நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பண்ணாராய்ச்சி வித்தகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்ணாராய்ச்சி வித்தகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2015

பெரியார் திடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்



இயக்குநர் வ.கௌதமன் உரை


இசையறிஞர் திருபுவனம் ஆத்மநாதன் உரை


சென்னை, பெரியார்திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் 28.02.2015 மாலை 6.30 மணிமுதல் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு தமிழார்வலர்கள், இசையார்வலர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, திரையிடலின் நோக்கம் குறித்துப் பிரின்சு என்னாரெஸ் பெரியார் பேசினார்.

“சந்தனக்காடு” இயக்குநர் வ.கௌதமன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் சிறப்புகளையும், கலை நேர்த்தியையும், ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவனின் முயற்சியையும் பாராட்டிப் பேசினார். இந்தப் படத்தில் குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆன்மாவைப் பார்ப்பதாகவும், மனித நேயம் மிக்க மிகப்பெரிய மனிதராக குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்ந்துள்ளதை இந்த ஆவணப்படம் சிறப்பாக எடுத்துரைப்பதையும் தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டார். மேலும் காவிரியைக் காட்சிப்படுத்தியுள்ள திறம், கழிமுகப்பகுதியில் நாட்டியம் இணைத்துள்ள திறம் யாவும் நம்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுசெல்கின்றன என்று பாராட்டினார்.

நிழல் இதழின் ஆசிரியரும், குறும்படம் ஆவணப்படம் குறித்துத் தமிழகத்தில் நிறையப் பயிலரங்குகளை நடத்தி வருபவருமான ப. திருநாவுக்கரசு அவர்கள் தமக்கும் குடந்தை ப. சுந்தரேசனாருக்கும் அமைந்த தொடர்பை எடுத்துரைத்து, அவரின் சிறப்புகளை விளக்கினார். இந்த ஆவணப்படத்தின் சிறப்புகளை விளக்கி, ஊர்தோறும் இது திரையிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

எழுத்தாளர் கோவி. இலெனின் அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்து அண்மைக்காலத்தில்தான் அறிவேன் என்றும், தமிழிசை வரலாற்றில் குடந்தை ப.சுந்தரேசனாருக்கு உள்ள இடம் குறித்தும் அவையினருக்கு நினைவூட்டி, இந்த ஆவணப்பட உருவாக்க முயற்சியைப் பாராட்டினார்.

தமிழிசை அறிஞர் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரல்வளத்தையும், அவர்தம் பாடுமுறைகளையும் வியந்து பேசினார். சிலப்பதிகாரத்தைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியுள்ள திறத்தைப் போற்றினார். தமிழிசை அறிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர் இதுபோல் தமிழிசைக்குப் பாடுபட்ட அனைத்து அறிஞர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தி வழங்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். தமிழிசை உள்ள வரை இந்த ஆவணப்படம் பேசப்படும் என்று தம் பாராட்டைத் தெரிவித்தார்.

ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவன் ஆவணப்படம் உருவான வரலாற்றையும், அதில் தமக்கு ஏற்பட்ட பட்டறிவுகளையும் அவையினரிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் தமிழிசைக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து ஆவணப்படுத்த உள்ளமையை அவையினருக்குத் தெரிவித்தார். அந்த வரிசையில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வாழ்க்கையும், பணிகளும் ஆவணப்படுத்தப்பட உள்ளமையை எடுத்துரைத்தார்.


நிறைவில் ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நிழல் ப. திருநாவுக்கரசு உரை

எழுத்தாளர் கோவி. இலெனின் உரை

மேடையில்...



சனி, 28 பிப்ரவரி, 2015

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்


  
  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் இன்று சென்னையில் திரையிடப்பட உள்ளது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தமிழிசை ஆர்வலர்கள், பண்ணாராய்ச்சி வித்தகர்மேல் பற்றுடைய அன்பர்கள் வந்து மகிழ்வூட்டலாம்.

நாள்: 28.02.2015 (சனிக்கிழமை) மாலை 6:30மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

கருத்துரை:

"இன்னிசை ஏந்தல்" திருபுவனம் கு.ஆத்மநாதன்

திரு. கோவி.லெனின்

"நிழல்" திரு. திருநாவுக்கரசு

ஏற்புரை:  முனைவர் மு.இளங்கோவன் 


ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

வியாழன், 27 நவம்பர், 2014

திருவரங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா




திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், காந்திசாலையில் அமைந்துள்ள இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா 29.11.2014 மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.

புரவலர் க. தமிழழகன் அவர்கள் வரவேற்புரை நல்க, திரு. இராம. சுப்பிரமணியன், திரு. குமர. நமசிவாயமூர்த்தி முன்னிலையில் இந்தப் பெருவிழா நடைபெற உள்ளது.

இராச. இளங்கோவன் அவர்கள் அறிமுகவுரையாற்றவும், புலவர் புவியரசு அவர்கள் தலைமை தாங்கவும் இந்த விழா நடைபெறுகின்றது. திருமழபாடி புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றவும், பெரும்பாண நம்பி முனைவர் த. கனகசபை அவர்கள் (பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்) விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். 

பண்ணாய்வான் ப. சு அவர்களின் படத்தினைத் திறந்து வைக்க திரு. தங்க. கலியமூர்த்தி அவர்கள் இசைந்துள்ளார்கள். அருள்மனச் சான்றோர் எம். ஆர். எஸ். கேசவன் அவர்களின் திருக்கையினால் முனைவர் மு. இளங்கோவனுக்குப் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்னும் உயரிய விருதளித்துப் பாராட்ட உள்ளனர். தமிழ்மாமணி முனைவர் ப. சுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுறும். தமிழார்வலர்களை இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கத்தினர்  அன்புடன் வரவேற்கின்றனர்.


புதன், 26 நவம்பர், 2014

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டம் திரையிடல் நிகழ்ச்சி


பண்ணுருட்டி நகராட்சியில் மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம் அவர்கள் ஆவணப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குச் சிறப்புச்செய்தல்

தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று 26.11.2014 மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி செயராம் ஓட்டலில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். முனைவர் எழில்வசந்தன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். தமிழறிஞர்கள், இசையறிஞர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. 

இந்த ஆவணப் படத்தில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுத் திரைப்பட வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளித் திரைக்களம் தயாரித்துள்ள இந்த ஆவணபடத்தைப் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.இளங்கோவன் திரைக்கதை எழுதித் இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தில் முனைவர் ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், முனைவர் அரிமளம் பத்மநாபன், சுந்தர. இலட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் சுந்தரேசனாரின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆவணப்படத்தில் கிருத்திகா இரவிச்சந்திரன், வில்லியனூர் முனுசாமி, அறின் இடைக்கழிநாடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்து, தொகுப்புப்பணியை இராஜ்குமார் இராஜமாணிக்கம் செய்துள்ளார். தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் எழுதிய கையறுநிலைப் பாடலை கலைமாமணி கா. இராஜமாணிக்கம் பாடியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் இந்த ஆவணப்படம் வெளியீடு காண உள்ளது. 
முனைவர் க. தமிழமல்லன் அவர்களின் தலைமையுரை

பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை


இசையமைப்பாளர் இராஜ்குமார் சிறப்பிக்கப்படுதல்


ஓவியர் அன்பழகன் சிறப்பிக்கப்படுதல்

கலைமாமணி இராஜமாணிக்கம் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள் - ஒருபகுதி


ஊடகத்துறையைச் சார்ந்த செய்தியாளர்கள்- ஒருபகுதியினர்

வெள்ளி, 14 நவம்பர், 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் - முன்னோட்டம்


தமிழர்களின் மரபுவழியில் அமைந்த பண்ணிசையை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் திசைதோறும் சென்று முழங்கியவர் இசையறிஞர், ஏழிசைத் தலைமகன், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்  ஆவார். ஐயா அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முகமாகச் சங்க நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும், பக்திப் பனுவல்களிலும் நிறைந்து விளங்கும் இசைப்பாடல்களைப் பண்ணாராய்ச்சி வித்தகர் அவர்களின் குரலுடன் காட்சிப்படுத்தி வழங்க உள்ளோம். 

உலகப் பரப்பில் பரந்து வாழும் தமிழர்கள் தங்கள் தொல்லிசையைக் காட்சிகளின் பின்புலத்தில் விரைவில் கேட்கலாம். இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையல் இன்னும் சில நாள்களில் வெளியீடு காண உள்ளது. தமிழிசையார்வலர்கள் இருகை நீட்டி வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம். 

படத்தொகுப்புப் பணியிலும், இசைத்துல்லியப் பணியிலும் வளரும் இசையறிஞர் திரு. இராஜ்குமார் இராஜமாணிக்கம் அவர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். தமிழர்களின் தொல்லிசை, கலை மீட்பு முயற்சி கைகூட உள்ள மகிழ்வில் வயல்வெளித் திரைக்களத்தினர் இப்படைப்பை வழங்க உள்ளனர். தமிழர்தம் தொல்லிசை மீட்பு குறித்த ஒரு செலவு நயப்பு இது.




ஞாயிறு, 25 மே, 2014

திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 28. 05. 2014 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. திருத்தவத்துறை(இலால்குடி) அருள்மிகு பெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு எழுமுனிவர்க்கிறைவர் திருக்கோயில் வளாகத்தில் பண்ணிசை அரங்கு, படத்திறப்பு, உரையரங்கம், பாராட்டரங்கம், கலைமாமணி தாயுமானவர் அவர்களின் நிகழ்ச்சிகள் எனச் சான்றோர் பலரும் பங்கேற்கும் அரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

விழாத் தலைமை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

முன்னிலை: செயல் அலுவலர் அவர்கள், திருக்கோயில் இலால்குடி

பண்ணிசை அரங்கம்: 
தேவார இசைமணி சுந்தர சாமவேதீசுவரன்
திருமுறை நன்மணி நா சுப்பிரமணியன் குழுவினர்.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் படத்திறப்பு
முதுபெரும் புலவர் ப. அரங்கசாமி அவர்கள்

நூற்றாண்டு விழாத் தொடக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன்

தலைமையுரை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

யாம் கண்ட பண்ணாராய்ச்சி வித்தகர் - உரையரங்கம்

கயிலை எசு. பி. இராமசாமி
புலவர் மா. திருநாவுக்கரசு
இறைநெறி இமயவன்
திரு. க. தமிழழகன் நாடுகாண் குழு
திரு. ச. இராமையா, காரைப்பாக்கம்
திரு. து. திருஞானம், பாளையப்பாடி
திரு. பூவை பி. தயாபரன், பூவாளூர்
திரு. வ. பஞ்சநாதன், திருமானூர்
திரு. அ. சீனிவாசன், திருத்தவத்துறை
திரு. நா. சு. மணியன், திருமங்கலம்
திரு. சி. சுந்தரராசலு, கீழைப்பழுவூர்
திரு. சு. பெரியசாமி, புள்ளம்பாடி

பாராட்டுச் சிறப்பரங்கம்
திரு. இராம. துரைக்கண்ணு- தனமணி இணையர் (80 அகவை நிறைவு)

விழாப் பேருரை முனைவர் சண்முக செல்வகணபதி

தமிழின்பம் பருக! அனைவரும் வருக!



ஞாயிறு, 18 மே, 2014

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையை மக்களிடம் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் - புதுச்சேரி நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் பேச்சு



தவத்திரு ஊரன் அடிகள் நூலை வெளியிட பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா பெற்றுக்கொள்ளுதல். அருகில் பாரிசு பாலகிருட்டினன்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து இன்று 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணிவரை புதுச்சேரி செயராம் ஓட்டலில் நடத்தின.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவுக்கு வடலூர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். முனைவர் அரிமளம் பத்மநாபன் விழா குறித்த நோக்கவுரையாற்றினார். மலேசிய இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் விக்டர் சுப்பையா, இரா. மதிவாணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் புதுச்சேரி பிரிவு கமாண்டன்டு நா. சோமசுந்தரம் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் புலவர் முருகையன் எழுதிய உலகத்தின் ஒளிவிளக்கு பெற்றோரும் பிள்ளைகளும் என்ற நூலினை தவத்திரு ஊரன் அடிகள் வெளியிட, முதற்படியினைப் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளை பாரிசிலிருந்து வருகை தந்த திரு. பாலகிருட்டிணன், புதுவை திரு. அமரநாதன் பெற்றுக்கொண்டனர்.

குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுரைகளைச் சூலூர் பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த செந்தலை கௌதமன், தமிழியக்கத் தலைவர் முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. அங்கயற்கண்ணி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறைத் தலைவர் முனைவர் சு. குமரன், புதுவைத் திருவள்ளுவர் மன்றத்தின் நிறுவுநர் சுந்தர. இலட்சுமிநாராயணன், ஆ பிழைபொறுத்தான் ஆகியோர் வழங்கினர்.


குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் சுந்தரேசனாரின் சிறப்புகளை எடுத்துரைத்து, சுந்தரேசனார் பாடிய பாடல்களை அரங்கிலிருந்தவர்களுக்குப் பாடிக்காட்டிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மு. பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.

நூற்றாண்டு விழா - காட்சிகள்

மு.இளங்கோவன் வரவேற்புரை

தவத்திரு ஊரன்அடிகள் தலைமையுரை

முனைவர் அரிமளம் பத்மநாபன் சிறப்பிக்கப்படுதல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியப் பேராசிரியர் குமரன், டாக்டர் விக்டர் சுப்பையா சிறப்பிக்கப்படுதல்

புலவர் சூலூர் கௌதமன் நினைவுரையாற்றுதல்

சுந்தர இலட்சுமிநாராயணன் நினைவுரை


முனைவர் மு.இளமுருகன் எழுச்சியுரை

டாக்டர் விக்டர் சுப்பையா(மலேசியா) வாழ்த்துரை

பொறியாளர் பாலா நன்றியுரை

சனி, 3 மே, 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்(28.05.1914 - 09.06.1981) நூற்றாண்டு விழா - அழைப்பிதழ்


அன்புடையீர் வணக்கம்.
தமிழிசை ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பணிசெய்த பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியைச் சிறப்புச்செய்வான் வேண்டி மலேசியாவிலிருந்து வருகைதரும் தமிழுறவுகளுக்கு விழாவில் வரவேற்பு வழங்க உள்ளோம். தமிழிசை ஆர்வலர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

நாள்: 17. 05. 2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன்

நோக்கவுரை: முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், தமிழிசை அறிஞர்

முன்னிலை:
டாக்டர்  விக்டர் சுப்பையா (தேசியத் தலைவர், மலேசிய, இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை)

செந்தமிழ்த் தேனீதிரு. இரா. மதிவாணன், சென்னை

அறிஞர்களைச் சிறப்பித்தல்:
திரு நா. சோமசுந்தரம், கமாண்டன்ட், இந்தியக் கடலோரக் காவல்படை

நினைவுரைகள்

தவத்திரு ஊரன் அடிகளார், வடலூர்
புலவர் செந்தலை ந. கௌதமன், பாவேந்தர் தமிழ்ப் பேரவை,சூலூர்
முனைவர் மு. இளமுருகன், தமிழியக்கம், தஞ்சாவூர்
முனைவர் . அங்கயற்கண்ணி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
முனைவர் சு. குமரன்,இந்திய ஆய்வியல்துறை, மலேயா பல்கலைக்கழகம்
திரு. வி. வயித்தியலிங்கம், ஆடுதுறை
திரு. . பிழைபொறுத்தான், சென்னை
புலவர் பொ. வேல்சாமி, நாமக்கல்

சிறப்புரை: பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், சென்னை

நன்றியுரை: பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன்

அழைப்பில் மகிழும்
-    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் & புதுச்சேரி இலக்கிய வட்டம்



ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

குடந்தை ப.சுந்தரேசனாரின் சுவடுகளைத் தேடி…


திரு. வைத்தியலிங்கம் அவர்கள் ( குடந்தை ப. சுந்தரேசனாரைப் புரந்த பெருமக்களுள் ஒருவர்)

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வின்பொருட்டு செய்திகள் திரட்ட நேற்று (22.02.2014) சென்றுவர நேர்ந்தது. தாவரத் தகவல் தொகுப்பாளர் இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்களும் அவர்களின் உறவினர் திரு. இராஇளங்கோவன் அவர்களும் உடன் வர நானும் சென்றேன். முதலில் தில்லைக்கோயிலின் தமிழ்வழிபாடு குறித்த வரலாற்றுச் செய்திகளை அறிய சிதம்பரத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரைக் கண்டு உரையாடி உண்மை வரலாறு அறிந்தேன்
சிதம்பரம் நகர மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.எம்.எசு.சந்திரபாண்டியன் அவர்கள்

சிதம்பரம் நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் திரு. வி.எம். எசு. சந்திரபாண்டியன் அவர்கள் சிதம்பரம் வரலாறு குறித்த பல செய்திகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். தமக்குள்ள பல்வேறு அரசியல் பணிகளுக்கு இடையே பல்வேறு நூல்களைக் காட்டியும் ஆவணங்களைக் காட்டியும் எங்களிடம் வி.எம்.எசு. அவர்கள் உரையாடியமை எங்களுக்குப் பெரு மகிழ்வாக இருந்தது. அவர்தம் இல்லத்தில் அரிய நூலகம் ஒன்று உள்ளமையும் அதில் உள்ள நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதையும் நினைத்து என் நூலகத்தின் பரிதாப நிலையை மனதில் நிறுத்திப்பார்த்தேன். அதியமானின் உலைக்கூடம்போல் என் நூலக நூல்கள் சிதறிக்கிடப்பதை நம் இல்லம் வருவோர் அடிக்கடி குறிப்பிட்டுச் சரிசெய்யச்சொல்வார்கள். 

தில்லை அம்பலத்தில் தமிழ் முழங்க மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் செய்த முயற்சியும், பிச்சாவரம் குறுநில மன்னர்களின் பொறுப்பில் சிதம்பரம் கோயில் இருந்தமையையும் அறிஞர்கள் சிலர் எடுத்துக்கூறினர். சோழப்பேரரசர் காலம் முதல் சிதம்பரத்தில் அமைந்த இறைவழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் கிடைத்தன.

அடுத்ததாகச் சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்வேதம் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த திரு வைத்திலிங்கம் ஐயா அவர்களை மாநாட்டுக்கூடம் சென்று அழைத்துக்கொண்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களைச் சந்திக்கும்பொருட்டுத் தமிழ்த்துறைக்குச் சென்றோம். அங்கு அமர்ந்தபடி குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய செய்திகளை என் காணொளிக் கருவியில் பதிந்துகொண்டேன். சற்றொப்ப 45 நிமிடங்கள் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய நினைவுகளைத் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் தேவாரத்தைப் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் மூன்றாண்டுகள் பணிபுரிந்தமை இங்கு நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும்.


 பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழிசைப் பணி, தமிழ் இலக்கிய ஈடுபாடு, பிறமொழி படிக்க நேர்ந்தமைக்கான காரணங்கள், அவரின் இயல்புகள், வாழ்க்கை முறை, குடும்பம், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அவரின் விரிவுரை, தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அவர்களைப் போற்றி மதித்தமை, ஐயா அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை என்று பல செய்திகளைப் பெற முடிந்தது. பெரும் புதையல் அகழ்ந்து பெற்ற மகிழ்ச்சி கிடைத்தது. ஒத்துழைப்பு நல்கிய அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மீண்டோம்.

திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, மு.இ, முனைவர் அரங்க.பாரி அவர்கள்


திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, இரா.இளங்கோவன், முனைவர் அரங்க.பாரி அவர்கள்

புதன், 16 அக்டோபர், 2013

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981) நூற்றாண்டு விழா


பண்ணாராய்ச்சி வித்தகர் 
குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981) 

     “பண்ணாராய்ச்சி வித்தகர் எனவும்ஏழிசைத் தலைமகன்எனவும் திருமுறைச் செல்வர்எனவும் போற்றப்பட்ட குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில் இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர். ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம் முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும் தமிழிசை உரைகள் காற்றில் கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.

தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லைஎன்ற கூற்றுக்கு ஏற்பத் தமிழிசை பரப்பிய இப்பெருமகனாரின் சிறப்புகளை உலகம் வாழ் தமிழர்கள் அறியும் வண்ணம் நினைவுகூரவும், ஆவணப்படுத்தவும் தமிழன்பர்கள் சிலரின் துணையுடன் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினை நடத்த முடிவுசெய்துள்ளோம். உலக அளவில் இதற்கான ஓர் ஆய்வறிஞர் குழுவும், கருத்துரை வழங்கும் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

புதுவையிலும் தமிழகத்திலும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுடன் தமிழர்கள் நிறைந்து வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா, கனடா, குவைத், பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடுவதற்குத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும்படித் தமிழ் அமைப்புகளை அன்புடன் வேண்டிக்கொள்வதுடன், தமிழக அரசு குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் நூல்களை நாட்டுடைமை ஆக்கவும் தமிழிசை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும் நூற்றாண்டு நினைவாக இசைக்கல்லூரி ஒன்றிற்குக் குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயரை வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய குறிப்புகள்

தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர்.

திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.

ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார்.

ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறையில் இலால்குடி) ப.சு.நாடுகாண் குழு செயல்படுகின்றது.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.

ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.

இவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.

குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.

குடந்தை.சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை:

1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு
2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,
3.முதல் ஐந்திசை நிரல்,
4.முதல் ஆறிசை நிரல்,
5. முதல் ஏழிசை நிரல்
முதலான நூல்களை எழுதியவர்.

மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.

தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.
2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.
3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.
4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.
5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.
6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.
7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன
8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.
9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.
10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.
11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.
12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.
13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.
14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

நன்றி:
பாவாணர் தமிழ்க்குடும்பம்(நெய்வேலி)
பேராசிரியர் சிவக்குமார்(குடந்தை)
நினைவில் நிற்கும் குடந்தைக் கதிர். தமிழ்வாணன்
திரு.ஆ.பிழைபொறுத்தான்(மேலமுடிமண்)

மேலும் விரிவுக்கு என் பழைய கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.