திருமுதுகுன்றத்தில் வாழ்ந்துவந்த புலவர் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் இன்று (29.05.2026) இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். நான் மாணவனாக இருந்தகாலம் முதல் பல்லடம் மாணிக்கனாருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்தம் தமிழ்ப் பணிகளைப் பலவாண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் எழுதி, ஐயாவின் சிறப்புகளை உலகம் அறியச் செய்திருந்தேன். தமிழ்த்தாய் தம் உண்மைத் தொண்டர்களுள் ஒருவரை இன்று இழந்து நிற்கின்றாள். பல்லடம் மாணிக்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:
கோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர். சிற்றூரில் தொடக்கக் கல்வியை முடித்து, பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர்.புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1962). ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.இந்நூல் பாவேந்தர், கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல்.
சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது. 1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார்.
தேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன. இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர். இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர் (இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்). டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார். இப்படத்தில் சோ நடித்துள்ளார். இப்படப் பாடல்கள்,இலங்கை,சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவது உண்டு.
தேவி
தேவி உன்னைத்தேடி அலைகிறேன்...
தித்திக்கும் முத்தமிழே...
என்னும் பாடல்கள் சிறப்புடையன.
பல்லடம் மாணிக்கம் ஐயா உருவாக்கிய தமிழ்நூல் காப்பகம் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலகமாக விளங்கியது.
மேலும் அறிவதற்கு என் வலைப்பதிவுக்கு வருக!
