நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன்

 

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் 

[துரை. முத்துக்கிருட்டினன் கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பெரும்புலமையுடையவர். பன்னூலாசிரியர். குடந்தையில் பிறந்த இவர் சிங்கப்பூரிலும் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.] 

சிங்கப்பூரில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சிலவாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வாய்த்தது. அப்பொழுது அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றித் தம் நிறைபுலமையால் அவையினரை "மகுடிக்கு அடங்கும் பாம்புபோல்" அடக்கினார். அவர் உரையைத் தொடர்ந்து யான் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. சிலப்பதிகாரத்தில் ஈடுபாடுகொண்ட மாணவனாகிய எனக்கு இக்காலத்தில் இதுபோலும் சிலம்பினைக் குறித்து உரையாற்றும் பெருமக்கள் உள்ளனரே என்று வியப்புற்றேன். என் மகிழ்வை அவையில் வெளிப்படுத்திப் பேசினேன். நிகழ்ச்சியின் நிறைவில் துரை. முத்துக்கிருட்டினனாரின் உரைக்குப் பாராட்டுத் தெரிவித்து, விடைபெற்றுத் தமிழகம் திரும்பினேன். அதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தன. 

தொல்காப்பிய மன்றத்தைச் சிங்கப்பூரில் கட்டியெழுப்புவதற்கு அருமை நண்பர் திரு. காமராசனாரின் பெருந்துணையுடன் ஓர் இலக்கியச் சந்திப்பைச் சிலவாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினோம். சிங்கப்பூர் அறிஞர் பெருமக்கள் பலரும் எங்கள் முயற்சிக்குப் பேருவகையுடன் ஆதரவு நல்கினர். அப்பொழுது மீண்டும் துரை. முத்துக்கிருட்டினனாரைச் சந்திக்கும் வாய்ப்பு கனிந்தது. அதுபொழுது அவர் கையுறையாக வழங்கிய அரும்பெரும் இலக்கண ஆய்வு நூலாகியஒருதலைக் காமம்” (கைக்கிளைதொல்காப்பியம்) என்னும் நூலின் படியைப் பெற்றுக், கொண்டுவந்தேன். வந்தவுடன் அந்த நூலின் ஆய்வுப்போக்கையும், நோக்கையும் படித்து மகிழ்ச்சியுற்றேன்

தொல்காப்பியரின் கைக்கிளை குறித்த கருத்தினைப் பிற்கால உரையாசிரியர்கள் எவ்வாறு பிழைபட உணர்ந்து, பொருளுரைத்துள்ளனர் என்பதையும் அந்தப் பிழைப்பட்ட பொருளைப் பிற்காலத்து அறிஞர்கள் தலைமுறைதோறும் தொடர்ந்து கடத்திவந்துள்ளனர் என்பதையும் அறிஞர் துரை. முத்துக்கிருட்டினனார் அந்த நூலில் சிறப்பாக விளக்கியிருப்பார்கள். இந்த நூல் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்குரிய இடுநூலாகும். அறுநூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைக் காட்டி, மிகச் சிறந்த ஆய்வு நூலாக இதனைப் படைத்திருப்பார். இந்த ஆய்வினை நெறிப்படுத்திய அறிஞர் பெருந்தகை பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் ஆவார்கள்

ஒருதலைக் காமம் (கைக்கிளைதொல்காப்பியம்) நூலின் அமைப்பு 1. நுழைவாயில், 2. மண்ணின் மணமும் பெண்ணின் குணமும், 3. கைக்கிளை இலக்கணம் உரைத்தவரும்- உரைத்தவறும், 4. கைக்கிளை ஒழிபும் பிழிவும், 5. மகளிர் மனத்தின் உறுதியும் மணத்தில் உறுதியும் 6. முடிவுரை என்றவாறு இயல் பிரிப்பினைக்கொண்டு, அமைந்துள்ளது. கைக்கிளை குறித்து, இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும், பிற்காலத் தொல்காப்பிய ஆய்வாளர்களும் கொண்டிருந்த கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும், தாம் கண்ட ஆய்வு உண்மைகளை நிறுவ இவர் எடுத்துள்ள முயற்சியும் சான்றுகளும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. ஆய்வின் இயல் பிரிப்பினை மேலோட்டமாகப் பார்ப்பவர்க்குக் கூட, இந்த ஆய்வின் பெருமை தெற்றென விளங்கும். நூலினைப்  படித்த கையோடு, முத்துக்கிருட்டினரின்  நினைவு என் நெஞ்சில் நிலைத்துப் படிந்தது

தொடர்ந்த என் தொல்காப்பியத் தேடலில் முத்துக்கிருட்டினர் அவர்களை மீண்டும் நினைவுகூரும் வாய்ப்பு கனடாவில் நடைபெற்ற கனடா தொல்காப்பிய மன்றத்தின் ஆராய்ச்சி மாநாட்டின்பொழுது மீண்டும் துளிர்விட்டது. தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சிக்கு அவரின் படத்தை மீண்டும் தேடத் தொடங்கியபொழுது,  இப்பெருமகனாரின் வாழ்வியலும் பணிகளும் தமிழுலகின் கவனத்திற்கு வரவில்லையே என்று கவலைகொண்டிருந்தேன். அண்மையில் என் நண்பர் முனைவர் இரா. அருள்ராசு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது  துரை. முத்துக்கிருட்டினனாரின்  பெருமையை இருவரும் அசைபோட்டோம். இவர்தம் ஆற்றலையும் பெரும்புலமையையும்  தமிழுலகுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்திற்கு ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் என்றும் கருதி,  எழுதி, அறிமுகப்படுத்துவதில் மகிழ்கின்றேன்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொருக்கை என்னும் ஊரில் வாழ்ந்த உழவர் குடியைச் சார்ந்த துரைசாமி பிள்ளை, இலக்குமி அம்மாள் ஆகியோரின் மகனாக 01.06.1947 இல் துரை. முத்துக்கிருட்டினன் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரில் பயின்றவர்.  ஆறு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கும்பகோணத்தில் அமைந்துள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். தம் கல்லூரிப் படிப்பைத் தஞ்சை- கரந்தையில் அமைந்துள்ள புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்றவர் (1966-1970). கண்டிப்புக்கும் புலமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் அப்பொழுது கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர்

கரந்தைக் கல்லூரியில் அப்பொழுது ஒவ்வொரு வகுப்பிலும் நூறு மாணவர்கள் படிப்பது வழக்கம். நான்கு ஆண்டு புலவர் படிப்பில் மொத்தம் நானூறு மாணவர்கள் தமிழ் படித்தனர். இணை வகுப்புகள் அமையும்பொழுது இருநூறு மாணவர்களை அமரச்செய்து ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது வழக்கமாம். பேராசிரியர்கள் கு.சிவமணி, .பாலசுந்தரம் அடிகளாசிரியர், சி.கோவிந்தராசனார், சிவப்பிரகாச சேதுவராயர் முதலான பெரும்புலமைச் சான்றோரிடம் தமிழ் கற்ற துரை. முத்துக்கிருட்டினன் படிப்பிலும் விளையாட்டிலும் பெருந்திறன் பெற்றவராக விளங்கியவர்

துரை. முத்துக்கிருட்டினன் கரந்தையில் கல்வி பயிலும்பொழுது கடவூர் மணிமாறன்(முத்துசாமி), பிரபஞ்சன்(வைத்தியலிங்கம்) உள்ளிட்டவர்கள் உடன் பயின்றவர்கள். சைதாப்பேட்டை அசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபொழுது இவருடன் செந்தலைப் புலவர் கௌதமன் அவர்கள் உடன் பயின்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பாபநாசத்தில் இருந்த பாவேந்தர் தமிழ்க் கல்லூரியில் 1970 முதல் 1972 வரை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பொழுது(1972 இல்) அங்கு வந்திருந்த தந்தை பெரியாரைக் கண்டு உரையாடியவர். அவரிடம், தஞ்சையில் முன்பொருபொழுது உரையாற்றிய தந்தை பெரியார் “தமிழைக்  காட்டுமிராண்டி மொழி” என்றமைக்காகத் தம் மறுப்பைத் தெரிவித்து உரையாடினார். தந்தை பெரியார் அவ்வாறு சொன்னமைக்கான காரணத்தை முத்துக்கிருட்டினனுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கியமையை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்பவர்

காலத் தேவையறிந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகியோர் அவரவர் காலத்தில் நூல் இயற்றியமை போல் இக்காலத்தில் காலத் தேவையறிந்து மக்களுக்கு உதவும் நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் எழுதாமையால் தாம் அவ்வாறு கூற நேர்ந்தமையைத் தந்தை பெரியார் விளக்கியபொழுது நம் துரை. முத்துக்கிருட்டினன் அமைதியடைந்தார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் 1972 முதல் 1980 வரை அரசியல் ஆர்வம்கொண்டு, பணிக்குச் செல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு முயன்றும் அப்பணி தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. 1982 இல் சென்னை முத்தியாலுபேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு வரை அப்பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். 

பள்ளியில் பணியாற்றியபடியே தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள பி. லிட்., முதுகலை(M.A) கல்வியியல் இளையர் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முதலிய  பட்டங்களைப் படித்துப் பெற்றவர். தம் ஆய்வியல் நிறைஞர் படிப்புக்காகக்  கைக்கிளைதொல்காப்பியம்” என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி அப்பட்டத்தைப் பெற்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் இல்லற வாழ்க்கை: 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களுக்கு 1970 இல் வசந்தகுமாரி அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சிதம்பர பாரதி, சர்மிளா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சிதம்பர பாரதி தொழில்நுட்பம் பயின்று, தற்பொழுது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு, அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அரசியல் செல்வாக்கோ, அறிவைப் போற்றும் ஆளுமைகளோ இவருக்கு அமையாததால் இவர் பணிகள் குடத்துக்குள் ஏற்றிய விளக்காக உள்ளன

துரை. முத்துக்கிருட்டினன் தமிழ்க்கொடைகள்

1. ஒருதலைக் காமம் (கைக்கிளை -- தொல்காப்பியம்)     ஆய்வு நூல்

2. திருக்குறள் உரை

3. தமிழ் இலக்கணம்

4. மதுரையைக் கண்ணகி    எரிக்கவில்லை  (சிலப்பதிகார ஆய்வேடு)

5. நந்திக் கலம்பகம்   (நாடகம்)

6. அகல் விளக்கு    (கவிதை)

7. இரட்டை நவமணி மாலை   (கட்டுரைகள்




வெளியீடு காண இருப்பவை: 

8.  குறளறனும் மனுமுரணும்

 (1. "திருக்குறள் -- மனுதர்மத்திற்கு  எதிரானது;   2. பரிமேலழகர், தம் உரை          மூலம் வருணாச்சிரமத்    தர்மக் கோட்பாடுகளைத் திணிக்கிறர்;  3. பரிமேலழகரின் உரை      முரண்பாடுகள்;  என்பன பற்றிய விளக்கமும்  மற்றும்   4. திருக்குறட்குப் -- புத்துரையும்         அடங்கியது.)

9. சிலம்பிய சிலம்பும்     புலம்பிய சதங்கையும்

      (சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்    கட்டுரைகள் -- விரைவில்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழாய்வு முயற்சிகளையும், எழுத்துப்பணிகளையும் போற்றி இவருக்கு உரிய சிறப்புகளையும் பெருமைகளையும் அளிப்பது தமிழர் கடமையாகும்.

சனி, 8 பிப்ரவரி, 2025

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்

 

மா.  வயித்தியலிங்கன்
(29.11.1935 – 22.05.2022) 

[மா.  வயித்தியலிங்கன் குடந்தையில் பிறந்த  தமிழிசை அறிஞர்; திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலராகப் பணியாற்றியவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர். இலால்குடியில் இயங்கிவரும் நாடுகாண் குழுவினைச் சுந்தரேசனாரின் மறைவுக்குப் பிறகு வழிநடத்தியவர். இவர் பன்மொழி அறிஞர். வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழிசை குறித்து நிகழ்ச்சிகள் நடத்தியவர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலியவற்றை இசையுடன் பாடிப் பரப்பியவர்.] 

தமிழும் இசையும் அறிந்த அறிஞராக விளங்கியவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ஆவார். கும்பகோணத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பேட்டை நாணயக்காரத் தெருவில் வாழ்ந்த வயி. மாசிலாமணி செட்டியார் – மா. மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகனாக 29.11.1935 இல் பிறந்தவர்.  (இவர்களின் குடிவழியினர் சோழபுரம் செட்டியார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சோழபுரம் தெரு இவர்களின் உறவினர்கள் வதியும் தெருவாகும்). கும்பகோணத்தில் அமைந்துள்ள நகர உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்சு, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். ஆய்வியல் நிறைஞர் படிப்பினை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்றவர். திண்டுக்கல்லில் உள்ள G.T.N கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1965 முதல் 1994 வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி அறிஞராக விளங்கியவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரிடம் பண்ணிசையைப் பயின்ற பெருமைக்குரியவர். இவரின் உடன் பிறந்த தம்பி மா. கோடிலிங்கம் அவர்களும் தமிழிசை பயின்ற பெருமகனார் ஆவார். 

மா. வயித்தியலிங்கன் தமிழகத்தின் திருக்கோவில்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் அமைப்புகளில் இசை குறித்தும், சமயம் குறித்தும், கலைகள் குறித்தும் அறுபது ஆண்டுகளாகச் சொற்பொழிவுகள், கருத்துரைகள் இசைநிகழ்ச்சிகள் நல்கிய பெருமைக்குரியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் இசைத்தமிழ் குறித்த பாடத்திட்டங்களை வகுத்து வழங்கிய அறிஞராகவும் போற்றப்படுபவர். 

சைவ சித்தாந்தத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இராமலிங்கர் பணி மன்றம், பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம், சென்னை இசைச் சங்கம், தமிழ் இசைக்கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழிசை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், சிறப்புரைகள் வழங்கும் பேராசிரியராகவும் விளங்கியவர். இராணி மேரிக் கல்லூரியில் இசைத்துறைத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர். 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வழியில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை இசையுடன் பாடி, மக்கள் மனத்தில் தமிழிசை உணர்வினை ஊட்டியவர். சென்னை வானொலியில் இவர்தம் இசையுரைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சன் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகைத் தொலைக்காட்சி, சங்கரா தொலைக்காட்சி, தென்றல் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழிசையைப் பாடி, இசைத்துறைக்குத் தொண்டாற்றியவர். 

செம்மொழி நிறுவனத்துக்காகப் பத்துப்பாட்டு, தொல்காப்பியம், திருக்குறள் முதலானவற்றை இசைவட்டுகளில் பாடி, உலகம் முழுவதும் தமிழிசை பரவுவதற்கு வழிசெய்தவர். 

தமிழ் வள்ளல் பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் நிறுவிய இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலராகப் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை முதலிய ஊர்களில் தமிழிசை பரவுவதற்கும் வள்ளலார், காந்தியக் கொள்கைகள் பரவுவதற்கும் தொண்டாற்றியவர். 

மக்கள் காவலர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் ஆண்டு விழாக்களில் இசையறிஞர்களை அழைத்து, அந்த நிகழ்வுகளைத் திறம்பட நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

சென்னைக் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள இறைப் பணி மன்றத்தின் சார்பில் இறைத்தொண்டும் இசைத்தொண்டும் செய்தவர். 

இலால்குடி எனப்படும் திருத்தவத்துறையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களால் நிறுவப்பட்ட நாடுகாண் குழுவின் பணிகளில் அவர் மறைவுக்குப் பிறகு இருபத்தைந்தாண்டுகளாகப் பணியாற்றியவர். கமலத் தியாகராசன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து விருதளித்துப் போற்றிய பெருமைக்குரியவர். 

தமிழர் பண்பாடு, ஓம் சக்தி, ஞானத்திரள் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி வழங்கியவர். 

மக்கள் தொலைக்காட்சிக்காகப் பண் இசை வித்தகர்கள் என்ற தொடரினை டாக்டர் சுந்தர், இசைக்கவி இரமணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி மக்கள் மன்றத்துக்குப் படைத்தவர். இந்தத் தொடர் உலக அளவில் போற்றப்பட்ட இசைத்தொடாராகும். 

சிலப்பதிகாரத்தைப் பல்வேறு இசை வடிவங்களில் ஊடகங்களில் வெளியிட்டு, சிலப்பதிகார இசை பரவுவதற்குத் தொண்டாற்றியவர். 

திண்டுக்கல்லில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது தெய்வ நெறி சங்கம் என்ற அமைப்பை நிறுவி, மாணவர்களின் துணையுடன் அனைவருக்கும் இலக்கிய ஆர்வம் ஏற்படும் வகையிலும் நன்னெறிக்கருத்துகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டி மன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி, தமிழகத்து அறிஞர்களை அப்பகுதியில் வாழ்ந்த  அனைத்து மக்களும் அறியும் வகையில் தொண்டாற்றியவர். 

பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினம், நாடக அறிஞர் இராமானுஜம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து “கைசிகி நாடகம்” அரங்கேறுவதற்கு உதவியாக இருந்தவர். சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, “புறஞ்சேரி” என்னும் இசைநாடகம் புதிய நாடக உத்திகளுடன் இவரால் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் நடிக்கப்பட்டது. 

ஆத்திரேலியா நகரின் சிட்னியில் இவருக்குத் திருக்குறள் தொண்டர் என்ற விருதினை உலகத் தமிழர் கழகம் வழங்கிப் பாராட்டியது. இவர்தம் இசையுரையைச் சிட்னியிலும் மெல்பர்னிலும் வாழும் தமிழார்வலர்கள் விரும்பிக் கேட்டனர். 

மா. வயித்தியலிங்கன்

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்கள் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் தம் தம்பி மா. கோடிலிங்கம் அவர்களுடன் சென்று, டெக்சாசு, மாநிலத்தின் முருகன் ஆலயத்தில் இசையுரை வழங்கியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகம், பாஸ்டன் காளிகாம்பாள் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் இவரின் இசைப்பொழிவுகள் நடந்துள்ளன. 

மா. வயித்தியலிங்கன் அவர்களின் இல்லற வாழ்க்கை: 

மா. வயித்தியலிங்கன் அவர்களுக்கு 1960   இல் திருமணம்  நடைபெற்றது. இவர் மனைவியின் பெயர் வயி. நாகரத்தினம் என்பதாகும். இவர்களுக்கு வயி.சிவசங்கரன், வயி. சிவகுமாரன், வயி. சிவசுப்பிரமணியன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் பெற்ற விருதுகள்: 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கனின் இசைப்பணியையும், சமயப்பணியையும் போற்றிப் பல்வேறு நிறுவனங்களும் ஆதீனங்களும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கியுள்ளன. அவற்றுள் சில: 

1.   குன்றக்குடி ஆதீனம்: தமிழாகரர்

2.   திண்டுக்கல் சிவபுர மடம்: தமிழ் விரகர்

3.   கோவிலூர் மடம்: சிலம்பிசைச் செல்வர்

4.   சிருங்கேரி மடம்: சைவப் பேரிசைககடல்

5.   திருவாவடுதுறை ஆதீனம்: சம்பந்தர் தமிழ்நெறிச் செல்வர்

6.   சன்மார்க்க சங்கம், விழுப்புரம்: சன்மார்க்க நெறிபரப்பும் சீலர்

7.   கோவைத் தமிழ்ச்சங்கம்: தமிழ்நெறிச் செம்மல்

8.   இராமலிங்கர் பணி மன்றம்: இசைக்கலைச் செல்வர்

9.   ப. சு .நாடுகாண் குழு: பெரும்பாண நம்பி

10. பொங்குதமிழ் மன்றம், பண் இசை மாமணி

11. தமிழ்நாடு அரசு: இளங்கோ அடிகள் விருது…. 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்களின் நூல்கொடை:

1.   வடிவுடை மாணிக்க மாலை

2.   விண்ணப்பக் கலிவெண்பா

3.   அருள் விளக்க மாலை

4.   பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி உரை

5.   நலந்தரு பதிக உரை

6.   மூத்த பிள்ளையார் பிரபந்த திரட்டுத் தொகுப்பு 

அச்சில்:

7.   பண் வகுத்தது எப்படி?

8.   அய்யனார்

9.   மாரிமுத்தா பிள்ளை பிரபந்த திரட்டு

10. சைவ நியமம்

11. பெரிய புராணம் வினா-விடை

12. கட்டுரைத் திரட்டு 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்குச் சென்னையில்  நூற்றாண்டு விழா எடுத்தும் மலர் வெளியிட்டும், பண்ணாராய்ச்சி வித்தகர் பாடியிருந்த ஒலிநாடாக்களில் இருந்த பாடல்களை ஒலிவட்டில் தந்தும் தமிழிசைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றிய பெருமகனார் மா. வயித்தியலிங்கன் 22.05.2022 இல் இயற்கை எய்தினார். இவர்தம் தமிழிசைப் பங்களிப்பு உலகம் உள்ளவரை நினைவுகூரப்படும். 


தொடர்புடைய பதிவு இங்கு உள்ளது.