர்வுநெறியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்கும் புதுவை அரசுப்பணியில் உள்ள பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகளுக்கும் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் பல்வேறு ஆய்வு நிறுவனங்களிலிருந்து நிதிநல்கைகள் பெற்று ஆய்வறிஞராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய சிறப்பிற்குரியவர். அவ்வகையில் செர்மனி நாட்டின் மூனிச்சு நகரில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தங்கூல், இந்தி, பிரெஞ்சு முதலிய மொழிகளை அறிந்தவர். இவர் மேற்பார்வையில் 11 பேர் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர்; 40 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கலந்துகொண்டு வழங்கியவர்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்து மூன்று நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தொல்காப்பியத்தின் சிறப்புரைக்கும் வகையில் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள் ஆகிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். தொல்காப்பியத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்துரைக்கும் பெருந்திறன் பெற்றவர். இவர்தம் தொல்காப்பியப் புலமை, ஆய்வு ஆளுமையைப் போற்றும் வகையில் இன்று(18.04.2025) புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் இவருக்குத் “தொல்காப்பிய ஆய்வறிஞர்” என்னும் உயரிய விருதளித்துப் போற்றுவதில் உலகத் தொல்காப்பிய மன்றம் பெருமைகொள்கின்றது. 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்களின் இலக்கியக் கொடைகள்:

  1. (2025) Le Tour De Pondy (Pondicherry Tourist Guide book), Author’s Publication.
  2. (2012) Spoken Tamil for Foreigners: A-Team Info Media Publishers, Chennai
  3. (1996) Tangkhul Naga Dictionary: Central Institute of Indian Languages (CIIL), Mysore.
  4. (1988) Language Use in Mass Media: Creative Publishers, New Delhi
  5. (1987) Tangkhul Grammar: CIIL, Mysore
  6. (1986) Seminar on Dialectology (edited): Tamil University, Thanjavur
  7. (1982) Tangkhul Folk Literature: CIIL, Mysore
  8. (1981) Tamil clitics: Dravidian Linguistics Association, Trivandrum
  9. (1980) Tangkhul Phonetic Reader: CIIL, Mysore
  10. (2024) Nenjin Alaikal (நெஞ்சின் அலைகள்), Author’s Publication, Pondicherry.
  11. (2024) Piranjchiyar Aatchiyil puducherry. (பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி), Author’s Publication, Pondicherry.
  12. (2014) Puthucheery maavaTTa TheevaalayangkaL (புதுச்சேரி மாவட்டத் தேவாலயங்கள்), Nanmozhi Pathippakam, Pondicherry
  13. (2009) Mozhiyiyal Nookkil Tolkappia, Sanga Ilakkiya Aayvugal. (மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள்), International Institute of Tamil Studies, Chennai.
  14. (2001) Moliyiyal Nookkil Tolkappiam (Linguistic View on Tolkappiam), (மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்), Oriental Longmans, Ltd.: Chennai.
  15. (1993) Thagaval thodarpiyal (Mass Communication) (தகவல் தொடர்பியல்), Muthu Patippagam, Villuppuram.
  16. (1993) Moliyiyal Sinthanaikal (A Collection of Articles in Tamil Linguistics): (மொழியியல் சிந்தனைகள்). Maniam Patippagam, Kurichipadi
  17. (1992) Ilakkiya Saaral (a Collection of Articles in Tamil Literature): (இலக்கியச் சாரல்). Manian Patippagam, Kurinchipadi.
  18. (1990) Karaikal - Putucheri Teruppeyar Aayukal (A Study on the Street Names of Pondicherry and Karaikal): (காரைக்கால் புதுச்சேரி தெருப்பெயர் ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram
  19. (1989) Vinnai Totum Vilutual (Collection of Free Verse Poems): (விண்ணைத் தொடும் விழுதுகள்). Muthu Patippagam, Villupuram
  20. (1988) Samuga Moliyiyal Agaraati (A Glossary of Tamil Sociolinguistics): (சமூக மொழியியல் அகராதி). Muthu Patippagam,Villupuram
  21. (1987) Iru Moliya Aayvukal (Bilingual Studies in Tamil): (இருமொழிய ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram
  22. (1987) Kilai Molikal (Dialectology in Tamil): (கிளை மொழியியல்), Muthu Patippagam, Villupuram
  23. (1986) Moliyiyal Irattai Valakku (Diglossia in Tamil): (மொழியியில் இரட்டை வழக்கு), Manivasagar Patippagam, Madras.

வியாழன், 17 ஏப்ரல், 2025

முனைவர் மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை, தொடரும் தொல்காப்பிய மரபு நூல்கள் வெளியீட்டு விழா! தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா!

 


நாள்: 18.04.2025, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி - 8.30 மணி 

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை: பேராசிரியர் மு.பா. இராமானுசம் I திரு. தூ. சடகோபன் I பாவலர் ஆறு. செல்வம் I I முனைவர் உரு. அசோகன் I  பேராசிரியர் இரா. கோவலன் I

நூல்கள் வெளியீடு: மாண்புமிகு பேரவைத் தலைவர் 

ஏம்பலம் திரு அரங்க. செல்வம்

நூலின் முதல்படி பெறுதல்: திரு. க. குணத்தொகையன் I “தாமரைத்திரு” வில்லியனூர் கி. முனுசாமி I திரு. அ. சக்திகுமார்  I பேராசிரியர் செ. பெரியாண்டி I திரு. மு. அருள்செல்வம் I திரு. செ. திருவாசகம்

விருதுகள் வழங்கி, அருளாசியுரை: 

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

பாராட்டுப்பெறும் தொல்காப்பிய அறிஞர்கள்

“இலக்கிய மாமணி” அறிஞர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர்

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன், புதுச்சேரி

பேராசிரியர் பொ. நா. கமலா, சிவகாசி

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன், சிங்கப்பூர் 

நூல்கள் அறிமுகவுரை

பேராசிரியர் பா. பட்டம்மாள் I மருத்துவர் க. கலைவேந்தன்

நன்றியுரை: பேராசிரியர் வேல். கார்த்திகேயன்

அழைப்பின் மகிழ்வில்

உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: +9442029053