நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள்

 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன்

[பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் மொழியியல் அறிஞர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் 23 நூல்களை எழுதியுள்ளார். அசாம், நாகாலாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மொழி குறித்த அகராதியை உருவாக்கியவர்]

 பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த சந்தனசாமி – செயமேரி ஆகியோரின் மகனாக  13.07.1948 இல் பிறந்தவர். புதுச்சேரியில் உள்ள பாத்திமா பள்ளியில் தொடக்க, உயர்நிலைக் கல்வி பயின்ற பின், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றவர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆசியவியல் மொழியியலும், மொழியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

புதுவை அரசிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் கல்வித்துறைப் பணிகளில் ஈடுபட்டு, பணியாற்றியவர். மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) ஆய்வு உதவியாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்(1972-1977). நாகாலாந்து, அசாம் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் பேசும் தங்கூல் (Tangkhul) மொழியை ஆராய்ந்து, அம்மக்களின் மொழிக்கு இலக்கணமும், அகராதியும் எழுதியவர். பண்பாட்டுத் தளத்திலும் பல ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும், தேர்வுநெறியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்கும் புதுவை அரசுப்பணியில் உள்ள பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகளுக்கும் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் பல்வேறு ஆய்வு நிறுவனங்களிலிருந்து நிதிநல்கைகள் பெற்று ஆய்வறிஞராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய சிறப்பிற்குரியவர். அவ்வகையில் செர்மனி நாட்டின் மூனிச்சு நகரில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தங்கூல், இந்தி, பிரெஞ்சு முதலிய மொழிகளை அறிந்தவர். இவர் மேற்பார்வையில் 11 பேர் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர்; 40 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கலந்துகொண்டு வழங்கியவர்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்து மூன்று நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தொல்காப்பியத்தின் சிறப்புரைக்கும் வகையில் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள் ஆகிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். தொல்காப்பியத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்துரைக்கும் பெருந்திறன் பெற்றவர். இவர்தம் தொல்காப்பியப் புலமை, ஆய்வு ஆளுமையைப் போற்றும் வகையில் இன்று(18.04.2025) புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் இவருக்குத் “தொல்காப்பிய ஆய்வறிஞர்” என்னும் உயரிய விருதளித்துப் போற்றுவதில் உலகத் தொல்காப்பிய மன்றம் பெருமைகொள்கின்றது. 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்களின் இலக்கியக் கொடைகள்:

  1. (2025) Le Tour De Pondy (Pondicherry Tourist Guide book), Author’s Publication.
  2. (2012) Spoken Tamil for Foreigners: A-Team Info Media Publishers, Chennai
  3. (1996) Tangkhul Naga Dictionary: Central Institute of Indian Languages (CIIL), Mysore.
  4. (1988) Language Use in Mass Media: Creative Publishers, New Delhi
  5. (1987) Tangkhul Grammar: CIIL, Mysore
  6. (1986) Seminar on Dialectology (edited): Tamil University, Thanjavur
  7. (1982) Tangkhul Folk Literature: CIIL, Mysore
  8. (1981) Tamil clitics: Dravidian Linguistics Association, Trivandrum
  9. (1980) Tangkhul Phonetic Reader: CIIL, Mysore
  10. (2024) Nenjin Alaikal (நெஞ்சின் அலைகள்), Author’s Publication, Pondicherry.
  11. (2024) Piranjchiyar Aatchiyil puducherry. (பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி), Author’s Publication, Pondicherry.
  12. (2014) Puthucheery maavaTTa TheevaalayangkaL (புதுச்சேரி மாவட்டத் தேவாலயங்கள்), Nanmozhi Pathippakam, Pondicherry
  13. (2009) Mozhiyiyal Nookkil Tolkappia, Sanga Ilakkiya Aayvugal. (மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள்), International Institute of Tamil Studies, Chennai.
  14. (2001) Moliyiyal Nookkil Tolkappiam (Linguistic View on Tolkappiam), (மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்), Oriental Longmans, Ltd.: Chennai.
  15. (1993) Thagaval thodarpiyal (Mass Communication) (தகவல் தொடர்பியல்), Muthu Patippagam, Villuppuram.
  16. (1993) Moliyiyal Sinthanaikal (A Collection of Articles in Tamil Linguistics): (மொழியியல் சிந்தனைகள்). Maniam Patippagam, Kurichipadi
  17. (1992) Ilakkiya Saaral (a Collection of Articles in Tamil Literature): (இலக்கியச் சாரல்). Manian Patippagam, Kurinchipadi.
  18. (1990) Karaikal - Putucheri Teruppeyar Aayukal (A Study on the Street Names of Pondicherry and Karaikal): (காரைக்கால் புதுச்சேரி தெருப்பெயர் ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram
  19. (1989) Vinnai Totum Vilutual (Collection of Free Verse Poems): (விண்ணைத் தொடும் விழுதுகள்). Muthu Patippagam, Villupuram
  20. (1988) Samuga Moliyiyal Agaraati (A Glossary of Tamil Sociolinguistics): (சமூக மொழியியல் அகராதி). Muthu Patippagam,Villupuram
  21. (1987) Iru Moliya Aayvukal (Bilingual Studies in Tamil): (இருமொழிய ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram
  22. (1987) Kilai Molikal (Dialectology in Tamil): (கிளை மொழியியல்), Muthu Patippagam, Villupuram
  23. (1986) Moliyiyal Irattai Valakku (Diglossia in Tamil): (மொழியியில் இரட்டை வழக்கு), Manivasagar Patippagam, Madras.

வியாழன், 17 ஏப்ரல், 2025

முனைவர் மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை, தொடரும் தொல்காப்பிய மரபு நூல்கள் வெளியீட்டு விழா! தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா!

 


நாள்: 18.04.2025, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி - 8.30 மணி 

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை: பேராசிரியர் மு.பா. இராமானுசம் I திரு. தூ. சடகோபன் I பாவலர் ஆறு. செல்வம் I I முனைவர் உரு. அசோகன் I  பேராசிரியர் இரா. கோவலன் I

நூல்கள் வெளியீடு: மாண்புமிகு பேரவைத் தலைவர் 

ஏம்பலம் திரு அரங்க. செல்வம்

நூலின் முதல்படி பெறுதல்: திரு. க. குணத்தொகையன் I “தாமரைத்திரு” வில்லியனூர் கி. முனுசாமி I திரு. அ. சக்திகுமார்  I பேராசிரியர் செ. பெரியாண்டி I திரு. மு. அருள்செல்வம் I திரு. செ. திருவாசகம்

விருதுகள் வழங்கி, அருளாசியுரை: 

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

பாராட்டுப்பெறும் தொல்காப்பிய அறிஞர்கள்

“இலக்கிய மாமணி” அறிஞர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர்

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன், புதுச்சேரி

பேராசிரியர் பொ. நா. கமலா, சிவகாசி

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன், சிங்கப்பூர் 

நூல்கள் அறிமுகவுரை

பேராசிரியர் பா. பட்டம்மாள் I மருத்துவர் க. கலைவேந்தன்

நன்றியுரை: பேராசிரியர் வேல். கார்த்திகேயன்

அழைப்பின் மகிழ்வில்

உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: +9442029053






சனி, 5 ஏப்ரல், 2025

தமிழ்ச் செம்மல் புலவர் வே. பதுமனார்

புலவர் வே. பதுமனார் 

[புலவர் வே. பதுமனார் வேலூர் மாவட்டம், குடியேற்றம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் என்ற அமைப்பினை ஏற்படுத்திக் குடியேற்றத்தில் தமிழ்ப்பணியாற்றி வருபவர். வள்ளலார் நெறியைப் பின்பற்றுபவர்; பன்னூலாசிரியர்; சொற்பொழிவாளர். தமிழியக்கம் என்ற அமைப்பின் பொருளாளராகவும் விளங்குபவர்] 

வேலூர் மாவட்டம் குடியேற்றத்தை நினைக்கும்பொழுதெல்லாம்முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” என்னும் இலக்கிய அமைப்பை நிறுவித் தமிழ்த் தொண்டாற்றிவரும் புலவர் வே. பதுமனார் அவர்கள் என் நினைவில் நிலைபெறுவார்கள். அவ்வமைப்பை நேர்த்தியாக வளர்த்தெடுத்து, ஆண்டுதோறும் அறிஞர் பெருமக்களை அழைத்து ஒரு கிழமை இலக்கியத் திருவிழாவைப் புலவர் வே. பதுமனார் அவர்கள் செம்மாப்புடன் நடத்தி, சீர்த்திபெறுவது வழக்கம். 

நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது புலவர் வே. பதுமனார் அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுமுறை முத்தமிழ்ச் சுவைச்சுற்ற இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு, அவர்களின் அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டுப்புறப் பாடல்களைத் தரையிசைப் பாடல்கள் என்னும் தலைப்பமைத்து மக்கள் மன்றத்துக்கு அறிமுகம் செய்யும் பேறு புலவர் வே. பதுமனார் அவர்கள் வழியாகக் கிடைத்தது. 

இலக்கிய நிகழ்வுகளில் புலவர் வே. பதுமனார் அவர்களைச் சந்திப்பதோடு அமையாமல் என் அன்பிற்குரிய மாணவர் சுகுமார் இல்லம் செல்லும்பொழுதும் (சுகுமார் அவர்களின் ஊரும் குடியேற்றமாகும்) மறவாமல் வே. பதுமனார் அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். விருந்தோம்பலில் புலவர் கைதேர்ந்தவர். அன்புடன் வரவேற்றுப் போற்றுவார். சிலபொழுது சந்திக்கும் வாய்ப்பு அமையாத நிலையில் தம் மாணவர்களை அனுப்பிக் குடியேற்றத்தில் என்னை வரவேற்று மகிழ்வதையும் புலவர் அவர்கள் பலமுறை செய்துள்ளார்கள். கடந்த கால் நூற்றாண்டுக் காலம் பதுமனாருடன் பழகும் வாய்ப்புப் பெற்றமையை நினைத்து மகிழ்கின்றேன். 

  புலவர் பதுமனாரின் “முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” இலக்கிய அமைப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் குடியேற்றம் பகுதியில் அரிய தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழாவில் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொண்டு அருமையான இலக்கியப் பொழிவுகளையும் பட்டிமன்றங்களையும் நிகழ்த்துவது உண்டு. பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் முத்தமிழ்ச் சுவைச்சுற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளனர். அவ்வகையில் சாலமன் பாப்பையா, அப்துல் ரகுமான், அப்துல் காதர், கு. ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன் திருவாரூர் சண்முகவடிவேல்  உள்ளிட்ட பெருமக்களின் உரைகளால் குடியேற்றத்தில் தமிழ்ப்பயிரின் விளைச்சல் அதிகம் எனலாம். புலவர் வே. பதுமனாரின் மாணவர்கள் இந்த விழாக்களை மிகச் சிறப்பாக நடத்தித் தம் ஆசிரியருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தருவதைக் கண்ணாரக் கண்டுகளித்துள்ளேன். 

புலவர் வே. பதுமனார் அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியர் ஆவார். மிகச் சிறந்த சொற்பொழிவாளர்; மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; நூலாசிரியர்; தமிழியக்கம் என்னும் அமைப்பின் பொருளாளர்; முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் நிறுவுநர். வள்ளலார் வழியில் வாழ்க்கையை நெறிப்பட அமைத்துக்கொண்டவர். தம் தந்தையார் வழியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்திவருபவர். இத்தகு பெருமைக்குரிய வே. பதுமனார் அவர்களின் சிறப்புகளை இவண் தொகுத்து வழங்குவதில் மகிழ்கின்றேன்.

புலவர் வே. பதுமனாரின் தமிழ் வாழ்க்கை

புலவர் வே. பதுமனார் அவர்கள் 02. 04. 1936 இல் குடியேற்றத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சாமி. கு. வேலாயுதம் - இராசம்மாள் என்பனவாகும். வே. பதுமனாரின் இயற்பெயர் வே. பத்மநாபன் என்பதாகும். தொடக்கக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், ஆசிரியர் பயிற்சியை ஆர்க்காடு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகத் தமிழ் வித்துவான், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாகக் கல்வியியல் இளையர்(B.Ed.) பட்டம் பெற்றவர். 1961 முதல் 1994 வரை  33 ஆண்டுகள் குடியேற்றம் திருவள்ளுவர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவும்,  தமிழாசிரியராகவும்,  முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். பல்லாயிரம் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவித்த பெருமை இவருக்கு உண்டு. 

புலவர் வே. பதுமனார் அவர்கள் ஜெயக்கொடி அம்மையாரை 20.08.1964 இல் மணந்து, இல்லறப் பயனாய்ப் பொற்கொடி (இளநிலைப் பொறியாளர்), பவளக்கொடி(தமிழாசிரியர்), விசுவநாதன் (முதுநிலைப் பொறியாளர், இந்து ஆங்கில நாளேடு) ஆகிய மக்கள் செல்வங்களைப் பெற்று மாண்புற வாழ்ந்துவருகின்றார். 

புலவர் வே. பதுமனார் வகுப்பறைக்குள் பாடம் நடத்துவது மட்டும் தம் பணி என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் மக்கள் மன்றங்களில் உரையாற்றி, தமிழுணர்வு பரப்பிய தகைமிகு செம்மல் ஆவார். சங்கப் பனுவல்கள், திருக்குறள், வள்ளலார் பாடல்கள், பாவேந்தரின் தமிழுணர்வுப் பாடல்களை மக்களிடம் கொண்டுசேர்த்த அறிநெறிச் செம்மல் இவர். வானொலிகளில் இவர்தம் உரைகள் உலகை வலம் வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் தோன்றிப் பட்டிமன்றங்களைத் தலைமை தாங்கி நடத்திய பாங்கும் இவருக்கு உண்டு. 

விருதுகளும் பெருமைகளும் 

புலவர் வே. பதுமனார் அரசு சார்பிலும் பல்வேறு தகுதிமிகு அமைப்புகள் சார்பிலும் வழங்கப்பெற்ற விருதுகளை ஏற்று, அந்த விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். அவ்வகையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருது(2017), தூய தமிழ்ப் பற்றாளர் விருது(2020) குறிப்பிடத்தகுந்தவை ஆகும். வாணியம்பாடி முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ப்பணிச் செம்மல் விருது, கவிக்கோ விருது(2022), புதுக்கோட்டை கம்பன் கழகம் வழங்கிய இலக்கிய மாமணி விருது முதலியன குறிப்பிடத்தகுந்த விருதுகளாகும். 

அயலகச் செலவு 

புலவர் வே. பதுமனார் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஏற்றமிகு உரைகளையும் பொழிவுகளையும் வழங்குவதற்குச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றுவந்தவர். 

தமிழ் மொழிக்கும் இன மேம்பாட்டுக்கும் பயன்படும் வகையில் இவர் பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதித் தமிழ்ப்பணியாற்றியமை போல் பல்வேறு சிறப்பு மலர்களையும் வெளியிட்டுத் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். அவ்வகையில் இவர் உழைப்பில் வள்ளுவர் வழிநடப்போம்(1998), வெட்டுவானம் திரு. வி. க. நூற்றாண்டு விழா மலர்(1999), இந்தியக் குடியரசு பொன்விழா மலர்(2000), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி பொன்விழா மலர் (2002), வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதனின் கல்வியின் மேலாண்மை (2007),  குடியேற்றம் வள்ளலார் பள்ளிப் பவளவிழா மலர்(2010), மு. வ. நூற்றாண்டு விழா மலர் (2013), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழா மலர் (2018), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழாக் கவிமலர் (2018), குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் அறக்கட்டளை வெள்ளிவிழா மலர் (2022) முதலிய மலர்களை வெளியிட்டுத் தமிழக வரலாற்றின் சில பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

வேலூரில் வாழ்ந்துவரும் கல்விக்கோ கோ. விசுவநாதன் ஐயா நிறுவிய தமிழியக்கம் அமைப்பு உலகு தழுவிய அமைப்பு ஆகும். இதன் பொருளாளராக இருந்து, புலவர் வே. பதுமனார் அவர்கள் தம் முதுமைப் பருவத்தும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூற்றாண்டு விழாவினைக் கண்டு, தமிழன்னைக்குப் புகழ்சேர்க்குமாறு புலவர் பெருந்தகை வே. பதுமனாரைப் போற்றி வணங்குகின்றேன். 











வே. பதுமனார் தமிழ்க்கொடை 

1.   பொன்முடி தமிழ்த்துணைவன் 11 ஆம் வகுப்பு – 1978

2.   பொன்முடி தமிழ்த்துணைவன் 12 ஆம் வகுப்பு – 1980

3.   கட்டுரைத் தீங்கனிகள் – 1984

4.   நடுத்தெரு நாகரிகம் – 1988

5.   வள்ளுவர் வழி நடப்போம் உரைநூல் - 1989

6.   பதுமனார் தமிழ்த்துணைவன் – 1990

7.   அம்பலம் - 1997

8.   கீத தாகம் – 1998

9.   மாசுபடா மாரியம்மன் தாலாட்டுப் பாமாலை - 1998

10. தலைமேடை நாடகம் – 1998

11. வள்ளலார் வழங்கிய நித்திய கருமமும் சத்திய தருமமும் - 2000

12. ஆசிரியர் நேற்று இன்று நாளை - 2001

13. சிறுகதைச் செல்வம் - 2001

14. நாக்கு நாகரிகம் - 2001

15. குடியேற்றம் கரும்புலியீசுவரர் தல வரலாறு - 2004

16. எது ஏது ஏதேது – 2004

17. தமிழ்ச்சிமிழ் கவிதைத்தொகுப்பு - 2007

18. வாரியார் வழங்கிய வளர்தமிழ் - 2007

19. திருக்கோயில் திருநெறி - 2007

20. திருக்குறள் சொற்பொருள் அகராதி - 2013

21. கம்பன் கவியே கவி - 2013

22. இப்படியும் மனிதர்கள் - 2013

23. கல்வியின் மேலாண்மை - 2013

24. வேர்வையின் வெற்றி – 2013

25. வி.ஐ.டி வேந்தர் முத்துவிழா மலர் – 2000

26. சூட்டி மகிழத் தெளிதமிழ்ப் பெயர்கள் – 2014

27. வடமொழி வழக்கு தெளிதமிழ்ச் சொல் அகராதி – 2014

28. வியர்வையின் வெற்றி – 2014

29. சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் – 2019

30. விழித்தால் விடியும் - 2019

31. வந்தவாறு வருமாறு (புலவர் தன் வரலாறு) - 2022

32. சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம் – 2022

33. புறநானூற்று விழுமியங்கள் – 2022

34. அரனார் அருள்வேட்டல் – 2022

35. மணித்தமிழ்க் கட்டுரைகள் – 2024

36. நீதிக் கலங்கரை விளக்கம் - 2024

37. இது இப்படிதான் - 2024

38. கற்றதும் பெற்றதும் – 2025 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகள், படங்களை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

முனைவர் சி. இலட்சுமணன்

 

முனைவர் சி. இலட்சுமணன் 

முனைவர் சிஇலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். களப்பணியில் பல ஓலைச்சுவடிகளைத் தொகுத்து, தமிழ்ப் பல்கைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியவர். நூலாசிரியர்; கட்டுரையாசிரியர்; தமிழ் ஆய்வறிஞர். தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழினை நடத்திவருபவர். பதிப்புப் பணிகளில் ஆழங்கால்பட்ட அறிவுடையவர்.] 

    புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாகப் பயின்றபொழுது(1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்யும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது ஆய்வுக்குரிய நூல்களைப் பார்வையிடவும் அறிஞர்களைச் சந்தித்து, தரவுகளைத் தொகுக்கவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வது வழக்கம். இளையோர்களாகிய எங்களுடன்  அந்நாளில் உரையாடி, எங்களுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியாகச் செய்தவர் சி. இலட்சுமணன் ஆவார். ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் அவர்கள் பணியாற்றிய காலத்தில் பலமுறை சந்தித்து உரையாடிய நினைவுகள் மேலிடுகின்றன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை படிக்கச் செல்லும்பொழுதெல்லாம் அவரைக் கட்டாயம் கண்டு, உரையாடுவது வழக்கம். பலவாண்டுகளுக்கு முன்னர் இவர் ஆய்வுத்துறையில் உழைத்தமை போன்று இன்றும் தொடர்ந்து உழைத்து வருவதை அறிந்து மகிழ்கின்றேன். நாகர்கோவிலில் வாழ்ந்த அறிஞர் சி. சுப்பிரமணியம் ஐயா அவர்களைப் பற்றி அறிவதற்குத் தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தொடர்புகொண்டு, உரையாடிய சுற்றில் மீண்டும் பலவாண்டுகளுக்குப் பிறகு சி. இலட்சுமணன் அவர்களுடன் உரையாடி, அரிய செய்திகளை அடிக்கடிப் பெற்று வருகின்றேன். அவர்தம் தமிழ் வாழ்வினைத் தமிழுலகின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ன்றேன். 

சி. இலட்சுமணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

முனைவர் சி. இலட்சுமணன் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள மதுசூதனபுரம் என்னும் ஊரில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் தி. சின்ன நாடார், இல. சுப்பம்மை ஆகும். இவருடன் பிறந்தவர்கள் நால்வர் ஆவர். 

சி. இலட்சுமணன் குளத்துவிளை என்னும் ஊரில் முதல் ஐந்து வகுப்புகள் வரை பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை புத்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ள இலண்டன் மிசனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட(LMPCH) உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். புகுமுக வகுப்பினை நாகர்கோவில்  இந்துக் கல்லூரியில் (1970-71) பயின்றவர். இளங்கலைப் பட்ட வகுப்பினைப் பொருளாதாரப் பாடத்தினை முதன்மைப் பாடமாக எடுத்து, ஆங்கில வழியில் பயின்றவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை இந்துக் கல்லூரியில் பயிலும்பொழுது பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் இவருக்குத் தொல்காப்பியம் கற்பித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக அஞ்சல் வழியில் இளங்கலைக் கல்வியியல் பயின்றவர். 

சி. இலட்சுமணன் தம் முதுகலைக் கல்வியை முடித்தவுடன் மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். இக்கல்லூரியின் சார்பில் இயங்கிய அச்சகத்தில் பதிப்புப் பணிகளைக் கவனித்து வந்தவர். 1983 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் பணியாற்றியபொழுது, சி. இலட்சுமணன் தொகுப்பூதியத்தில் அங்குப் பணியில் இணைந்தவர். 1994 முதல் தொழில் நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தவர். 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது, திரு புட்பம் கல்லூரியில் இணைந்து பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினைப் “பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி” என்னும் தலைப்பில் செய்து, ஆய்வறிஞரும் பேராசிரியருமான மு. சண்முகம் பிள்ளையின் பன்முகத் தமிழ்ப்பணியினை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். 

தஞ்சையில் வாழ்ந்த இலக்கண அறிஞரும் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியருமான ச.பாலசுந்தரம் அவர்களின்  உரைச்சிறப்பினை ஆராயும் முகமாகத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பும் உரைகளும் (பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை) என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர். இவ்வாய்வில் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலிருந்து பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை வேறுபடும் திறத்தினை மதிப்பிடுவது ஆய்வாளரின் நோக்கமாக இருந்தது. 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் வழியாக ஆய்வுப்புலத்தில் நல்ல பயிற்சிபெற்றார். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் முதலிய பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டவர். எட்டாண்டுகள் இப்பணியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து, அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தொகுத்து, பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியுள்ளார். 

மு. சண்முகம் பிள்ளை, அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்களுடன் சி. இலட்சுமணன் பணியாற்றி, ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சொல்லடைவு தயாரித்தமை, கலியுகப் பெருங்காவியம் என்னும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலுக்குப் பாடவேறுபாடுகளைக் கண்டுணர்ந்து எழுதியவர். சித்த மருத்துவ வாகட நிகண்டு பணியினையும் செய்துமுடித்தவர். அறிஞர் த.கோ.பரமசிவம் அவர்களின் பணிக்காலத்தில் உருவான சுவடி விளக்க அட்டவணை ஐந்தாம் தொகுதியையும் எழுதி, முடித்தவர். 

தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய பல்வேறு சான்றிதழ் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியும் தமிழகத்தின் பல ஊர்களில், பல பொருண்மைகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியும் தம் தமிழ்ப்பணியினைச் செய்தவர். 

சி. இலட்சுமணன் இல்லற வாழ்க்கை 

சி. இலட்சுமணன் அவர்கள் 11.12.1981 ஆம் ஆண்டில் சரசுவதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அமுத சுவாமிநாதன், அபிரேகா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சி. இலட்சுமணன் அவர்கள் தம் பிறந்த ஊரில் தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம் என்னும் பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். தமிழ் ஆய்வுலகுக்குப் பெரும் பங்களிப்பு நல்கிய அறிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் வெளியிடுவதை இந்த மையம் சிறப்பாகச் செய்து வருகின்றது. தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து, அந்த இதழினைச் சிறப்பாகவும் நடத்திவருகின்றார். 

முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்நூல் கொடை: 

1.   சுவடி விளக்க அட்டவணை, ஐந்தாம் தொகுதி(தொகுப்பாசிரியர்),1989

2.   வாழ்வியல் சிந்தனை,1995

3.   பேரா.மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி, 2003

4.   தமிழக வரலாற்றறிஞர்கள், 1993

5.   காகிதச்சுவடி ஆய்வுகள், 2000

6.   பதிப்பு நிறுவனங்கள், 2002

7.   சுவடிப் பதிப்பாசிரியர்கள், 2003

8.       பதிப்பியல் நெறிமுறைகள், 2003

9.       ஆய்வுலகு போற்றும் தமிழறிஞர்கள்

10.   வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை

 

 

புதன், 26 பிப்ரவரி, 2025

மொழியியல் பேராசிரியர் மோ. இசரயேல்

 


பேராசிரியர்  மோ. இசரயேல்
(24.12.1932 - 18.09.2022) 

    [மோ. இசரயேல் மொழியியல் பேராசிரியர் ஆவார். ஒடிசாவின் பழங்குடி மக்களின் மொழியான குவி மொழி குறித்து ஆய்வு செய்து, நூல் எழுதியவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் முதுமுனைவர் பட்ட ஆய்வு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர்] 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள செம்பொன்விளை என்னும் சிற்றூரில் 24.12.1932 பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் மோட்சக்கண் என்பதாகும். மோ. இசரயேல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் முறைப்படி பயின்றவர். தம் முயற்சியின் துணைக்கொண்டு தமிழ் வித்துவான் தேர்வெழுதித் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். தம் முனைவர் பட்ட ஆய்வினைப் பேராசிரியர் மு. வரதராசன் அவர்களின் நெறிப்படுத்தலில் 1965 இல் செய்தவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு “Treatment of Morphology in Tolkappiyam” என்பதாகும். 

நாகர்கோவில் இந்துக்கல்லூரி, இசுகாட் கிறித்தவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 1968 இல் பணியில் இணைந்தவர். பின்னர் அப்பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராக உயர்ந்தவர். இங்கிலாந்து, அமெரிக்கா, செர்மனி, உருசியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்குச் சென்று மொழியியல் சார்ந்த பேரறிவினைப் பெற்றவர். இவர்  இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டி. பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் தம் முதுமுனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியவர்(1973-74). அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் நெறிப்படுத்தலில் 31 பேர் முனைவர் பட்ட ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர். ஆறு நூல்களையும் 175 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஒடிசாவின் பழங்குடி மக்கள் பேசும் குவி(Kuvi) என்னும் மொழியை ஆராய்ச்சி செய்து, அம் மொழிக்கு இலக்கணமும் அகராதியும் உருவாக்கியவர். இது இவர்தம் மிகச் சிறந்த அறிவுத்துறைப் பங்களிப்பாகும். இந்த ஆய்வு பின்னாளில் நூல் வடிவம் பெற்றது(1979). இந்த நூலுக்கு இசரயேல் அவர்கள் வரைந்துள்ள முன்னுரையும், பேராசிரியர் டி.பர்ரோ எழுதியுள்ள ஆய்வுரையும் குறிப்பிடத்தக்கன. இந்த நூலைத் தம் நெறியாளரும், பேராசிரியருமாகிய மு.வ. அவர்களுக்குப் படையல் செய்துள்ளமை மோ. இசரயேல் அவர்களின் நன்றியுணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் தம் பல்கலைக்கழகப் பணியோய்வுக்குப் பிறகு தொடர்ந்து மொழியாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரிப் பாடத்திட்டக் குழுக்களிலும் இணைந்து பங்களிப்பு நல்கியவர். திராவிட மொழியியல் கழகத்திலும் பொறுப்பு ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். என்சைக்கிளோபீடியா ஆப் பிரிட்டானிக்காவிலும் இவர்தம் திராவிட மொழிகள் குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனத்திலும் இவர் ஆட்சிக்குழுவில் இருந்துள்ளார். 

பேராசிரியரும் அவர்தம் துணைவியாரும்(இளமைத் தோற்றம்)

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கெலன் எமரால்டு அவர்களை 1962 இல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அருள் அரசு, அருள் அறம் என்னும் இருவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் இருவரும் பேராசிரியர்களாக உயர்ந்துள்ளனர். 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் தமிழ்க்கொடைகளுள் சில: 

1.   இலக்கண ஆய்வு- பெயர்ச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976

2.   இலக்கண ஆய்வு- வினைச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976

3.       இடையும் உரியும், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, (1977)

4.   A Grammar of THE KUVI LANGUAGE (1979)

 





நன்றி: பேராசிரியர் வி. இரேணுகாதேவி, மதுரை

 

திங்கள், 24 பிப்ரவரி, 2025

"தொல்காப்பிய விருதாளர்" மும்பை கு. இரெ. சீனிவாசன்

 

மும்பை கு.  இரெ. சீனிவாசன் 

[கு.  இரெ. சீனிவாசன் மும்பையில் வாழும் தமிழ் எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தவர். மும்பையில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியில் இணைந்து, பின்னர் வங்கித் தேர்வெழுதி, எழுத்தராக - மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து ‘‘கனிந்த கனவுகள்என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்]. 

மும்பை மாநகரம் தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த வாழ்விடமாக உள்ளதை அண்மையில் மும்பை சென்றிருந்தபொழுது அறிய முடிந்தது. மும்பையில் தமிழர்கள் பன்னெடுங்காலமாகத் தங்கி, பணியாற்றியும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தமிழமைப்புகள், பள்ளிகள் பலவற்றை உருவாக்கியும் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். எனினும் தாயகமாம் தமிழகத்துடன் தொடர்பில் இருந்து, நல்லுறவைப்பேணி வருகின்றனர். தமிழறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரைத் தமிழகத்திலிருந்து அழைத்துத் தங்கள் தமிழ்ப்பற்றைப் புதுப்பித்தவண்ணம் உள்ளனர். அத்தகு மும்பைத் தமிழ் அன்பர்களுள் கு.ரெ.சீனிவாசன் குறிப்பிடத்தகுந்தவர். கே. ஆர். சீனிவாசன் என்ற பெயரில் நன்கு அறிமுகமான இப்பெருமகனார் பன்மொழி அறிஞராகவும் எழுத்தாளராகவும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். இவரின் தமிழ்ப்பற்றையும், எழுத்துத் திறனையும் எழுத்தாளர் சு. குமணராசனார் வழியாக அறிந்து அவர்தம் வாழ்வியலைப் பதிந்துவைக்க முனைகின்றேன். 

கு. இரெ. சீனிவாசன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

கு. இரெ. சீனிவாசன் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஊரினர். இவர்தம் பெற்றோர்  கு. இரா. இரெங்கநாயலு, இராதா ருக்மணி அம்மையார் ஆவர். பட்டு நெசவுத் தொழிலில் புகழ்பெற்ற குடும்பமாக இவரின் குடும்பத்தினர் விளங்கினர். 26.10.1948 இல் பிறந்த இவர் தம் பிறந்த ஊரான அய்யம்பேட்டைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அவ்வூர்க் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையிலான கல்வியையும் பெற்று, தஞ்சாவூர் பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர். 

1969 இல் மும்பை சென்று, அங்கு வாழ்ந்த காந்திய நெறியாளரான இரெ. முருகையா அவர்கள் நடத்திய “சேவக்” அச்சகத்தில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் வங்கிப் பணிக்குரிய தேர்வெழுதி, எழுத்தராகப் பணியில் இணைந்து, மேலாளராகப் பணியுயர்வு பெற்றவர். அவ்வகையில் மும்பைத் தேனா வங்கியில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். விளம்பரத் துறையிலும் ஈடுபட்டு உழைத்தவர். 

கு. இரெ. சீனிவாசன் 10.06.1981 இல் ஞானாம்பாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். ஞானாம்பாள் அவர்கள் வள்ளலாரின்  நன்னெறிக் கருத்துகளில் பேரீடுபாடு கொண்டவர். இவர்களுக்குக் கார்த்திக் என்னும் பெயருடைய மகன் உள்ளார். இவர் சென்னையில் பணியாற்றி வருகின்றார். 

எழுத்துப் பணி 

கு. இரெ. சீனிவாசன் வங்கி மேலாளராகப் பணியாற்றினாலும் தமிழின் மீதான ஈடுபாட்டுடன் விளங்கியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, சௌராட்டிரம் ஆகிய மொழிகளை அறிந்தவர். இவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மும்பை மற்றும் தமிழகத்து ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்து இதழ்களான கல்கி, கலைமகள், அமுதசுரபி, சௌராட்டிர மணி, மொதிரெத்து,   மும்பை இதழ்களான தமிழ் இலெமுரியா, தென்னரசு, மும்பை துடிப்பு, மராத்திய முரசு, போல்டு இந்தியா முதலான இதழ்களில் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

    முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரு. ஸ்ரீநிவாஸ் லட்சுமன் அவர்களால் (திரு. ஆர். கே.  லட்சுமன் அவர்களின் புதல்வர்) ஆங்கிலத்தில் Dreams to Reality என்ற தலைப்பில் எழுதப்பட்ட. நூலினைத் தமிழில் ‘‘கனிந்த கனவுகள் என்ற பெயரில் கு. இரெ. சீனிவாசன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் சிறுவர் படைப்புகளை வெளியிடுவதில் புகழ்பெற்ற  நவநீத் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்துள்ளது. 

தமிழ்ப் பணிகள் 

மும்பையின் கோரேகான் தமிழ்ச் சங்கம் 1976 முதல் புத்துயிர் பெற்று, இயங்கி வருகின்றது. சற்றொப்ப 30 ஆண்டுகள் இத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து கு. இரெ. சீனிவாசன் பணியாற்றியவர். தற்போது துணைத் தலைவராகவும் இவரின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

    7000 மாணவர்களைக் கொண்டுள்ள விவேக் வித்யாலயா, மற்றும் கல்லூரியை நடத்துகின்ற விவேக் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர்.    சிறிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் இயன்ற அளவில் சமூகத் தொண்டினையும் செய்துவருபவர். 

கு. இரெ. சீனிவாசனின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 25.01.2025 இல் மும்பையில் நடைபெற்ற தமிழ் இலெமுரியா அறக்கட்டளை விழாவில் இவருக்குத் “தொல்காப்பியர் விருது - 2024” வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.


 கு. இரெ. சீனிவாசன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு வாழ்த்தி மகிழ்கின்றேன்.

மு.இளங்கோவன், கு. இரெ. சீனிவாசன்