நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

புலிகரம்பலூர் புலவர் அ. பொன்னையன்

 

புலவர் . பொன்னையன் 

[ புலவர் . பொன்னையன் கடலூர் மாவட்டம் புலிகரம்பலூர் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிங்கப்பூர் முன்னாள் தலைமை அமைச்சரின்(பிரதமர்) வாழ்வையும், அருட்பிரகாச வள்ளலார் வாழ்வையும் காப்பியமாகப் பாடியவர். கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியங்களுக்குத் தொண்டாற்றி வருபவர்; பன்னூலாசிரியர். வள்ளலார் கொள்கையில் வாழ்ந்து வருபவர். ] 

சிங்கப்பூர் முன்னாள் தலைமை அமைச்சர்(பிரதமர்) சீர்மிகு லீ குவான் யூ அவர்களின் வாழ்வியலைக் காப்பியமாக்கிய பெருமை புலிகரம்பலூர் புலவர் . பொன்னையன் அவர்களுக்கு உண்டு. சிங்கப்பூர் முன்னாள் தலைமை அமைச்சரின் மறைவின்பொழுது(2015) சிங்கப்பூரில் புலவர் . பொன்னையன் தங்கியிருந்துள்ளார். பலமுறை சிங்கப்பூர் சென்று, அந்நாட்டின் சிறப்பை முன்பே அறிந்திருந்த புலவர் அவர்கள் முன்னாள் தலைமை அமைச்சர்(பிரதமர்) லீ அவர்களின் மறைவையொட்டி அவர்தம் பெருமைகளையும் சிறப்புகளையும் நன்கு அறிந்து மரபு வடிவில் 1303 செய்யுள்களால் இக்காப்பியத்தைப் புனைந்துள்ளார். வெண்பா, கலிவெண்பா, கலித்தாழிசை, கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கலித்துறை எழுசீர் விருத்தம், பஃறாழிசை கொச்சகக் கலிப்பா, கலிப்பா, கலிநிலைத்துறை எனப் பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ள இக்காப்பியம் அந்தாதித்தொடையிலும் யாக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் சீர்காழியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபொழுது புலவர் அவர்களின் தமிழ்ப்புலமையை அறிந்து அவர்களின் தமிழ் வாழ்க்கையை உரையாடித் தெரிந்துகொண்டேன். அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் நெறியில் தம் அறவாழ்வை அமைத்துக்கொண்ட புலவர் அ. பொன்னையன் அவர்கள் வள்ளலார் கொள்கைகளை மக்கள் மன்றத்துக்கும் மாணவர் மன்றத்திற்கும் கொண்டுசேர்ப்பதைத் தம் வாழ்நாள் கடமையாகச் செய்து வருபவர். தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் கடலூரில் நெருங்கிப் பழகித் தென்மொழி வெளியீட்டுப் பணிகளில் துணைநின்றவர். பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, பேராசிரியர் மு. தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுடன் நட்பு பாராட்டியவர். பள்ளியில் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும் கடமையாற்றிய இப்பெருமகனாரின் வாழ்வு தமிழ் வாழ்வாகும். இவர்தம் பணிகள் யாவும் தமிழ்ப்பணியாகும். புகழ் வெளிச்சம் பெறாத இப்புலவர் பெருமானின் தமிழ்ப்பணிகளையும் தமிழ்வாழ்வையும் இவண் அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன். 

புலவர் அ. பொன்னையன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

புலவர் அ. பொன்னையன் அவர்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் புலிகரம்பலூர் என்னும் ஊரில் வாழ்ந்த அப்புப் படையாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் மகனாக 22.09.1946 இல் பிறந்தவர். திண்ணைப்பள்ளியில் பயின்ற இவர், பின்னர் புலிகரம்பலூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். அதன் பிறகு தொழுதூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 12 வகுப்பு வரை பயின்றவர் (1964). 

கடலூர், மஞ்சள்குப்பம் பகுதியில் இயங்கிய அடிப்படை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்று ஆசிரியர் பயிற்சி பெற்றவர்(1964-1966). தனித்தேர்வராகப் புலவர், பி.லிட் படிப்புகளைப் படித்துப் பட்டம் பெற்றவர். 13.11.1979 இல் விருத்தாசலம் வட்டம், முதனை என்னும் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பயின்று 1982 இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் இளவல்(B.Ed) பட்டத்தை 1982-1984 இல் பெற்றவர். 

திட்டக்குடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982 இல் தமிழாசிரியராகப் பணியேற்றவர். பின்னர்த் தொழுதூர் அரசு   உயர்நிலைப் பள்ளியில் 1988 முதல் 1996 வரை பணியாற்றியவர். கீழக்கல்பூண்டி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2004 இல் பணியோய்வு பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்த பட்டறிவுகொண்ட புலவர் பொன்னையனார் நல்லாசிரியராக விளங்கியதுடன் பல்வேறு நூல்களை எழுதித் தமிழுக்கு வளம்சேர்த்தவர். 

புலவர் அ. பொன்னையன் அவர்கள் பள்ளி மாணவராக இருந்தபொழுது  செஞ்சி ந. நடராசன் அவர்கள் தொழுதூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். நம் புலவர் அவர்களின் தமிழார்வம் கண்டு, இவருக்கு மரபு இலக்கணங்களைப் பயிற்றுவித்து, மரபுப் பாடல் எழுதும் சூழலை உருவாக்கித் தந்தார். அது முதல், வாய்ப்பு நேரும் பொழுதிலெல்லாம் மரபுப் பாடல் வரைவதை வழக்கமாக்கிக்கொண்டு, பின்னாளில் காப்பியக் கவிஞராகப் புலவர் அ. பொன்னையன் மிளிர்ந்துள்ளார். 

தென்னார்க்காடு மாவட்டத்தில் அந்நாளில் பள்ளிகளில் கலைக்கழகம் என்ற அமைப்பு இருந்தது. அவ்வமைப்பின் வழியாக மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பேச்சாளராகவும், படைப்பாளிகளாகவும் அவர்களை மாற்றுவது ஆசிரியர்களின் கூடுதல் விருப்பப் பணிகளாக இருந்தன. நம் புலவர் அவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, திறன் வாய்ந்த பல மாணவர்களை உருவாக்கியுள்ளார். 

இல்லற வாழ்க்கை 

புலவர் பொன்னையன் அவர்களுக்கு 13.11.1972 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் மனைவியின் பெயர் கௌரி அம்மாள். இவர்களுக்கு அருள் ஒளி, அருட்சுடர், அருள்மதி (சிங்கப்பூரில் தமிழாசிரியராகவும் கல்வித்துறை அதிகாரியாகவும் பணியாற்றுபவர்), அருள் தணிகை என்னும் நான்கு பெண் மக்களும், செவ்வேள் என்ற மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

கடலூர் புலவர் சீனி சட்டையன் (திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்), அவர்களும் சிதம்பர சாமிகள் அவர்களும் புலவர் பொன்னையன் அவர்களுக்கு அருட்பிரகாச வள்ளலார் பாடல்களையும் நெறிகளையும் அறிமுகப்படுத்திய பெருந்தகைகள் ஆவர். அவர்களின் துணையால் வள்ளலார் நெறியை  இவர் வாழ்க்கை நெறியாக அமைத்துக்கொண்டவர். 1000 கணக்கான மேடைகளில் வில்லுப்பாட்டுகள் வழியாக வள்ளலார் கருத்துகளைப் புலவர் அ. பொன்னையன் தம் குழுவினருடன் கொண்டுசேர்த்துள்ளார். வானொலி, தொலைக்காட்சிகள் வழியாகவும் வில்லுப்பாட்டுகள் வழியாக வள்ளலார் கருத்துகள் பரவியுள்ளன. மனுமுறை கண்ட வாசகத்துக்கு இவர் வில்லுப்பாட்டு எழுதியுள்ளார். 


2008 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் சென்றுவரும் புலவர் அ. பொன்னையன் அவர்கள் அந்த நாட்டின் சிறப்பையும், முன்னாள் தலைமை அமைச்சர்(பிரதமர்) லீ அவர்களின் பணிகளையும் காப்பியமாக்கித் தமிழுலகுக்குத் தந்துள்ளார். 

புலவர் அ. பொன்னையன் அருளரசர் வள்ளற் பெருமான் என்ற வரலாற்றுப் பெருங்காப்பியத்தை எழுதியுள்ளார்(2003). சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், கடிதங்கள் என இவரின் படைப்புப் பணி விரிவானது. 

புலவர் அ. பொன்னையன் படைப்புகள் 

1.   மலைத்தேன் (பல்சுவைப் பாடல்கள்)    2002

2.   சிறுவர் முன் வள்ளலார் (சிறுவர்க்கு)  2002

3.   சிறுவர் முன் ஆபுத்திரன் (சிறுவர்க்கு)  2003

4.   அருளரசர் வள்ளற் பெருமான் (காப்பியம்) 2003

5.   பொற்குவியல் (சிறுவர் பாடல்கள்)       2004

6.   வண்ண மலர்கள் (சிறுவர் பாடல்கள்)   2004

7.   உலகை ஆள்வோம் (சிறுவர் பாடல்கள்)  2005

8.   சிறுவர் விரும்பும் சிறுகதைகள்         2006

9.   குமுதன் (புதினம்)                     2006

10. அக்கரைச் சீமை அத்தானுக்கு (கடிதங்கள்) 2006

11. வியப்பூட்டும் விருந்துகள் (கட்டுரைகள்)  2008

12. தமிழை அரியணை ஏற்றிடுவோம்            (2010) 

வியாழன், 31 ஜூலை, 2025

அங்கமங்கலப் பயணம்… (2)

 

 


 நெல்லை இரா. சண்முகம் ஐயாவின் பெயரைக் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர்த் (செப்டம்பர் 2024) தற்செயலாகப் பார்த்தது முதல் அவரின் தொல்காப்பியப் பணிகளையும் படைப்புப் பணிகளையும் அறியும் வேட்கையில் பல்லாயிரம் பக்கங்களைப் படித்துக் குறிப்பெடுத்தமையும், பல நூறு அறிஞர்களுடன் கலந்துரையாடி விவரங்கள் பெற்றமையும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. 

தொல்காப்பியம் குறித்து மூன்று நூல்களையும் பிற வகையில் நான்கு நூல்களையும் வெளியிட்ட பெருமைக்குரியவர் அறிஞர் நெல்லை இரா. சண்முகம். இவர் நெல்லைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, கோலாலம்பூரில் நாற்பதாண்டுகள் தொழில் நிமித்தம் தங்கியிருந்து, பணி செய்தாலும் அவரின் உள்ளத்தில் தமிழ்ப்பற்றும், பொதுத்தொண்டும் சுடர்விட்டு நின்றமையை அவரின் வரலாற்றை அறிந்தபொழுது தெரியவந்தது. 

“தேனீ” என்னும் இலக்கிய ஏட்டை மலேசியாவில் நடத்தி, ஒரு இதழாசிரியராகவும் இப்பெருமகனார் விளங்கியுள்ளார். சிங்கப்பூர், தமிழவேள் கோ. சாரங்கபாணியாரின் தொடர்பு, பினாங்கு அப்பாவு பண்டிதரின் தொடர்பு முதலியன இவரின் தமிழ்ப்பற்றுக்கு அரணாக இருந்துள்ளன. தமிழ்த்தென்றல் திரு. வி. க. வின் நூல்களில் தோய்ந்து படித்த, இவர்தம் புலமைநலம் இவரின் நூல்கள்தோறும் பளிச்சிடுகின்றன. நெல்லை இரா. சண்முகனார் மறைமலையடிகளார், பாவாணர், திரு.வி.க, நாவலர் சோமசுந்தரபாரதியார் முதலான தமிழறிஞர்களின் நூல்களைக் கற்றுப் பெற்றிருந்த தமிழ்ப்பற்றை இவரின் நூல்கள் வழியாக ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது. 

நெல்லை இரா. சண்முகம் குறித்த விவரங்களைத் தமிழகத்து நூலகங்கள் பலவற்றில் தேடிப் பெற்றேன். அவர்தம் ஊரான அங்கமங்கலம் சென்று உறவினர்களிடத்திருந்தும் சிலவற்றைப் பெற்றேன்.  மும்பை சென்று அவரின் உறவினர் பொறியாளர் க. இளங்கோவன் அவர்களைக் கண்டு உரையாடிப் பல படங்களையும் விவரங்களையும் பெற்றேன், சண்முகனார் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ்ந்து கழித்த மலேசியா, சிங்கப்பூர் சென்று அவரின்  நூல்கள் – விவரங்களைத் திரட்டினேன்  பல நூறு  மின்னஞ்சல்கள்  என்னிடமிருந்து பறந்து சென்று, இவர் பற்றிய விவரங்களைக் கொண்டுவந்தன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நெல்லை இரா. சண்முகம் குறித்த நூலொன்றினை எழுதி, அண்மையில் அணியப்படுத்தினேன். செய்திகளும், படங்களும் நூலுக்கு அணிசேர்த்தாலும் இன்னும் செய்திகள் விடுபட்டிருக்குமோ என்று நெஞ்சம் அலைப்புற்றது. 

அவ்வகையில் சண்முகம் அவர்களின் மகனார் மறைந்த மருத்துவர் தமிழப்பன் குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்குமோ?, சண்முகம் அவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் குறித்த விவரங்கள் கிடைக்குமோ? நேதாஜியின் போராட்டத்தில் பங்கேற்ற இவர்தம் தியாக வாழ்வு குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்குமோ? சண்முகம் அவர்களின் இல்லற வாழ்க்கை குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைக்குமோ? இரா. சண்முகம் நடத்திய "தேனீ" இதழினை, இதழ் வடிவில் கண்டுவிடலாமோ? என்று பலவாறு சிந்தித்து, நாளும் நாளும் உழைத்துக்கொண்டிருந்தேன். அதனால் எஞ்சிய விவரங்கள் – விடுபட்ட விவரங்கள் ஏதேனும் இன்னும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நெல்லை இரா. சண்முகனாரின் அங்கமங்கலம் என்ற ஊருக்கு இரண்டாம் முறையாக ஒரு பயணத்தை மேற்கொண்டேன்(19.07.2025). 

புதுச்சேரியிலிருந்து தனியார்ப் பேருந்து ஒன்றில் 18.07.2025 இரவு 7.45 மணியளவில் புறப்பட்டேன். பேருந்தில் படுக்கை வசதி என்றாலும் காற்று இல்லாமல் புழுக்கத்தில்தான் பயணம் தொடர்ந்தது. நான் சென்ற பேருந்து தூத்துக்குடி வழியாகத் திருச்செந்தூர் சென்றது. காலை 7.30 மணியளவில் திருச்செந்தூரை அடைந்தேன். அங்கிருந்து நெல்லை செல்லும் பேருந்தில் ஏறி, குறும்பூரை அடைந்தேன். முன்பே என் வருகையை நெல்லை இரா. சண்முகம் அவர்களின் மகள் வயிற்றுப் பெயரன் திரு. கல்யாணராமன் அவர்களிடம் தெரிவித்திருந்ததால் என்னை எதிர்கொண்டு வரவேற்று, அருகில் இருந்த அங்கமங்கலத்தில் அவரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். திரு. கல்யாணராமன் மின்சாதனப் பொருட்களைப் பழுதுபார்க்கும் கடையைக் குறும்பூரில் நடத்தி வருகின்றார். அவருக்கு இரண்டு பெண் மக்கள்; பள்ளியில் படிக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் என்னை வரவேற்றனர். அவர்களின் இல்லத்தில் குளித்து முடித்து, சிற்றுண்டி உண்டேன். 

இரா. சண்முகம் அவர்களின் குடும்ப உறவினர்கள் சிலர் என் வருகையை அறிந்து வந்து, உரையாடிச் சென்றனர். இரா. சண்முகம் அவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் குறித்த குறிப்புகள் கிடைத்தால் தந்து உதவுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். 

 


  காலை 10 மணியளவில் கல்யாணராமன் இல்லத்தை ஒட்டியிருக்கும். திரு. தமிழரசன் அவர்களைச் சந்தித்து உரையாடும் சூழல் அமைந்தது. தமிழரசன் அவர்கள் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் தம்பி வேலு அவர்களின் மகனாவார். தம் பெரியப்பா குறித்த பல செய்திகளைத் தமிழரசன் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் அப்பா வேலு அவர்களும் பெரியப்பா சண்முகம் அவர்களும் ஒன்றாக மலேசியாவில் கடை வைத்துத் தொழில் நடத்தியமையையும், அங்கு 1969 அளவில் ஏற்பட்ட கலவரத்தின்பொழுது அங்கிருந்து தப்பி வந்தனர் என்பதையும் தெரிவித்தார். மேலும் சண்முகம் அவர்களின் மகன் மருத்துவர் ச. தமிழப்பன் அவர்களின் மறைவு குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும் தங்கள் வீட்டில் இருந்த சில புகைப்படங்களையும் என்னிடம் காட்டினார். தேவைப்படும் படங்களைப் படியெடுத்துக்கொண்டேன். தம் தந்தையார் மலேசியாவிலிருந்து கொணர்ந்த சில பொருட்களையும் என்னிடம் காட்டி, நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். எனக்குத் தேவைப்படும் பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனமாராத் தெரிவித்து, ஊக்கப்படுத்தினார். அவற்றைப் படமாக்கிக்கொண்டேன். அன்பர் தமிழரசனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

 

தம்பி வேலுவின் திருமணத்தை முன்னின்று நடத்திய சண்முகம் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ள திருமண அழைப்பிதழ்(1937)

முன்பே திட்டமிட்டவாறு திரு. கல்யாணராமன் தம் தாத்தா இரா. சண்முகம் குறித்த நூல்கள், அறிக்கைகள், படங்கள் சிலவற்றை என் பார்வைக்கு முறைப்பட வைத்தார். ஒவ்வொன்றாகப் படித்துப்பார்த்து, படமாக்கிக்கொண்டேன். அவ்வகையில் இதுவரைத் தேடிக் கிடைக்காத சில புகைப்படங்கள், நாட்குறிப்புகள், நினைவுப்பொருள்கள், நூல்கள் சிலவற்றைப் பார்க்கவும் படியெடுக்கவுமாகச் சூழல் இருந்தது. தேவையானவற்றைப் படியெடுத்துக்கொண்டு, அனைத்தையும் அவர்களிடம் பாதுகாக்குமாறு சொல்லி, அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டேன்.. 

நெல்லை - பாளையங்கோட்டையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் கட்டளை கைலாசம் என் வருகைக்காகப் பகல்பொழுதில் காத்திருந்தார். நெல்லை. இரா. சண்முகம் குறித்து, சில விவரங்களைப் பெறுவதற்குக் கட்டளை கைலாசம் அவர்களுடன் தொடர்பில் இருந்து உரையாடியபொழுது பல வியப்புக்குரிய நிகழ்வுகள் நடந்தேறின. வண்ணாராப்பேட்டையில் வாழ்ந்த திருவாளர் இராசானந்தம் பற்றிய விவரங்களை அவர் வழியாகப் பெற முயன்றேன். பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுதுதான் நெல்லை இரா. கணபதி முதலியார் என்ற ம.தி.தா.இந்துக் கல்லூரிப் பேராசிரியர் குறித்து அறிய முடிந்தது. அவரின் படத்தைப் பெற முடிந்தது. மேலும் நெல்லை சைவ சபையில் தலைவராக இருந்த தா. பொன்னம்பலம் பிள்ளை பற்றிய விவரங்களையும் அறியமுடிந்தது. இவர்களைக் குறித்த மேலாய்வுகளைத் தொடர்வதற்குப் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களைச் சந்திப்பது முதன்மை என்று கருதி, அவர்களுக்கு முன்பே என் பயணத்திட்டத்தைத் தெரிவித்திருந்தேன். 

என்னை எதிர்கொண்டு அழைத்த பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்கள் முதலில் பகலுணவு உண்டவாறு உரையாடுவோம் என்று "மதுரம்" என்னும் பெயரிலான சைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்று விருந்தோம்பினார். உரையாடல் சற்றொப்ப ஒரு மணி நேரம் தொடர்ந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் மகாராசாநகர் இல்லம் சென்றோம். அவரின் அறிவார்ந்த ஆராய்ச்சிப் பணிகளைக் கண்ணுறும் வாய்ப்பும், அவர்தம் இலக்கிய வாழ்க்கை குறித்து அறியும் வாய்ப்புகளும் எனக்கு அமைந்தன. 

பேராசிரியர் கட்டளை கைலாசம்

பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் இல்லத்தில் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் முறைப்படி பாதுகாக்கப்படுவதைக் கண்ணாரக் கண்டுகளித்தேன். திருக்குறள் ஓரடியில் எழுதப்பெற்ற மூலச்சுவடியும், திருக்குறளுக்கு உரை எழுதப்பட்ட பிறிதொரு மூல ஓலைச்சுவடியும் அங்கு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். எழுத்துக் கூட்டி ஓலைகளைப் படித்துப்பார்த்தேன். முன்பே மனப்பாடமாக இருந்த திருக்குறள்களை ஓலையில் படிப்பது எளிதாக இருந்தது. பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகளையும் பேராசிரியர் கட்டளை பாதுகாக்கின்றார். சில சுவடிகளை நூலாக்கம் செய்தும், தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். செப்பேடுகள் சிலவற்றையும் நம் கட்டளை அவர்கள் பாதுகாக்கின்றார்கள்.

 

திருக்குறள் சுவடி


திருவாசகம் சுவடி

மூன்று மணி நேரம் எங்கள் உரையாடல் நீண்டது. பின்னர் நூற்றாண்டுப் பழைமையுடைய பாளையங்கோட்டை சைவ சபைக்குச் செல்லும் நோக்கில் மகிழுந்தில்  புறப்பட்டோம். இடையில் சபையின் செயலர் திரு. கிருட்டினன் எங்களுடன் இணைந்துகொண்டார். மூவரும் வழியில் இருந்த "அருவி" என்னும் புகழ்பெற்ற கடையில் தேநீர் அருந்தினோம். 

சைவ சபை இப்பொழுது தூய்மை செய்யப்பட்டு, வெள்ளையடிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. சைவ சபையின் நூல்களைப் பார்ப்பதும் அங்குள்ள பொன்னம்பலம் பிள்ளையின் படத்தைப் பார்த்துப் படி எடுப்பதும், அவர்தம் வரலாற்றை அறிந்துவருவதும் என் நோக்கமாக இருந்தது. அடுத்த முறைதான் பார்க்க முடியும் - அறியமுடியும் என்ற வகையில் தொழிலாளர்கள் வெள்ளையடிப்பதில் தீவிரமாக இருந்தனர். 

சைவ சபையின் முகப்பில் மு.இளங்கோவன்

மேம்போக்காகச் சைவ சபையை ஒரு பார்வையிட்டவாறு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் இல்லத்துக்கு மீண்டும் வந்தோம். பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களிடம் ஓலைசுவடித் தொகுக்கும் அவரின் ஆர்வம் குறித்து, அரைமணிநேரம் ஒரு நேர்காணலைக் காணொலியாகப் பதிவு செய்தோம். நெல்லைப் பயணத்தை நிலைப்படுத்தும் ஆவணமாக இப்பதிவு இருந்தது. 

நெல்லையிலிருந்து விடைபெறுவதற்கு உரிய நேரமும் நெருங்கியது. பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் துணைவியார் செய்திருந்த சிற்றுண்டியை இரவு உணவாகச் சுவைத்து உண்டோம். பேருந்து நிலையம் வரை உரையாடிக்கொண்டே பேராசிரியர் கட்டளை கைலாசம் மகிழுந்தை ஓட்டியபடி என்னை வழியனுப்ப வந்தார். அவர்தம் மகிழுந்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விவரங்களைத் திரட்டியமை புதுப் பட்டறிவாக இருந்தது. தமிழுலகம் போற்றத்தகுந்த ஆய்வுப்பணிகளில் கட்டளை கைலாசம் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றார். 

பேருந்தேறி, நெல்லைச் சந்திப்பை அடைந்ததும் அடுத்த தமிழ்ப்பணிக்கு வாய்ப்பாகச் சீர்காழிக்கு என்னைச் சுமந்துசெல்ல திருச்செந்தூர் விரைவு இரயில் காத்திருந்தது… நெல்லைச் செலவு அடுத்த பல ஆய்வுகளுக்கு வழியேற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்..